மின் நூல்

Sunday, June 30, 2019

வசந்த கால நினைவலைகள்...

                                                             37


ங்கிலேயரைப் போலவே  பிரஞ்சுக்காரர்களும் நம் நாட்டில்  சில  இடங்களைக் கைப்பற்றி தம் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்திருந்தனர். அப்படி 1674-ம் ஆண்டு  பாண்டிச்சேரி பிரஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தது.  தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சி நடைபெற்றுக் கொண்டு வந்த பொழுது புதுவையில் பிரஞ்சு ஆட்சி இருந்ததால் தான்  பாரதியார் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்கள் பிரஞ்சுப் பகுதியான புதுச்சேரியை தமது வாழும் இடமாகக் கொண்டனர்.  பிரஞ்சு ஆதிக்கத்தின் கீழ்  சந்தரநாகூர்,   மாஹே,    ஏனாம், காரைக்கால்,  மசூலிப்பட்டணம், புதுவை ஆகிய இடங்கள் இருந்தன.  மசூலிப்பட்டணம் மட்டும் ஆந்திரப் பகுதியில் சேர மற்ற  நகரங்கள் புதுச்சேரியின் கட்டுப்பாட்டின்  கீழ் இயங்கி வந்தன.  தேசம் சுதந்திரம் பெற்றதும் 1954-ல் இந்தப் பகுதிகள் இந்திய யூனியனோடு  சேர்க்கப்பட்டன.    1956-லிருந்து புதுவை இந்திய யூனியன் பிரதேசமாக இயங்கி வந்தாலும்,  1963-- ஜூலையில் தான் சட்டசபை போன்ற அமைப்புகள் ஏற்பட்டன.   சரியாக அந்த கால கட்டத்தில் தான் நான் புதுவை போயிருக்கிறேன்.  புதுவை  யூனியன் பிரதேசத்தின் காங்கிரஸ் அமைச்சரவையின் முதல்  முதல்வர் எட்வர்ட் கூபெர்ட்.   எளிய மக்களால் குபேர்  என்ற  செல்லமாக அழைக்கப் பட்டவர்.  இவர் அந்நாட்களில் பாண்டிச்சேரி மேயராகவும் செயல்பட்டார்.   கிட்டத்தட்ட ஒரே ஒரு ஆண்டு தான் இவர் பதவியில் இருந்திருந்திருக்கிறார்.   இவரை பலமுறை சகஜமாக பார்த்திருக்கிறேன்.

புதுவையில் தபால் அலுவலகமும்,  தொலைபேசி இணைப்பகமும் பக்கத்துப் பக்க கட்டிடங்களாக ஒரே வளாகத்துள் இருக்கும்.   அதற்கு எதிரிலிருந்த  சர்க்கிள் டி பாண்டிச்சேரி என்ற  மேல்தட்டு வர்க்க கிளப் மாதிரியான இடத்திற்கு  குபேர்  வரும் சமயங்களில் கண்ணில் பட்டிருக்கிறார்.  பார்ப்பதற்கு மோதிலால் நேரு மாதிரி இருப்பதாக எனக்குத் தோன்றும்.  ஹவுஸ் சர்ஜன் கோட்டு மாதிரி போட்டிருப்பார்.  அந்த கோட்டின் கீழ் இரு பைகளிலும் எந்நேரமும் சில்லரைக் காசுகள் நிரம்பியிருக்கும்.  எளிய மக்களைப் பார்க்கும் பொழுதெல்லாம் கோட்டின் கீழ்ப்பைகளில் கைவிட்டு காசுகளை அள்ளி எடுத்துத் தருவார்.  குடிசையில் வாழும் மக்களின் வீட்டுக் கல்யாணங்களுக்கு அழைப்பு பத்திரிகை வந்திருந்தால் தவறாமல் போய் ஏதாவது பரிசுகள் வழங்கி விட்டு வருவார்.  அந்த மாதிரி எளிய மக்களுடன் அவருக்கு ஒரு நெருக்கம் இருந்ததை நேரடியாகவே பார்த்து ரசித்திருக்கிறேன்.

அந்தக் கால புதுவையில் இருந்தவை இரண்டே இரண்டு அரசியல் கட்சிகள் தாம்.  ஒன்று, காங்கிரஸ்.  மற்றொன்று  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. கம்யூனிஸ்டு கட்சியின் தோழர் வ. சுப்பையா சுதந்திரப் போராட்ட வீரர்.   உப்பு
 சத்தியாகிரத்தில் பங்கு கொண்டவர்.  சுதந்திர சங்கு பத்திரிகை ஆசிரியர் சங்கு சுப்பிரமணியத்துடன்  ஏற்பட்ட நட்பு  டி.என். சொக்கலிங்கம்,  ச.து.சு. யோகியார்,  ஏ.என். சிவராமன் என்று நட்பு வட்டம் விரிந்தது.   தோழர் சுந்தரய்யாவுடனான பழக்கம்  தொழிற்சங்க ரீதியாகப் போராட்டத்திற்கான உத்வேகத்தை இவருக்கு அளித்தது.  புதுச்சேரி  பஞ்சாலைத் தொழிலாளர்களுக்கு சங்கம் ஆரம்பித்து  பெரியளவில் பாடுபட்டார்.  நேருஜி இவரின் ஆற்றலைப் பார்த்து  புதுச்சேரியின் விடுதலைக்காக பிரஞ்சு  அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தை  நடத்த சுப்பையாவை அனுப்பி வைத்தார்.   அந்த பேச்சு வார்த்தைகளின் வெற்றியாகத் தான் 1954-ல்  பிரஞ்சு இந்தியப் பகுதிகள்   இந்திய யூனியனோடு இணைக்கப் பட்டன.   வெளித்திண்ணையில் கூரை போட்ட ஒரு சிறிய வீட்டில் சுப்பையா வாழ்ந்து வந்தார்.  தோழர் சுப்பையா அவர்களை சந்திக்க முடிந்ததில்லை.  டாக்டர் ரங்கநாதன் என்று ஒரு  முன்னணித் தோழர்.  அவருடன் பழக்கம் உண்டு.

ஜிப்மரில் பணியாற்றிய என்  நண்பன்   ரகுராமனுக்கு  ஆஸ்பத்திரி   வளாகத்திலேயே  க்வார்ட்டர்ஸ்   அலாட் ஆகியிருந்தது.   அதனால் அவன்   அங்கு குடியேற வேண்டியிருந்தது.      புதுவை   பாரதி தெருவில் ஒரு பெரிய தனி வீடு வாடகைக்குக் கிடைத்தது.  தொலைபேசி, தபால், ஆசிரியர் ஒருவர் என்று பத்து  நண்பர்கள்.  எல்லோரும் சேர்ந்து அங்கு குடியேறினோம்.  சேது என்ற  அருமை நண்பர் வீட்டுக்காரரோடு ஒப்பந்தம் போட, ஆகும் மொத்த செலவுகளை  நாங்கள் அனைவரும்  பகிர்ந்து கொள்ளலாம் என்று தீர்மானம் ஆயிற்று.

இருபத்தியோரு வயது நிரம்பிய இளைஞன் நான்.   அந்த பருவத்திற்குரிய மனத்திற்கிசைந்த அத்தனை ஈடுபாடுகளுக்கும்  வடிகால் தேடிய பருவம்.  எழுத்து, மேடைப்பேச்சு, கவியரங்கம்,  தொழிற்சங்கம்-- என்று அத்தனைக்கும் நேர் வழிகாட்டி  நெறிப்படுத்திய  கம்யூனிச சித்தாத்த போதத்திற்கு இந்த நேரத்தில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.   அந்த  நெறிப்படுத்துதல் மட்டும் அந்த இளம் வயதில் கிடைத்திருக்கவில்லை என்றால் திராவிட மாயையில் சிக்கி மன விசாலம் குன்றிக் குறுகிப் போயிருப்பேன்.  என் ஈடுபாடுகள் அத்தனைக்கும் வழிகோலும் வசதி கொண்டதாய் பிரஞ்சு நாகரிகத்தின் அழகு குலையாமல்  இருந்த அந்த குட்டியூண்டு நகரமும் வசீகரமாக இருந்தது.

இலக்கிய ஆர்வலர்களின் தோழமையோடு தமிழ் அறிஞர்கள் கலந்து  கொள்ளும்
கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்தோம்.   வேதபுரீஸ்வரர் கோயில் பிராகாரத்திலும் சில கூட்டங்கள் நடந்திருக்கின்றன.  டாக்டர் மா.  இராச மாணிக்கனார் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் அவரிடம் ஆட்டோகிராப் கையெழுத்து வாங்கும் பொழுது,  'தமிழே என் உயிர்'  என்று கையெழுத்திட்ட பொழுது, 'தமிழே நம் உயிர்'  என்று எழுத வேண்டாமோ என்று கேட்டேன். இது தான் மற்றவர்களையும் அணைத்துக் கொண்டு பேசும் நான் பெற்ற கம்யூனிசக் கல்வியாக எனக்கிருந்தது.    ஆனால் இராசமாணிக்கனாரோ, "அது எப்படி உன்னையும்  சேர்த்துக் கொண்டு நம் உயிர் என்று என்னால் சொல்ல முடியும்?" என்று ஒரேயடியாக மறுத்து விட்டார்.

ம.பொ.சி.யை அழைத்திருந்தோம்..  ஜமக்காளம் விரித்த தரையில் அவர் எங்களோடு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.   பேச்சின் நடுவே "இவரைத் தெரியுமோ, உங்களுக்கு?" என்று தன் வலக்கையை உயர்த்தி  அருகில்  அமர்ந்திருந்த ஒருவரைக் காட்டினார்.  அப்படி அவர் கையைத் தூக்கும்  பொழுது அவர்
அணிந்திருந்த முழுக்கை சட்டை  கக்கப் பகுதியில்   கிழிந்திருந்தது  மனசை வாட்டி எடுத்து விட்டது..  "இவர் தான் கவிஞர் கா.மு. ஷெரிப்.." என்று அவரை எங்களுக்கு  ம.பொ.சி. அறிமுகப்படுத்தினார்.  தான் மட்டும் தலைவனாய் தலை நிமிர்த்தி கர்வத்தோடு நடக்க வேண்டும் என்ற மனக்கோளாறுகள் அந்நாளைய  தலைமைப் பண்பாய் இருந்திருக்கவில்லை என்பதற்காக இதைக் குறிப்பிட்டேன்.   அண்ணா கூட  நெடுஞ்செழியனை, "தம்பீ, வா.. தலைமையேற்க வா..." என்று அழைத்து நெடுஞ்செழியன் தலைமை தாங்கிய கூட்டத்தில் கலந்து கொண்டவர் தான்.   இப்படியான தலைமைப் பண்புள்ள தலைவர்களை இன்று பார்க்க முடியவில்லையே என்று வருத்தமாகத் தான் இருக்கிறது.

(வளரும்)


Related Posts with Thumbnails