மின் நூல்

Tuesday, October 4, 2016

நினைவில் நின்றவை

'தோழி'  இதழில் நிறைய எழுதுகிறார்  நம் பதிவுலக சகோதரி  ரஞ்சனி நாராயணன் அவர்கள்.

செப்டம்பர் 16--30  தேதியிட்ட 'தோழி' இதழில் அவர் எழுதிய கட்டுரை ஒன்று மனைதக் கவர்ந்தது.
'தோழி'க்கு  நன்றி.

வெளியில் அலுவலக வேலைக்குப் போவதைத் தான் சம்பாதிப்பு வேலையாகக் கருதும் உலகம்,  பெண்கள் வீட்டில் மாங்கு மாங்கு என்று உழைத்துக் களைப்பதும் அலுவலக வேலைக்கு எந்தவிதத்திலும் குறைச்சலில்லை என்கிறார்  இப்படியான  இல்லத்தரசிகளின் வீட்டு வேலைகளும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பது அவரது கோரிக்கை.

மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் சொந்தக்காரர் திரு. பில்கேட்ஸின் மனைவி திருமதி மிலிண்டா கேட்ஸின் குரலையும் தன் கோரிக்கைக்குத் துணையாகக் கொள்கிறார்.   சாதாரண துணை இல்லை, மிக விவரமாக திருமதி கேட்ஸின் குரலை இந்தக் கட்டுரையில் சொல்லிச் செல்கிறார்.

ஒவ்வொரு வருடமும் கேட்ஸ் தம்பதி தங்களது இணைய தளத்தில் தங்களைப் பாதிக்கும் விஷயங்கள் குறித்து கடதம்  எழுதுகிறார்களாம்.  2016-ம் வருடம் திரு. பில்,  எரிபொருள் இல்லாத உலகத்தைப் பற்றியும் திருமதி கேட்ஸ்,  பெண்களின் நேரம் எப்படி சமையலறையிலேயே கழிகிறது என்பதைப் பற்றியும் கடிதங்கள் எழுதி இருக்கிறார்கள்.  திருமதி ரஞ்சனி அந்தக் கடிதங்களின் சாரத்தைத் தான் இக்கட்டுரையில் விவரிக்கிறார்.

வீட்டு வேலைகளை மூன்று விதமாகப் பிரிக்கலாமாம்.  1.  சமையல்  2.  சுத்தம் செய்தல்  3.  வீட்டில் உள்ள குழந்தைகளையும், முதியவர்களையும் பார்த்துக் கொள்வது.  இந்த மூன்றில் எதையெல்லாம் ஆண்களும் பங்கு போட்டுக் கொண்டு செய்ய முடியுமோ அப்படி வேலைகளைப் பிரித்துக் கொண்டு செய்வதால் பெண்களின் சக்தி கணிசமாக நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவும்.' என்று  கணக்குப் போட்டுச் சொல்லும் திருமதி பில் கேட்ஸின் குரலை நம் மொழிப் பத்திரியகையில் பதிவு செய்திருப்பது அற்புதமான விஷய்ம்.

அமெரிக்க  சமாச்சாரமே இப்படி என்றால்,  நம்மவர்களைப் பற்றியும் நினைக்காமல் இருக்க முடியவில்லை.   ஏதாவது அலுவலகத்தில் பணியாற்றி பணி ஓய்வு பெற்று பென்ஷனும் வருகிறது என்றால் கேட்கவே வேண்டாம்.

அந்த வீட்டிற்கு அந்த ஆண்மகன் எத்தனை வயதானாலும் ராஜா  தான்.  ஈஸிச்சேர், இந்து பேப்பர்,  அரட்டை,  மாலை கோயில்-- குளம்,  சீட்டுக் கச்சேரி,  சங்கீத சபா என்று  நாளை 'குஷி'யாக கடத்துவதற்கு ஏகப்பட்ட பொழுது போக்குகள்!..

ஆனால் வீட்டு ராணிக்கு மட்டும் சாகும் வரை ஓய்வில்லை.  சமையல் அறை அவர் தாலி கட்டிக் கொண்ட  இன்னொரு புருஷன்!  .  இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் பெண்கள் விருப்பப்பட்டு இத்தனை வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வதே அவர்கள் பிறவி எடுத்த பயனாகக் கருதுகிறார்கள் என்று பட்டிமன்றத்திலிருந்து பலசரக்குக் கடை வரை ஆண்கள் பிரச்சாரம் பண்ணிக் கொண்டு திரிவது!

இவ்வளவு கடுமையாக ரஞ்சனி மேடம் சொல்ல வில்லை என்றாலும் அவர்
கட்டுரை  நம்மூர் படித்த வர்க்க  ஆண்களும், பெண்களும்  படித்தே ஆக வேண்டிய  கருத்துச் சுரங்கம்!  குறிப்பாக   வீட்டு வேலைகளை வீட்டில் உள்ளவர்கள் சரிசமமாக பகிர்ந்து கொள்ளவில்லை என்றால்,  இந்த வேலைகளைச் செய்வதில் சமநிலை வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளவில்லை என்றால், பெண்கள் தங்கள் செயல்திறனைப் பயன்படுத்த முடியவில்லை என்றால்   நாம் எதிர்பார்க்கும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP-- Gross Domestic  Productivity)  எப்படி லாபத்தை அடைய முடியாமல் போகும் என்பதனை திருமதி மிலிண்டா கேட்ஸ் ஆணித்தரமாக நிருவியிருப்பதை ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும்.

நம் நாடோ எதற்கும் சரிப்பட்டு வராத வினோதமான நாடு. போதாக்குறைக்கு  மகனும் மகள் போலவேயான காலம் இது.  மகனுக்குத் திருமணம் ஆனாலும் தனிக்குடித்தனம்.  இல்லையென்றால் வெளிநாடு அல்லது வெளியூர்.  ஒரே ஊரில் கூட மகனும் தந்தையும் ஏதாவது காரணத்திற்காக என்று தனித் தனியாக வாழ்கிறார்கள்.   எப்படிப்பார்த்தாலும் நியூக்ளியர் குடும்பமே  வாழ்க்கை  முறையாகியிருக்கும் காலம் இது.

இந்த மாதிரியான வாழ்க்கையில் அடுப்படி விஷயங்களை கணவனும் தெரிந்து கொண்டாக வேண்டிய காலக் கட்டாயம்.  இருவரில்  யாருக்கேனும் உடல் நிலை சரியில்லை என்றால் இன்னொருத்தர் சமையல் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம்.   தேவையின் கட்டாயம் ஒரு கஞ்சி போட,   சோறு பொங்க,  ரசம் வைக்கவாவது தெரிந்திருக்க வேண்டும்.

குறைந்த பட்சம் காலி காஸ் சிலிண்டரையாவது மாற்றத் தெரிந்திருக்க வேண்டும்.  அதற்கும் மனைவி தான் என்றால், நாடு பொறுக்காதுடா, சாமி!



பிடித்த கவிதை:

பள்ளி நுழைவாயில் முன்
மரமல்லி மர நிழலில்
கொண்டுபோன கொய்யாப் பழக் கூடையை
பக்கத்தில் இறக்கி வைத்து
நீள் செவ்வகச்  சாக்கு ஒன்றை                                                            
எதிரில் விரித்துப் போட்டு
பிள்ளைகள் வாங்கும் விலையில்
கூறு கட்டி வைத்து
இடைவேளை மணியடிக்கக் காத்திருக்கும்
இடைப்பட்ட வேளையில்
நட்சத்திரங்களென உதிரும்
மரமல்லிப் பூக்களை ஊசி நூல் கொண்டு
கோக்கத் தொடங்கும் அவள்
வீடு திரும்புகிறாள் மாலையில்
காத்திருக்கும் பேத்திக்கென
விற்று முடிந்த வெற்றுக்கூடைக்குள்
நட்சத்திர  சரமொன்றைச் சுமந்தபடி

==  பாப்பனப்பட்டு வ. முருகன்        நன்றி:  ஆனந்தவிகடன்   (இதழ்:   24-8-16)


 ம் பதிவுலக  நண்பர்  திரு. மோகன்ஜிக்கு  அறிமுகம் தேவை இல்லை.

அவர்  ஸ்ரீசாஸ்தாம்ருதம் என்றொரு தொகுப்பு நூலை சொந்தப் பொறுப்பில் வெளியிட்டிருக்கிறார்.   'சாஸ்தாம்ருதம்'   ஸ்ரீ சாஸ்தா, ஸ்ரீ ஐயப்பன் ஸ்தோத்திரப் பாடல்களின் திரட்டு.    திரு. மோகன்ஜி - திருமதி ஜெயந்தி
மோகன் தம்பதியரின்   சஷ்டியப்த பூர்த்தி விழாவில் தனிச்சுற்றுயாய் பாராயணத்திற்காக
தயாரிக்கப்பட்டதாம்.  விற்பனைக்கல்லாத  அழகான கையடக்க நூலை நல்ல தாளில் அச்சிட்டு வெளியிட்டிருக்கிறார்கள்.  நூலையும் வெகு  பொருத்தமாக மோகன்ஜி  தன் பெற்றோருக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார்.

மோகன்ஜி  குருஸ்வாமி நாற்பதாண்டுகளுக்கும் மேலாக பெருவழியில் சபரிமலைப் பயணம் மேற்கொண்டவராம்.   தன் சபரிமலை யாத்திரை அனுபவங்கள் துணையாயிருக்க  கிட்டத்தட்ட 58  ஸ்தோத்திரங்களின் திரட்டை திரட்டுப்பாலாய் அவர் திரட்டிய நூல் இது.. அத்தனை ஸ்தோத்திரங்களையும்  தேடித் தேடி தவமாயிருந்துத் தொகுத்திருக்கிறார்.   ஸ்ரீதர்மசாஸ்தா ஐயப்பன் ஸூப்ரபாதத்தில் ஆரம்பிக்கும் தொகுப்பு  நூல் மங்களத்துடன் நிறைவுறுகிறது.   ஐயப்ப பக்தர்களுக்கு  இந்த தொகுப்பு நூல் அருமையான ஒரு கையேடாக இருந்து திகட்டாத இன்பத்தைத் தரும் வகையில் பார்த்துப் பார்த்து நூல் தொகுக்கப் பட்டிருக்கிறது.

மோகன்ஜியின்  ஆன்மீகப்  பணிகள்  அதையொத்த சிந்தனை கொண்டவர்களுக்கு  நிச்சயம் உற்சாகமூட்டும்.




Related Posts with Thumbnails