மின் நூல்

Wednesday, March 21, 2012

பார்வை (பகுதி-36)

தற்காகத் தான் காத்திருந்ததே போன்று அந்த சனிக்கிழமையும் வந்தது.

காலையில் சாப்பாட்டுக்கு வருகிற மாதிரி பத்து, பதினொன்று வாக்கில் வரச் சொல்லியிருந்ததால் ரிஷி,  வித்யாவையும் கெளதமையும் அழைத்துக் கொண்டு பத்தரைக்கே வந்து விட்டான். அவர்கள் வருகிற பொழுது ஊர்மிளா அப்பளம் பொரித்துக் கொண்டிருந்தாள்.  லஷ்மணன் தான் போய் கதவைத் திறந்தான்.

"வாங்க.. வாங்க.." என்று லஷ்மணன் வந்தவர்களை அழைத்துக் கொண்டிருக்கும் பொழுதே ஊர்மிளாவும் எண்ணெய் வடியும் துளைப்பாத்திரத்தில் எடுத்துப் போட்டிருந்த அப்பளங்களை நமத்துப் போகாமல் மூடி வைத்து விட்டு வெளிவந்து, அவளும் அந்த 'வாங்க,வாங்க'வில் கலந்து கொண்டாள். .

"என்னங்க, நுழையும் பொழுதே வாசனை மூக்கைத் துளைக்கிறது?.." என்றபடி உள்ளே வந்த வித்யா, கொண்டு வந்திருந்த கைப்பையைத் திறந்து, ஆப்பிளும் மாதுளையும் நிறைந்த கவரை அவளிடம் தந்தாள்.

அதை வாங்கிக் கொண்டபடியே ஊர்மிளா, "ஒரு மணி நேரத்திற்கு முன்னாலேயே கிளம்பியிருப்பீங்களே?..  கெளதம் காலைலே என்ன சாப்பிட்டான்? நான் வேணா போர்ன்விடா கலக்கித் தரட்டுமா?" என்றாள்.

"எல்லாருமே காலை ஓட்ஸ் கஞ்சியோட சரி.   மத்ததையெல்லாம் இங்கே வைச்சிக்கலாம்ன்னு வந்திட்டோம்லே" என்று வித்யா சொன்ன போது மறைத்துப் பேசாமல் உள்ளதை உள்ளவாறு சொல்லும் அவள் சொல்லாடல் ஊர்மிளாவுக்கு பிடித்திருந்தது.

"அதான் எனக்கும் வேணும். எல்லாம் சூடா இருக்கு. இலை போட்டுடலாமா?" என்றாள் வித்யா.

"நான் ரெடி.."என்று ரிஷி வாஷ் பேசின் பக்கம் கையலம்பச் சென்றான்.

"இலையெல்லாம் வேண்டாம்.  தட்டு தான் செளகரியம்.  ஊர்மிளா!  இந்த டைனிங் டேபிள்லேயே எல்லாருக்கும் பறிமாறிடலாமா?" என்று புடவையின் தலைப்பை லேசாக எடுத்து செருகிக் கொண்டாள் வித்யா.

"ஓ.எஸ்.." என்று தட்டுகளை வாஷ் பேசினில் அலம்பி டேபிளின் மேல் வைத்தான் லஷ்மணன்.

ஊர்மிளாவும்,  வித்யாவும் சமையலறையிலிருந்து ஒவ்வொன்றாக எடுத்து வந்து டைனிங் டேபிளின் மேல் நிறைக்க, எதிரும் புதிருமாக இரண்டிரண் டாகவும்,  சைடில் ஒன்றாகவும் நாற்காலிகளைப் போட்டான் ரிஷி.

"நீங்கள்லாம் உட்காருங்கள்.  லேசாப் பறிமாறி ஆரம்பிச்சு வைச்சிறேன். அப்புறம் வேணுங்கறதைப் போட்டுண்டு சாப்பிட செளகரியமாக இருக்கும்.." என்று சேமியா பாயசத்தை கொஞ்சமாக தட்டுகளில் பறிமாறினாள் ஊர்மிளா. உருளை கறியும், வாழைக்காய் பொடிமாஸும் தவிர பொடிப்பொடியாய் அரிந்து போட்ட வெங்காய பச்சடி. அதில் தாளிச்சு கொட்டி தக்காளியைத் துண்டாக்கிச் சேர்த்திருந்தாள்.

சாதம் போட்டு பருப்பு வைத்து நெய் ஊற்றும் பொழுது, "ஊர்மிளா! நீயும் உக்காந்துக்கோ. அப்பார்ட்மெண்ட்னாலும் வீடு நன்னா இருக்கு.. எப்போ வாங்கினீங்க?" என்றாள் வித்யா.

"எங்க கல்யாணத்துக்கு முன்னடியே வாங்கிட்டார்.  அஞ்சு வருஷத்துக்கு மேலே ஆச்சு.."

"இந்த முருங்கைக்காய்க்குன்னு தனி குணம்.  சாம்பார்லே போட்டுட்டா எப்படி வாசனை தூக்கறது பாருங்க.." என்றான் ரிஷி.

"அரைச்சு விட்ட சாம்பாரா, ஊர்மிளா?..  ஏ.கிளாஸ்.."

"நான் குளிச்சிட்டு வந்தேனா, வித்யா?.. அதுக்குள்ளாற இந்த மிக்ஸி வேலைலாம் முடிச்சு எல்லாத்தையும் அவரே ரெடி பண்ணிட்டார்.  காரமெல்லாம் பொருந்தி வந்திருக்கா?.."

"பிரமாதம், போ! லஷ்மணன் சார்.. உங்க கை மணத்தை எழுத்திலே தான் பாத்திருக்கோம்.. இப்போ, இந்த சாம்பார்லே.." என்று வித்யா சொன்ன போது "அதை ஏன் கேக்கறீங்க.. பட்டை, லவங்கம்னு வேறே கலந்திட்டேனா?.. கழுவி வைக்கறத்தே, அந்த மிக்ஸியே மணத்தது.." என்று லஷ்மணன் சிரிக்காமல் சொன்ன போது அந்த ஹாலே சிரிப்பில் குலுங்கியது.

"ஒரு விஷயம் தெரியுமா, ரிஷி சார்..  உங்க 'பார்வை' கதைக்கு நாங்க ரெண்டு பேருமே அட்மைரர்ஸ்.. அந்த பார்வை தெரியாத பெரியவருக்கு நீங்க எந்தப் பேரையும் வைக்கலியா?.. அந்தக் குறையை எல்லாம் போக்கி அறிவழகன்னு அவருக்கு நாங்க பேரெல்லாம் கூட வைச்சிருக்கோம், தெரியுமா?.." என்றாள் ஊர்மிளா.

"என்னங்க.. எனக்கே ஒரு மாதிரி இருக்கு.. ஒரு கதை பிரசுரமானவனை உண்டோ இல்லையோன்னு பண்றீங்களான்னு ஒரு சம்சயம்.."

"அப்படில்லாம் இல்லை! அந்தக் கதையைப் பத்தி நிறையச் சொல்லலாம். லாம் என்ன, சொல்லணும்..  அதைச் சொல்லி உங்களைப் பாராட்டிப் போகத் தான் அன்னிக்கு உங்க வீட்டுக்கு நாங்க ரெண்டு பேரும் வந்ததே! வேறே எதேதோ பேசி, முடியாம போயிடுத்து.."

"அதுக்குத் தான் இன்னிக்கு இத்தனையும் பறிமாறி விளாசலாம்ன்னு தீர்மானிச்சிட்டீங்க, போலிருக்கு.." என்றான் ரிஷி.

"இல்லே, நீங்க அனுமதி கொடுத்தா, எல்.எல்.ஏ.லே ஒரு பாராட்டு விழாவே நடத்திடுவோம்."

"நீங்க நடத்தலாம்.  ஆனா, யாருக்கு நடத்தறாங்கன்னு, அட்லீஸ்ட் நாலு பேருக்குத் தெரியற அளவுக்கு ஆனபிறகு நடத்துங்க.. எனக்கு ஆட்சேபணை இல்லே.." என்று ரிஷி சொன்ன பொழுது "ஹியர்..ஹியர்.." என்றான் லஷ்மணன்.

"ஆரம்ப எழுத்தாளர்கள் எல்லாருக்குமே இருக்கற ஒரு வில்லங்கம் இது.  நாலைஞ்சு பத்திரிகைலே வரிசையா பத்து பதினைஞ்சு பிரசுரமாகி, யார்டா இதுன்னு படிக்கறவங்களையும் திரும்பிப் பாக்க வைச்சிட்டா, அடுத்தாப்லே 'டேக் ஆஃப்' ஸ்டேஜ் தான்.  அப்புறம் நாங்க உங்க வீட்டுக்கு வந்தப்போ நீங்க
சொன்னீங்களே, 'அபராஜிதன் சார் வந்திருக்கிறார்ன்னு ஒரு குரல் கொடுத்தா போதும், இந்த ஸ்டோரே இங்கே குழுமிடும்'ன்னு.  அந்த நிலை வர்ற வரைக்கும் என்னைப்பிடி, உன்னைப்பிடின்னு ஆகிடும்! அதுக்காகத் தான்.." என்று லஷ்மணன் சொன்ன போது ஊர்மிளா ஏதோ புரிந்த மாதிரி அவனை உற்றுப் பார்த்தாள்.

"உண்மைலே நீங்க அப்படி சொன்னதும் தான், விஜியை அப்படி ஆக்கிப் பாக்கணும்ங்கற ஆசையே எனக்கு வந்தது.  அப்படி ஆகணும்னா அதுக்காக என்னன்ன செய்யணுமோ, அதெல்லாம் அடுத்த அடுத்த வேலையா இருக்கணும்ன்னு அன்னிக்கே அங்கேயே தீர்மானிச்சிட்டேன். ஊர்மிளா கூட  அவ வேலை செய்ற பதிப்பகத்தின் மூலமா, இந்த 'பார்வை' குறுநாவலை புத்தகமாப் போடலாமேன்னு நெனைச்சா.  நான் தான் வேண்டாம்னுட்டேன். என்ன காரணத்தினாலே அப்படிச் சொன்னேன்ன்னு பாவம் இன்னிக்கு வரைக்கும் கூட அவளுக்குத் தெரியாது " என்று லஷ்மணன் சொன்னதைக் கேட்டு, "அப்படியா?.." என்று திகைத்தாள் வித்யா.  "ஏன் அப்படி சொல்லீட்டீங்க.." என்று அவள் சொன்ன போது, அவள் குரலில் ஏமாற்றம் கலந்திருந்தது.

"அதுக்குக் காரணம் நான் சொல்றேன்" என்றான் ரிஷி.

வித்யா ரசம் விட்டுக் கொண்ட போது, "ஒரு சேஞ்சுக்காக திப்பிலி ரசம்! ஜோரா இருக்கும்.. போட்டுக்கங்க" என்றான் லஷ்மணன்.. "அப்பளாம் போட்டுக்கறையா?" என்று கெளதம் தட்டில் அப்பளத்தை எடுத்து வைத்த ஊர்மிளா, ரிஷி என்ன சொல்லப் போகிறானோ என்கிற ஆவலில் அவனைப் பார்த்தாள்.

"லஷ்மணனும் நானும் சேர்ந்து எடுத்த முடிவு தான் இது.  ஜனங்களுக்கு நன்னா அறிமுகமாகாம புஸ்தகம் போட்டு என்ன பிரயோஜம்?.. நானும் புஸ்தகம் போட்டிருக்கேன் பாருன்னு வீட்லே அடுக்கி வைச்சிக்க வேண்டியது தான்!" என்று ரிஷி சொல்லும் போதே குறுக்கிட்டாள் வித்யா. "ஏன், ஊர்மிளா தான் பதிப்பகம் மூலமா போட்டுத் தரேங்கறாங்களே, அவங்க மூலமா விற்காதா என்ன?.."

"நன்னா விக்கும் பார்!  அப்படிப் பதிப்பிச்சோம்னா முதல்லே நம்ம ஸ்டோர்லே ரெண்டு புஸ்தகத்தை யாருக்கானும் தந்து காசு வாங்க முடியுமா, பார்! அப்போத் தெரியும்" என்று ரிஷி சொன்ன போது, ஊர்மிளாவிற்கும் பதிப்பகத் துறையில் இருந்தாலும் இது வரை உணராத நிதர்சன உண்மை புரிந்தது.

எல்லோரும் மோர் சாதம் சாப்பிடும் பொழுது, மாவடு ஊறுகாய் கிண்ணத்தை நகர்த்தி வைத்தாள் ஊர்மிளா.  "மாவடுவைப் பார்த்து எத்தனை நாளாச்சு?.." என்று ஆர்வத்துடன் போட்டுக் கொண்டான் ரிஷி."வித்யா, அது குப்பைனாலும் எழுதினவர் யார்னு பார்த்து புஸ்தகம் வாங்கற வாசக உலகம் இது.  தனக்குப் புடிச்ச எழுத்தாளர்ன்னா குப்பையா இருந்தாலும் பரவாயில்லைன்னு அவரோட அடுத்த குப்பையையும் வாங்கற வாசகர்கள் இருக்கறதாலே தான் எல்லாக் குப்பையும் இங்கே புத்தகமா குவிஞ்சு போயிடுத்து.  அதுக்கெல்லாம் போவானேன்?.. எழுதின எழுத்தாளர் பிரபலமா இருந்தாத் தான் இங்கேலாம் புஸ்தக விற்பனையையே நெனைச்சுப் பாக்க முடியும்! நீயே சொல்லு.  சுஜாதா சார் புஸ்தகமும் என் புஸ்தகமும் சேர்ந்து இருந்தா, அது கூட வேண்டாம், நம்ம அபராஜிதன் புஸ்தகமும் என் புஸ்தகமும் சேர்ந்து இருந்தா எதை வாங்குவாங்க, சொல்லு.." என்றான் ரிஷி.

"அப்போ இந்த வேலையே வேண்டாம்ன்னு எழுதற ஆசையையே விட்டுட வேண்டியது தான்.." என்றாள் வித்யா.

"அப்படித் தான் தமிழ்நாட்லே நிறைய நல்ல எழுத்தாளர்கள் எப்பவோ அந்த முடிவுக்கு வந்திட்டாங்க.." என்றான் ரிஷி.  "ஆனா, விஷயம் என்னவோ சுஜாதா கிட்டேயோ, அபராஜிதன் கிட்டேயோ இல்லை. அவங்க பத்திரிகை படிக்கறவங்களுக்கு பிடிச்சவங்களா ஆயிட்டாங்க.. அதான் விஷயம். ஒரு கதை தான் பிரசுரமாகியிருக்கு.   அதுக்குள்ளே நான் அவங்களைப் போலன்னு நெனைச்சிக்கத்தான் முடியுமா?..  நான் எழுதறதெல்லாம் புஸ்தகமாகி விற்பனையாகணும்னா, அவங்க போல ஆகணும்.  அதான் அடுத்த விஷயம். அதான் ஆரோக்கியமான சிந்தனை.  அவங்க போல ஆகணும்னா, அதுக்கு ஒரே வழி அவங்க காட்டின் வழிதான். பத்திரிகை மூலமா பேர் தெரிஞ்சு பிரபலமாறது. அப்படிப் பிரபலமாகறவரைக்கும் புஸ்தகம் போடற ஆசையே இருக்கக் கூடாது.  அதனாலே தான் ஊர்மிளா சொன்ன போதும் லஷ்மணன் இப்போ அந்தப் பதிப்பிக்கற வேலையே வேண்டாம்னுட்டார்.."

சாப்பிட்டு விட்டு எல்லோரும் எழுந்திருந்து அவரவர் தட்டுகளை எடுத்து வாஷ்பேசினில் கழுவி வைத்தார்கள்.  ஹாலுக்கு வந்து ஃபேனைப் போட்டு அமர்ந்த பொழுது மணி பதினொன்று ஆகியிருந்தது.  ஊர்மிளா உள்ளே போய் ஆப்பிளையும், மாதுளையையும் நறுக்கி தட்டுகளில் நிரப்பி வந்து டீபாயின் மீது வைத்தாள்.

அதே சமயம் வாசல் அழைப்பு மணி கிணுகிணுத்தது.  ஊர்மிளா வாசல் பக்கம் போய், திரும்பி வந்த பொழுது அவள் கையில் ஒரு தடிமனான கவர் ஒன்று இருந்தது.  டேபிளுக்குச் சென்று அதைப் பிரித்து வந்து, "இந்தாங்க.. 'வெண்ணிலா'  பத்திரிகை. கூரியரில் வந்தது.." என்று சொல்லியபடியே லஷ்மணனிடம் கொடுத்து விட்டு அமர்ந்தாள் ஊர்மிளா.

லஷ்மணனின் 'நிஜத்தின் நிழல்' சமூகத் தொடர்கதை இந்தப் பத்திரிகையில் தான் வருகிறது என்று வித்யாவிற்குத் தெரியும். அவன் அதைப் பார்த்து வைத்ததும் அந்தக் கதையைப் படிக்கும் ஆவலில் வித்யா காத்திருந்தாள்.

'வெண்ணிலா'வின் சில பக்கங்களைப் புரட்டிப் பார்த்த லஷ்மணன், லேசாக முகம் மலர்ந்து, "வந்தாச்சு.. இந்தா, ரிஷி" என்று புத்தகப் பக்கம் ஒன்றைப் பிரித்து வைத்தவாறு அவனிடம் கொடுத்தான்.

அந்தப் பக்கத்தைப் பார்த்ததும் ரிஷியின் முகமும் மலர்ந்தது.  "தேங்க்ஸ் லஷ்மணன்.." என்று சிரித்து, ஊர்மிளாவிடம் பத்திரிகையை நீட்டினான்.  ஊர்மிளாவின் பக்கத்தில் அமர்ந்திருந்த வித்யாவும் தலைசாய்த்துப் பார்த்தாள்.

அவர்கள் பார்த்த பக்கத்தில், "மெஜாட்டியோ" என்று கலர்க் கலர் எழுத்துக்களில் கதையின் பெயரைப் போட்டு, கதையின் பெயரை விட பெரிய எழுத்துக்களில் 'விஜி' என்று போட்டிருந்தது.  மிகப் பிரபல ஓவியர் வரைந்திருந்த அந்தப் படப்பெண்ணின் கண்களில் பரவசம் பொங்கி வழிந்தது.


(இன்னும் வரும்)





































13 comments:

Geetha Sambasivam said...

ஒரு விஷயம் தெரியுமா, ரிஷி சார்.. உங்க 'பார்வை' கதைக்கு நாங்க ரெண்டு பேருமே அட்மைரர்ஸ்.. அந்த பார்வை தெரியாத பெரியவருக்கு நீங்க எந்தப் பேரையும் வைக்கலியா?.. அந்தக் குறையை எல்லாம் போக்கி அறிவழகன்னு அவருக்கு நாங்க பேரெல்லாம் கூட வைச்சிருக்கோம், தெரியுமா?.." என்றாள் வித்யா.//

கடைசி வரியில் ஊர்மிளா என வந்திருக்கணுமோ???

லக்ஷ்மணனின் தீர்க்க ஆலோசனையும்,காலத்தை அறிந்து செய்யும் உதவியும் நெகிழ்ச்சியாய் இருக்கிறது.

ஜீவி said...

@ கீதா சாம்பசிவம்

தொடர் வருகைக்கு நன்றி. 'கடைசி வரியில்...'

திருத்திட்டேன், நன்றி.

கோமதி அரசு said...

ஊர்மிளாவிற்கும் பதிப்பகத் துறையில் இருந்தாலும் இது வரை உணராத நிதர்சன உண்மை புரிந்தது.//

பிரபல ஆகாத எழுத்தாளர்களின் புத்தகங்களை வாசகர்கள் வாங்குவது இல்லை உண்மை தான்.

// அவர்கள் பார்த்த பக்கத்தில், "மெஜாட்டியோ" என்று கலர்க் கலர் எழுத்துக்களில் கதையின் பெயரைப் போட்டு, கதையின் பெயரை விட பெரிய எழுத்துக்களில் 'விஜி' என்று போட்டிருந்தது. மிகப் பிரபல ஓவியர் வரைந்திருந்த அந்தப் படப்பெண்ணின் கண்களில் பரவசம் பொங்கி வழிந்தது.//

விஜி கதையை முதலில் பிரபலம் ஆக்கி பின் பதிப்பகத்தில்(விஜி) ரிஷியின் புத்தகத்தை போடலாம், அப்போது மக்கள் வாங்குவார்கள்.

நல்ல யோசனை.

G.M Balasubramaniam said...

ஒருவரின் பல பெயர்கள் சில நேரங்களில் வாசிப்பின் ஓட்டத்தை குறைக்கிறதோ.?யாருக்கு எந்த பெயர், எப்போது குறிப்பிடப் பட்டது, என்று நிச்சயித்துக்கொள்ள பின்னோக்கிப் போக வேண்டுமோ.? நினைவில் வைத்துப் படிக்க வேண்டிய உத்தியா.?தொடர்கிறேன்.

அப்பாதுரை said...

சின்னச் சின்ன விவரங்கள் (நாற்காலிகளைப் போடுவது, நமத்துப் போகாமல் மூடி வைப்பது) கவர்கின்றன. visual.
பிரபலம் ஒரு விசித்திர வட்டம். எங்கே தொடங்குகிறது? எழுத்தினால் பிரபலமா, பிரபலத்தினால் எழுத்தா? முதலாவது நிலைக்கும். சுஜாதா புத்தகத்தை வாங்குவார்கள் என்பதில் புது எழுத்தாளர் புத்தகத்தை வாங்க மாட்டார் என்று பொருள் தொக்கியிருக்கிறதோ? சுஜாதா புத்தகங்களை இன்னும் ஐந்தாண்டுகளில் எத்தனை பேர் வாங்குவார்கள் என்ற எண்ணம் அடிக்கடி என் மனதில் தோன்றும் :)

ஜீவி said...

@ கோமதி அரசு

ஆமாம், கோமதிம்மா.

கடைக்குப் போனால், இதெல்லாம் வாங்கிக் கொண்டு வரணும்ன்னு முன்னாடியே தீர்மானிச்சுக் குறிச்சிக்கற மாதிரி, இப்போல்லாம் புத்தகத் திருவிழாவுக்குப் போனாக் கூட இந்த இந்த எழுத்தாளர்கள் புத்தகமெல்லாம் வாங்கிக் கொண்டு வரணும்ன்னு முன்னாடியே தீர்மானிக்கறவங்க அதிகம். அந்த லிஸ்டிலே பலர் சொல்லித் தெரிந்தோ, இல்லை பிரபலமாகிப் போனவர்களோ தான் இருப்பார்கள்.

புத்தக ஸ்டால்களில் கூடப் பார்த்திருப்பீர்கள். வருகிறவர்களின் பார்வைக்குப் படுகிற மாதிரி பிரபலங்கள் எழுதியவற்றையே அடுக்கி வைத்திருப்பார்கள்.

வியாபார உலகில் புழங்கும் மொழி வியாபார மொழியே.

ஜீவி said...

@ G.M. Balasubramaniam

வாருங்கள், ஜிஎம்பீ சார்!

ரிஷி - விஜி
லஷ்மணன் - அபராஜிதன்

இந்த தொடரில் இவர்கள் இருவர் தான் இருபெயர்களில் வருகிறார்கள். மற்றபடி முக்கியமான கதாபாத்திரங் களும் அதிகமில்லை.

பல பதிவுகளைப் படிக்கிறோம். விட்டு விட்டு வேறே படிக்க வேண்டியிருக்கிறது. அதனால் தான் இந்த தொல்லை. மற்றபடி உத்தியெல்லாம் ஒன்றுமில்லை.

மிக்க நன்றி.

ஜீவி said...

@ அப்பாத்துரை

வாருங்கள், அப்பாஜி! அந்த சின்னச் சின்ன விவரங்களையும் கூர்ந்து பார்த்துச் சொன்னமைக்கு நன்றி.

ஆமாம், நீங்கள் சொல்கிற மாதிரி பிரபலம் என்பது ஒரு விசித்திர வட்டம் தான். தேடித் திரிவதல்ல, விளம்பரம். தன்னாலே கிடைப்பது.

எழுத்து ஒன்றினாலேயே பிரபலமடைந்தவர் தான் சுஜாதா. திரைத்துறை தலைகாட்டலுக்குக் கூட அவர் எழுத்து தான் காரணம். அது தான் அங்கே கூட அங்கிருப்பவர் பலரைக் கவர்ந்து அவரையே சிபாரிசு செய்திருக்கிறது.

சுஜாதா புத்தகமும், புது எழுத்தாளர் ஒருவரின் புத்தகமும் ஒரு சேர இருந்தால், இரண்டையும் எடுத்துக் கொள்கிறவரை விட சுஜாதா புத்தகத்தை மட்டும் எடுத்துக் கொள்பவர் நிறைய இருப்பார்கள் என்கிற எண்ணத்தில் குறிப்பிடப் பட்டதேயன்றி வேறு காரணமில்லை.
அவரை வாசித்துப் பழக்கப்பட்டு பழகிப் போனதும் இந்தத் தேர்வுக்கு ஒரு காரணம்.

போர்ன்விடா, ஓவல்டின் இரண்டும் அடுத்தடுத்து விற்பனைக் கூடத்தில் இருந்தால் உங்களுக்கு உபயோகித்து பழகப்பட்டது எதுவோ அதைத் தான் நீங்கள் வாங்குவீர்கள். அப்படி.

//சுஜாதா புத்தகங்களை இன்னும் ஐந்தாண்டுகளில் எத்தனை பேர் வாங்குவார்கள் என்ற எண்ணம் அடிக்கடி என் மனதில் தோன்றும் :)//

நீங்களே தான் சொல்லி விட்டீர்களே!
எழுத்தினால் பிரபலம் என்றால் அது நிலைக்கும் என்று. உங்களைப் பொறுத்தமட்டில் அதற்கு காலக்கெடு ஐந்து ஆண்டுகள். அவ்வளவு தான்.
ஆனால், பல தருணங்களில்,பல ஆண்டுகள் கழித்தும் (புதுமைப் பித்தன் மாதிரி) அவர் நினைவு கொள்ளப்படுவார் என்பது மட்டும் நிச்சயம் என்று நினைக்கிறேன்.

எனது பதிவின் எழுத்தாளர் பகுதியில்
'இதோ நிஜ சுஜாதா' என்னும் அவரைப் பற்றிய கட்டுரையை அவசியம் நீங்கள் படிக்க வேண்டும்.
அவரைப் பற்றிய அலசல் அது.

பாச மலர் / Paasa Malar said...

நன்றாக, அதுவும் நல்ல சாப்பாடு சாப்பிட்டுக்கொண்டே பதிவு வாசித்த திருப்தி.....

புத்தகங்கள் எப்போது பிரசுரிக்க வேண்டும் போன்ற குறிப்புகள் காலம் தழுவிய எதார்த்தம்...

வண்ண எழுத்துகளில் கதையின் பெயர்...நன்று...

ஓவியரின் படமும் எவ்வளவு முக்கியம் கதைக்கு....நமக்கு மிகவும் பிடித்தமான ஓவியர் வரைந்த படம் என்றால் எந்தக் கதையானாலும்..கதாசிரியர் பிரபலமாக இல்லாவிட்டால் கூட..படித்துவிடத் தோன்றிய அந்தக்கால அனுபவங்கள் நினைவுக்கு வந்தது....

பிரபல எழுத்தாளர்களின் சுமாரான எழுத்துகூட விரும்பப்படுதல், புதிய எழுத்தாளர்கள் இன்றைய நிலையில் கடைப்பிடிக்க வேண்டியவை என்று....தகவல்களைப் புரட்டிப் பார்த்து யோசிக்க வைக்கின்ற பகுதிகளுக்கு விசேட பாராட்டுகள்..

புத்தகக் கண்காட்சியில் எப்படிப் புத்தகங்கள் தேர்வு செய்கிறோம் என்பது கூட உலகளாவிய எதார்த்தம்தான் உங்கள் பின்னூட்டத்தில் குறிப்பிட்டபடி...

அப்பாதுரை said...

சுப்ரமண்யராஜூ எழுத்தை யாராவது வாங்கிப் படிக்கிறார்களோ?

அப்பாதுரை said...

just curious.. சுஜாதாவை விடப் பிரபலமானவர் என்று தமிழ் எழுத்தாளர் யாரையாவதுக் குறிப்பிட முடியுமா?

ஜீவி said...

அப்பாதுரை (1)

கிழக்குப் பதிப்பகம் அவரது சிறுகதைத் தொகுப்பொன்றை வெளியிட்டிருப்பதாகத் தெரிகிறது. விற்பனை எப்படி என்று அவர்களுக்குத் தான் தெரியும்.

பாலகுமாரன், சுப்ரமண்ய ராஜூ, மாலன் என்று சேர்ந்தாற் போல ஒருகாலத்தில் மனத்தில் நினைத்துப் பார்த்துக் கொண்டதுண்டு.

ஜீவி said...

அப்பாதுரை (2)

பிரபலத்தை விட்டுத் தள்ளுங்கள். சில நேரங்களில் தன்னாலே உருவாவது அது. பல நேரங்களில் பல காரணங்களுக்காக உருவாக்கப் படுவது.

எழுத்தாளர்கள் எழுதினாலே போதும் என்று இருக்கின்ற ஒரு தோற்ற மயக்கத்திற்கு தங்களை உட்படுத்திக் கொள்ளாமல் எழுதியது போலவே செயல்பட்டவர்களில் இருவரை மறக்கமுடியாது.

ஒருவர் பாரதியார். இன்னொருவர் கல்கி.

1941-ல் தேச விடுதலைக்கான சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காகவே தான் பார்த்த 'ஆனந்தவிகடன்' ஆசிரியர் வேலையையே உதறித் தள்ளியவர் கல்கி அவர்கள்!

Related Posts with Thumbnails