மின் நூல்

Saturday, September 14, 2024

இது ஒரு தொடர்கதை -- 19

குலச்சிறை நாயனார் சிலையிலிருந்து கொஞ்ச தூரம் தள்ளித் தான் 49-வது கற்சிலையாக நின்ற சீர் நெடுமாறன் நாயனாரின் சிலை இருந்தாலும் அவர் சிலை ஸ்தாபித்திருந்த இடம் குறிப்பாக ஏற்கனவே பாண்டியனுக்கு அத்துபடி  ஆகியிருந்ததினால் தன் நடையில் கொஞ்சம் வேகத்தைக் கூட்டியே பாண்டியன்


  தென்னாடுடைய சிவனே போற்றி!!  எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!

நடந்ததைப் பார்க்க முடிந்தது.  அவன் வேகத்தோடு போட்டி போட்டுக் கொண்டு நடக்க முடியாவிட்டாலும் மங்கையும் தொடர்ந்து வரும் சிலைகளில் தன் பார்வையைச் சுழல விட்டபடியே பாண்டியனைத் தொடர்ந்தாள்.  மஙகையர்க்கரசியாரின் சிலையைப் பார்வையிலிருந்து தப்ப விட்டுவிடக் கூடாது என்ற ஜாக்கிரதை உணர்வு வேறு ஒரு பக்கம்!...

என்ன தான் நாயன்மாராய் இருந்தாலும் மன்னனாய் இருந்தவன் இல்லையா? அந்தக் கம்பீரம் அழியாமல்  நெடுமாற நாயனாரின் உடலிலும் திண் தோள்களிலும் முகத்திலும் படிந்திருந்தது.  நாயனாரின் சிலையை நெருங்கியதும் மங்கையைக் காணோமே என்று பாண்டியன்  திரும்பிப் பார்த்தான். நாலைந்து சிலைகளுக்குப் பின்னால் அவள் வந்து கொண்டிருப்பதைப் பார்த்ததும், "ராணியும் ராஜாவுமாய் சேர்ந்து பார்ப்போம் என்று சொன்னே, இல்லையா.. வா.. ராஜா இங்கேயிருக்கிறார் பார்.." என்று நெடுமாற நாயனார் சிலையை பாண்டியன் சுட்டிக் காட்டினான்.  அவன் கண்கள் நாயனார் சிலையின் மேலேயே நிலைக்குத்தி இருந்தது.

நடையில்கொஞ்சம் வேகத்தைக் கூட்டி அருகில் வந்த மங்கை நெடுமாறனார் சிலையைப் பார்த்தபடி,  "சும்மா சொல்லக்கூடாது.. ராஜ களையோடத் தாங்க  இருக்கார்.." என்றாள்.  

"நான் நினைச்சதையே நீயும் சொல்லணும்ங்கற எதிர்பார்ப்பு எனக்கு இருந்தது.. அதையே நீயும் சொன்னதில் சந்தோஷம், மங்கை.." என்றான் பாண்டியன்.

"அதுக்குள்ளேயே அப்படி சொல்லிட்டா, எப்படி?" என்றாள் மங்கை.  

"எதுக்குள்ளேயே?" என்று புருவத்தை உயர்த்தினான் பாண்டியன்.

"நான் நினைக்கறதையே நீங்க சொல்றீங்களான்னு பாக்க வேண்டாமா?"

"புரிலே.."                                                                                                                            55

அரசியார் சிலையை இன்னும் நாம பாக்கலே.. அவங்களை நாம பாக்கறப்போ நான் நினைக்கிறதையே நீங்களும் சொல்றீங்களான்னு பாக்க வேண்டாமா?" என்று மங்கை சொன்ன பொழுது அவள் குறிப்பிட்டது புரிந்த மாதிரி கலகலவென்று சிரித்தான் பாண்டியன்.  "அதையும் பார்த்தாப் போச்சு.." என்றவாறே பக்கத்துச் சிலையைப் பார்த்தான் பாண்டியன்.  50- என்ற எண் போடப்பட்டு நேச நாயனார் என்று சுவரில் குறித்திருந்தார்கள்.

"ஐம்பது வந்திட்டோம்.. பக்கத்லே தான் அவங்களும் இருப்பாங்க..வா.. அதையும் பார்த்துடலாம்" என்றபடியே பிரிய மாட்டாமல் பிரிகிற மாதிரி நெடுமாற நாயனாரின் சிலையை மீண்டும் ஒருமுறை உன்னிப்பாக நோட்டமிட்டு விட்டு நடையை எட்டிப் போட்டான் பாண்டியன்.

பாண்டியன் சொன்னபடியே நின்ற சீர் நெடுமாறனனுக்கு ஆறு சிலைகள் தாண்டி 55- என்ற எண் போடப்பட்டு மங்கையர்கரசியார் சிலை இருந்தது. அறிவார்ந்த கூர்மையான நாசி, வட்ட விழிகள், கருங்கூந்தலைக் கொண்டையிட்டு முடிந்த விதமே அந்த வட்ட முகத்திற்கு மேலும் அழகூட்டியது. நெற்றியில் திரு நீறு,  தலைக் கொண்டையில் மல்லிகைச் சரம் சூட்டியிருந்தார்கள்.  கைகள் குவித்த நிலையில் அரசியாரின் சிலையைத் தத்ரூபமாக வடித்திருந்தார்கள்.  

அரசியாரின் சிலையை தீர்க்கமாகப் பார்க்கும் பொழுதே மங்கை ஆழ்ந்த யோசனையில் உணர்ச்சி வசப்பட்டாள்.  'இவர் முயற்சியால் தானே இவரது கணவரின் மனமாற்றப் போக்கைக் போக்கவும் அவருக்கு பீடித்த நோயைத் தீர்க்கவும் முடிந்தது?' என்று சிந்தனை ஓடியது.  மங்கைக்கு அவரைப் பார்க்கும் பொழுது டாம்பீகமான அரச குடும்பப் பெண்ணாகத் தோன்றவில்லை. எளிய  சாதாரண மக்களின் வீட்டுப்பெண் போன்ற குடும்பப் பொறுப்பும் தீர்க்கமான முடிவுகளை எடுத்து பாதிக்கப்பட்ட தன் கணவரின் நலன் காத்த வெற்றித் திருமகளாகவும் காட்சியளித்தாள். உடனே 'இறைவனே! எனக்கும் இந்த மாதிரியான திறமைகளைக் கொடுத்து எடுத்த காரியங்க்களில் வெற்றி பெற நீ அருள வேண்டும்' என்று மனமாற வேண்டிக்கொண்டாள்.

'என்ன, அப்படியே அவங்க சிலையோட நீயும் ஒரு சிலையா ஒன்றிப் போயிட்டே போலிருக்கு!" என்று பாண்டியன் சிரித்தான்.

"ஆமாங்க.. ராணியார் எவ்வளவு அழகா இருக்காங்க, பாத்தீங்களா?" என்று கொஞ்ச நேரத்திற்கு முன் தனக்கேற்பட்ட உணர்வுகள் கலையாமலேயே கேட்டாள் மங்கை.

"ஆமாம், மங்கை.. பொதுவாகவே தமக்கான பெண்களைத் தேர்வு செய்வதில் அரசர்கள் என்றும் சோடை போனதே இல்லை" என்று ரொம்ப அலட்சியமாக சொன்னான் பாண்டியன்.  

அவன் சொன்னதைக் கேட்டு எரிச்சலாக இருந்தது மங்கைக்கு.  பெண்களின் உள்ளுணர்வுகளைப் புரிந்து கொள்ள சக்தியற்றவர்களாகவே ஆண்டவன் இந்த ஆண்களைப் படைத்து விட்டானோ என்ற பொருமல் மனசில் தேங்கியது.  அல்லது தன் அரச வாழ்க்கையில் இந்த அரசியார் பட்ட மனக்கஷ்டங்களும் அவற்றைக் களைய இவர் மேற்கொண்ட அரிய செயல்களையும் தன் கணவன் அறிந்திருக்க மாட்டாரோ என்ற ஐயம் அவளுக்கேற்பட்டது.   அப்படி அதெல்லாம் அறியாத பட்சத்தில் பாண்டியன் நெடுமாறனிடம் இவர் பக்தி கொள்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது என்று மங்கைக்கு எரிச்சலாக இருந்தது.

"என்ன மங்கை?  அப்படி என்ன யோசனையில் மூழ்கிட்டே? அரசியார் இவ்வளவு அழகாய் இருக்கிறாரேன்னு தானே நினைத்து மலைச்சுப் போய் நிக்கறே?" என்று கேட்டான்.

சட்டென்று தன் உணர்வுகளை மறைத்துக் கொண்டு, "ஆமாமாம்.. எப்படி நான் நினைப்பதை அப்படிக் கரெக்டாக கண்டு பிடிக்க முடிஞ்சது?" என்று சொல்லிச் சிரித்தாள் மங்கை.

"ஹே! இதெல்லாம் கண்டுபிடிக்கறது கஷ்டமா என்ன? பொதுவா பெண்கள்னாலே இன்னொரு பெண் அழகா இருந்தா அது அவங்களை ரொம்ப பாதிக்கும். அந்த சைக்காலாஜி அடிப்படைலே தான் சொன்னேன்" என்றான் பாண்டியன்.

அவன் சொன்னதைக் கேட்டு மேலும் எரிச்சல் கூடியது அவளுக்கு.  இருந்தாலும் ரொம்ப கஷ்டப்பட்டு அதை அடக்கிக் கொண்டு, "சரியாச் சொல்லிட்டீங்களே!" என்று போலியாகத் தன் உணர்வுகளை வெளிக்காட்டிக் கொள்ளாமல் புன்னகைத்தாள் மங்கை.

(தொடரும்)

 


Monday, September 9, 2024

இது ஒரு தொடர்கதை -- 18

டையில் காளியண்ணன் இல்லை.     இது யாரோ புது ஆள்.

காளியண்ணனுக்குத் தெரிந்தவர் தான் என்று காட்டிக்கொள்கிற மாதிரி, "காளி இல்லை?" என்று ஒரு கேள்வியைக் கடையில் இருந்த ஆளிடம் கேட்டு விட்டு, பதிலை எதிர்பார்க்காத தோரணையில் செருப்பை மட்டும் தட்டி தடுப்பைத் தாண்டி அதற்குரிய இடத்தில் கழட்டி விட்ட பிறகு இருவரும் கோயிலை நோக்கி நடந்தனர்.     

கூட்டம் அவ்வளவாக இல்லை.  சுவாமி சன்னதியில் இவர்களைப் பார்த்ததும் ஏற்கனவே தெரிந்திருக்கும் அறிகுறியில் லேசான சிரிப்புடன்  கற்பூர தட்டுடன் படியேறி உள்ளே செனற குருக்கள், சுவாமிக்கு தீபாராதனை காட்டி வெளியே வந்து இவர்கள் பக்கம் வந்ததும் பாண்டியன் கற்பூர ஜ்வாலை மேற்பக்கம் கை நீட்டி கண்களில் ஒற்றிக்கொண்டு சில்லறையைத் தட்டில் இட்டான்.. மங்கையும் ஒற்றிக் கொண்டாள்.   குருக்கள் இவனுக்கு வீபூதி பிரசாதமும் மங்கைக்கு குங்குமமும் சுவாமி பாதப்பக்கமிருந்து தான் எடுத்து வந்திருந்த மலர் சரடும் கொடுத்தார்.  மங்கை குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக் கொண்டு பாண்டியன் பக்கம் லேசாகத் திரும்பி தலையில் சூட்டிக் கொண்டாள். அதற்குள் இன்னொரு ஆள் வந்து விட தீபாராதனைத் தட்டை அவரிடம் எடுத்துச் சென்றார்.

சுவாமி தரிசனத்தை முடித்துப் பிராகாரம் பக்கம் வந்ததும் "ராஜாவைப் பார்த்துட்டுப் போகலாம், மங்கை" என்று நாயன்மார்கள் வரிசை பக்கம் சென்றான் பாண்டியன்.  சொல்லப்போனால் விறுவிறுவென்று அவன் நடந்த வேகம்,  நின்ற சீர் நெடுமாற நாயனாரைத் தான் பார்க்க ஆவலோடு வந்திருக்கிறான் என்று தெரியப்படுத்துவது போல இருந்தது.   

"நீங்க ராஜான்னா நான் ராணியைப் பார்க்கப் போகட்டுமா?" என்றாள் மங்கை.

"தனித்தனியாப் பார்ப்பானேன்?  நாம ரெண்டு பேரும் அவங்க ரெண்டு பேரையும்ன்னு சேர்ந்து பார்த்துட்டாப் போச்சு.."

"அப்படியே குலச்சிறையாரையும்..." என்றவளை ஆழ்ந்து பார்த்தான் பாண்டியன்.

"என்ன அப்படிப் பார்க்கிறீங்க? குலச்சிறையார் இல்லேனா இவங்களை இப்படி இந்த வரிசைலே சேர்த்து வைச்சு நாம பாக்கப் போறதில்லை. தெரியுமோ?" என்று தலைசாய்த்துக் கேட்டாள் மங்கை.

"எனக்கெங்கே அதெல்லாம் தெரியுது?.. உன்னைப் போல பி.லிட்., படிச்சிருக்கேனா என்ன?" என்றான் பாண்டியன்.

அவன் குரலில் ஒரு சோகம் இழையோடியதைக் கவனித்து விட்டாள் மங்கை. அவளுக்கும் வருத்தமாக இருந்தது.  அதை துடைத்தெறிய "நான் பி.லிட்.,ன்னா நீங்க எம்.ஏ. இல்லையா?  என்னை விட படிப்பு ஜாஸ்தி" என்றாள்.

"இல்லை, மங்கை.. தமிழ் இலக்கியம் தெரிஞ்சிருக்கிறது, ஒரு தனித்தகுதி இல்லையா?"

மங்கை பதிலே பேசவில்லை.     

நாயன்மார்களில் முதல் சிலையாக அதிபக்தர் இருந்தார்.  அவரை அடுத்து ஒவ்வொரு  நாயன்மார் சிலையைப் பார்ப்பதும் பின்சுவரில் அவரின் பெயரைப் பார்ப்பதுமாக இருவரும் ஒவ்வொரு சிலையாகப் பார்த்துக் கொண்டே வந்தனர்.

24-வது சிலையாக குலச்சிறையார் இருந்தார்.  மந்திரி பெருமானைப் பார்த்த சந்தோஷத்தில் பாண்டியன் புன்முறுவலுடன் மங்கையைப் பார்த்தான்,  இருவரும் குலச்சிறை நாயன்மாரை இருகரம் கூப்பி வணங்கினர்.  இருவர் மனமும் என்னவோ குலச்சிறையார் திருவுருவ தரிசனத்தில் மெய்மறந்து குவிந்தது.

புரந்தரதாசரைப் பார்த்தால் ஆழ்ந்த யோசனையில் இருப்பவர் போலத் தோன்றியது. அவராக யோசனை கலைந்து என்ன சொல்லகிறாரோ அதைக் கேட்டுக் கொள்வோம் என்ற முடிவில் இருந்த மோகனின் கவனம் வித்யாவின் மேல் படிந்தது.  

'பார்த்தவர் எவரையும் மறுபடியும் பார்க்கத் தூண்டும் அழகு,  காலேஜ் மாதிரி மேல் படிப்பு படிக்கிறாளா அல்லது ஏதானும் வேலைக்குப் போகும் பெண்ணா எனறு தெரியவில்லை.  தன் எழுத்துக்களை  ஆர்வத்துடன் பத்திரிகைகளில் படிப்பவள் என்று இப்போதைக்குக் தெரிகிறது. அலைபாயும் விழிகள்.  சூடிகையாகத் தெரிகிறாள். இவள் துணை கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று அவன் மனம் எண்ணியது. 

'வித்யா இப்படி.  அவள் அம்மா எப்படியோ' என்று அவன் மனசின் இன்னொரு பக்கத்தில் சந்தேகப்பூ பூத்தது.  'கணவனையும் பெண்ணையும் வீட்டில் காணவில்லை, அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தேடி வெளியே சென்றிருந்து இப்பொழுது தான் வீட்டிற்குள் நுழைந்த ஒரு பெண் இந்தப் பக்கம் வந்து கூடப் பார்க்க மாட்டாளோ' என்று அவன் மனதில் ஒரு எண்ணம் தலைகாட்டியும் போயிற்று. 'அல்லது இந்த வீட்டில் இப்படித் தான் தனித்தனி யூனிட்டுகளாய் ஒவ்வொருவரும் அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு போய்க் கொண்டே இருப்பார்களோ என்னவோ!  வித்யாவை பார்த்தால் அப்படித் தெரியவில்லை.  பார்க்கலாம்'. என்று நினைத்துக் கொண்டான்.  

'வித்யா போன்ற பெண் தனக்கு துணையாக கிடைத்தால் எதுவாயினும் சமாளித்து விடலாம் என்று மனசில் நம்பிக்கை பிறந்த நிமிடமே, வாழ்க்கையில் அடுத்த கட்ட நகர்வுகளுக்காக இயல்பாகவே பாதைப்போடுகிற மாதிரி அடுத்த அடுத்த நிகழ்வுகள் எப்படியெல்லாம் நிகழ்கின்றன என்பதை நினைக்கவே அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்த வாழ்க்கை போலவே இயல்பாக தான் எழுதும் கதைகளும் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

"மோகன்! தெய்வ தரிசனம்ன்னா என்ன? தெய்வத்தின் அருகாமையை நாம் மனசார உணர்வது.இல்லையா?" என்றார் புரந்தர தாசர்.   "இந்த 'நாம்'-- அதாவது உன்னைப் பொறுத்த மட்டில் 'நான்'ங்கற 'indiduval' -லை மனம், உடல்ன்னு ரெண்டாப் பிரிக்கறே நீ! இல்லையா?...  இது நீ எழுதற கதைக்காகன்னு நீ சொன்னாலும் நெஜமாலுமே இதான் உண்மை, மோகன்!.. நாம  ஒவ்வொருத்தரும் வெளிப்பார்வைக்கு தெரியற மாதிரி ஒவ்வொரு திரேகத்தைக் கொண்டிருந்தாலும் இந்த திரேகம் அதாவது வெளிப்பார்வைக்குத் தெரியற இந்த உடல் நாமல்ல. யோசிச்சுப் பார்த்தா,  இந்த உடம்புக்குள் உள்ளடங்கியிருக்கற மனம் தான் வெளியுலகத்திற்கு நம்மை வெளிப்படுத்தற பிரதிநிதின்னு தெரியும். கையைக் குவித்து சாமியைக் கும்பிடறோம், சரி.. நமஸ்காரம் பண்ணறோம், சரி.. இதெல்லாம், இந்த நடவடிக்கையெல்லாம் அப்பப்போ மனம் சொல்லி உடல் உறுப்புகள் இயங்கற நடவடிக்கைகள்.. பாரதியார் சொன்னார் இல்லையா, 'மனம் வெளுக்க மார்க்கம் காணீர்'ன்னு.  அந்த உண்மை இது தான்.." என்று சொன்னார் புரந்தரதாசர்.  அவர் விவரித்த விதம் பள்ளிக்கூடத்தில் வகுப்பெடுக்கிற மாதிரி இருந்தது மோகனுக்கு. 

தன் தந்தை சொன்னதை உன்னிப்பாகக் கவனித்து வந்த வித்யா,"புரியறது, அப்பா! இருந்தாலும் எனக்கு ஒரு டவுட்" என்றாள்.

"சொல்லு, பையா,,"

"மனம் தான் வெளியுலகத்திற்கு நம்மை வெளிப்படுத்தற பிரதிநிதின்னு சொன்னே தானே?  பிரதிநிதின்னா ஒருத்தருக்காக செயல்படற இன்னொருத்தர்ன்னு தானே நாம சொல்வோம்?  அப்படிப் பாத்தா மனம்ங்கறது எதுக்காக செயல்படற Representative அப்பா?" என்று அவள் கேட்டது ஸ்பஷ்டமாக அந்த அறையில் ஒலித்தது. 

" நான் சொல்றேன்.." என்ற குரல் கேட்டு சட்டென்று பின்பக்கம் திரும்பிப் பார்த்தான் மோகன்.  வாளிப்பான திரேகம் தூக்கலாகத் தெரிய கதவு பக்கம் அழகான பெண்ணொருத்தி நின்று கொண்டிருந்தாள்.  இவங்க தான் வித்யாவின் அம்மாவா என்று திகைப்பு கூடிற்று அவனுக்கு. 

 

(தொடரும்..)  


 

                                 

Tuesday, September 3, 2024

இது ஒரு தொடர்கதை -- 17

(கதையின் முன்பகுதிகளையைப் படிக்காதவர்களுக்காக முன் கதைச் சுருக்கம் என்ற பெயரில் கதையின் போக்கைத் தெரிந்து கொள்ள இது ஒரு குறிப்பு தானே தவிர ரசனையான வாசிப்புக்கு   முன் பகுதிகள் முழுதையும் வாசித்து விட வேண்டுகிறேன் அது உங்களுக்கோர் புது அனுபவமாக இருக்கும்..)

முன் கதைச் சுருக்கம்

மோகன் கட்டிளம் காளை,  கல்யாணம் ஆகாதவன்,  இளம் எழுத்தாளன், மனவாசம் என்னும் பத்திரிகையில் சமீபத்தில் தான் பணியில் சேர்ந்திருக்கிறான்.  அவன் எழுதிக்கொண்டிருக்கும் சமூகத்தொடர் தொடர்பாக பலரை சந்தித்து நிஜத்தின் சாயலை எழுத்தில் கொண்டு வர அனுபவம் பெற வேண்டியிருக்கிறது.  அந்த நோக்கத்தில் புரொபசர் புரந்தர தாசரை சந்திக்கிறான்.  புரந்திரதாசரின் அருமைப் புதல்வி வித்யா.

பாண்டியனும் மங்கையும் இளந்தம்பதிகள்.  மோகனின் தொடர்கதை கதாபாத்திரங்க்கள்.  உள்ளூர் ஆடலரசர் கோயில் பிராகாரத்தில் வரிசையாக வீற்றிருக்கும் அறுபத்து மூவர் சிலைகளின் மீது சமீபகாலமாக மோகனுக்கு ஒரு பிடிப்பு ஏற்பட்டிருக்கிறது.  அதுவும் நின்ற சீர் நெடுமாற நாயனார், மங்கையர்க்கரசி நாயனார், குலச்சிறை நாயனார் ஆகிய மூன்று நாயன்மார்களிடம் தனித்தன்மையான பாசம் அவனுக்கு ஏற்படுகிறது.  கோயில் பண்டாரம், பாண்டியனுக்கு நாயன்மார்கள் பற்றிய வரலாற்றுத் தகவல்களைச் சொல்ல பெருந்துணையாய் இருக்கிறார்.

(இனி தொடரலாம்..)


'சட்'டென்று தலை திருப்பிப் பார்த்தான் மோகன்.                    

'அம்மா வந்தாச்சு போலிருக்கு அப்பா..' என்று வித்யா சொன்னது அவனை உசுப்பி விட்ட சடுதியில்.   காரை விட்டு இறங்கிய அந்தப் பெண்ணின் பின்புறம் தான் அவன் பார்வையில் தட்டுப்ப்ட்டது. 

 'அப்புறம் என்ன நடந்தது, நீ சொல்லுப்பா' என்று புரந்தரதாசரின் கேள்வி அவனை அவர் பக்கம் திருப்பியது.

எங்கு விட்டோம் என்ற மோகனின் நினைவை மீட்டெடுக்கிற மாதிரி "கும்பேஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் முடிந்தாலும் மனமில்லாமல் அந்தப் பெரியவருடன்  வெளியே வந்ததாகச் சொன்னே..அதுக்கு மேலே என்ன நடந்தது?" என்று கேட்டார் புரந்தரதாசர்.


"அதுக்கு மேலே.." என்று முணுமுணுத்தபடியே லேசான யோசனையில் ஆழ்ந்த மோகன், "பாதிப் பிராகாரம் வரை என்னுடன் வந்த அந்தப் பெரியவர், 'சரிப்பா;.. நான் இங்கே தான் இருப்பேன்..  நீ எப்போ வந்தாலும் என்னை இங்கேப் பார்க்கலாம்..' ன்னு சொல்லி எனக்கு விடை கொடுத்த நினைவு.. " என்று அரை குறை  ஞாபகத்தில் சொல்கிற        மாதிரி சொன்னான்.                                                                                                                                              

 "அப்போ நாம கும்பேஸ்வரர் கோயிலுக்குப் போனால் அந்தப் பெரியவரைப் பார்க்கலாம்'ன்னு சொல்லு.." என்று புரந்தரதாசர் உடனே கேட்டது மோகனுக்கு எதிர்பாராதக் கேள்வியாக இருந்தது.

"ம்.. பார்க்கலாம்ன்னு தான் நினைக்கிறேன்.." என்று இழுத்தபடியே சொன்னான் அவன்.

"நீ கடைசியா எப்போ அவரைப் பாத்தே?" என்ற புரந்தரதாசரின் கேள்விக்கு "அதான் ஆறேழு மாசத்திற்கு முன்னாடி கும்பகோணம் போனேன்னு மோகன் சொன்னாரேப்பா" என்றாள்.வித்யா.

"தேங்க்ஸ்.." என்று குரலெழும்பாமல் மனசுக்குள் சொல்லிக் கொண்டான் மோகன்.  சொல்லப்ப்போனால் தான் எப்போ குடந்தை போனோம் என்பதே  புரந்தரதாசர் கேட்ட பொழுது சட்டென்று அவன் நினைவுக்கு வராமல் இருந்தது.  அவன் மனம் ஏனோ வித்யாவின் அம்மாவைச் சுற்றி அலைபாய்வதை அவனே உணர்ந்தான்.  ஏனென்று தான் தெரியவில்லை.

னிக்கிழமை மதியம்.

"மங்கை! மாலை  கோயிலுக்குப் போகலாமா?" என்று கேட்டான் பாண்டியன்.

"வெளிலே போனீங்க. சீக்கிரம் வந்திட்டீங்களேன்னு பார்த்தேன்.. கோயில் நினைப்பாகவே இருக்கோ?" என்றாள்.

"எப்படிக் கண்டுபிடிச்சே?"

"பாம்பின் கால் பாம்பறியும்.."

"பாம்பின கால் பாம்பறியும் என்று தானே சொல்வார்கள்?  அது என்ன பாம்பின் கால்?.."

"என்னவோ கம்ப ராமாயணத்திலே அப்படித்தான் கம்பர் சொல்லியிருக்கார்".

"ஹி..ஹி.. கம்ப ராமாயணத்திலா?  கம்பர் தப்பு பண்ண மாட்டாரே!"

தமிழ் பி.லிட்..ன்னா சும்மாவா?. "நேத்து கிளாஸ்லே இதான் பாடம் நடத்தினேன். அதுக்குள்ளே மறந்து போயிடுமா?"  மங்கைக்கு ஆத்திரமா வந்தது.

"பாம்புக்குக் கால் உண்டா, என்ன?"                            

"கால் இருக்கோ, இல்லியோ? பாட்டு இதான்.  இன்னும் மறக்கலே.. சொல்லட்டுமா?"

"ம்.. சொல்லு. "

"காம்பு அறியும் தோளாளை கைவிடீர் எனினும்--ன்னு அந்தப் பாட்டு ஆரம்பிக்கும்.. சீதா பிராட்டியாரை நீங்கள் கைவிட மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும்.. இருந்தாலும்'ன்னு சூர்ப்பனகை சொல்கிற மாதிரி அந்தப் பாட்டுஆரம்பிக்கும்....  'பாம்பு அறியும் பாம்பின் கால்' என மொழியும் பழமொழியும் பார்க்கிறீரோ' என்று முடியும்'.  

" அதான் கைவிடமாட்டார்ன்னு தெரியுதுலே.. பின்னே ஏன் இவ இடைலே நுழையறா?" என்ற பாண்டியன், " மங்கை! இது ஏதோ இடைக்கால செருகல் மாதிரி இல்லே?  கம்பர் இப்படீலாம்.. நான் என்ன சொல்ல வர்றேன்னா,  இப்போ நாமலெல்லாம் பேசிக்கற மாதிரி  சகஜமா,  நம்ம காலத்துச் சொல்லெல்லாம் கவிதைலே வர்ற மாதிரி.. ஆங்! பழமொழி நானூறிலே இதே மாதிரி ஒரு பாட்டு, மங்கை!  இதைத்தான் குறிப்பிட்டு, பழமொழியும் பார்க்கிறீரோ'ன்னு கமபர் சொல்லியிருப்பாரோ?"...

"ச்சீ.. விளையாடாதே! பழமொழி நானூரெல்லாம் பாத்துத்தான் கம்பர்  எழுதணுமாக்கும்?.."

"அதில் என்ன தப்பு?  கம்பரோட வாசிப்பு அனுபவம் அந்தளவுக்கு பரந்து பட்டதுன்னு நெனைக்க வேண்டியது தானே!..  கம்பரே இன்னொருத்தர் சொன்னதை எடுத்தாளரார்ன்னா அந்த அவர் பெரிய பாண்டித்தியம் பெற்றவராய்த் தான் இருக்கணும், இல்லையா?.. யார் அவர்? உனக்கு அவர் பற்றி ஏதாவது தெரியுமா?"

"அது தெரியாமலா பி.லிட்., சர்ட்டிபிகேட் வாங்க முடியும்ன்னு நீ நெனைக்கறே?" என்று அவனைக் வம்புக்கு இழுக்கற மாதிரி கண் சிமிட்டியபடி கேட்டாள் மங்கை.

"சும்மா டபாய்க்காதே.. யார் அவர்ன்னு தெரிலேன்னா தெரிலேன்னு சொல்லணும்" என்று கைதட்டிச் சிரித்தான் பாண்டியன்.

"சொல்லிட்டேன்னா என்ன, தருவே?"

"அழுத்தமா ஒரு 'இச்..' சரியா?"

"'இச்'செல்லாம் சலிச்சுப் போச்சுப்பா.." என்று சும்மாகாச்சும் பொய்க்கோபம் காட்டினாள், மங்கை. "வேறே ஏதாச்சும் புதுசா.." என்று .. அவன் பக்கத்தில் இன்னும் நெருக்கமாக கிறக்கப் பார்வையில் நெருங்கி இழைந்தாள்.

"ஏய்..  நீ இப்படீலாம் செஞ்சா.. பழமொழியாவது கிழமொழியாவது?"என்று கூச்சத்துடன்  பாண்டியன் நெளிந்தான்.

அவன் கூச்சம் அவளுக்கு மேலும் கிறக்கத்தை ஏற்படுத்தியது. அவள் நெருக்கத்தை இன்னும் இறுக்கமாக்கினாள். "என்னைச் சொல்லிட்டு  இப்போ  நீ.." அவள் குரல் நெகிழ்ந்தது. "இப்போ நீ டபாய்க்கப் பாக்கிறியா?"

"டபாய்க்கறதா? எதுக்கு? " என்று லேசா திகைத்தவன்,புரிந்த தோரணையில் "ஓ..அதுக்கா?..  கரும்பு திங்கக் கூலியான்னேன்.. ஆங்! மத்தியான  நேரமாச்சேன்னு பாக்கறேன்.." என்று சிரித்த பொழுது புதுக்களை ஒன்று வந்து அவன் முகத்தில் வந்து அமர்ந்தது.

'ஐயே.. ஆசையைப் பாரு.. நான் எதுக்கோ சொன்னா நீ இதுக்குத் தாவுறியே..' என்று மங்கை கொஞ்சம் விலகி உட்கார்ந்தாள்..  சரிந்திருந்த சேலைத் தலைப்பைச் சரி செய்து கொண்டாள்., "தெரிஞ்ச்சிருந்தா நீ தான் அந்தப் பாட்டைச் சொல்லேன்."

"இந்தப் பாண்டிய ராஜாவை என்னென்னு நெனைச்சே" என்று ராஜ கம்பீரத்துடன் ஹால் சோபாவில் அட்டகாசமாக உட்கார்ந்து ஆள்சுட்டி விரல் உயர்த்தி, "இப்ப சொல்றேன்கேட்டுக்கோ" என்று அந்தப் பழமொழி நானூறு பாடலை சொல்ல ஆரம்பித்தான்:.  

"புலமிக்கவரை புலமை தெரிதல் புலமிக்கவர்க்கே புலனாம் -- நலமிக்க பூம்புலனூர் பொதுமக்கட்காகாதே பாம்பறியும் பாம்பின கால்.." என்று அவன் முடித்த பொழுது கைவலிக்க கைதட்டினாள் மங்கை.. மனனம் செய்த மாதிரி அவன் கடகடவென்று அந்தப் பாடலைச் சொல்வான் என்று சற்றூம் எதிர்பார்க்கவில்லை அவள்.        

"பாம்பின காலோ, இல்லை பாம்பின் காலோ -- எப்படி இந்த ரெண்டு பாடலும் ஒத்துப் போச்சு?.." என்று பாண்டியன் வியந்தான்.

"சாரே.. பாம்புக்குக் காலே கிடையாது.. அறியுமோ?"என்று உதடுகள் குவித்தாள் மங்கை.  செக்கச்செவேலென்று ரத்தச் சிவப்பாய் இருந்த அவை யாருக்குமே கிறக்க மூட்டும் தான்..

"அறியும்..  பாம்புகள் தாம் ஊர்ந்த தடத்தை நன்றாக அறியும் என்பதற்காக 'பாம்பறியும் பாம்பின கால்'ன்னு அப்படிச் சொல்றது வழக்கம் என்பதனையும் யாம் அறிவோம்" என்றான் பாண்டியன்..  

"ஓ..  நாளை கவியரங்கம் உள்ளது என்பதனையும் பாண்டிய ராஜா அறிவீர் தானே?" என்றாள் மங்கை முகத்தில் குறும்பு கொப்பளிக்க.

அப்பொழுது தான் ஏதோ நினைவுக்கு வந்த மாதிரி  சடக்கென்று சோபாவிலிருந்து எழுந்தான் பாண்டியன்.

"என்ன மகாராஜா! அரியணையிலிருந்து எழுந்து விட்டீரே!" என்று சிரிக்காமல் அவள் சொன்ன பொழுது பாண்டியனுக்குத் தான் சிரிப்பு கொப்பளித்துக் கொண்டு வந்தது..

சட்டென்று மங்கையின் கைகளைப் பற்றிக் கொண்டவன், "மங்கை! மாலை கோயிலுக்குப் போகலாமா?" என்று எதையோ எதிர்பார்க்கிற தோரணையில் கேட்டான்.

"ஓ.. எஸ்.." என்றாள் மங்கை.  அவன் எது கேட்டாலும் தட்டாமல் உடனே தந்து விடுகிற உணர்விற்கு அவள் உடல் - மனம் இரண்டும் ஒருசேர அவனிடம் ஆட்பட்டிருந்தது.

முன்பு பகாசுர பாம்புகள் நெளியும் பரமபத விளையாட்டு, இப்போ பாம்பின் கால் பற்றிய பழங்கவிதைகள் ஆராய்ச்சி. அடுத்து பாம்பு பற்றிய எதுவோ என்று அறியாத இள வயசு காதலராய் அவர்கள் அப்போதைக்கு இருந்தார்கள்.


(இன்னும் வரும்)

 

 

Related Posts with Thumbnails