மின் நூல்

Monday, December 24, 2018

பாரதியார் கதை --22

             
                                        அத்தியாயம்—22

து  1920-ம்  ஆண்டு நவம்பர் மாதம்.

சுதேசமித்திரன் ரங்கசாமி அய்யங்காரிடமிருந்து அழைப்பு வந்ததும் பாரதியார் கடையத்திலிருந்து சென்னை புறப்பட்டார்.  சுதேசமித்திரனில்  உதவி ஆசிரியராக பணியாற்ற  வேண்டும் என்று அய்யங்கார் கேட்டுக் கொள்ள பாரதி சம்மதித்தார்.

பாரதியின் தம்பி விஸ்வநாதன் சைதாப்பேட்டையில் ஆசிரியர்  பயிற்சிக் கல்லூரியில் கல்வி பயின்று கொண்டிருந்தார்.  விஸ்வநாதனின் தாய் மாமனும் தாயார் வள்ளியம்மாளும் விஸ்வநாதனுடன் சைதாப்பேட்டையில் வசித்து வந்தனர்.  பாரதியின் குடும்பம் சென்னை வந்ததும் விஸ்வநாதனின் வேண்டுகோளின்படி அவன் வீட்டில் தங்கினர்.  பாரதியின் தந்தை சின்னசாமி அய்யருக்கு வள்ளியம்மாள் இளைய தாரம்.  செல்லம்மாளிடமும் சகுந்தலாவிடமும் வள்ளியம்மாள் மிகவும் பிரியமாகப்  பழகுவார்.   ஒரு நாள் "பாரதி!  நீ பாடிக் கேட்க
வேண்டுமென்று எனக்கு ரொம்ப நாள் ஆசை....  ஒரு சமஸ்கிருதப் பாடல் பாடேன்.." என்று வள்ளியம்மாள் ஆசையாய் கேட்க, பாரதி "தேஹி முதம் தேஹி..  ஸ்ரீ ராதே.. ஸ்ரீராதே.." என்ற பாடலைப் பாட வள்ளியம்மாள் மெய் மறந்து கேட்டுக் கொண்டிருந்தாராம்.

 சொந்த மனிதர்களுடன் தங்கியிருக்கும் சுகம் இருந்தாலும் சைதாப்பேட்டை வீட்டில் வாசம் செய்வதில் பாரதிக்கு ஒரு அசெளகரியம் இருந்தது.  அப்பொழுது ஜார்ஜ் டவுன் எர்ர பாலு செட்டித் தெருவில் சுதேசமித்திரன் காரியாலயம் இருந்தது. சைதையிலிருந்து ஜார்ஜ் டவுனுக்கு ரயில் பயணம்.  அங்கே இரூந்து சுதேசமித்திரன் காரியாலயத்திற்கு நடை என்பது பாரதிக்கு சிரமமாக இருந்தது.  காலை சரியான நேரத்திற்கு அலுவலகத்திற்கு வருவதில் தாமதம் ஏற்படுவதை பாரதியால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

பாரதியின் சிரமத்தைப் பார்த்து மித்திரன் ஆசிரியர் சி.ஆர். சீனிவாசன் தம்புச்செட்டித் தெருவில் 209-ம் எண்ணுள்ள வீட்டில் ஒரு போர்ஷனை பாரதியார் குடித்தனம் இருக்க ஏற்பாடு செய்துதந்தார்..    மேட்டுத்தெரு வழியா வந்தா பின்பக்கம் தான் பாரதியிருந்த வீடு.  காலைலே ஒன்பது மணி சுமாருக்கு சுதேசமித்திரன் அலுவலகத்திற்கு கிளம்பினார்ன்னா, பொழுது சாய்ந்ததும் பெரும்பாலும் வீட்டுக்குத்  திரும்பி விடுவார்.   வாரத்திலே சில நாள் வீட்டு முகப்பு திண்ணைலே ஷேட் விளக்கு வைச்சு பக்தி, பஜனை விளக்கம்ன்னு  பாரதி பேச ரோடு டிராப்பிக் பாதிக்கற அளவுக்கு ஜனக்கூட்டம் சேர்ந்திடுமாம்.  பாட்டு, பாடலுக்கு விளக்கம்ன்னு இரண்டு மணி நேரத்திற்குக் குறையாம பாரதி சொல்விருந்து படைப்பாராம்.

தம்புச் செட்டித் தெரு காளிகாம்பாள்  கோயிலுக்கு அடிக்கடி செல்லும் வழக்கம் கொண்டவராய் பாரதி இருந்தார். அம்பாளும் இஷ்ட தெய்வமாய் பாரதியின் மனசில் குடிகொண்டிருந்தாள்.

'யாதுமாகி நின்றாய் -- காளி
எங்கும் நீ நிறைந்தாய்                                                   
தீது நன்மையெல்லாம் - காளி
தெய்வ லீலையன்றோ?..

ஒரு நாள் காளிகாம்பாள் சந்நிதியில் வரகவியாய் பாரதி இந்தப் பாடலைப் பாடும் பொழுது தேவியின் தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் மெய்மறந்து கரங்கூப்பி நின்றனராம்.

தெய்வ லீலையாகத் தான் அது நடந்தது போலும்.  தம்புச் செட்டித் தெருவில் இருந்தது போதும் என்று  பாரதி தன் ஜாகையை மாற்ற வேண்டி நேரிடுகிறது.

பாரதி புதுவையில் வசித்த பொழுது ஹரிஹர சர்மா என்றொரு நண்பர் அவருக்கிருந்தார்.  இவர் கடையம் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர்.  பாரதியின் துணைவியார் செல்லமாவிற்கு உறவினரான சங்கரகிருஷ்ணனுக்கு தூரத்து சொந்தம் இவர்.  இந்த சங்கர கிருஷ்ணன் தான் ஆஷ்
கொலை வழக்கின் குற்றவாளியான வாஞ்சிநாதரின் மனைவியின் சகோதரர். வாஞ்சியின் மைத்துனர்.

பாரதி சென்னைக்கு வந்த பொழுது இந்த ஹரிஹர சர்மா பாரதிக்கு மிக நெருக்கமானதே தெய்வ சங்கல்பம் தான். பிற்காலத்தில் பாரதிக்கு இந்த ஹரிஹர சர்மா செய்ய வேண்டிய பணி ஒன்று இருந்தது அந்த தெய்வமே அறியும் போலும்.  மைலாப்பூரில் ஹரிஹர சர்மாவிற்கு சொந்தமாக ஒரு வீடு இருந்தது.   அந்த வீட்டில் பாரதி தன்னுடன் தங்கியிருப்பதை பெரிதும் விரும்பினார் ஹாரிஹர சர்மா.  அவரது விருப்பத்தைப் பூர்த்தி செய்வதற்காகவே பாரதி மைலாப்பூரில் குடியேறினார்.  அதுவும் மிகச் சிறிய வீடு  என்பதாலும் சர்மாவிற்கு விருந்தாளிகளின்  வருகை மிகவும் அதிகம் என்பதினாலும் பாரதியின் தனிமைக்கு ஏங்கும் கவி உள்ளத்திற்கு அந்த வீடு சரிப்பட்டு வரவில்லை.   இந்த நேரத்தில் தான் சுரேந்திர நாத் ஆர்யா பாரதியாரைச் சந்திக்கிறார்.  ஆர்யாவின் வீடு வேப்பேரியில் இருந்தது.  அந்த வீடு பாரதியின் மன நிலைக்கு ஏற்றதாக இருக்கும் என்று  தீர்மானித்து ஆர்யா பாரதியை தன் வீட்டில் தங்கியிருக்க ஆசைப்பட்டு பாரதியாரிடம் கேட்டுக் கொண்டே இருந்தார்.

சுரேந்திர நாத் ஆர்யா உடல் நலம் பாதித்து மருத்துவமனையில் இருந்த பொழுது ஒரு டேனிஷ் கிருஸ்தவ பாதிரியார் அவருக்கு மத மாற்றம் அளித்து அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தார்.  அமெரிக்காவில் ஆர்யா ஒரு சுவிஸ் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்.   வேப்பேரி ரண்டால்ஸ் சாலையில்   ஆர்யாவின் பெரிய வீடு இருந்தது.  தன் சுவிஸ் மனைவி மார்த்தாவுடன் அந்த வீட்டில் வசித்து வந்தார்.

பாரதி ஆர்யாவின் வீட்டிற்கு ஜாகை மாற்றி வந்ததும் மார்த்தா பாரதி குடும்பத்துடன் இரண்டு மூன்று நாட்கள் பழக்கத்திலேயே மிகவும் நெருக்கமாகி விட்டார்.  இவ்வளவுக்கும் அந்த சுவிஸ் பெண்ணுக்கு தமிழ் தெரியாதென்றால் செல்லமாவுக்கும், சகுந்தலாவுக்கும் சுவிஸ் பாஷை தெரியாது.   ஜாடையிலேயே விஷயங்களை பகிர்ந்து கொள்வார்கள்.  தான் சொல்ல வருவது சகுந்தலாவுக்குப் புரிந்துவிட்டதென்றால்  கொள்ளை சந்தோஷம் மார்த்தாவுக்கு.   ஆர்யாவோ பாரதியிடம் வாடகை என்று எதுவும் வாங்க  ஆரம்பத்திலேயே  கறாராக மறுத்து விட்டார்.

வீடு பெரிய வீடு.  பெரிய பெரிய ஜன்னல்கள்.   ஜன்னலுக்கு வெளியே தோப்பு போல மரங்கள் வரிசை.  குருவி, குயில் என்று பாரதியார் மனசுக்குக் கொண்டாட்டம் தான்.  இருந்தாலும் ஆர்யாவின் அன்புக்குக் கட்டுப்பட்டு வந்த இடத்தில் எவ்வளவு நாட்கள் குடும்பத்துடன் தங்குவது என்ற கூச்சத்தில் பாரதி வேறே வீடு தேட ஆரம்பித்தார்.

புதுவையில் பாரதியின் அத்தியந்த நண்பராய்  இருந்த குவளைக் கண்ணன் ஞாபகம் இருக்கா?.. பாரதியின் 
தோழராய், பாதுகாவலராய், பாரதிக்கு எல்லாமுமாய் இருந்த குவளைக்கண்ணன் பாரதி இல்லாத புதுவையில் வாழப்  பிடிக்காமல் பாரதி சென்னைக்கு வந்த சில நாட்களிலேயே தானும் வந்து விட்டார்.  குவளைக்கு சொந்தக்காரர்கள் திருவல்லிக்கேணியில் இருந்தார்கள்.  அவர்கள் பரிந்துரையில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் மடப்பள்ளி சார்ந்த பணியில் குவளை இருந்தார்.  பாரதி வேப்பேரியில் இருக்கிறார் என்று  தெரிந்து ஒரு நாள் ஆர்யா வீட்டிற்கு வந்து பார்த்தார்.  சில நாட்களில் பாரதியின் சங்கடம் புரிந்து  பாரதிக்காக  குவளை  திருவல்லிக்கேணி யில்  ஒரு வீடு பார்த்துக் கொடுத்தார்.

திருவல்லிக்கேணி துளசிங்கப்  பெருமாள் கோயில் தெருவில் அந்த வீடு இருந்தது.  முன்புறம் விசாலமான கூடம், பின்புறம்  நடு  முற்றம் என்று பெரிய வீடு அது.  குவளை பாரதியாரை விட்டுப் பிரிந்திராமல் தமக்கு அருகாமையில் வைத்துக் கொண்டது கூட ஒரு விதத்தில் பார்க்கப் போனால் தெய்வ சங்கல்பம் தான்.   பாரதியாருக்கு குவளை செய்ய வேண்டிய ஒரு காரியம் பாக்கியிருந்ததை அந்த தெய்வமே அறியும் போலும்.

பின்னால் நடந்தவையெல்லாம் நினைத்துப் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது.  பாரதியார் திருவல்லிக்கேணியில் வாழ்ந்த பொழுது பழகிய பல நண்பர்கள் ஒன்று கூடி செயலாற்றவும் பேசிக் களிக்கவுமான காலம் கைகூடி வந்தது.  வ.வே.சு. அய்யரும், துரைசாமி அய்யரும் இதில் முக்கியமானவர்கள்.    சுதேச மித்திரன் தொடர்பில் வாசிக்கக் கிடைத்த வெளிநாட்டுப் பத்திரிகைகளை ஆழ்ந்து படிக்கவும் குறிப்புகள் எடுக்கவும் சில கட்டுரைகளை மித்திரனுக்கேற்ப மொழி பெயர்க்கவும் முன்னிரவு நேரத்தை ஒதுக்கி வைத்திருந்தார் பாரதி.  வெளியூர்  கூட்டங்களில் கலந்து கொள்ளவும் அவரால் முடிந்தது.

பின்னால் நடந்தவையெல்லாம் நினைத்துப் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது.  எல்லாமே தெய்வ சங்கல்பம் தான்.   யாரெல்லாம் நெருக்கம் கொள்ள வேண்டுமோ அவர்கள் எல்லாம் பாரதியின் திருவல்லிக்கேணி வாசத்தில் நெருக்கம் கொள்கிறார்கள்.   'தீது நன்மையெல்லாம் காளி தெய்வலீலை அல்லவோ?'  என்று சொன்ன பாரதியின் தீர்க்க தரிசனத்தை நினைத்து வியக்கத் தான் வேண்டியிருக்கிறது.


(வளரும்)



Related Posts with Thumbnails