மின் நூல்

Monday, July 30, 2018

பாரதியார் கதை --20

                                                      அத்தியாயம்--20



திருநெல்வேலி   மாவட்டத்தில்  அம்பாசமுத்திரத்திற்கும் தென்காசிக்கும் இடையே இருக்கும் ஊர் கடையம்.  நெல்லையிலிருந்து 50  கி.மீ.

கடையம் செல்லம்மா பிறந்து வளர்ந்த ஊர்.   ஊரில் வீட்டுக்குப் பக்கத்தில் இராமர் கோயில்.  இராமர் கோயிலுக்குப்  பக்கத்தில்  போஸ்ட் ஆபிஸ்.  கடையத்தில் இருந்த   முந்தைய காலகட்டத்தில்  பத்திரிகை பிரசுரத்திற்கான விஷயஙகளைை இந்த தபால் நிலையத்தின் மூலமாக செல்ல மகள் தங்கம்மாளிடம் கொடுத்து பாரதி அனுப்புவது வழக்கம்.   தன் தந்தை பற்றி தங்கம்மாள் எழுதிய புத்தகம் ஒன்றில் இதைப் பற்றி பிரஸ்தாபித்திருக்கிறார்.

'காக்கைச் சிறகினிலே, நந்தலாலா'.  'காயிலே புளிப்பதென்ன, கண்ணபெருமானே' 'மங்கியதோர் நிலவினிலே'-- முதலிய பாடல்கள் அவரது கடைய வாழ்க்கையில்  புனையப்பட்டதாக  முனைவர்  ச..கணபதி ராமன் அவர்கள் அவரது 'கடையத்தில் உதிர்ந்த பாரதியின் படையல்கள்' என்ற நூலில் கூறுகிறார்.....   முனைவர் அவர்கள்  'உதிர்ந்த படையல்களை' 'உதித்த படைப்புகளாக'வானும் புத்தகத் தலைப்பில் மாற்றம் கொண்டிருக்கலாம்  என்பதைத் தவிர இந்த நூல் பற்றிச் சொல்ல எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.                                                         

'மங்கியதோர் நிலவினிலே' பாடலைப் புனையும் மனநிலையில் பாரதியின் பிற்காலத்திய கடையம் வாழ்க்கை இல்லாது போனது பெரும் சோகம். கடலூர் சிறை  விடுதலைக்குப் பின் கடையம் வந்திருக்கும் பாரதி இப்பொழுது நினைத்தாலும் தன் பத்திரிகைகான தனது படைப்புகளை சுதந்திரமாக அனுப்ப முடியாது.  காவல்துறை துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல்  பார்வைக்கு அனுப்பி அவரின் அனுமதிக்குப் பிறகே அவை பத்திரிகைகளுக்குப் போய்ச் சேர வேண்டும்.   அந்தத்  தபால் நிலையத்தைப் பார்க்கும் பொழுதெல்லாம் பாரதி இந்தக் கட்டுப்பாடு குறித்து குமைந்து போயிருப்பார் என்றாலும்  அவரது விடுதலைக்கு ஏற்பாடு செய்தவரும் அவரின் மேல் மிகுந்த நம்பிக்கைக்கு கொண்டவருமான  காவல்துறை அதிகாரிக்கு தான் கொடுத்த உறுதிமொழிக்கு மிகுந்த மரியாதை  கொடுத்தவராய் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டிருப்பார்.

இன்று கூட ஊர் மாப்பிள்ளைக்கு கடையத்தில் ஏகப்பட்ட மரியாதை.  அந்த ஊரின் ஆரம்ப, நடுத்தர, மேல்நிலைப் பள்ளிகளுக்கெல்லாம் பாரதியாரின் பெயர் தான். கடையத்தில் ஒருகாலத்தில் வெள்ளமாக ஓடிய ஜம்பு நதி இப்பொழுது ஓடையாகியிருக்கிறது.   இந்த ஊர் நித்ய கல்யாணி அம்மன் கோயில்,  கோயிலைச் சுற்றியுள்ள மேற்கு மலைத்  தொடர்ச்சி எல்லாம் பாரதி கவிதை பாடித் திரிந்த  இடங்கள்.  இந்த நித்ய கல்யாணி அம்மன்  கோயிலுக்கு அருகிலிருக்கும் தட்டப்பாறையில்   அமர்ந்து தான்  'காணி நிலம் வேண்டும், பராசக்தி காணி நிலம் வேண்டும்'  என்று பாரதி  பாடினார் என்பார்கள்.  பாரதியின் நவராத்திரி பாடல்களில் வரும் 'உஜ்ஜெயினீ  நித்யகல்யாணீ  ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி' வரிகளையும் இஙுகு நினைவு கொள்ளலாம்.  கடையத்திற்கு அருகிலிருக்கும் தோரணமலை ஸ்ரீீீீ முருகபெருமானை 'குகையில் வளரும் கனலே' என்று பாரதியார் மனமுருகப் பாடியுள்ளார்.


கடையம் வந்து சேர்ந்த பாரதி அவரது மைத்துனர் அப்பாதுரை வீட்டில் தங்கியிருந்தவர்,  சில நாட்களில் ராமர் கோயிலுக்கு வடக்கே பட்டர் வீடு என்ற ஒட்டு கட்டிடத்தில் குடியேறுகிறார்.    இந்த வீட்டில் குடியேறுவதற்கு முன்னால் இந்த வீடு பற்றி அவர் குறிப்பிட்டிருக்கும் தமது நெருங்கிய நண்பர் வெங்கடேச ரெட்டுத் தேவருக்கு எழுதிய கடிதம் ஒன்று காணக்கிடைக்கிறது.  பாரதியாரின் அன்றைய வறுமை நிலை பற்றியும் குறிப்பிடும் கடிதம் அது:

                                                                                                                          கடையம்
                                                                                                                         30  ஜனவரி 1919

ஸ்ரீமான் வெங்கடேச ரெட்டுவுக்கு நமஸ்காரம்.

இந்த ஊரில் ஒரு வீடு மூன்று வருஷத்துக்கு வாடகைக்கு  வாங்கியிருக்கிறேன்.  அதை செப்பனிடுவதற்கு   அவசியமான தொகை  நாம்  கையிலிருந்து செலவிட்டு  மேற்படி தொகைக்கு  வீட்டுக்காரரிடமிருந்து கடன் சீட்டெழுதி வாங்கிக் கொள்வதாக ஒப்பந்தம் செய்யப் பட்டிருக்கிறது.   இந்த ஊரில் வேறு வீடு கிடைக்காதபடியால் இவ்வித ஒப்பந்தத்தின் மீது  செப்பனிட வேண்டிய வீட்டை வாங்கிக் கொள்ளுதல் இன்றியமையாததாக இருக்கிறது.

இந்த விஷயத்தைக் குறித்து மஹாராஜாவிடம் தனிமையாகத் தெரியப்படுத்தி அவர்கள் கொடுக்கும் தொகையுடன்  நீயும் உன்னால் இயன்றது சேர்த்துக் கூடிய தொகையை  ஸ்ரீமான் சி. சுப்பிரமணிய பாரதி  பழைய கிராமம்  கடையம் என்ற விலாசத்திற்கு ஸ்ரீமதி சின்னமா சித்தி  மூலமாக வேனும்  நேரிலேனும் விரைவில் அனுப்பும்படி வேண்டுகிறேன்.

உனக்கு மஹாசக்தி அமரத்தன்மை தருக.

                                                                                           உனதன்புள்ள

                                                                                   சி. சுப்பிரமணிய பாரதி

கடிதத்தை வாசிக்கையிலேயே மனம் நொந்து போகிறது. 


'ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிலோங்கி இவ்வையம் தழைக்குமாம்' என்று பாடிய பாரதி  கடையம் வீதியில் செல்லம்மாவின் கைகோர்த்துப் போவாராம்.  'என்ன இது,  அநியாயம்' என்று பதைபதைக்கும்அக்கிரஹாரத்து மக்கள் தெருக்கதவு அடைத்து வீட்டினுள் புதைவாராம்.  பாரதியின் புதுமைக் கருத்துக்கள்  பழைய பழக்க வழங்களில் தோய்ந்திருந்த ஜனசமூகத்திற்கு வேம்பாய் கசந்தன.   இது ஒரு பக்கம் என்றால்  பாரதியின் வாழ்க்கை நெறியின் நேர்மையை உபயோகப்படுத்திக் கொண்டு அவரது சொந்த வாழ்க்கையை சீண்டிப் பார்க்கவும் சிலர் முயன்றனர்.

முக்கியமாக தனது படைப்புகளை அச்சில் கொண்டு வரும் முயற்சிகளுக்கு கடையம் வாழ்க்கை பாரதிக்கு சிரமங்களைக் கொடுத்தன.   புத்தக பிரசுரத் தொடர்பாக பரலி சு. நெல்லையப்பருக்குக் கடிதம் எழுதுகிறார்.    நெல்லையப்பரும் பாரதியை  நேரில் சந்திக்க கடையம் வருகிறார்.  பாரதியார் எட்டையபுரம் சென்றிருப்பதைக் கேள்விப்பட்டு எட்டையபுரம் விரைந்து அங்கே பாரதியை சந்தித்தும் விடுகிறார்.  பாரதியாரால் 'தம்பி' என்றழைக்கும் பேறு பெற்ற நெல்லையப்பர்,  பாரதியின் சில பாடல்களை 'கண்ணன் பாட்டு'  என்கிற தலைப்பில்   1917-லேயே 2000 பிரதிகள் பதிப்பித்தவர்.  முதன் முதல் நூல் வடிவில் வெளிவந்த பாரதியின் படைப்பு இது தான்.   பின்னால் பாப்பா பாட்டு, முரசுப் பாட்டு,  நாட்டுப்பாட்டு என்ற தலைப்பில் நெல்லையப்பர் பாரதியின் நூல்களைக் கொண்டு வந்தார்.   எட்டையபுரத்தில் பாரதியை சந்தித்த பிறகு இதே நூல்களை மீள் பிரசுரம் செய்தார் என்று தெரிகிறது.

தனது படைப்புகள் அனைத்தையும் நாற்பது நூல்களாக வெளியிட ஆர்வம் கொண்டு அதற்காக பொருளுதவி கேட்டு பலருக்கும் கடிதங்கள் எழுதி தோல்வி கண்ட மனம் பாரதியாரது.  கடிதங்கள் என்றால் தபால் கார்டில் தான். அதற்காக போஸ்ட் ஆபிஸ் சென்று நிறைய தபால் கார்டுகளை வாங்கி கைவசம் வைத்திருப்பாராம்.

செட்டி நாட்டு கானாடுகாத்தானில்  வயி.சு. சண்முகம் செட்டியார் என்று ஒரு பாரதி அன்பர் இருந்தார்.   பாரதியின் பாடல்களில் மிகுந்த பிரேமை கொண்டவர் அவர்.   செல்வந்தர்.  பாரதி கடையத்திற்கு வந்த சேதி கேள்வி பட்டு பிப்ரவரி 1919-ல் செட்டியார் பாரதியை தன் ஊருக்கு கையோடு அழைத்துப் போக கடையத்திற்கே வந்து விட்டார்.  பாரதியாரோடு கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் தங்கி பரவசப்பட்டார்.   உடனே அவரோடு கானாடுகாத்தான் செல்ல பாரதியார் அப்பொழுது தயார் நிலையில் இல்லை.  இருந்தும்  எட்டு மாதங்கள் கழித்து அக்டோபர் 1919 வாக்கில் கானாடு காத்தான் சென்று செட்டியார் மாளிகையில் 9 நாட்கள் தங்கியிருந்தார்.     கடையம் திரும்பிய பிறகு நவம்பரில் செட்டியாருக்கு ஒரு கடிதம் எழுதுகிறார்.

ஸ்ரீமான் வயி.சு.   சண்முகம்    செட்டியாருக்கு ஆசிர்வாதம்.  பகவத் கீதையை அச்சுக்கு விரைவில் கொடுங்கள்.  தஙகளுக்கு இஷ்டமானால் அதற்கு  நீண்ட விளக்கம்  எழுதி அனுப்புகிறேன்.   நீண்ட முகவுரையும் எழுதுகிறேன்.  ஆங்கில கவிகள்,  நூலாசிரியர்களின் காவியங்களும்,  கதைகளும்  இங்கிலாந்தில்   எப்படி  அச்சிடப்படுகின்றனவோ அப்படியே நூல்கள் நாம் இங்கு அச்சிட முயல வேண்டும்'  -- என்று பாரதியின் அளப்பரிய ஆசைகளை அக்கடிதம் வெளிப்படுத்துகிறது.

மறுபடியும் 1920 ஜனவரியில்  செட்டியாரின் அன்பு அழைப்பில் பேரில் கானாடுகாத்தான் வந்து தங்கினார்.  சண்முகம் செட்டியார் தன் மாளிகையில் பாரதியாரை தன்னோடையே வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பினார்.  ஆனாலும் பாரதியின் புத்தக வெளியீடு ஆர்வங்கள் கனிந்து வரவில்லை என்பது ஒருபுறமிருக்க,  கானாடுகாத்தானில் தங்கியிருக்க செல்லம்மாளுக்கு விருப்பமில்லை என்று தெரிந்து பாரதி கடையத்திற்கே திரும்புகிறார்.

இருந்தும் பாரதியின் புத்தக வெளியீடு ஆசைகள்  கருகிப் போய்விடவில்லை.  நண்பர் மதுரை ஸ்ரீனிவாசனுக்கு ஆங்கிலத்தில்  ஒரு நீண்ட கடிதம் எழுதுகிறார்.

அன்பு நண்பரே,

எனது எழுத்துப்பிரதிகள் யாவும் --என்னுடைய பன்னிரண்டு வருஷ அஞ்ஞான வாசத்தின் பலன்கள்-- புதுவையிலிருந்து இங்கு வந்து சேர்ந்து விட்டன.  அவற்றை 40 தனிப்புத்தகங்களாகப் பிரிக்க வேண்டும்.  முதல் பதிப்பாக ஒவ்வொரு புத்தகத்திலும்  10000 பிரதிகள் நான் அச்சிடப் போகிறேன்.   இந்த வேலைக்கு ஆரம்பத்தில் ரூ. 20000/-  மூலதனம்    தேவைப்படும்.  புத்தகங்கள் வெளிவந்த ஒரு வருஷத்தில்  அதிகமானால் இரண்டு வருஷங்களுக்குள்  செலவெல்லாம் போக நிகர லாபமாக ஒன்றரை  இலட்சம் ரூபாய் அடைவது நிச்சயம்.." என்று  வறுமை படுத்திய பாடு, புதிய பாரதியாய் எழுதுகிறான்.


அதே நேரத்தில் தனது புத்தக வெளியீட்டிற்காக தமிழ்ச்சாதியினரிடம் ஒரு கடன் திட்டத்தைப் பற்றியும் பிரஸ்தாபிக்கிறான்.  'புத்தகங்களை அச்சடிப்பதற்கான செலவிற்காக உங்களால் முடிந்த அளவு தொகையை தயவுசெய்து கடனாக அனுப்பி வையுங்கள்.  உங்களிடமிருந்து குறைந்தபட்சம் 100 ரூபாயவது எதிர்பார்க்கிறேன்.  அருள் கூர்ந்து தங்கள் நண்பர்கள் இருபது பேரையாவது  இதே மாதிரியோ அல்லது அதிகமான தொகையோ கடன் தந்து உதவும்படி வேண்டுகிறேன்.  உங்களிடமிருந்தும் உங்கள் நண்பர்களிடமிருந்தும் கிடைக்கும் தொகைகளுக்களுக்கு ஸ்டாம்பு
ஓட்டி புரோ நோட்டு எழுதிக் கொடுக்கிறேன்.  எனக்குக் கிடைக்கக் கூடிய அபரிதமான லாபத்தை முன்னிட்டு மாதம் 2 சதவீதம் தாராளமாகவே வட்டி தருகிறேன்.  உஙள் அன்பான பதிலையும்  உங்கள் தரப்பிலிருந்து ஏராளமான மணியாடர்களையும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டும், தஙளுக்கு நீடித்த ஆயுளும் இன்பகரமான வாழ்க்கையும் அளிக்குமாறு கடவுளைப் பிரார்த்தித்துக் கொண்டிருக்கும்,
தங்களன்புள்ள சி. சுப்பிரமணிய பாரதி  என்று கையெழுத்திட்டு முடிக்கிறான்.

பாரதிக்குத் தான் தமிழ்ச் சமுதாயத்தின் மேல் எவ்வளவு நம்பிக்கை..

நல்லவேளை,  பாரதியின் அந்த நம்பிக்கைப் பொய்த்துப் போகிறது.

{வளரும்}

படங்கள் உதவிய நண்பர்களுக்கு நன்றி.




Wednesday, July 25, 2018

பாரதியார் கதை --19

                                              அத்தியாயம்--19


பாரதியாரின் பத்தாண்டு காலப் புதுவை வாசம் தமிழ் கவிதை உலகிற்கு பெரும் பங்களிப்பைச் செய்த காலமாகும்.    பெண்களின் விடுதலைக்கான பாடல்கள், சக்தி பாடல்கள், ஒப்பற்ற சித்தக்கடல், வேதாந்தப்பாடல்கள், அவரின் சுயசரிதைப் பாடல்கள் மட்டுமல்ல, கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு என்று படைப்புலகின் பேரழகுகள் அத்தனையும் அவரிடமிருந்து வெளிப்பட்டது அவரது புதுவை வாச காலத்தில் தான்.  அவரது தத்துவ, ஞானத் தேடல்களுக்கு களமாக அமைந்தது புதுவை மண் தான்.  இந்தியா, சூர்யோதயம், விஜயா, கர்மயோகி ஆகிய பத்திரிகைகளோடு  அவர் ஆத்மார்த்த தொடர்பு கொண்டிருந்த காலமும் அது தான்.  ரிக் வேதப்
பாடல்களை  முறையாக   அரவிந்தரிடம் அவர் பாடம் கேட்க வாய்த்த காலமும் அது தான்.  அரவிந்தரும் பாரதியிடம் தமிழ் பயின்றார்.  பிற்காலத்தில் திருக்குறள், ஆழ்வார் பாசுரஙகள் போன்றவற்றை தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழி மாற்றம் செய்யும் அளவுக்கு பாரதி கற்றுக் கொடுத்த தமிழ் ஞானம் அரவிந்தரிடம் செயல்பட்டிருக்கிறது.

பாரதியின் அருமை மகள் சகுந்தலா தம் தந்தையாரிடமிருந்து தமிழ்ப்பாடல் பிறக்கும் நேர்த்தியைப் பற்றிச் சொல்கிறார், கேட்போம்:

"என் தந்தை பாட்டு இயற்றுகையில் அதற்கு ராகம், மெட்டு அமைக்க ஒரு உதவியையும் நாடுவதில்லை. ஏதேனும் ஒரு மெட்டில் தாமே பாடிப்பார்ப்பார். அந்த மெட்டு அவருக்குப் பிடித்திருந்தால் அந்த இசை எந்த ராக ஸ்வரஙளுக்குப் பொருத்தமாக இருக்கின்றதோ அந்த ராகத்தின் பெயரை மட்டும் எழுதி வைத்திருப்பார்.  தாள கதி தானே வந்து அமைந்து கொள்ளும். தாம் எழுதிய பாடல்களை என் தந்தை தம் ஆப்த நண்பர்கள் சிலரிடம் பாடிக் காண்பிப்பார்.  ஸ்ரீ வ.வே.சு. அய்யர்,  கண்ணன் பாட்டுக்கு எழுதித் தந்துள்ள முகவுரையில்  கற்பனா பாவத்தோடும் சிருஷ்டி உற்சாகத்தோடும் ஆசிரியர் தம் பாடல்களைப் பாடுவதைக் கேட்டிருப்பவர்கள் அவற்றை அட்சர லட்சம் பெறுமானமுள்ளதாக மதிப்பர் என்றார்.  என் தந்தை தம் குயில் பாட்டில் "காதல், காதல், காதல்.." என்று குயில் பாடியதாகக் கூறும் போது 'அந்தப் பொருளை அவனிக்கு உரைத்திடுவேன்;  விந்தைக் குரலுக்கு மேதினியீர் என் செய்வேன்' என்றார்.  ஆனால் அந்த அவரது கற்பனைக் குயில்க் காதலிக்குள்ள குரலினிமை ஒரு வேளை அவருக்கு இல்லாமல் போயிருக்கலாம்.  அவரது கம்பீரமான குரலினிமையை-- அந்த அற்புதமான உச்சரிப்பை-- ஒரு கிராம்போன் இசைத்தட்டு மூலமாகப் பல நாள்  கேட்டு அனுபவிக்கும் பாக்கியம் நானும் எங்கள் குடும்பத்தாரும்-- ஏன் தமிழ் நாட்டாரும் பெறவில்லையே!" என்று ஏக்கத்துடன் சொல்கிறார்.

'செந்தமிழ் தென்புதுவை என்னும்  திருநகரின்  மேற்கே
 சில தொலைவில் மேவுமொரு மாஞ்சோலை'  என்று குயில் பாட்டில் புதுவை நகரின் செளந்தரியத்தைத் தந்தையார் வர்ணித்திருக்கிறார்.  ஆனாலும் அத்தகைய புதுவை நகரை விட்டு வெளி வரக்கூடாதென்று அரசாங்க ஆக்ஞையினால் கூண்டில் அடைபட்ட சிங்கம் போல என் தந்தை தவித்து மறுகினார். 'இன்று கட்டுண்டோம், பொறுத்திருப்போம்; காலம் மாறும். தருமத்தை அப்போது வெல்லக் காண்போம்; தனுவுண்டு; காண்டீபம் அதன் பேர் என்றான்' -- இவ்வாறு பாஞ்சாலி சபதத்தில் அர்சுனன் கூறியதாக என் தந்தையார் எழுதியுள்ள பாடலைப் பற்றி ஸ்ரீ வ.வே.சு. அய்யர் பாஞ்சாலி சபத்திற்கான தம் முகவுரையில் பரவசத்துடன் எழுதியிருப்பதைக் காணலாம்.  அந்த வரிகளுக்கு அவர் அத்தனை பெரிய மதிப்பு அளித்ததன் காரணம், என் தந்தையின் பாவன்மைக்காக மட்டுமல்ல;  புதுவையில் அவர்கள் அடைபட்டுக் கிடந்தபோது அந்தப் பாட்டு அவர்களுக்கு எவ்வளவு பொருத்தமாயிருந்து  என்பது தான் அந்தப் பாடலை ஸ்ரீஅய்யர் தனிமையில் தமக்குள் பாடிப்பாடி மகிழ்வதை நான்  கேட்டிருக்கிறேன்...." என்று சகு ந்தலா  பாரதி சொல்லும் பொழுது புதுவையில்  பாரதியார் கட்டுண்டு கிடந்த அவலமும்   சுதந்திரத்திற்கான அவரது தாபமும் புரிகிறது என்று குறிப்பிட்டிருக்கிறார் சகுந்தலா.

பாரதியாரின் முதல் புத்தகத் தொகுதி 'சுதேச கீதங்கள்' என்ற பெயரில் வெளி வந்தது புதுவையில் தான்.  இது நடந்தது 1908-ம் ஆண்டில்.   'காக்கை குருவி எங்கள் ஜாதி' என்று சர்வ உயிர்களையும் நேசிப்பவனாய் பாரதி பாடிக் களித்தது புதுவை குயில் தோப்பில் தான்;   பள்ளி ஆசிரியர் கனக சுப்புரத்தினம் பாரதியை சந்திக்கும் வாய்ப்பு பெற்று பிற்காலத்தில் பாரதிதாசன் ஆனதும் புதுவையில் தான். 

பாரதிக்குக் கிடைத்த பிரெஞ்சு மொழிப் புலமை புதுச்சேரியில் தான். அவரது பிரஞ்சு மொழி ஞானம் பிரஞ்சு மொழியில் இயற்றப்பட்ட  நூல்களை வாசித்தறியவும், அவற்றை தமிழில் மொழி மாற்றம் செய்யவும், பிரஞ்சு அதிகாரிகளுடன் சரளமாகப் பேசவும் உதவியது.   ஏற்கனவே அவர் ஆழ்ந்து அறிந்திருந்த  சமஸ்கிருதம், இந்தி, வங்காளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளோடு இப்பொழுது பிரன்சும் சேர்ந்து கொண்டது.

என்ன இருந்தும் பாரதியின் அருமைத் திருமகள் சகுந்தலா குறிப்பிட்டபடியே புதுவை வாழ்க்கை கூண்டில் அடைப்பட்ட சிங்கம் போலவே பாரதிக்கு இருந்திருக்கிறது.  பக்கத்து தழிழகத்தில் வீர சுதந்திரம் வேண்டி செயல்பட்டோர் பிரிட்டிஷ் ஆட்சியின் கொடுமைகளை அனுபவிக்க தான் அவர்களிடமிருந்து விடுபட்டதே போல அன்னிய மண்ணில் வாசம் செய்வது அவருக்கு உறுத்தலாக இருந்தது.   தமிழகம் சென்று அவர்களோடு தோளோடு தோள் சேர்ந்தாற் போல போராட உள்ளம் தவித்தது.

எப்படியாவது பிரிட்டிஷ் எல்லைக்குள் சென்று விடத் தவித்த பாரதியார் அதற்கான உபாயம் ஒன்றை மேற்கொண்டார்.   சென்னை கவர்னருக்கும், பிரிட்டிஷ்  நாடாளுமன்ற  உறுபிப்பினரும்,   பிரபல தொழிற்கட்சித் தலைவருமான ராம்ஸே  மக்டானல்டுக்கும்  {Ramsay Macdonald}  புதுவையில் வேவு பார்க்கும் பிரிட்டிஷ் காவல்துறையினரின் அத்துமீறல்கள் பற்றி கடிதம் எழுதுகிறார்.    இந்தக் கடிதம் பிறகு இந்து பத்திரிகையிலும் வெளிவந்தது.   அரசிடமிருந்து எந்தச் சலனமு;ம் இல்லை என்பதினால்  பாரதியார் தாமே இந்திய எல்லைக்குள் நுழைந்து விடுவது என்று துணிவாக முடிவெடுக்கிறார்.

1918 நவம்பர்  20-ம் நாள்.

ஒரு ஜட்கா வண்டியை அமர்த்திக் கொண்டு கடலூர்  வந்து விடலாம் என்பது  பாரதியின் திட்டம்.  திட்டமும் எந்தத் தடையும்  இல்லாமல் அமுலாகிறது.

பாரதியின் செயல்பாடுகளை உன்னிப்பாகக்  கவனித்து வந்த பிரிட்டிஷ் போலிசார்  புதுவை-- கடலூர் எல்லையில் அவரைக் கைது செய்கின்றனர்.   அந்நாளைய  கடலூர் சப்-மாஜிஸ்ட்ரேட் சக்ரவர்த்தி என்பார் முன்  நிறுத்துகின்றனர்.    பாரதி கைது பற்றிய விவரம் அறிந்த கடலூர் வழக்குரைஞர்கள்  சடகோபாச்சாரியாரும்,  நடராஜ அய்யரும் பாரதியை ஜாமீனில் எடுக்க முயன்றனர்.  ஆனால் சப்-மாஜிஸ்ட் பாரதியை வெளியில் விட்டால் தன் பதவி சுகத்திற்கு ஏதேனும் பஙகம் ஏற்பட்டுவிடுமோ என்று பயந்து பாரதியை இரண்டு நாட்கள் ரிமாண்டில் வைக்க உத்தரவிட்டு சிதம்பரத்தில் முகாமிட்டிருந்த தென்னாற்காடு ஜில்லா  நீதிபதி ஸ்டோடார்டின் முன் ஆஜராக வேண்டும் என்று தீர்ப்பளித்ததின் மூலம் ஒரு ஆங்கில நீதிபதியே பாரதியாரின் விடுதலை பற்றித் தீர்மானிக்கட்டும் என்று சாமர்த்தியமாக நழுவிக் கொள்கிறார்.

சென்னை துணை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரலாய் இருந்த ஹானிங்டன் என்பவர் பாரதியாரின் மேல் கருணை கொண்டு டிசம்பர் 14-ம் தேதி நேரில் பாரதியைச் சந்திக்கிறார்.  பாரதி பத்திரிகை பிரசுரத்திற்கென்று எது எழுதினாலும் தன்னிடம் காட்டி அனுமதி பெற்ற பிறகு அவை பிரசுரமாக வேண்டும் என்ற  நிபந்தனையை முக்கியப்படுத்தி பாரதியின் விடுதலைக்கு வழிகோலுகிறார்.  ஏறத்தாழ 25  நாட்கள்  சிறைவாசத்திற்கு பிறகு சில நிபந்தனைகளை எதிர்கொண்டு பாரதி  !4-12-1918 அன்று விடுதலையாகிறான்.

இந்த 25 நாட்களிலும் பாரதியின் சிறைவாசத்தை  அந்நாளைய சென்னை மாகாண தமிழறிஞர்களும்,  அரசியல்வாதிகளும் வாய்மூடி மெளனிகளாய் பார்த்துக் கொண்டு தான் இருந்தார்கள்.    பாரதி விடுதலையாவதற்கு இரண்டு நாட்கள் முன்பு திருச்சியிலே தமிழ்ப் பண்டிதர்களில் மாநாடு ஒன்று நடந்திருக்கிறது.   அதில் ஒரு தமிழ்க் கவிஞன் என்ற அளவில் கூட பாரதியின்  விடுதலை பற்றி பிரஸ்தாபிக்கவே இல்லை.   டிசம்பர் எட்டாம் தேதி தஞ்சை மணிக்கூண்டிற்கு அருகே  தஞ்சை ஜில்லா காங்கிரஸ் கமிட்டியும், இந்திய ஹோம் ரூல் இயக்கத்தினரும் இணைந்து நடத்திய கூட்டத்தில் பாரதியின் கைதைக் கண்டித்தும்,  அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்   என்றும் ஒரு தீர்மானம்   நிறைவேற்றப்பட்டிருக்கிறது.  பாரதியின் விடுதலைக்குப் பின் 17-12-1918-ல்    தஞ்சையில் கூடிய தஞ்சை நகரவாசிகள்--ஜில்லா காங்கிரஸ் கமிட்டியினரின் கூட்டத்தில் பாரதியின் விடுதலையை வரவேற்று மகிழ்ச்சி பொங்க தீர்மானம் நிறைவேறியிருக்கிறது.  இது  ஒன்றே  அன்றைய தமிழகம் பாரதி பற்றிக் கொண்டிருந்த அக்கறையாகத் தெரிகிறது.

'நாம் அச்சுக்குப் போகும் சமயத்தில் சென்னை கவர்ன்மெண்டார் ஸ்ரீமான் சுப்பிரமணிய பாரதியாரை விடுதலை செய்யும் படி  உத்தரவு செய்து விட்டதாகத் தெரிகிறது'  என்று பாரதியின் விடுதலை குறித்த முதல் அச்சுச் செய்தியாக சுதேசமித்திரன் நாளேட்டின்  தகவல் சொல்கிறது.

விடுதலையான பாரதி  அடுத்த நாளே 15-12-1918  ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு கடையம் வந்து சேர்ந்தார்.

{வளரும்}

படம் அளித்தவர்களுக்கு நன்றி.
Related Posts with Thumbnails