மின் நூல்

Sunday, January 6, 2008

மன ஓசை


படுக்கையில் படுத்திருக்கையில்
தெளிவாய்க் கேட்டது
வெளியுலக உயிர்ப்புப் பிரதிநிதியாய்
டிக்டிக் கடியார ஓசை
உன்னிப்பாய்க் கவனிக்கையில்
உணரமுடிந்தது மின்விசிறி
சுழற்சி ஓசை
தெருவில் கிறீச்சிடும் வண்டியொலி
காற்றில் மிதந்து காதில் படிந்தது
ஜன்னல் சல்லாத்துணி மோதலில்
சன்ன படபடப்பாய் காற்றின் கீதம்

உந்தி விரிந்து சுருங்குகையில்
உள்மூச்சு வெளிமூச்சு கூட
உணரமுடிந்தது; ஆழ்ந்து இப்போது
உன்னிப்பாய் கவனித்தேன்
இதயஒலி கேட்கிறதா என்று
இல்லை என்பதே பதிலாயிற்று
மார்பில் கைவைத்து பார்க்கையில்
மனசில் உணரமுடிந்தது துடிப்பை
தன்னில் தானாய் என்னில் அதுவாய்
என்னுள் கலந்துபோன உயிரின் ஓசை
பிரயத்தனப்பட்டால் தான் உணர்வாய்
புரிகிறது என்னும் உண்மை புரிந்தது
என்னில் உறங்கும் உள்ளொளியும்
நான் எனும் சுயம் ஒழித்து
தன்னில் கரைந்தால் தான்
தட்டுப்படும் போலிருக்கு.
Related Posts with Thumbnails