மின் நூல்

Wednesday, January 3, 2018

பாரதியார் கதை ---4

                                                                          4


து  1899-ம் ஆண்டு.    சரஸ்வதி  பூஜை  நாள்.

காசி சிவ மடத்தில் சரஸ்வதி பூஜைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
சிவ மடத்து சரஸ்வதி பூஜையில் பலமொழி வித்தகர்கள் பலர் கலந்து கொண்டனர்.    பூஜைக்கு வந்தவர்கள் சீதாராம் சாஸ்திரி தலைமையில்
சிறிய  அளவில் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடும் செய்திருந்தனர்.

கிருஷ்ணன் சிவனின் தாத்தாவுக்கு  மடத்து  சரஸ்வதி பூஜையில் கலந்து கொள்ளும்  அறிஞர்கள் மத்தியில் 17 வயது இளம் பாரதியை சிறப்பாக அறிமுகப்படுத்த வேண்டும் என்ற ஆசை இருந்தது.   அதனால் அவர் சரஸ்வதி பூஜைக்கு கூடிய கூட்டத்தில் மத்தியில் திடுதிப்பென்று, "பாரதி! கல்விக் கடவுள் சரஸ்வதி பற்றி ஏதாவது நாலு வார்த்தை பேசப்பா.  இங்கு பல மொழிக்காரர்கள் வந்திருக்கிறார்கள்.  உனக்குத் தெரிந்த ரெண்டு மூணு பாஷைலேயும் நீ பேசலாம்" என்று சொல்லி பாரதியை கூட்டத்தின் மையப் பகுதிக்கு அழைத்துப்  பேச வைத்திருக்கிறார்.

அந்தக் கூட்டத்தில் பாரதி தமிழிலும் இந்தியிலும் பேசியிருக்கிறார்.
காலையில் சிவ மட கடவுளர் சன்னிதானத்து படிகளில் அமர்ந்து தான்
இயற்றிய  'வெள்ளைத் தாமரை பூவிலிருப்பாள்; வீணை செய்யும் ஒலியிலிருப்பாள்..' கவிதையைப் பாடியிருக்கிறார். 

கூட்டம் அமைதியாக அவர் பாடலைக் கேட்டிருக்கிறது.  பாடி முடித்ததும்
இந்தி மொழியில் அந்தப்  பாடலுக்கு பாரதி விளக்கமும் கொடுத்திருக்கிறார்.
மொத்தக் கூட்டமும் அவர் உரையைக் கேட்டு அசந்து  போயிருக்கிறது.
குறிப்பாக,

"வந்த னம் இவட் கேசெய்வ தென்றால்
வாழி யஃதிங் கெளிதன்று கண்டீர்!
மந்தி ரத்தை முணுமுணுத் தேட்டை
வரிசை யாக அடுக்கி அதன்மேல்
சந்த னத்தை மலரி டுவோர்
சாத்திரம் இவள் பூசனை யன்றாம்..."    என்ற வரிகள்!

அந்த வயதில் அத்தனை அறிஞர்கள் மத்தியில் இப்படியான கருத்துக்களைப் பதிவதற்கு அந்த பாரதிக்குத் தான் எவ்வளவு நெஞ்சத் துணிவும்,

"வீடு தோறும் கலையின் விளக்கம்,
வீதி தோறும் இரண்டொரு பள்ளி;
நாடு முற்றிலும் உள்ளவ வூர்கள்
நகர்க ளெங்கும் பலபல பள்ளி"

---- என்று எது உண்மையான சரஸ்வதி
தேவிக்கான பூசனைக்கான அர்த்தம்
என்று  சொன்ன தீர்க்க தரிசனமும்
அவருக்கு இருந்திருக்கும் என்று நினைத்து நினைத்து அந்த இளம் வயது  பாரதியின்
மேல் பெரும் மதிப்பு  கூடுகிறது.


பாரதி பேசப்பேச அங்கு கூடியிருந்த மக்கள் தங்கள் மகிழ்ச்சியையும் பாரதியின் புரட்சிகர எண்ணங்களை புரிந்து கொண்டதான வெளிப்பாடையும் தம் கரவொலியால் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

கூட்டத்தினருக்கு ஒரு சின்னஞ்சிறு சந்தேகம்.

".... அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல்           

நிதி மி குத்தவர் பொற்குவை தாரீர்!
நிதிகு  றைந்தவர் காசுகள் தாரீர்!
அதுவு  மற்றவர் வாய்ச்சொல் அருளீர்!----"

என்ற வார்த்தைகளில் தெளிவு வேண்டி, "எதற்காக இப்படிக் குறிப்பிடுகிறாய்?" என்று கேட்டார்களாம்.

உடனே எந்தக் காரணத்திற்காக அந்த வரிகள் இந்தப்  பாடலில் தம் மனசில் உதித்ததோ அந்தக் காரணத்தைக் கூட்டத்தினருக்குச் சொல்கிறார், பாரதி.

காசி இந்து பல்கலைக்கழகக் கனவிற்காக மதன் மோகன் மாளவியா என்னும் ஏழை மகான் செய்கின்ற அரும் பணிகளை விவரிக்கிறார்.  பாரதி எடுத்துச் சொல்லச் சொல்ல மாளவியாவின்  அரும் பணிகளுக்காக தம்மால் முடிந்த உதவிகளைச் செய்ய அந்த கூட்டத்தினரும்  ஒருமித்த முடிவுகள் எடுக்கின்றனர்.

மாளவியாவை நேரில் சந்தித்த பொழுது இந்து பல்கலைக் கழக நிர்மாணத்திற்காக தம் சிந்தனையில்  பூத்தக்  கருத்துக்களை அவரிடம் எடுத்துரைக்கிறார் பாரதி.

'பல்கலை கட்டிட நிர்மாண்த்தில் இந்து சிற்பக் கலைக்கு முக்கியத்துவம் கொடுத்து சர்வகலாசாலையை வடிவமைக்க வேண்டும்'  என்று பாரதியார் மாளவியாவைக் கேட்டுக் கொள்கிறார்.   'கற்கும் கல்வியில் காலத்திற்கேற்பவான நவீனத்துவம் இருக்கட்டும்;  ஆனால்  கலாசாலைக்கான கட்டிடக் கலை சுதேசித்தன்மை மிகுந்து இருக்க வேண்டும்'  என்று  சொல்லி மாளவியாவின் மனத்தில் படியும் படியாக அதற்கான காரணங்களை விளக்குகிறார்.  'பகுதி பகுதியாகக் கட்டப்படும் கட்டிடத்தின் உச்சியில் கோபுர வடிவம் அதன் மேல் சிகரங்கள் என்பதான இந்திய கலையழகைக்  கொண்டிருக்க வேண்டும்.

கலாசாலைக் கட்டிட அமைப்பைப் பார்த்தாலே நம் நாட்டின் கலாச்சாரம், பண்பாடு  இவையெல்லாம் என்ன என்பதனை அந்த கட்டிட வடிவமைப்புகளே சொல்வதாக இருக்க வேண்டும்.    தமிழ் நாட்டு சிற்பக்கலை வல்லுனர்கள் இப்படியான கட்டிடங்களை வடிவமைப்பதில் கைதேர்ந்தவர்கள்.    ரவீந்தர நாத் தாகூரின் சகோதரர் அபநீந்தரநாத் தாகூர் கூட சமீபத்தில் தமிழ்நாட்டு ஸ்தபதிகளைப் பற்றி புகழ்ந்து பேசியிருக்கிறார்.
அவர்களிடம் இந்தக் கலாசாலைக் கட்டிட அமைப்பு வேலைகளைக் கொடுத்தால் சிறப்பாகச் செய்து முடிப்பார்கள்.." என்று தமிழ்நாட்டு சிற்பக்கலைஞர்களை பரிந்துரைத்துமிருக்கிறார்.




மாளவியாரும் பாரதியார் சொன்னதற்கு முக்கியத்துவம் கொடுத்து மிகுந்த
கவனத்துடன் கேட்டுக் கொண்டிருக்கிறார்.  அதற்கு சாட்சி இன்றும் காசி இந்து சர்வகாலாசலையை பார்க்கும் எவரும் நம் தேசத்துப் பண்பாடும், நாகரீகமும்,  சிற்பகலையின் மேன்மையும் எவ்வளவு அழகாக செங்கல், சிமிண்ட் கலவை கொண்டு வடித்தெடுக்கப்பட்டிருக்கிறது என்பதனை உணரலாம்.


பாரதி இளமையில் காசியில் வாழ்ந்த காலம் ஆறே ஆண்டுக் காலம்.   அவன் சிந்தையில் விடுதலை இயக்கமும்,  சுதேச எண்ணங்களும் தடம் பதித்தது இந்தக் காலத்தில் தான்.

நடை பாவனைகளில், உடையில், உள்ள வளர்ச்சியில்,
சமூகம் குறித்த  ஞானத்தில்,  வாசிப்பில்,  பிற மொழிப் புலமையில்  பாரதி தேர்ந்து சிறந்ததற்கு அச்சாரம் போட்ட காலமும் இது தான்.


வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக வாய்க்கிறது.  இதற்காகத்தானோ இது என்று எதையும் எதோடும் முடிச்சுப் போடவும் முடியாவிட்டாலும் நடந்தவை நடந்த பிறகு நினைத்து இதற்காகத் தானோ இது என்று ஓரளவு அனுமானிக்க முடிகிறது.  அப்படி அனுமானிப்பதும் நடந்தவைகளின் அடிப்படையிலான நமது  புரிதல் என்று புரிந்து கொள்வது தான் இவற்றில் இருக்கிற விசேஷம்.


மஹாகவி பாரதியாரையே எடுத்துக் கொள்ளுங்களேன்.

அவரது ஐந்து வயதில் தாய் மரணம்.   அவருக்கு ஏழு வயதாகும் பொழுது தந்தை மறுமணம்.   14  வயதில் 7 வயது சிறுமியுடன் திருமணம்.  திருமணமான அடுத்த ஆண்டே தந்தை மரணம்.  15 வயதில் தந்தையின் இறப்பு காரியங்களுக்கு வந்த அத்தை அழைத்து காசிப்  பயணம்.
காசியில் பல்மொழிகளைக் கற்கின்ற வாய்ப்பு.  அந்த மொழிப்புலமையில் விளைந்த ஞானம்;  அன்னிபெசண்ட்,  மாளவியா போன்றோருடனான அறிமுகங்கள்,  மொழி அறிஞர்கள் மத்தியில் தமிழ் மொழிக்கான ஏற்றத்தைப் புலப்படுத்தியது என்று நிறையச் சொல்லலாம்.  மொத்தத்தில் காசியில் பாரதியாருக்கு அவரது இளமைப்பருவத்தில் ஏற்பட்ட அனுபவங்கள், தொடர்புகள் எல்லாம்  பிற்காலத்து பாரதியாரை உருவாக்குவதற்கு பெரும் பங்களிப்பைத் தந்திருக்கின்றன என்பது மட்டும் நிச்சயம்.



(தொடரும்)


படங்கள் உதவிய நண்பர்களுக்கு நன்றி.


Related Posts with Thumbnails