மின் நூல்

Friday, March 16, 2012

பார்வை (பகுதி-34)

ன்றைக்குப் பரவாயில்லை.  என்னவோ தெரியவில்லை,  அண்ணா சாலையில் அவ்வளவு போக்குவரத்து நெரிசல் இல்லை.  க்ரீம்ஸ் ரோடு திருப்பத்தில் திரும்பி,  ஐடிபீஐ பாங்கைத் தாண்டும் பொழுது, வீட்டிலிருந்து புறப்படும் பொழுதே இருந்த சுந்தர வதனன் நினைவு மீண்டும் தன்னைப் புதுப்பித்துக் கொண்டது..

'அவரைச் சொல்லிக் குற்றமில்லை.  ரிஷியை எனக்குத் தெரிந்திருக்குமென அவர் என்ன கண்டார்?..  அன்றைக்குக் கூட பெரியவரின் டிஸ்கஷனுக்காகச் செல்லும் பொழுது எதைச் சொல்லவோ தயங்கி நின்றாரே?.. அப்புறம் அதைப் பற்றி அவரும் சொல்ல வில்லை, நானும் கேட்கவில்லையே?.. இன்றைக்குக் கேட்டு விடலாமா?..' என்றெல்லாம் யோசித்துக் கொண்டே அலுவலக காம்ப்ளக்ஸூக்குள் வண்டியைத் திருப்பி நிறுத்தினாள் ஊர்மிளா.

நுழைந்ததுமே கிருஷ்ணவேணி புன்முறுவலுடன் அவளை எதிர்கொண்டாள்.  வேணியின் வரவேற்பு தினமும் அப்படித் தான் இருக்கும் என்றாலும், அழகான அளவான அவள் காலைப் புன்முறுவல், அன்று பூராவும் நினைவில் தங்கி அன்றைய பொழுதை உற்சாகமாக்க உதவும் என்பதை ஊர்மிளா அனுபவ பூர்வமாகவே உணர்வாள்.  அதனால் கிருஷ்ணவேணியை அவளுக்கு ரொம்பவும் பிடிக்கும்.  கொஞ்சம் ஏழ்மை தான்;  ஆனால் அவளாக எதையும் வெளியில் காட்டிக் கொண்டதில்லை.  'வறுமையில் செம்மை' என்கிற வரியை பதிப்புக்காக காத்திருக்கும் எந்த படைப்பிலாவது படித்தால் கூடப் போதும் சொல்லி வைத்தாற் போல கிருஷ்ணவேணியின் நினைவு அவளுக்கு வந்து விடும். கல்யாணமாகாத அக்கா ஒருத்தி அவள் வீட்டில் இருப்பது தெரியும்.

ஊர்மிளாவும் தான் உடுத்தி கழித்திருந்த சுமாருக்கும் கொஞ்சம் மேலான உடைகளை ஒரு பையில் இட்டு மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாவது யாருக்கும் தெரியாமல் கிருஷ்ணவேணியிடம் கொடுத்து விடுவாள்.  கிருஷ்ணவேணியும் அதில் எதையும் அலுவலகத்திற்கு உடுத்திக் கொண்டு வந்ததில்லை.  அதுவும் நல்லதுக்குத் தான்.  பொதுவாக பெண்கள் இந்த விஷயத்தில் ரொம்பவும் தீட்சணயமிக்கவர்கள்.  'என்ன, வேணி! ஊர்மிளா கொடுத்தாங்களா? அவங்க இதே மாதிரி போட்டுகிட்டு வந்த மாதிரி இருக்கே?' என்று யாராவது நேருக்கு நேர் கேட்டாலும் கேட்டு விடுவார்கள்.  அந்த மாதிரியான ஒரு நோகடிப்புக்கு இவள் அலுவலகத்திற்கு அதையெல்லாம் உடுத்திக் கொண்டு வராததே மேல்' என்று நினைத்துக் கொள்வாள் ஊர்மிளா. 'உங்க டிரெஸ்ஸெல்லாம் எங்க அக்காவுக்கு அவளுக்குத் தைச்சது போலவே அளவெல்லாம் அவ்வளவு கரெக்டா இருக்குங்க' என்று ஒருநாள் அதிசயப் படுகிற பாவனையில் முகத்தை வைத்துக் கொண்டு அவள் சொல்லியிருக்கிறாள்.  'ரொம்ப நல்லது.  தான் கொடுப்பதை இவள் அக்கா போட்டுக் கொள்கிறாள் போலும்' என்று ஊர்மிளா நினைத்துக் கொண்டதோடு சரி.

கைப்பையை லாக்கரில் வைத்து விட்டு வழக்கம் போல் வாஷ் பேசின் நாடி கை துடைத்து, கேசம் சரி செய்து தன் கேபினுக்கு வந்து அமர்ந்து ஒரு நிமிடம் தியானத்தில் ஆழ்ந்தாள் ஊர்மிளா.  தலை நிமிர்ந்து ஸ்டிக்கி நோட்ஸ் பார்த்ததில், 1. பிரென்ஞ், ஆங்கில நாவல்களின் பதிப்புக்கான ப்ரோப்ஸலுக்காக பெரியவரிடம் ஆலோசனை பெற வேண்டும். 2. இதுவரை பத்திரிகைகள் மூலமாக அறிமுகம் ஆகாத எழுத்தாளர்களின் புதினங்களை பதிப்புக்காக தேர்வு செய்ய வேண்டும் -- என்று அவளே எழுதி ஒட்டி வைத்திருந்த இரு நினைவூட்டல் குறிப்புகள் இருந்தன.

என்றைக்கு லஷ்மணன் சொன்னானோ அன்றைக்கே இரண்டாவது விஷயத்திற்கான அறிமுகமாக 'பார்வை' விஜி இல்லை என்று தீர்மானமாகி விட்டது.  அவளும் ரிஷி விஷயத்தை லஷ்மணனிடம் விட்டு விட்டாள்.  ரிஷியும், லஷ்மணனும் சேர்ந்தே எதெலாமோ தீர்மானித்திருக்கிற மாதிரித் தெரிகிறது.  எதெல்லாம் என்று லஷ்மணனிடம் இவள் கேட்ட பொழுது 'இன்னும் ஒரு சுற்று பேச வேண்டியிருக்கிறது; அடுத்த சனிக்கிழமை அவர்கள் நம் வீட்டிற்கு வருகிறார்கள், இல்லையா?.. அப்பொழுது விரிவாகப் பேசி விடலாம்' என்று சொல்லி விட்டான்.  இதுவரை கைவசம் இருக்கிற கையெழுத்துப் பிரதிகளைப் படித்து மூன்று நான்கு பேர்களை முன்னேற்பாடாகத் தேர்வு செய்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஊர்மிளா நினைவில் குறித்துக் கொண்டாள்.

முதல் விஷயத்தைப் பொறுத்த வரை சுந்தர வதனனிடமிருந்து எந்தந்த பிரென்ஞ், ஆங்கில நாவல்கள் என்று இன்னும் இறுதிப் பட்டியல் வரவில்லை என்கிற நினைப்பு ஊர்மிளாவுக்கு வந்த பொழுது, அவரிடமே அதுபற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்பதற்காக சுந்தரவதனின் கேபினுக்குப் போனாள்.

சுந்தர வதனன் அவர் கையாளும் செக்ஷனுக்கு மிகவும் பொருத்தமான மனிதர்.  நாலைந்து அந்நிய மொழிகள் பரிச்சயமுள்ளவர். ஆறடி உயரத்தில் ஆஜானுபாகுவாய் பஞ்சக் கச்சமும் நெற்றியில் ஸ்ரீசூர்ணமுமாய் இருப்பார்.  காலையில் ஆபிஸுக்கு வந்தாரானால், மாலை வீட்டுக்குக் கிளம்பும் வரை மதிய உணவு நேரத்தைத் தவிர்த்து அலுவலகப் பணி தவிர வேறு ஏதும் தெரியாதவராய் இருப்பார்.  ஸ்பஷ்டமான ஆங்கில உச்சரிப்பும், அதற்கு வாகான தேர்ந்த விவரிப்புகளும் அவருக்கென்று அலுவலகத்தில் ஒரு மரியாதையைத் தேடித் தந்திருந்தன.   ரிஷியின் மாமா அவர் என்பது இப்பொழுது புதிதாகத் தெரிந்திருக்கும் கூடுதல் தகவல். (ரிஷிக்கு ரிஷி என்று பெயர் வைத்ததே இவர் தானாமே!)  இது இத்தனை நாள் ஊர்மிளாவுக்குப் பரிச்சயமாகியிருந்த சுந்தர வதனன் என்கிற மனிதரை இன்னும் மரியாதைக்குரியவராக நினைக்கச் செய்தது.

ஏதோ புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்த சுந்தர வதனன், ஊர்மிளாவைப் பார்த்ததுமே "நானே வரவேண்டுமென்றிருந்தேன்.  நீங்களே வந்து விட்டீர்கள்" என்று பக்கத்திலிருந்த நாற்காலி பக்கம் கைகாட்டினார். அவள் உட்கார்ந்ததும், தன் மேஜை இழுப்பறையை இழுத்துத் திறந்து,  "இந்தாங்க லிஸ்ட்.." என்று ஒரு லிஸ்ட்டை எடுத்து ஊர்மிளாவிடம் நீட்டினார். "ஆங்கிலத்துக்கு அஞ்சு, பிரென்ச்சுக்கு அஞ்சுன்னு பத்து நாவல்களைத் தேர்வு செஞ்சிருக்கேன். நான் சின்னவர்கிட்டே பேசிட்டேன். பெரியவர்கிட்டே பேசி இரண்டோ நாலோ தேர்வு செய்ங்க.  அவரோட பேசினத்துக்கு அப்புறம், மத்ததையெல்லாம் பாத்துக்கலாம்" என்றார்.

"பெரியவர்க்கிட்டே டிஸ்கஸ் செய்யறத்தே நீங்க இருந்தாத்தான் இந்த வேலை எனக்கு செளகரியமாப் போகும்.  தவிர, என்னன்ன காரணங்களுக்காக இந்த பத்தை செலக்ட் செஞ்சிருக்கீங்கங்கறதையும் விவரமாச் சொல்லலாம். இல்லையா?"

"என்னைக் கூப்பிட்டீங்கனாத் தான் வம்பு.  ஆன மட்டும் பாத்துட்டேன். இந்த பத்தை எப்பாடுபட்டும் என்னாலே குறைக்க முடியலே. ஒவ்வொண்ணும் ஒவ்வொரு விதத்லே அற்புதமா இருக்கு."

"அவராலே மட்டும் எப்படித் தீர்மானிக்க முடியும்னு நெனைக்கிறீங்க?"

"முடியும்.  நான் பாக்கறது வாசக கோணம் மட்டும் தான்.  ஆனா அவர் பார்வைலே வாசக கோணம்+ முதலாளி கோணம் இரண்டும் இருக்கும், இல்லையா?  அதனாலே முடிவெடுக்க முடியும்."

"பெரியவரைப் பத்தி தெரியாதா?.. அவருக்கும் வாசக கோணம் தான் முக்கியமாப்படும். என்னிக்கு முதலாளி கோணம்ன்னு ஒண்ணு அவருக்கு இருந்திச்சு?.."

"இல்லை. ஊர்மிளா.. முதலாளி கோணம்ன்னு நான் சொல்ல வந்தது, வேறே!  உரிமை வாங்கறது, மொழிபெயர்ப்புக்கு ஏற்பாடு செய்யறதுன்னு பலதும் இருக்கில்லையா.. அதைச் சொன்னேன்."

"அப்போ ஒண்ணு செய்யலாம்.  பெரியவருக்கு இந்த பத்தையும் கொண்டு போறதுக்கு முன்னாடி, இந்த பத்திலே எதெல்லாம் நீங்க சொன்ன அந்த ரெண்டு விஷயத்திலே க்ளியரா இருக்குன்னு தெரிஞ்சிண்டறலாம்.  என்ன சொல்றீங்க..?"

"அது கூட சரிதான்.  சின்னவர் லெவல்லே இதையெல்லாம் முடிச்சிண்டு பெரியவர் கிட்டே போகலாம்.   மொழிபெயர்ப்பைப் பத்திப் பிரச்னை இல்லே.  இங்கிலீஷிற்கு சந்திர சூடனும், பிரன்ஞ்சுக்கு பரிதி மாலும் இருக்காங்க."

"இருக்காங்க சரி.  அவங்க ரெண்டு பேரும் ஃபிரீயா இருக்கணும், இல்லையா?  வேறே எதானுச்சும் ஒர்க்கை எடுத்துக்காம.."

"அதுவும் சரிதான்.  சின்னவர் கிட்டே சொல்லி கேக்கச் சொல்றேன்.  அப்புறம் அப்படியே சின்னவர் கிட்டே அந்த முதல் விஷயத்தையும் கவனிக்கச் சொல்லிடறேன். அதுக்கு நேரடியா அவர் வேலைலே இறங்கறது தான் சரியா இருக்கும்."

ஊர்மிளா புன்னகைத்தாள். "சார்! உங்க கிட்டே நான் கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு, சார்! உங்க வேலை எதுவுண்டோ அதை மட்டும் ரொம்ப ஈடுபாட்டோடச் செய்றீங்க.. மத்தபடி, இந்த ஏற்பாடு செய்யறது, என்னாலே இந்த ஆபீஸிலே இந்தக் காரியம் செய்ய முடியும்ன்னு இன்னொருத்தருக்கு காட்டிக்கறது, அதனாலே அவர் கிட்டே நெருக்கமாறது இதெல்லாம் உங்களுக்கு கட்டோட பிடிக்காத காரியம்ன்னு எனக்கு நல்லாவே தெரியும் சார்!  இதுக்கெல்லாம் எதாச்சும் டிரைனிங் இருக்கா?.. ஏதாவது இன்ஸ்ட்டிட்யூட்லே இதுக்கெல்லாம் பயிற்சி கொடுக்கறாங்களா, சொல்லுங்க, சார்!" என்றாள்.

சுந்தர வதனன் சிரித்தார். "ஊர்மிளா! இன்னிக்கு நேத்தா, எத்தனை வருஷமா உன்னைத் தெரியும் எனக்கு!  நீயும் அப்படித்தான்னு எனக்குத் தெரியாதா, என்ன?  அதான் ஒரு விஷயத்தை உங்கிட்ட கேக்க முடியாம இப்போ கொஞ்ச நாளா யோசிச்சிண்டு இருக்கேன்."

"எங்கிட்டே கேக்கறதுக்கு யோசனையா?" என்று ஊர்மிளா திகைத்தாள்.  "சார்.." என்று அவள் அவரை அழைத்த பொழுது, அவளது குரல் மிகவும் தழைந்திருந்தது.  "சார்.. என்னன்னமோ சொல்லி என்னை அந்நியப்பட்டவளா ஆக்கிடாதீங்க.. நினைச்சதை சொல்லிடுங்க, சார்!" என்றாள்.

"சட்டுனு கேட்டுடுவேன்.  ஆனா, கேக்கக் தான் வார்த்தை வரலே."

"கேளுங்க சார்.."

"ஒண்ணுமில்லே, குழந்தை!  என் மருமான் ஒருத்தன் இருக்கான். ரிஷின்னு பேரு.  இந்த கதையெல்லாம் எழுதறதிலே, அவனுக்கு ரொம்ப இன்ட்ரஸ்ட்!  இப்போ கொஞ்ச நாளைக்கு முன்னாடி கூட 'பார்வை'ன்னு ஒரு நல்ல கதை எழுதி இருந்தான்.  தீபாவளி மலர் ஒண்ணுலே வந்திருக்கு.  நீ அதைப் படிச்சிருப்பையோ இல்லையோ?.. தெரிலே.  நான் வேணா ஒனக்கு
அதை எடுத்திண்டு வந்து தரட்டுமா?"

"சரி சார்..  நான் என்ன செய்யணும் சொல்லுங்க.."

"அற்புதமான கதை அது.  குறுநாவல் மாதிரி வரும்.  அதைத் தவிர, கேட்டா இன்னும் நெறைய எழுதித் தருவான்.  அவனது சிலதை நம்ம பதிப்பகம் மூலமா போட்டா, நன்னா முன்னுக்கு வந்திடுவான்.  நீதான் அவனைப் பத்தி பெரியவர் கிட்டே சொல்லி..."

"..........................."

"பெரியவர் கிட்டே நானே இதைச் சொல்லலாமேன்னு சொல்லுவே. சொல்லலாம் தான்.  ஆனா சொல்லத் தெரியாது எனக்கு.  இதுக்கு முன்னாடி இப்படி எல்லாம் எதுக்கும் யார் கிட்டேயும் சொல்லி பழக்கமில்லை, எனக்கு. எதைச் செய்ய வழக்கமா நான் தயங்குவேனோ, அதையே உங்கிட்டே செய்யச் சொல்லி நான் கேக்கறது தப்பு தான்.  உன்னைப் பத்தியும் எனக்கு நன்னா தெரியும்.  சொல்றது உனக்கும் கஷ்டம் தான். அதுனாலே தான் உங்கிட்டேயும் சொல்ல முடியாம தயங்கிண்டிருந்தேன்.  என்ன சொல்றே?., பெரியவர் காதுலே அவனைப் பத்திப் போட்டு வைக்கலாமா? என்ன சொல்றே?" என்று அவளிடம் ஆலோசனை கேட்பது போலக் கேட்டார் சுந்தர வதனன்.

அவருக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் ஊர்மிளா தயங்கி தலை கவிழ்த்தாள்.


(இன்னும் வரும்)









15 comments:

ஸ்ரீராம். said...

தர்மரின் தேர் ஒரு அடி கீழே இறங்கி மண்ணைத் தொடுகிறதா....! (அவர் பொய் சொன்னார் இங்கு அபபடி இல்லையே என்று சொல்ல வேண்டாம்...! சும்மா வேல்யூஸ் பற்றி குறிப்பிட இதைச் சொல்கிறேன்!) இதுதான் நேரம்! இன்னும் ஐந்து நிமிடம் பொறுத்திருந்தால் ஊர்மிளாவே இந்த டாபிக்கை எடுத்திருப்பார் அல்லவா...!

பாச மலர் / Paasa Malar said...

பெண்கள் பிறர் உடைகளைக் கவனிக்கும் சமாச்சாரம்...கிருஷ்ணவேணி குறிப்புகள்... சுவாரசிய மெருகேற்றுகின்றன..

கோணங்களில் புதிதாய் முதலாளி கோணம்..இன்னமும் களை கட்டிக் கொண்டு போகிறது

G.M Balasubramaniam said...

இக்கட்டான நிலை என்று சொல்வார்களே,அப்படி இருப்பவர்கள் ஊர்மிளா, கிருஷ்ணவேணி, சுந்தர வதனன், இன்னும் ரிஷி,லக்ஷ்மணன் இவர்களை கூறலாமா.கதையின் போக்கை கணிக்க முயன்றால், அந்த நிலைக்கு நாமும் தள்ளப் படலாம், தொடர்கிறேன்.

கோமதி அரசு said...

ஊர்மிளாவின் உதவும் குணம்,கிருஷ்ணவேணியுன் பண்பை ஊர்மிளா பாராட்டுவது, அடுத்து சுந்தரவதனன் அவர்களின் குணத்தைப் பற்றி உயர்வாய் ஊர்மிளா பாராட்டுவது எல்லாம் மிக அருமை.

சுந்தரவதனன் அவர் மருமகனுக்கு பெரியவரிடம் சிபாரிசு செய்ய ஊர்மிளாவிடம் கேட்பது!



"சட்டுனு கேட்டுடுவேன். ஆனா, கேக்கக் தான் வார்த்தை வரலே."//

இது வரை இந்த மாதிரி கேட்காதவர் இப்படி கேட்க கஷ்டமாய் தான் இருக்கும்.

முதலாளி கோணம், வாசகர் கோணம் எல்லாம் நன்றாக இருக்கிறது.

அப்பாதுரை said...

குறுநாவலுக்குள் 'பார்வை' குறுநாவலா?! சுவாரசியம்.

//அவங்க இதே மாதிரி போட்டுகிட்டு வந்த மாதிரி இருக்கே?// நிறைய கவனித்திருக்கிறேன்.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

சும்மா வேல்யூஸ் இல்லை, அதெல்லாம் ஹியூமன் வேல்யூஸ் அல்லவோ?..

இல்லை, ஊர்மிளா எடுத்திருக்க மாட்டார். அடுத்த அத்தியாயம் வரை காத்திருக்க வேண்டுகிறேன்.

ஜீவி said...

@ பாசமலர்

அங்கங்கே இன்னும் எத்தனை கோணங்கள் அது அதே தங்களை வெளிக்காட்டப் போகிறதோ, எனக்கே தெரியவில்லை!

கூர்ந்து கவனித்து சொன்னவைகளுக்கு நன்றி, பாசமலர்!

ஜீவி said...

@ ஜிஎம்பீ

கதையில் வரும் அத்தனை பாத்திரங்களையும் வரிசைபடுத்தி விட்டீர்கள் போலிருக்கு!

'நெருக்கடிகள் என்பது விடுபடுவதற்காகவே' இல்லையா?

நன்றி, தொடர்வதற்கு.

ஜீவி said...

@ கோமதி அரசு

தங்கள் ரசனைக்கும், உயர்வானவற்றை
உரக்கச் சொல்வதற்கும் நன்றி.

போகப்போக இன்னும் என்னன்ன குணங்கள் வருகிறது என்பதில் நாமும் ஒரு பார்வை செலுத்தலாம்.

நன்றாக இருக்கிறது என்கிற ரசனைக்கு நன்றி.

ஜீவி said...

@ அப்பாத்துரை

ஆரம்பித்ததென்னவோ 'பார்வை' குறுநாவல் தான். அது முடிந்ததும் ஒரு நெடுங்கதைக்குள் அது தன்னைத் தானே அடக்கிக் கொண்டது.

அந்தக் குறுநாவலை எழுதியவரும், நெடுங்கதையில் உள்ளடங்கிக் கொண்டது இன்னொரு கதை. எழுத்தாளர் சம்பந்தப்பட்ட கதையாதலால், எழுதுவோர் சம்பந்தப்பட்டவை எல்லாம்
எழுது பொருள் ஆகிவிட்டது தான் இந்தக் கதையின் கதை. சரியா?

தங்களின் வாசிப்பு ரசனைக்கு இந்தத் தொடர் சுவையளிக்கும் என்று எண்ணுகிறேன். அப்படியிருக்கிறதா என்று நீங்கள் தான் அவ்வப்போது சொல்ல வேண்டும்.

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி, அப்பாஜி!

அப்பாதுரை said...

ரஷியப் பொம்மை என்பார்கள். ஒரு பொம்மைக்குள் இன்னொன்று என்று அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். (தமிழ்நாட்டிலும் உண்டு - என்ன பெயர் தெரியாது).
கதைக்குள் அடங்கும் கதைக்குள் அடங்கும் கதைக்குள்.. :)

ஜீவி said...

@ அப்பாத்துரை

நான் பொம்மை பார்த்ததில்லை. ஆனால் பிளாஸ்டிக்கில், எவர்சில்வரில் என்று
ஒன்றுக்குள் ஒன்று அடங்குகிற மாதிரி டப்பாக்கள், சமையலறை சமாச்சாரங் களைப் போட்டு வைத்துக் கொள்ள மாதிரியான உபயோகங்களுக்கு..

Geetha Sambasivam said...

சுந்தரவதனத்தின் கம்பீரம் குறைந்துவிட்டாற்போல் ஓர் உணர்வு. ஸ்ரீராமுக்குத் தோன்றியதே எனக்கும் தோன்றியது. பின்னூட்டத்தைப் பார்த்தால் அவரும் அதே சொல்லி இருக்கார். அடுத்ததைப் பார்க்கிறேன். :)))))

ஜீவி said...

@ கீதா சாம்பசிவம்

சில பேரின் கம்பீரம் அந்தக் கம்பீரத்திலிருந்து கொஞ்சமே அவர் தளர்ந்தாலும் நம்மால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை, பார்த்தீர்களா?..

அப்படியானவர்கள் அப்படித் தளர்வதும் அவர்கள் கம்பீரத்தை நமக்குக் கவனப்படுத்துவதாக அமைந்து விடுவது தான் அவர்கள் கொண்டிருந்த கம்பீரத்தின் வெற்றி போலும்!

Shakthiprabha (Prabha Sridhar) said...

ரொம்ப ரசித்த ட்விஸ்ட் :)

Related Posts with Thumbnails