மின் நூல்

Saturday, March 23, 2019

வசந்த கால நினைவலைகள்

                                                  3

நேற்று கூட +2 க்குப் பிறகு என்ன படிப்பது என்று தொலைக்காட்சி சேனலில் ஒரு புண்ணியவான் மாணவர்களுக்கு ஆலோசனை சொல்லிக் கொண்டிருந்தார்.

என் காலத்திலெல்லாம் எஸ்.எஸ்.எல்.சி--க்குப் பிறகு படிப்பைத் தொடர்கிறவர்கள் ரொம்பவே குறைச்சல்.  வசதியுள்ள குடும்ப வாரிசுகள் கல்லூரிப் படியேறுவார்கள்.

அந்தக் காலத்தில் வசதியில்லாத குடும்பக் குழந்தைகள் ஏதாவது வேலை செய்து குடும்பத்திற்கு தன்னாலான உதவி செய்ய வேண்டும் என்ற நிர்பந்தத்தில் பள்ளி இறுதித் தேர்வோடு தங்கள் படிப்பை நிறுத்திக் கொள்வார்கள்.   இப்போலாம் வேலைக்காகத் தான் கல்வி என்று ஆன பிறகு
இந்த மாதிரி ஆகலாம் என்று முன் கூட்டியே தீர்மானித்து அதற்கேற்பவான கல்வித் தகுதியை ஏற்படுத்திக் கொள்கின்றனர்.

+2 கல்வியே  சி.பி.எஸ்.சி. வழியா, மெட்ரிகுலேஷனா, இல்லை ஸ்டேட் போர்டா என்று வகை வகையாகப் பிரிந்திருக்கிறது.  பத்தாவது வகுப்பு வரை சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில்  படித்து விட்டு +2க்கு ஸ்டேட் போர்டுக்குத் தாவு-- அப்பத்தான்  மதிப்பெண்கள் நிறைய அள்ளலாம் -- என்று பெருவாரியான கல்வியாளர்கள் அறிவுரைகளாய் அள்ளி வீசுகிறார்கள்.

ஆனால் என் மகன் ஜீவா செய்தது அதற்கு நேர் எதிர்...  எஸ்.எஸ்.எல்.சி வரை ஸ்டேட் போர்டு ஸ்கூலில்  (காஞ்சீபுரம்  ஆண்டர்ஸன் உயர்நிலைப் பள்ளி).  மேல் நிலைப் படிப்புக்கு சென்னைக்கு வந்து சிபிஎஸ்சி சிலபஸ்ஸூக்கு மாறினான்.  வீட்டுச் சாப்பாடு கிடையாது. ஹாஸ்டல் தான்.   இன்றும் கல்வியாளர்கள் சொல்வது தான் அன்றும் நடந்தது.   சிபிஎஸ்ஸியில் கல்வித் தரம் அதிகம் என்றாலும் மதிப்பெண்கள் அதிகம் தர மாட்டார்கள்.   நல்ல மதிப்பெண்கள் எடுத்தும் இன்ஜினீயரிங் ஸீட் கிடைப்பதில் சிக்கல்.   காரணம் நீங்கள் நினைக்கிற காரணம் தான்.  இப்பொழுது கிடைத்திருப்பது போல அப்போ ஒரு மோடி கிடைத்திருக்கவில்லை.

என்  மகனோ ஆர்ட்ஸ் கல்லூரியில் சேர விருப்பம் இல்லாது இருந்தான்.  வேறு என்ன செய்வது, என்பதற்கு அவன் பதில் வேறு மாதிரி இருந்தது.   "நான் AMIE படிக்கப் போகிறேன்.." என்றான்.

"அப்படீன்னா?"                                                                               

"Associate Member of  the Institution of  Engineers."

எனக்குப் புரியவில்லை.  இன்ஜினீயர்ஸ் என்று அவன்  சொன்ன வார்த்தை மட்டும் பிடித்திருந்தது.  'இது ஒருவகை இன்ஜினியரிங் படிப்பாக்கும்' என்று நினைத்தேன்.

கல்வி பயில ஏதாவது கல்லுரியில் இடம் கிடைக்க வேண்டுமே என்ற கவலை.  அதனால் கேட்டேன். "எந்தக் கல்லூரியில் சேர்வதாக உத்தேசம்?"

"இந்தப் படிப்புக்கு கல்லுரிக்கே போக வேண்டாம்.. வீட்டிலேயே படிக்கலாம்.. Home Study தான்" என்றான்.  "சென்னையில், அதுவும் சிபிஎஸ்ஸி போன்ற பள்ளிகளில் பயிலும் பொழுது தான்  இந்த மாதிரி படிப்பெல்லாம் இருக்கிறது  என்பதே தெரியறது, அப்பா!" என்று கூடுதல் தகவலையும்  சொன்னான்.
                                                                                                                                     
"அப்படி கூட ஒரு தொழிற்கல்வி இருக்கிறதா?" என்று  திகைத்தேன். ஆனால் பாவம் இளம் வயதில் தனது சொந்த சாப்பாட்டிற்கும் வழி பண்ணிக் கொண்டு  படிக்கவும் வேண்டுமே?.. ஏதாவது கல்வி நிருவனத்தில் சேராமல் சொந்தப் படிப்பு சாத்தியமாகுமா?--" என்ற கேள்விக் குறிகள் வேறே.

என்  மனைவி  பள்ளி ஆசிரியை. நான் தொலைபேசி  இலாகா.  பெண்ணோ காஞ்சீபுரத்தில்  மேல்நிலை கல்வி படித்துக் கொண்டிருந்தாள்..

இந்த இரண்டு பேர் கல்விக்காக நாங்களும் சென்னை குடிபெயர்வது என்று தீர்மானித்தோம்.  ஆனால் வேலை மாற்றல் இருவருக்கும்  அவ்வளவு சீக்கிரத்தில் கிடைகும் என்ற நம்பிக்கை இல்லை.             

அமுதசுரபி பத்திரிகை ஆசிரியர் எழுத்தாளர் விக்கிரமன் (வேம்பு அவர்கள்) எனக்கு பழக்கமானவர்.  சென்னை மாம்பலம் ஜெய்சங்கர் தெருவில் வசித்து வந்தார். மாம்பலம் பக்கம் வரும் பொழுது அவர் வீட்டில் இருந்தால் அவரையும் பார்த்து விட்டுப் போவது வழக்கம்.  அமுதசுரபிக்காக சிறுகதை ஒன்றை எழுதி வைத்திருந்தேன்.  அதை அவரிடம் கொடுத்து விட்டுப் போகலாம் என்ற எண்ணத்தில் அவர் வீட்டுக்குப் போனேன்.  நல்ல வேளை, அவர் வீட்டில் இருந்தார்.

நான் வந்திருப்பது அறிந்து "ஜீவி, இதோ வந்திட்டேன்.. " என்று உள் பக்கமிருந்தே குரல் கொடுத்தார்.  அங்கிருந்த நாற்காலி ஒன்றில் அமர்ந்தேன். பக்கத்து டேபிளில் பளபள அட்டையுடன் அமுதசுரபி  இருந்தது.  எடுத்து லேசாகப் புரட்டினேன். பின் பக்க அட்டை பின்புறம் ஒரு விளம்பரம் வெளியாகியிருந்தது.

அமுதசுரபி பத்திரிகையை நடத்துவது ஸ்ரீராம் சிட்ஸ் என்ற நிருவனம் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றே.    ஸ்ரீராம் சீட்டு  நிருவனம் ஸ்ரீராம் கேபிடல் டிரஸ்ட் என்ற பெயரில் கட்டுமானத் தொழிலிலும் ஈடுபட்டிருந்தது.  அவர்கள்  'பாலாஜி டவர்ஸ்' என்ற பெயரில் சென்னை அசோக் நகரில் புதிதாகக் கட்டபோகும் ஒரு அப்பார்ட்மெண்ட் பற்றிய விளம்பரமாக அந்த இதழ் அமுதசுரபியின் அந்த விளம்பரம் இருந்தது.

அது பற்றிய விவரங்களைப்  பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது 'நந்திபுரத்து நாயகி' புகழ் விக்கிரமன் சார் வந்து விட்டார்.


(தொடரும்)




Related Posts with Thumbnails