மின் நூல்

Friday, March 22, 2019

வசந்த கால நினைவலைகள்...


                                                                                  2


39 ஆண்டுகளுக்கு மேலாக மத்திய அரசுப் பணி.  1963-ம் ஆண்டு மத்தியில் தொலைபேசி இலாகாவில் , தொலைபேசி இயக்குனராக பாண்டிச்சேரியில்
சேர்ந்து  30-1-2003 அன்று சென்னையில் தலைமை தொலைபேசி கண்பாளிப்பாளராக பணி ஓய்வு பெற்றேன்.   58 வயதில்  பணி ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.   மத்திய அரசின் 60 வயது பணி ஓய்வு உத்திரவினால் மேலும்  இரண்டாண்டுகள் 'நீடித்த'  அரசுப் பணி.  நான் இலாகாவில் பணியில் சேர்ந்த பொழுது 'நம்பர் ப்ளீஸ்' இணைப்பகங்களாக  (Mannual Exchanges)  இருந்த தன்மை மாறி இப்பொழுது பி.எஸ்.என்.எல். ஆகி செல்போன் கையாளக்கூடிய அளவுக்கு மிகப் பெரிய அசுர மாற்றம்.                                             

பணி ஓய்வு பெற்ற சில நாட்களில் என் மனைவிக்கு ஒரு நாள் என்ன தோன்றியதோ என்னவோ, எனது சஷ்டியப்த பூர்த்தியை திருக்கடையூரில் அருள்மிகு ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் உடனாகிய ஸ்ரீஅபிராமி அம்மன் கோயிலில் வைத்துக் கொள்ள ஆசைப்பட்டு என்னிடம் சொன்னாள்.  அமெரிக்கா, அட்லாண்டாவில் மென்பொருள் வல்லுனராகப் பணிபுரியும் என் மகனும்   
(  jeevagv.blogspot.com  )இதையே வலியுறுத்தி  தானும் விடுப்பில் இந்தியா வருவதாகச் சொன்னான்.

அறுபது வயது நிறைவுறும் என் ஜென்ம நட்சத்திர நன்னா ளில் (11-2-03) சஷ்டியப்த பூர்த்திக்கு நாள் குறித்தாயிற்று.  சென்னையில்   எங்கள் குடும்பத்தினர்  20 பேருக்கு சென்னையிலிருந்து மயிலாடுதுறை போக வர ரயிலில் பயணச் சீட்டு பதிவு செய்தாயிற்று.   வேறு சில உறவினர்களும் நண்பர்களும் நேரடியாகவே திருக்கடையூர் வந்து விடுவதாகச் சொன்னார்கள்.  நாங்கள்  மயிலாடுதுறை ரயில் நிலையத்திலிருந்து  திருக்கடையூருக்கு வேனில் செல்ல ஏற்பாடு செய்திருந்தார்கள்.

திருக்கடையூரிலிருந்து  முதல் நாள் காலை   காரில் எங்கள் குல தெய்வமான ஒப்பிலியப்பன் கோயிலுக்குச் சென்று  இந்தப் பிறவி கொடுத்த பேற்றுக்கு நன்றி  சொல்லி வணங்கினோம்.  மதியம் திருக்கடையூர்  திரும்பி விட்டோம்.   ஒரு நாளில் கிட்டத்தட்ட இருபது சஷ்டியப்த பூர்த்தி விழாக்கள் இங்கு கொண்டாடப்படுவதால் குடும்பம் குடும்பமாகத் தங்கிட, அவர்கள் உணவருந்த, பிற செளகரியங்களுக்கு எந்தக் குறையும் ஏற்படாதவாறு அவ்வளவு அருமையாக ஏற்பாடுகள் செய்திருந்தார்கள்.

வானளாவிய கோபுரங்கள்.   ஊரின் மத்தியில்  கிழக்குக் கோபுரம்  முனீஸ்வரக் கோபுரம் பக்கத்தில்   அமுத புஷ்கரணி, மேற்கு கோபுர வாயிலுள் இடது புறம்  நூற்றுக்கால் மண்டபம்.   அமிர்தகடேஸ்வரர் மேற்கு நோக்கி அருள் பாலிக்கிறார்.    அன்னைக்குத் தனி ஆலயம, தென் மேற்கு மூலையில்.  அன்னை அபிராமி, கிழக்கு நோக்கி ஈசனைப் பார்த்த வண்ணம் பட்டாடை ஜொலிக்க ஆபரண பூஷிதையாய் அருள் பாலிக்கிறாள்.

கொடிமரத்தில் பிள்ளையார்.  ஆலயத்தின் நுழைவாயிலில் அதிகார நந்தி.  இடது புறம் சுப்பிரமணியர்.  அடுத்து மஹாலஷ்மி.  அமிர்த கடேஸ்வரருக்கு தனி சந்நிதி.  ஈஸ்வரனின் திருமேனியில் பாசக்கயிற்றின் தழும்பு.  யமன், மார்க்கண்டேயர் உயிர் குடிக்கப் போட்ட பாசக்கயிறின் தழும்பு.  இன்னொரு பிரகாரத்தில் வில்வனேஸ்வரர், பஞ்ச பூதங்கள். யமன், அறுபத்து மூவர். சப்த மாதர்களும் இங்கேயே.

கள்ளவாரண பிள்ளையார், மஹா மண்டபத்தில்.     மற்றொரு புறம் யமனை எட்டி உதைத்த கோலத்தில் கால சம்ஹார மூர்த்தி. யமன் தலைகுப்புற விழுந்திருக்கிறார்.    திருமகள், கலைமகள் புடைசூழ பாலாம்பிகை.   என்றும் பதினாறு என்று மார்க்கண்டேயருக்கு ஈஸ்வரன் வரம் கொடுத்த ஸ்தலமாதலால்,  கோயிலில் எல்லாமே பதினாறு எண்ணிக்கை கொண்டிருக்கின்றன.

முதல் நாள் மாலை ருதர ஏகாதசி.  அடுத்த நாள்,  பொலபொலவென்று பொழுது விடிய நீராடி, புதுமணத்தம்பதிகளைப் போல் புத்தாடை பூண்டு, சுற்றம் சூழ மேளதாளத்துடன் கோயிலுக்கு அழைத்துச் சென்றனர்.  கோயில் நுழை வாயிலேயே கோயில் யானையுடன் வரவேற்பு.  கஜபூஜை,  கோபூஜை முடித்து, அம்மன் சந்நிதி பிராகாரத்திற்கு அழைத்துச் சென்று   மிருத்யுஞ்சய ஹோமம் முதலான ஹோமங்கள் செய்வித்து கோயில் பிராகாரத்திலேயே அதற்காக நிர்ணயிக்கப் பட்ட இடத்தில்  தம்பதிகளுக்கு ஹோமஜல ஸ்நானம் செய்வித்து,  மிகச் சிறப்பாக  பூரண திருப்தியுடன் எங்கள் சஷ்டியப்தப் பூர்த்தி விழாவை நடத்தி வைத்தனர்.


(படத்தில் மகள் கவிதா, மனைவி கீதா, நான், மகன் ஜீவா)


--  ஜீவி



குமுதம் பத்திரிகையின் தொடர்பு கொண்ட இதழாக 'ஜங்ஷன்' வெளிவந்து கொண்டிருந்தது.. அந்தப் பத்திரிகைக்கு விகடன்  புகழ்  திரு.  ராவ் அவர்கள் ஆசிரியராக இருந்த காலத்தில் எனது சஷ்டியப்த பூர்த்தி      நிகழ்வு பற்றி  வெளியிட்டிருந்தார்கள்.
Related Posts with Thumbnails