மின் நூல்

Thursday, January 3, 2019

பாரதியார் கதை --23

                                               அத்தியாயம--23


 'புதுவையில் புகுந்த பாரதி வேறு;  புதுவையிலிருந்து வெளிவந்த பாரதி வேறு.   உள்ளே சென்றவர் வீரர்; வெளியே வந்தவர் ஞானி'  என்பார் சுதேசமித்திரன் ஸி.ஆர்.ஸ்ரீநிவாஸன்.

உண்மை தான்.  ஆனால் அந்த ஞானத்தின் விளைச்சல் பாரதி சில விஷயங்களில் சமரசம் செய்து கொண்டு விட்டார் என்று அவர் வாழ்ந்த காலத்தின் அடக்குமுறைகளைப் பற்றி அறியாத சில வேடிக்கை மனிதர்களின் அறியாமை பிதற்றலும் ஆயிற்று. 

துளசிங்கப்பெருமாள் கோயில் தெருவின் தென் கோடியில் பாரதியார் குடியிருந்த வீடு இருந்ததென்றால் வட கோடியில்  இருந்த வீட்டில் இருந்த பழம்பெரும் தேசபக்தர் சடகோபன்  சிப்பாய் பாரதி என்றே பாரதியை வர்ணித்திருக்கிறார்.  'அந்தக் காலத்தில் பிரிட்டிஷ் சர்க்கார் தேசியவாதிகளுக்கு தசகண்ட ராவணனைப் போலவே இருந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட ராணுவ ஆட்சியைக் கண்டு கலங்காமல் குழம்பாமல் வீரமாக இருந்த பாரதியார் போன்ற
தலைவர்களைக் கண்டால் ஏதோ மகத்தான அதிசயத்தைக் காண்பது போல இருக்கும்' என்று அவர் பிரமித்திருக்கிறார்.

சென்னை விக்டோரியா ஹாலில் ஆங்கிலத்தில் பாரதி ஆற்றிய 'The Cult of the Eternal' சொற்பொழிவுகளின் தொடர்ச்சியாய் The faith of the Vedas, The Doctrine of the Upanishads. The  place of Women in Human Society  என்ற தலைப்புகளில் சொற்பொழிவுகள் ஆற்ற விவரங்களை சேகரித்து வைத்திருந்தார் என்று பாரதி பற்றிய  குறிப்புகளிலிருந்து தெரிய வருகிறது.

திருவல்லிக்கேணி வந்த பிறகு ஊரில் இருக்கும் நாட்களில் தினமும் பார்த்தசாரதி பெருமாள் கோயிலுக்குப் போவதை பழக்கமாகக் கொண்டிருந்தார் பாரதியார்.  பார்த்தசாரதி  பாரதியின் உள்ளம் கவர்ந்த கள்வன்.  பெருமாளின் மீசையின் அழகைப் பார்த்துத்தான் பாரதி தன் மீசையையே திருத்திக் கொண்டானோ என்றொரு கவிதை நான் எழுதியது நினைவுக்கு  வருகிறது.




திருவல்லிக்கேணி கோயில்
போன போது தான் தெரிந்தது
பார்த்தசாரதியைப்
பார்த்து விட்டுத்தான்                         
பாரதி தன் மீசையை   
திருத்திக் கொண்டானோ என்று..
அப்போ முண்டாசு?...

பார்த்தசாரதி பெருமானை தரிசிக்க பாரதி கோயிலுக்குள் நுழையும் பொழுதெல்லாம்  கோயில் யானைக்கு ஏதாவது
கொடுத்து விட்டுத் தான் பெருமாளின் சந்நதிக்குள்ளேயே நுழைவார்.  அந்த யானையின் பெயர் அர்ஜூனன்.
யானைக்காக தேங்காய், பழம் என்று வீட்டிலிருந்தே எடுத்துச் சென்று விடுவது அவரது பழக்கம்.  பல நேரங்களில் சின்னதாய் வெல்லக்கட்டி எடுத்துச் செல்வாராம்.  யானைப் பசிக்கு சோளப்பொரியா என்று திகைக்காதீர்கள்.  இறைவனுக்கு நைவேத்தியம் மாதிரி யானைக்கு வெல்லக்கட்டி என்று பாரதி நினைத்திருக்கலாம்.  யானைக்கு இப்படி ஏதாவது கொடுத்து அதனுடன் நட்பு பாராட்டியது அவர் மனதுக்கு இதமாக இருந்தது மட்டுமல்ல, அந்த யானைக்கு இசைவாகவும் இருந்திருக்கிறது.

அன்று  அது எதிர்பாராமல் நடந்து விட்டது.  பாரதி யானைக்கு அருகில் சென்று வெல்லக்கட்டியை நீட்டும் பொழுது தலை குனிந்து தென்னம் ஓலையைத் தின்றபடி அசை போட்டுக் கொண்டிருந்த யானை தனக்கு மிக அருகில் யாரோ நிற்பதை உணர்ந்து தலை நிமிர்ந்த பொழுது யானையின் தும்பிக்கை வேகமாக பாரதியைத் தள்ளி பாரதி யானையின் காலடிகளுக்கு  கீழே விழுந்து விட்டார்.  யானைப் பாகன் எங்கே போனானோ தெரியவில்லை.

கோயில் யானையை வேடிக்கை பார்க்க வந்திருந்த ஓரிருவரும் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்திருக்க எங்கிருந்தோ பாய்ந்து வந்த குவளைக் கண்ணன்  சடாரென்று யானைக் கொட்டடிக்குள்  தாவிக் குதித்து தன் இரு கரங்களில்  பாரதியாரை அள்ளி வாரி எடுத்து வெளியே கொண்டு வந்தார்.  அங்கிருந்த சிலரின் உதவியோடு ஒரு வழியாக பாரதியாரை கோயில் வாசல் பக்கம் கொண்டு வந்திருக்கிறார்கள்.   கோயிலின் நுழைவாயிலுக்கு வெகு அருகில் தான் மண்டயம் ஸ்ரீனிவாஸாசாரியார் வீடு.  இரைச்சல் கேட்டு அவரும் வெளியே வர குவளைக்கண்ணன் சொல்லி விஷயம் அறிந்து பக்கத்தில் இருந்த ஒரு மருத்துவமனைக்கு பாரதியை
வண்டியில் அழைத்துச் செல்கின்றனர்.

பாரதியாரின் தவப்புதல்வி சகுந்தலா 'என் தந்தை பாரதி' என்று நூல் எழுதியிருக்கிறார். அதில் இந்த சம்பவம் பற்றி பதற்றதுடன் விவரிக்கிறார்: 'ஸ்ரீனிவாஸாச்சாரியார் பெண் ரங்காள் எங்கள் வீட்டுக்கு  ஓடி வந்தாள்.  "சகுந்தலா! அப்பாவை ஆனை அடிச்சிடுத்து.." என்று அழுது கொண்டே   கத்தினாள்.  கடவுளே! அந்த ஒரு  நிமிஷம் என் உள்ளம் இருந்த நிலையை எதற்கு ஒப்பிடுவேன் ---அப்பாவை ஆனை அடிச்சிடுத்து ---  ரெங்காவுடன் பார்த்தசாரதி கோயிலுக்கு ஓடினேன்.  அதற்குள் அவரை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போய் விட்டார்கள்.  எந்த ஆஸ்பத்திரி என்று தெரியாது.
என்ன செய்வது?...

'திருவல்லிக்கேணி விக்டோரியா ஹாஸ்டலில் என் தாயாரின் இளைய சகோதரர் தங்கியிருந்தார்.  அவரை அழைத்து வருவதற்காக விக்டோரியா ஹாஸ்டல் போனேன்.  அங்கு அவர் குடியிருந்த அறை எண் தெரியாது.   ஒரு வழியாக அவரைக் கண்டு பிடித்து அவரிடம் செய்தியைத் தெரிவித்தேன்.  ஜெனரல் ஆஸ்பத்திரிக்குத் தான் கொண்டு  போய் இருப்பார்கள் என்று நினைத்து அவர் அங்கு சென்றார். நான் வீடு திரும்பிய பொழுது என் தந்தையை வீட்டுக்கு கொண்டு வந்து விட்டார்கள்.     மேல் உதட்டில் யானையின் தந்தம் குத்தியதால்  ஏற்பட்ட ரத்தக் காயம்.  தலையில் நல்ல பலமான அடி....' என்று சகுந்தலாவின் அந்த  நூலிலிருந்து நமக்குத் தெரிய வருகிறது.

இடையில் ஒரு ஆச்சரியம்.  பாரதி புதுவையில் முப்புரி நூல் அணிவித்து உபநயனம் செய்வித்த பாரதி அன்பர் கனகலிங்கம்  அந்த சமயத்தில் சென்னையில் தான் இருந்திருக்கிறார்.  பாரதிக்கு ஏற்பட்ட விபத்து பற்றி சுதேச மித்திரனில் படித்து விட்டு பாரதியைப் பார்க்க ஓடோடி வருகிறார்.

கனகலிங்கத்தைப் பார்த்ததில் பாரதிக்கு ஏகப்பட்ட  சந்தோஷம்.  கவலையுடன் தன்னைப் பார்த்த கனகலிங்கத்தைப் பக்கத்தில் அழைத்து, புன்னகையுடன்  "ஒன்றுமில்லை.  எப்போதும் நான் அந்த யானைக்கு வெல்லம் கொடுப்பது வழக்கம்.  அன்று அது தன் தென்னம் ஓலையைத் தின்று கொண்டிருந்தது.  அச்சமயம் நான் வெல்லத்தை நீட்டினேன்.  அது தலை குனிந்து ஓலைப்பட்சணத்தை  பட்சித்துக் கொண்டிருந்ததால்  என்னைப் பார்க்கவில்லை.  என்னைப் பாராமல் தும்பிக்கையால் தள்ளி விட்டது.." என்று பாரதி தன்னிடம் சொன்னதாக கனகலிங்கம் 'என் குருநாதர் பாரதி' என்ற பாரதி பற்றிய தன் நூலில் சொல்கிறார்.

பாரதிக்கு தனது எந்த அனுபவத்தையும் எழுத்தில் வடித்து விட வேண்டும்.  யானையுடனான தனது அனுபவத்தையும்  'கோயில் யானை கதை' என்று  கொஞ்சம் கற்பனை  கலந்து  நாடகமாக  எழுதி விட்டார்.  8-1-21ல்  வெளிவந்த சுதேசமித்திரன் துணைத் தலையங்கத்தில் அதற்கு முன்னால் மித்திரன் வருஷ அனுபந்தத்தில் பாரதியார் எழுதிய கோயில் யானை நாடகம் பற்றிக் குறிப்பிடுவதால் ஜனவரி 1921-க்கு முன்னாலேயே பாரதியார் இந்த கோயில் யானை நாடகத்தை எழுதி விட்டார் என்று தெரிகிறது.

தான்  சம்பந்தப்பட்ட நிகழ்வு ஒன்றை கதையாக்குவது என்றால் எழுத்தாளனுக்கு என்றைக்குமே தனியான  ஒரு ஈடுபாடு உண்டு.  சம்பந்தப்பட்டு நடந்த நிகழ்வு அப்படியே நடந்தது  நடந்தபடி எழுதினால் அவனுக்கு அது சுவாரஸ்யப்படாது. நடந்த  நிகழ்வைக் கூட்டியோ குறைத்தோ மட்டுமில்லை, அதில் கற்பனை மெருகேற்றி வாசகரை ஜிவ்வென்று இழுத்துப்  பிடிக்கிற மாதிரி எழுத வேண்டும். பாரதியின்  கோயில் யானை கதை நாடகத்திலும் இது தான் நடந்திருக்கிறது.

ஆனால் ஆனை தள்ளி கீழே விழுந்த தனது வலி அனுபவத்தை இரு காதலர்களை ஒன்று சேர்க்கும் ஒரு சுப முடிவுக்கான கற்பனையாக அவர் மாற்றிக் கொண்டது தான் பாரதியின் சாதுர்யம்.   இந்த நாடகத்தை எழுதியதின் மூலம் யானை தள்ளிய அதிர்ச்சியிலிருந்து விடுபட்டு தன் மன வலிமைக்கான மருந்து கண்டிருக்கிறார் பாரதி என்றே எண்ணத் தோன்றுகிறது.

அது என்ன 'கோயில் யானை கதை'?

அமரபுரத்தை ஆண்டு வந்தவன் சூரியகோடி.  அவனது ஆசை மகன் வஜ்ரி.  இளவரசன் வஜ்ரி,  நித்தியராமன் என்னும் பெரும் செல்வந்தனின் மகள் வஜ்ரலேகையின் அழகில் மயங்கி அவளைக் காதலிக்கிறான்.  மன்னன் சூரியகோடியின் ஆசையோ வேறே.  அங்க தேசத்து இளவரசியை தன் மகனுக்கு மணம் முடிக்க வேண்டுமென்று விரும்புகிறான்.  இந்த அங்க தேசத்து அரசன் மகன் சந்திரவர்மன் வஜ்ரியின் தோழன் என்பது வேறு சூரியகோடியின் ஆசைக்கு வலு சேர்க்கிறது.

ஒரு நாள் இரு இளவரசர்களும்  சேர்ந்து சுற்றுலா போகும் பொழுது வழியில் இருந்த  காளி கோயிலுக்குள் செல்கின்றனர்.   அந்த கோயில் யானைக்கு மதம் ஏறியிருப்பது தெரியாது யானைக்கு அருகில் செல்கின்றனர். யானைக்கு மிக நெருக்கத்தில் சென்ற வஜ்ரி யானையால் தள்ளி விடப்படுகிறான்.  அருகிலிருந்த சந்திரவர்மன் சித்தம் கலங்கி கீழே விழுந்த   வஜ்ரியை யானையிடமிருந்து மீட்டு  வெளிக் கொணர்கிறான்.  சந்திரமோகன் மூலம் அரசன்  தன் மகனின் காதலைப்  புரிந்து கொண்டு வஜ்ரியையும் வஜ்ரலேகையையும் இணைத்து வைக்கிறான்..

'என் தந்தை பாரதி'  என்ற தமது நூலில் பாரதியின் புதல்வியார் சகுந்தலாவின் குறிப்பொன்றையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.  ' என் தந்தையின் உயிருக்கு ஆபத்து இல்லையெனக் கேட்டு என் மனம் ஒருவாறு ஆறுதல் அடைந்தது.   காயங்கள் குணமடைந்து அவர் வேலைக்குச் செல்ல பல நாட்களாகின.  யானை தள்ளிய கதையையும்  தன் சொந்த கற்பனையையும் சேர்த்து 'காளி கோயில் கதை' என்ற கதையொன்று எழுதியிருந்தார்.  அது சுதேசமித்திரனில் பிரசுரிக்கப்பட்டிருந்தது' என்று குறிப்பிடுகிறார்.

நெடுங்காலம் பாரதி எழுதிய  கோயில் யானை படைப்பாக்கம் பற்றி பிரசுர வடிவில் எதுவும் தெரியாமலேயே இருந்தது.  அது 'கோயில் யானை' கதையா, 'காளி கோயில் கதை'யா,  'கோயில் யானை கதை' நாடகமா என்று அந்த யானைக் கதை தலைப்பு பற்றிய குளறுபடிகள் வேறே.

ஒரு வழியாக,  1951 ஜனவரி மாத 'கலைமகள்' இதழில் 'இதுவரை நூல் வடிவம் பெறாத பாரதியாரின் படைப்பு' என்ற குறிப்புடன்  'கோயில் யானை' நாடகம் பிரசுரம் ஆயிற்று.  ஆனால் பாரதியியலில் மிக முக்கிய வரலாற்று சான்றான பாரதியின் இந்த நாடகப் படைப்பாக்கம் இன்று வரை பாரதியின் படைப்புகள் பற்றிய எந்தத் தொகுப்பிலும் இடம் பெறாதது ஆச்சரியம் தான்.


(வளரும்)


Related Posts with Thumbnails