மின் நூல்

Saturday, September 14, 2024

இது ஒரு தொடர்கதை -- 19

குலச்சிறை நாயனார் சிலையிலிருந்து கொஞ்ச தூரம் தள்ளித் தான் 49-வது கற்சிலையாக நின்ற சீர் நெடுமாறன் நாயனாரின் சிலை இருந்தாலும் அவர் சிலை ஸ்தாபித்திருந்த இடம் குறிப்பாக ஏற்கனவே பாண்டியனுக்கு அத்துபடி  ஆகியிருந்ததினால் தன் நடையில் கொஞ்சம் வேகத்தைக் கூட்டியே பாண்டியன்


  தென்னாடுடைய சிவனே போற்றி!!  எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!

நடந்ததைப் பார்க்க முடிந்தது.  அவன் வேகத்தோடு போட்டி போட்டுக் கொண்டு நடக்க முடியாவிட்டாலும் மங்கையும் தொடர்ந்து வரும் சிலைகளில் தன் பார்வையைச் சுழல விட்டபடியே பாண்டியனைத் தொடர்ந்தாள்.  மஙகையர்க்கரசியாரின் சிலையைப் பார்வையிலிருந்து தப்ப விட்டுவிடக் கூடாது என்ற ஜாக்கிரதை உணர்வு வேறு ஒரு பக்கம்!...

என்ன தான் நாயன்மாராய் இருந்தாலும் மன்னனாய் இருந்தவன் இல்லையா? அந்தக் கம்பீரம் அழியாமல்  நெடுமாற நாயனாரின் உடலிலும் திண் தோள்களிலும் முகத்திலும் படிந்திருந்தது.  நாயனாரின் சிலையை நெருங்கியதும் மங்கையைக் காணோமே என்று பாண்டியன்  திரும்பிப் பார்த்தான். நாலைந்து சிலைகளுக்குப் பின்னால் அவள் வந்து கொண்டிருப்பதைப் பார்த்ததும், "ராணியும் ராஜாவுமாய் சேர்ந்து பார்ப்போம் என்று சொன்னே, இல்லையா.. வா.. ராஜா இங்கேயிருக்கிறார் பார்.." என்று நெடுமாற நாயனார் சிலையை பாண்டியன் சுட்டிக் காட்டினான்.  அவன் கண்கள் நாயனார் சிலையின் மேலேயே நிலைக்குத்தி இருந்தது.

நடையில்கொஞ்சம் வேகத்தைக் கூட்டி அருகில் வந்த மங்கை நெடுமாறனார் சிலையைப் பார்த்தபடி,  "சும்மா சொல்லக்கூடாது.. ராஜ களையோடத் தாங்க  இருக்கார்.." என்றாள்.  

"நான் நினைச்சதையே நீயும் சொல்லணும்ங்கற எதிர்பார்ப்பு எனக்கு இருந்தது.. அதையே நீயும் சொன்னதில் சந்தோஷம், மங்கை.." என்றான் பாண்டியன்.

"அதுக்குள்ளேயே அப்படி சொல்லிட்டா, எப்படி?" என்றாள் மங்கை.  

"எதுக்குள்ளேயே?" என்று புருவத்தை உயர்த்தினான் பாண்டியன்.

"நான் நினைக்கறதையே நீங்க சொல்றீங்களான்னு பாக்க வேண்டாமா?"

"புரிலே.."                                                                                                                            55

அரசியார் சிலையை இன்னும் நாம பாக்கலே.. அவங்களை நாம பாக்கறப்போ நான் நினைக்கிறதையே நீங்களும் சொல்றீங்களான்னு பாக்க வேண்டாமா?" என்று மங்கை சொன்ன பொழுது அவள் குறிப்பிட்டது புரிந்த மாதிரி கலகலவென்று சிரித்தான் பாண்டியன்.  "அதையும் பார்த்தாப் போச்சு.." என்றவாறே பக்கத்துச் சிலையைப் பார்த்தான் பாண்டியன்.  50- என்ற எண் போடப்பட்டு நேச நாயனார் என்று சுவரில் குறித்திருந்தார்கள்.

"ஐம்பது வந்திட்டோம்.. பக்கத்லே தான் அவங்களும் இருப்பாங்க..வா.. அதையும் பார்த்துடலாம்" என்றபடியே பிரிய மாட்டாமல் பிரிகிற மாதிரி நெடுமாற நாயனாரின் சிலையை மீண்டும் ஒருமுறை உன்னிப்பாக நோட்டமிட்டு விட்டு நடையை எட்டிப் போட்டான் பாண்டியன்.

பாண்டியன் சொன்னபடியே நின்ற சீர் நெடுமாறனனுக்கு ஆறு சிலைகள் தாண்டி 55- என்ற எண் போடப்பட்டு மங்கையர்கரசியார் சிலை இருந்தது. அறிவார்ந்த கூர்மையான நாசி, வட்ட விழிகள், கருங்கூந்தலைக் கொண்டையிட்டு முடிந்த விதமே அந்த வட்ட முகத்திற்கு மேலும் அழகூட்டியது. நெற்றியில் திரு நீறு,  தலைக் கொண்டையில் மல்லிகைச் சரம் சூட்டியிருந்தார்கள்.  கைகள் குவித்த நிலையில் அரசியாரின் சிலையைத் தத்ரூபமாக வடித்திருந்தார்கள்.  

அரசியாரின் சிலையை தீர்க்கமாகப் பார்க்கும் பொழுதே மங்கை ஆழ்ந்த யோசனையில் உணர்ச்சி வசப்பட்டாள்.  'இவர் முயற்சியால் தானே இவரது கணவரின் மனமாற்றப் போக்கைக் போக்கவும் அவருக்கு பீடித்த நோயைத் தீர்க்கவும் முடிந்தது?' என்று சிந்தனை ஓடியது.  மங்கைக்கு அவரைப் பார்க்கும் பொழுது டாம்பீகமான அரச குடும்பப் பெண்ணாகத் தோன்றவில்லை. எளிய  சாதாரண மக்களின் வீட்டுப்பெண் போன்ற குடும்பப் பொறுப்பும் தீர்க்கமான முடிவுகளை எடுத்து பாதிக்கப்பட்ட தன் கணவரின் நலன் காத்த வெற்றித் திருமகளாகவும் காட்சியளித்தாள். உடனே 'இறைவனே! எனக்கும் இந்த மாதிரியான திறமைகளைக் கொடுத்து எடுத்த காரியங்க்களில் வெற்றி பெற நீ அருள வேண்டும்' என்று மனமாற வேண்டிக்கொண்டாள்.

'என்ன, அப்படியே அவங்க சிலையோட நீயும் ஒரு சிலையா ஒன்றிப் போயிட்டே போலிருக்கு!" என்று பாண்டியன் சிரித்தான்.

"ஆமாங்க.. ராணியார் எவ்வளவு அழகா இருக்காங்க, பாத்தீங்களா?" என்று கொஞ்ச நேரத்திற்கு முன் தனக்கேற்பட்ட உணர்வுகள் கலையாமலேயே கேட்டாள் மங்கை.

"ஆமாம், மங்கை.. பொதுவாகவே தமக்கான பெண்களைத் தேர்வு செய்வதில் அரசர்கள் என்றும் சோடை போனதே இல்லை" என்று ரொம்ப அலட்சியமாக சொன்னான் பாண்டியன்.  

அவன் சொன்னதைக் கேட்டு எரிச்சலாக இருந்தது மங்கைக்கு.  பெண்களின் உள்ளுணர்வுகளைப் புரிந்து கொள்ள சக்தியற்றவர்களாகவே ஆண்டவன் இந்த ஆண்களைப் படைத்து விட்டானோ என்ற பொருமல் மனசில் தேங்கியது.  அல்லது தன் அரச வாழ்க்கையில் இந்த அரசியார் பட்ட மனக்கஷ்டங்களும் அவற்றைக் களைய இவர் மேற்கொண்ட அரிய செயல்களையும் தன் கணவன் அறிந்திருக்க மாட்டாரோ என்ற ஐயம் அவளுக்கேற்பட்டது.   அப்படி அதெல்லாம் அறியாத பட்சத்தில் பாண்டியன் நெடுமாறனிடம் இவர் பக்தி கொள்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது என்று மங்கைக்கு எரிச்சலாக இருந்தது.

"என்ன மங்கை?  அப்படி என்ன யோசனையில் மூழ்கிட்டே? அரசியார் இவ்வளவு அழகாய் இருக்கிறாரேன்னு தானே நினைத்து மலைச்சுப் போய் நிக்கறே?" என்று கேட்டான்.

சட்டென்று தன் உணர்வுகளை மறைத்துக் கொண்டு, "ஆமாமாம்.. எப்படி நான் நினைப்பதை அப்படிக் கரெக்டாக கண்டு பிடிக்க முடிஞ்சது?" என்று சொல்லிச் சிரித்தாள் மங்கை.

"ஹே! இதெல்லாம் கண்டுபிடிக்கறது கஷ்டமா என்ன? பொதுவா பெண்கள்னாலே இன்னொரு பெண் அழகா இருந்தா அது அவங்களை ரொம்ப பாதிக்கும். அந்த சைக்காலாஜி அடிப்படைலே தான் சொன்னேன்" என்றான் பாண்டியன்.

அவன் சொன்னதைக் கேட்டு மேலும் எரிச்சல் கூடியது அவளுக்கு.  இருந்தாலும் ரொம்ப கஷ்டப்பட்டு அதை அடக்கிக் கொண்டு, "சரியாச் சொல்லிட்டீங்களே!" என்று போலியாகத் தன் உணர்வுகளை வெளிக்காட்டிக் கொள்ளாமல் புன்னகைத்தாள் மங்கை.

(தொடரும்)

 


Related Posts with Thumbnails