மின் நூல்

Monday, April 16, 2012

பார்வை (பகுதி-41)

வித்யா வீட்டிற்கு வந்ததும் வெளி கிரில்க்கதவை சாத்தி விட்டு முதலில் 'செந்தாமரை'யைப் புரட்டிப் பார்த்தாள்.  மேலோட்டமாகப் பார்க்கையிலேயே வழக்கமாக வரும் சில பகுதிகள் இல்லாமல் இருந்தது தெரிந்தது.   'இந்த இதழ் செந்தாமரையைப் பாத்தப்போ, இது என்ன 'செந்தாமரை' தானான்னு, அதிசயமா இருந்தது, வித்யா..' என்று உஷா சொன்னது ஞாபகத்திற்கு வந்தது.

உஷா சரியாகத் தான் சொல்லியிருந்தாள்.  பத்திரிகையின் தலையங்கத்தைத் தலைகீழாகப் பிரசுரித்திருந்தார்கள். 'செந்தாமரை'யைத் தலைகீழாகத் திருப்பி வைத்துக் கொண்டு தான் அதைப் படிக்க வேண்டும்.  ஒரு ஆங்கிலப் படத்திற்கும் தமிழ்ப் படத்திற்கும் சினிமா விமரிசனம் எழுதியிருந்தார்கள். அவ்வளவு தான் சினிமா பற்றி. 'இவர்கள் சந்தித்தால்..' என்று ஒரு புதுப் பகுதி.  பதிப்பகப் புத்தகங்களை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கும் ஒருவரும்,  தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கும் ஒருவரும் சந்தித்து உரையாடுவதை கற்பனையாக நகைச்சுவையாக எழுதியிருந்தார்கள். டிசம்பர், 21, 2012 என்று ஒரு அலசல் கட்டுரை. நிறைய கலர்க் கலர் படங்களுடன் படித்துப் பார்க்க ஆவலைத் தூண்டியது. வழக்கமாக பிரசுரிக்கும் அரைகுறை அசட்டுக் கதைகளுக்குப் பதில் சிறுகதைகள் மூன்றோ நான்கோ;  அதுவும் ஒவ்வொன்றும் ஐந்து பக்கங்களுக்குக் குறையாமல் அழகழகான சித்திரங்கங் களோடு!   அவற்றைப் பிரசுரித்த விதமே புதுத் தோற்றத்துடன் அலாதி பொலிவு கொண்டிருந்தது.  ஒரு கதையின் தலைப்பைப் போட்ட மாதிரி இன்னொரு கதையின் தலைப்பைப் போடாமால் அச்சில் வித்தியாசம் காட்டியிருந்தார்கள். கதையின் இரண்டுப் பக்கமும் சங்கிலி கோர்த்த மாதிரி பார்டர் கட்டி, கதைக்குக் கீழே எழுதியவரின் ஸ்டாம்ப் சைஸ் புகைப்படம் அச்சாகியிருந்தது.

புகைப்படம் சின்ன சைஸ்ஸில் இருந்தாலும், விஜியின் மாக்ஸிம் கார்க்கி மீசை அவன் முகத்திற்கு ஒரு களை கொடுத்து எடுப்பாகத் தெரிந்தது. 'நேற்றுப் போனவர்கள், இன்று வந்தோம்' என்று அவன் கதைத் தலைப்பு புதுமையாக இருந்தது.  இரண்டு மூன்று தடவை அந்தக் கதைத் தலைப்பையே படித்துப் பார்த்த பொழுது அதுவே அவளுக்கு நிறைய சேதி சொல்வது போலிருந்தது. தெரு போஸ்டரில் பார்த்த தொடர்கதைத் தலைப்பை விட இந்தத் தலைப்பு அர்த்தம் நிறைந்ததாக அட்டகாசமாக இருப்பதாக அவளுக்குப் பட்டது.

'வானவில்' பத்திரிகையிலிருந்து வந்திருந்த கடிதக் கவரைப் பிரித்துப் பார்த்தாள். விஜி கொடுத்திருந்த தொடர்கதைச் சுருக்கம் அவர்களுக்கு மிகவும் பிடித்திருந்ததாகவும் இரு வாரங்களுக்குள் பத்து அத்தியாயமாவது எழுதி அனுப்பச் சொல்லிக் கேட்டிருந்தார்கள்.  இவன் கொடுத்திருந்த 'எங்கிருந்து இங்கு?' என்கிற தொடர்கதைத் தலைப்பை, வெகுஜன ரசிப்பிற்காக 'காதல் தேசம்' என்று மாற்றியிருப்பதாகவும், அதற்காக மன்னிப்பையும் கோரியிருந்தார்கள்.  அவர்கள் அதைப் பற்றி எழுதியிருந்த நாலைந்து வரிகளில் இந்த தலைப்பு மாற்றம் ஒரு பெரிய விஷயமே இல்லை என்கிற மாதிரியான 'தொனி' இருந்தது.  கூடவே, இந்த வார 'வானவில்' இதழின் ஒரு பிரதியும் அனுப்பியிருந்தார்கள்.  அந்தப் பிரதியின் பின்பக்க அட்டையில் போஸ்டரில் பார்த்தபடியே விஜியின் 'காதல் தேசம்' தொடரின் விளம்பரத்தையும் கூடுதலாக அவனின் புகைப்படத்தையும் பிரசுரித்திருந்தார்கள்.. புகைப்படத்தில் விஜி பைஜாமா ஜிப்பாவுடன் நின்ற கோலத்தில் இருந்தான்.

'விண்சுடர்' என்னும் பத்திரிகையிலிருந்து வந்திருந்த கடிதத்தில் இவனிடமிருந்து ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் கேட்டிருந்தார்கள்.  'வெண்ணிலா' பத்திரிகையிலிருந்து ஒரு குறுநாவல் கேட்டிருந்தார்கள்.  எல்லாவற்றையும் பார்க்கையில் வித்யாவிற்கு பிரமிப்பாக இருந்தது.   ரிஷி என்ன செய்யப் போகிறான் என்று தெரியவில்லை.  இந்த பத்திரிகைகாரங்க கேட்டிருப்பதை உட்கார்ந்து எழுதி அனுப்புவதா இல்லை ஆபிஸுக்குப் போவதா என்றிருந்தது.  இந்த லட்சணத்தில் தானும் கதை எழுதுகிறேன் பேர்வழியென்று ஒரு ரைட்டிங் பேடும் பேப்பருமாய் உட்கார்ந்தால், வீடு என்னாவது என்று மலைப்பே மிஞ்சியது.  கெளதம் படிப்பு வேறு . சின்ன வயசாயும் சின்ன கிளாஸாகவும் இருப்பதில் சில சிரமங்கள் இருந்தன..  போகப்போக நினைச்ச இடத்திற்கெல் லாம் இரண்டு பேரும் சேர்ந்து சேர்ந்து இனிமேல் போகமுடியாது என்று எண்ணிக் கொண்டாள்.

உஷாக்கானும் ஒருவிதத்தில் செளகரியம்.  குழந்தை குட்டி பிக்கல் படுங்கல் இல்லை.  கணவன், மனைவி இருவருமே ஒருத்தருக்கொருத்தர் குழந்தை. அதனால் நிறையப் படிக்க முடிகிறது; மனத்தில் தோன்றுவதை கடிதங்களாக உருமாற்றி பத்திரிகைகளுக்கு நிறைய அனுப்பவும் முடிகிறது.  கெளதம் ஸ்கூலுக்குப் போகும் வயதில் என்றாலும், எங்கே போனாலும் அவனையும் கூட்டிக் கொண்டு போக வேண்டியிருக்கிறது.  போகாமலும் இருக்க முடியவில்லை. நாலு இடத்திற்குப் போய்ப் பழக்கப்பட்டால் தான் நாலும் எழுத முடியும் என்று நம்பும்படி காலம் ரொம்பவும் மாறியிருக்கிறது.  அந்தக் காலம் மாதிரி இல்லை இந்தக் காலம். நாலும் தெரிந்திருக்க வேண்டியிருக்கிறது;  இல்லையென்றால் நாலு சுவத்துக்குள்ளேயே எதுவும் முடங்கிப் போய்விடும் என்கிற நினைப்பு வந்த பொழுது சுற்று வட்டாரமே அவளைக் குழப்பியது.

அந்த ஸ்டோர் போன்ற அப்பார்ட்மெண்ட்டில் எப்படிப் பார்த்தாலும் இரண்டு வகைகளில் இருக்கிற பெண்களை அடைத்து விடலாம் போலிருந்தது. ஒன்று அலுவலக வேலைக்குச் செல்கிறவர்கள்; இன்னொன்று அப்படியான ஒரு வேலைக்குச் செல்லாமல் இருப்பவர்கள்.  பத்தரை மணிக்கு மேலே வெளி வேலைக்குப் போகிறவர்கள் போன பின்பு அந்த ஸ்டோரே 'ஹோ'வென்று இருக்கும்.  வீட்டு வேலையெல்லாம் முடிந்த பின் சும்மா இருக்கும் நேரங்களில் பேச்சுத் துணை என்றால் இந்த மாதிரி வீட்டில் தங்கிவிட்ட பெண்களிடையே தான். அதனால் இப்படியான பெண்களிடையே ஒரு அந்நியோன்யம் இயல்பாகவே இழைந்திருந்தது.  கோலம், சமையல், கடை கண்ணிகளில் புதுசாக விற்பனைக்கு வந்திருப்பவை, டி.வி.சீரியல்கள், பத்திரிகை பேட்டிகள், அலசல்கள் என்று அவர்களுக்குள்ளேயே சுற்றி சுற்றி வரும் எத்தனையோ விஷயங்கள் பற்றி அவர்களுக்கிடையேயான விவாதங்களும் அவர்களைச் சுற்றி வரும். ஏதாவது ஒரு வீட்டில் இந்த ஜமாக் கூட்டம் தினமும் அரைமணி நேரமாவது இருக்கும்.  அப்பப்ப சொந்த செளகரிய ஷேம லாப விசாரிப்புகளைத் தாண்டி மற்ற குடித்தனக்காரர்கள் பற்றிய ஆர்வக் கோளாறான வம்புக்குப் போகாமல் வயதில் பெரியவர்கள் அனுபவ அறிவோடு பார்த்துக் கொள்வார்கள்.  மற்றபடி வேலைக்கு செல்லும் பெண்களை எப்போதாவது பார்க்கும் பொழுது ஒரு 'ஹலோ'வோடு சரி. சனிக்கிழமை சிலருக்கு அலுவலகம் உண்டென்பதால் ஞாயிற்றுக் கிழமைகளில் தவறாது வேலைக்குச் செல்வோர், செல்லாதோர் என்று இரண்டு வகைகளும் கலந்த மாதிரி இந்த மொட்டை மாடியில் உட்கார்ந்து சேர்ந்து பேசும் பழக்கமும் அவர்களிடையே படிந்திருந்தது.

மொத்தம் இருபது வீடுகள்.  இருபதும் சேர்ந்து ஒன்றன் பக்கத்தில் ஒன்றாக இருந்தாலும் இந்தக் கோடியிலிருந்து அந்தக் கோடிவரை நீண்ட ஹால் மாதிரி நீள வாக்கில் இருக்கும் மொட்டை மாடியில் ஒவ்வொரு வீட்டையும் பிரித்துக் காட்டுகிற மாதிரி சின்ன இடுப்பளவிலான கைப்பிடிச் சுவர் உண்டு. அதனால் வாசல் வழியாகத் தான் வரவேண்டும் என்றில்லாமல் எந்த வீட்டு மொட்டை மாடியிலும் இந்த ஞாயிற்றுக்கிழமைகளில் கூடிப் பேச வசதியாக இருந்தது.

மனசு நிறைந்திருந்ததில் வித்யாவுக்கு சாப்பாடு அவ்வளவாக இறங்க வில்லை.   பூசணிக்காய் மோர்க்கூட்டு பண்ணியிருந்தாள்.  வழக்கமாக கல்யாண சாப்பாடுகளில் காணப்படுவது போல் காரம் கலந்து தோலுரித்து வதக்கிய உருளைக்கிழங்கு கறி, தக்காளி ரசத்திற்கு ஒத்து வந்தாலும், 'செந்தாமரை'க் கதையைப் படித்துப் பார்க்க வேண்டும் என்கிற ஆவலில் சாப்பிட்டதாக பேர் பண்ணிக் கொண்டு எழுந்தாள்.  கையலம்பித் துடைத்து 'செந்தாமரை' அவள் கையில் தவழும் போது 'எழுத்துப் பட்டறை'க்குப் போக வேண்டிய நினைவில் மணி பார்த்த பொழுது ஒன்றாகியிருந்தது.

கணவனின் 'நேற்றுப் போனவர்கள்,  இன்று வந்தோம்' கதை படிக்கப் படிக்க அவளுக்குப் பிடித்திருந்தது.  ஒரு கதையைப் படிக்கும் பொழுதே, வரிவரியாய்ப் போகும் எழுத்துக்கள் ஊடேயே ஒருகதை போலச் சொல்லி வேறோரு விஷயத்தை படிக்கிறவர்கள் மனசில் பதிக்க வைக்கிற அவன் திறமை அவளுக்குப் பிடித்திருந்தது.  அந்த இன்னொரு விஷயத்தைச் சொல்வதற்காகத் தான் இவர் கதை எழுதுகிறார் என்பது நன்றாகத் தெரிந்தது.  இப்படியெல்லாம் தன்னால் எழுத முடியுமா என்று அவளுக்குத் திகைப்பாக இருந்தது.  கெளதம் ஸ்கூலுக்குப் போய் பாடங்கள் படித்துத் தெரிந்து கொள்கிற மாதிரி, தானும் புருஷனின் பக்கத்தில் உட்கார்ந்து இப்படியெல்லாம் எழுதறது எப்படின்னு தெரிந்து கொள்ள வேண்டும் போலிருந்தது.  'வெளிப்பார்வைக்கு பொதுவா கதை எழுதறவங்க எல்லாரும் எழுதற ஒரு கதை மாதிரி தான் இவரதும் இருக்கிறது.  ஆனால் படிக்கப் படிக்க மத்தவங்க எழுதறதிலேந்து ஏதோ ஒரு விதத்தில் இவர் எழுதறது வித்தியாசப்படுகிற மாதிரியும் இருக்கு' என்று  அவள் கொஞ்சம் யோசித்த பொழுதே அந்த வித்தியாசம் தான் இவருக்கும் மற்ற எழுத்தாளர்களுக்கும் இருக்கும் வித்தியாசம் என்று புரிந்து கொள்ள முடிந்தது.

இன்னொரு விஷயமும் அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.  இப்படியெல்லாம் எழுத இவருக்குத் தெரியும் என்று இத்தனை நாள் தனக்குத் தெரியாதிருந்ததே ஆச்சரியமாக இருந்தது.  வீட்டுக்கு நிறைய அந்த இருபது பக்க பத்திரிகைகள் வரும் தான். எப்பவாவது பொழுது போகாத நேரங்களில் அதிலெல்லாம் என்ன எழுதியிருக்கிறது என்று புரட்டிப் பார்ப்பாள்.  நிறைய புரியாத வார்த்தைகள் இருக்கும்.  ரிஷி அலுவலகம் விட்டு வந்ததும் அவனிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டுமென்று அந்த வார்த்தைகளின் கீழே பென்ஸிலால் கோடிட்டு வைத்திருப்பாள்.   அப்படி அவன் வந்ததும் பலதைக் கேட்டுத் தெரிந்து கொண்டிருந்திருக்கிறாள்.  ஆரம்பத்தில் அது ஒரு பயிற்சி போல சந்தோஷத்தை அவளுக்குக் கொடுக்கவும் செய்தது.  ஒரு கட்டத்தில் சலிப்பாகவும் இருந்தது.  நாளாவட்டத்தில் ரிஷி போன்றவர்களுக்குப் புரிந்தால் போதும் என்று நினைத்துப் பிரசுரிக்கிற மாதிரி அப்பத்திரிகைகளின் வாசிப்பு அனுபவம் அவளுக்கு அமைந்து போக, நமக்கு புரிகிறவற்றைப் படிப்போம் என்று தீர்மானம் கொண்டாள்.  அப்படியாக சிறுபத்திரிகைகளைப் படிக்கிற அனுபவம் நாளாவட்டத்தில் அவளிடத்தில் இல்லாமலே போயிற்று.

'நேற்றுப் போனவர்கள், இன்று வந்தோம்' கதை அவள் பார்வையில் அட்டகாசமாக இருந்தது. சொல்லப் போனால், வழக்கமாக இந்த மாதிரி பெரிய பத்திரிகைகளில் வராத சிறுபத்திரிகை கதை போலத் தான் அது இருந்தது. இருந்தாலும் அதே கதையை படங்களுடனும், எளிமையாகப் புரியக் கூடிய வார்த்தைகளுடன் படிக்கும் பொழுது எல்லாரும் படித்து புரிந்து கொள்ளக் கூடிய கதையாக இதை எப்படி அமைத்தார்கள் என்று அவளுக்குத் ஆச்சரியமாக இருந்தது.  இந்த மாதிரி கதைகளைப் படித்து எவ்வளவு நாளாயிற்று என்ற எண்ணத்தில், 'ஓ,லவ்லி!' என்று தனக்குள் முனகிக் கொண்டாள்.  இன்று மாலை ரிஷியைப் பார்க்கும் பொழுதே, தன் பாராட்டைச் சொல்லி விட வேண்டும் என்று ஒருதடவைக்கு இருதடவை நினைவில் குறித்துக் கொண்டாள்.  இந்தக் கதையைப் படித்தால், லஷ்மணன் நிச்சயம் வெகுவாகப் பாராட்டுவார் என்று நினைத்துக் கொண்டாள்.

அந்த நினைவிலேயே, 'செந்தாமரை'யை டீபாயில் வைத்து விட்டு,  'வெண்ணிலா'வை எடுத்துப் புரட்டும் பொழுதே 'ஆசிரியருக்குக் கடிதம்' பகுதி கண்ணில் பட்டது.  இந்தப் பகுதியில் பிரசுரமாகும் சிறந்த கடிதத்திற்கு பரிசு உண்டு என்பது வித்யாவிற்குத் தெரியும். ஒவ்வொரு வாரமும் எந்தக் கடிதத்திற்கு பரிசு என்று பார்ப்பதில் வித்யாவுக்கு ஆர்வம் உண்டு.   கீழே கட்டம் கட்டி, அதனுள் முதல் பரிசு நூறையும் இரண்டாம் பரிசு ஐம்பதையும் பெறும் கடிதத்தை நட்சத்திரக்குறியிட்டுக் குறித்திருந்தார்கள்.  முதல் பரிசு பெற்ற கடிதத்தைப் படித்த பொழுது, விஜியின் 'மெஜாட்டியோ' கதையை அது வாங்கு வாங்கென்று வாங்கியிருந்தைப் பார்த்து லேசான கோபத்துடன் யார் இப்படி எழுதியிருக்கிறார்கள் என்று வித்யா பார்த்த பொழுது, ஷா, சென்னை-33 என்று போட்டிருந்தது.  இந்த 'ஷா', உஷாவாய்த் தான் இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் சாயந்தரம் அவளிடம் இதுபற்றிக் கேட்க வேண்டும் என்று வித்யா நினைத்துக் கொண்ட பொழுதே, கொஞ்சம் தலைசாய்த்து எழுந்தால் தேவலை போலிருந்தது.  வந்திருக்கும் தபால்களை மட்டும் அடுக்கி ரிஷியின் ரீடிங் ரூம் டேபிளின் மேல் வைத்து விட்டு ஹால் சோபாவிற்கு வந்து திண்டுகளைத் தலைக்குக் கொடுத்து படுத்தாள். டீப்பாயின் மேல் இருந்த 'வானவில்' பத்திரிகை பின் அட்டைப் புகைப்படம், ரிஷி பக்கத்தில் இருப்பது போலிருந்தது அவளுக்கு.

எப்பொழுது விழிப்பு வந்ததென்று தெரியவில்லை.  'சட்'டென்று வாசல் பக்கம் தலைநிமிர்த்திப் பார்த்த பொழுது, கிரில் கேட்டுக்கு வெளியே கெளதம் புத்தகப் பையுடன் நின்று கொண்டிருப்பது நிழலாய்த் தெரிந்தது.  வாரிச்சுருட்டிக் கொண்டு எழுந்தவள், ஆணியில் மாட்டியிருந்த சாவியை எடுத்து கிரிலுக்கு உள்பக்கப் பூட்டைத் திறந்தாள்.

உள்ளே வந்த மகனின் தோளில் கைவைத்து அவனது புத்தகப் பையை வாங்கியவாறே, "சித்த அசந்திட்டேன்.  ரொம்ப நேரமா நிக்கறையாடா, கண்ணா?" என்று வித்யா கேட்டாள்.

"இல்லேம்மா.. இப்போத்தான் வந்தேன்.." என்று குதித்தபடி உள்ப்பக்கம் சென்ற கெளதம், வேகமாய்ப் போய் டீப்பாயின் மேலிருந்த புத்தகங்களை எடுத்தான்.

'வானவில்' பத்திரிகையை இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் திருப்பிப் பார்த்தவன், பின் அட்டை பார்த்து, "ஐ.. அப்பா படம்.." என்று திகைத்தான். அடுத்து முணுமுணுத்தபடியே அச்சடிச்சிருந்த 'காதல் தேசம்' வார்த்தையைப் படித்தவன் தலைநிமிர்ந்து, "தேசம்ன்னா தெரியும்.. காதல்ன்னா என்னம்மா?" என்று கேட்டான்.


(இன்னும் வரும்)








14 comments:

கோமதி அரசு said...

கணவனின் 'நேற்றுப் போனவர்கள், இன்று வந்தோம்' கதை படிக்கப் படிக்க அவளுக்குப் பிடித்திருந்தது. ஒரு கதையைப் படிக்கும் பொழுதே, வரிவரியாய்ப் போகும் எழுத்துக்கள் ஊடேயே ஒருகதை போலச் சொல்லி வேறோரு விஷயத்தை படிக்கிறவர்கள் மனசில் பதிக்க வைக்கிற அவன் திறமை அவளுக்குப் பிடித்திருந்தது. அந்த இன்னொரு விஷயத்தைச் சொல்வதற்காகத் தான் இவர் கதை எழுதுகிறார் என்பது நன்றாகத் தெரிந்தது. இப்படியெல்லாம் தன்னால் எழுத முடியுமா என்று அவளுக்குத் திகைப்பாக இருந்தது. //

ரிஷியின் திறமையை வித்யா பாரட்டும் மாண்பும், தன்னால் அது போல எழுதமுடியுமா என்று வித்யாவின் யோசனையும் மிக நன்றாக இருக்கிறது.

கோமதி அரசு said...

"ஐ.. அப்பா படம்.." என்று திகைத்தான். அடுத்து முணுமுணுத்தபடியே அச்சடிச்சிருந்த 'காதல் தேசம்' வார்த்தையைப் படித்தவன் தலைநிமிர்ந்து, "தேசம்ன்னா தெரியும்.. காதல்ன்னா என்னம்மா?" என்று கேட்டான்.//

வித்யா என்ன பதில் சொன்னார்கள் காதல் என்றால் அன்பு, அன்பு உலகம் என்றார்களா தன் அன்பு மகனிடம்.

பாச மலர் / Paasa Malar said...

தலைப்பை அவர்கள் விருப்பத்துக்கு மாற்றுவது என்பது சாதாரண விஷயமாகிப் போகிற அலட்சியம்..
சுயநலமாய் எவ்வளவு உரிமைக் குறுக்கீடு..

எழுத்தாளனுக்கு வரும் கடிதங்களின் செய்திகள் ..அவை தரும் உணர்வுகள்..கிட்டத்தட்டக் காரியதரிசியாய் உதவும் அவன் மனைவி..

நல்ல அசத்தலான சமையல் காம்பினேஷன்...ஸ்டோர் டைப் வீட்டுப் பெண்களின் வாழ்க்கைநிலை...

அயர்ந்து தூங்கும் குட்டித் தூக்க சுகம்.....

குழந்தையின் குழந்தைத்தனமான கேள்வி..

ரசித்தேன்............

இராஜராஜேஸ்வரி said...

நாலு இடத்திற்குப் போய்ப் பழக்கப்பட்டால் தான் நாலும் எழுத முடியும் என்று நம்பும்படி காலம் ரொம்பவும் மாறியிருக்கிறது. அந்தக் காலம் மாதிரி இல்லை இந்தக் காலம். நாலும் தெரிந்திருக்க வேண்டியிருக்கிறது; இல்லையென்றால் நாலு சுவத்துக்குள்ளேயே எதுவும் முடங்கிப் போய்விடும் என்கிற நினைப்பு வந்த பொழுது சுற்று வட்டாரமே அவளைக் குழப்பியது./

அழகான விளக்கம்.

அப்பாதுரை said...

செந்தாமரை அந்த நாள் குமுதத்தை நினைவூட்டியது. கதைக்குப் பெயர் மாற்றுவதில் சாவி notorious. கதை எழுதக் கிடைச்ச demandல் ஆபீஸ் போவதா வேண்டாமா என்று கவலைப்படாமல், ஆபீஸில் உட்கார்ந்து எழுத வேண்டியது தான். ஒரு பிரபலம் போல அதைக் கடைசி வரைச் சமாளிக்கலாம். இன்னொரு பிரபலம் போல ஆபீசில் விஷயம் தெரிந்து கல்தா கிடைக்கலாம் :)

அபார்ட்மெந்ட் மொட்டை மாடி விவரம் அருமை. சின்ன வயதில் கிராம அக்ரகாரத்தெருவில் ஒரு வீட்டு மாடியிலிருந்து இன்னொரு வீட்டு மாடிக்குத் தாவித்தாவி விளையாடியது போல எல்லாம் இந்தத் தலைமுறைக்குக் கிடைக்கவில்லையே...

சமையல் காம்போ நானும் ரசித்தேன். பூசணிக்காய் கோர்க்கூட்டு சாப்பிட்டு ரெண்டு மகாமகம் இருக்கும்.

ஜீவி said...

@ கோமதி அரசு

ஊன்றி கவனிக்கும் பொழுது தான் இத்தனை நாள் சாதாரணமாக இருந்த சிலர் அருமை அல்லது திறமை தெரிய்வரும். அதுவும் அவர் நமக்கு நெருக்கமாக இருப்பவர் என்றால் கேட்கவே வேண்டாம். இத்தனை நாள் பார்வைக்குப்படாது ஒளிந்திருந்த திறமைகள் தெரிய வரும் பொழுது
அது பிரமிப்பாக மலரும். இத்தனை நாள் 'இவர் இப்படி' என்று தெரியாது இருந்தது கூட ஒரு இழப்பாகத் தெரியும்.

கதை எழுத வேண்டும் என்கிற ஆவல் இத்தனை நாள் வித்யா மனத்தில் துளிர்த்ததில்லை. இப்பொழுது அந்த ஆவல் ஆசையாக கிளைவிடும் பொழுது, கதை எழுதுவது எப்படி என்கிற கலையைக் கற்றுக்கொள்ள கணவன் எழுதிய கதையை ஒரு பாடம் போலப் படித்துப் பார்க்கும் பொழுது இத்தனை நாள் தனக்குத் தெரியாது அவனிடம் ஒளிந்திருந்த திறமைகள் தெரிய வந்து பிரமிப்பு ஏற்படுகிறது.

கதை என்றில்லை உன்னிப்பாகக் கவனிக்கும் பொழுது தெரியவரும் அத்தனையிலும் இந்த பிரமிப்பு ஏற்படும். திறமைகளை வளர்த்துக் கொள்ளும் இயல்புடையவர்களுக்கு தாமும் அந்தத் திறமையைக் கைக்கொள்ள வேண்டும் என்று ஆசை ஏற்படும். வித்யா இருந்த நிலை இதுதான்.

தொடர்ந்து தங்கள் வாசிப்பனுபவத்தைப் பகிர்ந்து கொள்வதற்கு மிக்க நன்றி, கோமதிம்மா.

ஜீவி said...

@ கோமதி அரசு (2)

அழகாகச் சொல்லி விட்டீர்கள்.
நான் எழுத நினைத்ததும் அது தான்.

தொடர்வதற்கு மிக்க நன்றி.

ஜீவி said...

@பாசமலர்

//தலைப்பை அவர்கள் விருப்பத்துக்கு மாற்றுவது என்பது சாதாரண விஷயமாகிப் போகிற அலட்சியம்..
சுயநலமாய் எவ்வளவு உரிமைக் குறுக்கீடு.. //

இதற்கு லஷ்மணன் சொல்லும் வியாக்கியானமே வேறு. பின்னால் பார்க்கலாம்.

//'கிட்டத் தட்ட காரியதரிசி'யாய்..//

நானும் இப்போதைக்கு அப்படித்தான் நினைத்திருக்கிறேன். எப்படி அமையப் போகிறது என்று பார்க்கலாம்.

மற்ற ஆழ்ந்த ரசனைகளுக்கு நன்றி, பாசமலர்!

ஜீவி said...

@ இராஜராஜேஸ்வரி

தங்கள் எண்ணத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிங்க.

ஜீவி said...

@ அப்பாதுரை

செந்தாமரை கண்டுபிடிப்பு கரெக்ட்!
அந்த 'இவர்கள் சந்தித்தால்..' கூட இன்னொன்றை நினைவு படுத்தும்.

'தினமணி கதிர்' பத்திரிகைக்கு சாவி ஆசிரியராய் இருந்த பொழுது தான் அதில் ஜெயகாந்தனின் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' தொடர் வந்தது.சி.நே.சி. மனிதர்கள் கதைக்கு முதலில் ஜெ.கே வைத்த பெயர் 'காலங்கள் மாறும்'! பின் ஜெ.கே.யே
'காலங்கள் மட்டுமா மாறும்; ஒரு கதையில் தலைப்பு கூட சில நேரங்களில் மாறும்' என்று சி.நே.சி. மனிதர்கள் என்று புதுத் தலைப்பு கொடுத்தார்.

சாவி, 'சாவி' பத்திரிகை, அவர்களின் 'திசைகள்' -- எல்லா நினைவுகளும் சுகமானவை. அன்றைய அருண் ஹோட்டலின் கீழ்த்தளத்தில் சாவி பத்திரிகை செயல்பட்ட காலத்து நினைவுகள்.

அலுவலக + எழுத்தர் வேலையை
ரசித்தேன். ஆமாம், அந்நாளைய மொட்டை மாடி நினைவுகள் மறக்க முடியாதவை. அவை தான் இங்கும் காலத்திற்கேற்பவான மாறுதல்களுடன் வெளிப்பட்டிருக்கிறது.

யு.எஸ்.ஸில் தான் பூசணித்துண்டுகள் தாராளமாய்க் கிடைக்கிறதே! பின் ஏன் அந்த மாமாங்கம்?..

வழக்கம் போல் இல்லாமல், விவரமான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி, அப்பாஜி!

அப்பாதுரை said...

உங்கள் கதைகளில் வரும் சின்ன சின்ன விவரங்களின் பிரகாசம் பிடிக்கும். படிக்கும் பொழுது நினைத்துக் கொள்வேன்.. கடைசி வரி வந்ததும் எதைப்பற்றி எழுதுவது எதை விடுவது என்று யோசித்து எதுவுமே எழுதாமல் போன நாட்கள் அதிகம்.

அப்பாதுரை said...

நாவலுக்குத் தலைப்பு பொருந்தவில்லை என்று நினைத்ததுண்டு. காலங்கள் மாறும் என்ற ஒரிஜினல் தலைப்பா! சிநேசிமவே பரவாயில்லை.

G.M Balasubramaniam said...

த ஹிந்து தினசரிக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தேன். அது பிரசுரமானதில் இருந்த மகிழ்ச்சி, அவர்கள் அதில் சில பகுதிகளை வெட்டியதைக் கவனித்ததில் காணாமல் போயிற்று. காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு. எழுதுபவன் ஆத்மார்த்தமாக எழுதுவதை வெட்டவோ மாற்றவோ செய்தால் எரிச்சல் வராதா.?நல்ல காலம் பத்திரிகைக்கு எழுதுவதை தொழிலாக கொள்ள முயலவில்லை.

Geetha Sambasivam said...

காதல் னா என்னம்மா? என்ற கேள்வியைப் படித்ததும், சின்ன வயசில் எங்க பையர் இதே போல் கேட்ட கேள்வி நினைவுக்கு வந்தது. அம்மா, அப்பா, அக்கா, பாட்டி, தாத்தா, சித்தி, சித்தப்பானு எல்லாரிடம் காட்டும் அன்பே, இன்னமும் கடவுளிடமும் காட்டும் பக்தியுமே காதல்னு சொல்லிப் புரிய வைச்சேன்.

Related Posts with Thumbnails