மின் நூல்

Monday, May 21, 2012

பார்வை (பகுதி-46)

வளிடம் சொல்ல வேண்டுமென்று ஊர்மிளாவுக்குத் தோன்றியதே, அதைத் தான் சொல்ல வேண்டும்.  சாதாரணமாக பல பேர் எல்லாவற்றையும் எல்லாரிடமும் சொல்லிக் கொண்டிருக்க மாட்டார்கள்.  உலக வழக்கம் அப்படித் தான் ஆகிப்போச்சு.  குறிப்பிட்டுச் சொல்லவில்லை தான்;  ஏதோ பேச்சு வந்த பொழுது, நடுவில் வந்து விட்டுப் போன சமாச்சாரம் போல் சொன்னது தான். இருந்தாலும் எப்படியோ வேணியின் அக்கா லஷ்மி பற்றி வித்யாவிடம் ஊர்மிளா சொன்னது தான் அடுத்து நடக்க வேண்டியதற்கு நெம்பித் தள்ளிய காரியம் ஆயிற்று.

'எழுத்துப் பட்டறை'யின் இன்றைய அனுபவம் வித்யாவிற்கு வேறு மாதிரி இருந்தது.  பேச்சு.. பேச்சு... ஒரே பேச்சாக, அதுவும் ஒரே விஷயத்தைப் பற்றிய பேச்சாக இருந்தது அவளுக்கு எரிச்சலாக இருந்தது.  கதைகள் என்கிற பெயரில் கற்பனையாக எதையாவது எழுதுவது, அது பத்திரிகையில் பிரசுரமாவது இதைத் தவிர இவர்களுக்கு வேறு வேலை எதுவும் இல்லையா என்று அவள் நினைத்த நேரத்தில் அது ஒன்றே தான் அவர்கள் வேலை என்று அறிந்த பொழுது அதிர்ச்சியாக இருந்தது.  'எப்படியாவது தான் எழுதுவது எல்லாம் பத்திரிகையில் வெளிவந்து விட வேண்டும்; அல்லது அது புஸ்தகமாகி விட வேண்டும்' என்கிற ஒரே ஆசையே அங்கிருந்த அத்தனை பேருக்கும் இருந்ததாகத் தோன்றியது.  அதுவும், 'ஒரு சிறுகதையை எப்படித் தொடர்கதையாக எழுதுவது' என்று ஒருத்தர் பேசினாரே, அப்பொழுது எல்லாரும் சிரித்த பொழுது அவளுக்கு பற்றி எரிந்தது.  வெறும் கற்பனையில் தன் மனசுக்குத் தோன்றிய விதத்தில் நிகழ்வுகள் நிகழ்வதாக மாய்ந்து மாய்ந்து எழுதுவதில் என்ன வெற்றிக் களிப்பு வேண்டிக் கிடக்கிறது என்று குமைந்து போனாள்.

மனம் கைத்துப் போன அந்த கரிப்பில் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரவு சிற்றுண்டி கூட அவளுக்குக் கசந்தது.  சாப்பிட்டுக் கொண்டே நடந்த நிகழ்வுகளை எல்லோரும் ரசித்துக் களிக்கும் பொழுது தனக்கு மட்டும் ஏன் இப்படித் தனியாகத் தோன்றுகிறது என்று தன்னைத் தானே நொந்து கொண்டாள்.

"ஏன் என்னவோ மாதிரி இருக்கே?.. கெளதமுக்கு தூக்கம் வந்து விட்டதா?" என்று பக்கத்தில் அமர்ந்திருந்த உஷா கேட்டாள்.  அப்படி அவள் கேட்ட பொழுது, தன் மனத்தில் இருப்பதைக் கொட்டித் தீர்த்து விடலாமா என்று அவளுக்குத் தோன்றியது.  இருந்தாலும் எல்லாரும் சந்தோஷமாக இருக்கும் இடத்தில் தன் மன வெளிப்பாடுகளைக் காட்டிக் கொள்ளக் கூடாதென்கிற உணர்வில் லேசாகச் சிரித்தாள். "ஆமாம், உஷா!" என்றாள். "இன்னும் பாரு, இவரைக் காணோம்.  எனக்கும் வீட்டுக்குப் போய் எப்படா தலையைச் சாய்ப்போம் என்றிருக்கிறது" என்றாள்.

"ரிஷிக்கும் லஷ்மணனுக்கும் நிறைய வேலை இருக்கும்.  நாளைய நிகழ்ச்சிகளுக்கு வேறே முன்னாலே எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் இருக்கும்.  எப்படியும் நம்மோடு வரப்போவதில்லை. டின்னர் தான் ஆயாச்சே?..  நாம கிளம்பிடலாமா?" என்றாள் உஷா.

"இதோ, இப்பவே நான் ரெடி.." என்று வித்யா கிளம்பத் தயாரான போது, ரிஷி அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தான்.

அவர்களிருந்த இடத்திற்கு வந்ததும், "எனக்கு இங்கே சில வேலைங்க இருக்கு. நீங்க வேணா கிளம்பறீங்களா?.. நான் பின்னாடியே வர்றேன்.." என்றான் ரிஷி.

"அதைத் தான் நானும் இவளிடம் சொல்லிண்டிருக்கேன்.." என்று உஷா சொன்ன போது, கை அலம்பிக் கொண்டு வந்த கெளதமை அழைத்துக் கொண்டு, "நான் வர்றேங்க.." என்று கணவனிடம் சொல்லிக் கொண்டு வித்யாவும் கிளம்பி விட்டாள்.

வாசலுக்கு வந்தவுடன் தான் தங்களை இங்கு கொண்டு வந்து விட்ட ஆட்டோ பெரியவரின் நினைவு அவர்களுக்கு வந்தது.  "செல்லில் அவர் நம்பர் தான் இருக்கிறதே?.. பக்கத்தில் எங்காவது இருக்கிறாரா என்று பார்க்கலாமா?" என்று ஹேண்ட் பாக்கிலிருந்து செல்லை எடுத்தாள் வித்யா.

இடது கை திருப்பி மணியைப் பார்த்த உஷா, "ஒன்பதாகிறது, வித்யா.. எங்கேயிருக்காறோ?.. அவரைத் தொந்தரவு பண்ண வேண்டாம்" என்று சொல்லிக் கொண்டிருக்கையிலேயே அவர்கள் பக்கத்தில் ஓர் ஆட்டோ வந்து நின்றது.

இடத்தைக் கேட்டு ஐம்பது ரூபா கேட்டார்.  அதிகம் என்றதற்கு இரவு நேரத்தைக் காரணம் சொன்னார்.  கடைசியில், "சரி. நாற்பது ரூபா கொடுங்க.." என்றதும் ஏறிக் கொண்டார்கள்.

ஏழே நிமிடங்களில் வீடு வந்து சேர்ந்தார்கள்.  உஷா வீட்டுக்காரர் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தது திறந்திருந்த ஜன்னல் வழியாகத் தெரிந்தது.

கெளதம் கிட்டதட்ட தூங்கி விட்ட நிலையில் இருந்தான்.  மெதுவாக அவனைக் கைப்பிடித்துக் கூட்டி வந்து கதவு திறந்த பொழுது வித்யாவுக்கு லேசாகத் தலையை வலிக்கிற மாதிரி இருந்தது.

பாத்ரூம் சென்று கைகால் அலம்பிக் கொண்டு கெளதம் சேரில் வந்து உட்கார்ந்தான்.  "நான் படுத்துக்கட்டுமா, அம்மா?"

"கொஞ்சம் இரு.  பாலைக் காய்ச்சித் தரேன்.." என்றவள், பழக்கூடை திறந்து வாழைப்பழம் எடுத்துத் தந்தாள்.  பிரிட்ஜிலிருந்து பால் பாக்கெட் எடுத்து பாத்திரத்தில் ஊற்றிக் காய்ச்சும் பொழுது கெளதம் கேட்டான். "ஏம்மா, அப்பாவோட 'காதல் தேசம்' கதை பத்தி யாருமே பேசலே?"

ஒரு நிமிடம் திடுக்கிட்டாற் போல இருந்தது வித்யாவிற்கு.  தலையைக் குலுக்கிக் கொண்டு, "இன்னும் அப்பா எழுதற அந்தக் கதை பத்திரிகைலே வரலேயில்லையா?  அதனாலே யாருக்குமே அந்தக் கதை எப்படின்னு தெரியாது. அதான் பேசலே." என்றாள்..

கொஞ்ச நேரம் மெளனமாக இருந்தவன், தலையை குலுக்கிக் கொண்டு, "அப்பா இஸ் கிரேட், அம்மா!" என்றான்.

"நைஸ்.. எதுனாலே அப்படிச் சொல்றே?"

"சொல்ல மாட்டேன்.." என்றான்.

"ஏன்?.."

"உனக்கும் அது தெரியுமில்லையா?.. தெரிஞ்சவங்களுக்கு எதுக்குச் சொல்லணும்?" என்று அவன் கேட்ட பொழுது பதில் சொல்லத் தெரியாது பிரமித்து நின்றாள்.

வாசல் பக்கம் சப்தம் கேட்டது.  ரிஷி வந்து விட்டான்.

செருப்பை வெளிப்பக்கம் கழட்டிப் போட்டு விட்டு உள் நுழைந்தவன், "என்ன இன்னும் படுக்கப் போகல்லையா?" என்று கேட்டுக் கொண்டே கைகால் கழுவி வர பாத்ரூம் பக்கம் போனான்.

கெளதமுக்கு ஒரு தடவை சொன்னால் போதும்.  பசுமரத்தாணி கீற்றல் போல அப்படியே அவன் மனசில் படிந்து விடும்.  வித்யா டம்பளரில் ஊற்றிக் கொடுத்த பாலைக் குடித்து விட்டு வாஷ் பேசின் பக்கம் போய் வாய்க் கொப்பளித்து விட்டு படுக்கப் போனான்.

ரிஷி வந்ததும் அவனுக்கும் கொடுத்து விட்டு தானும் ஒரு டம்ளரை எடுத்துக் கொண்டு சோபாவில் அமர்ந்தாள்.

"பாவம், லஷ்மணன்.  ரொம்ப மெனக்கிட்டிருக்கார்.  நாளை நிகழ்ச்சியும் நல்லபடி முடிந்து விட்டால், பட்ட கஷ்டத்திற்கு பலன் கிடைத்த மாதிரி தான்" என்றான் ரிஷி.

வித்யா பதிலே பேசவில்லை.  பேசாமல் ரிஷியையே பார்த்துக் கொண்டிருந்தாள்.   'உற்றுப் பார்க்கும் பொழுது தெரியறது.   முன்னைக்கு இப்போ இவர் கூட இளைத்து விட்ட மாதிரி தெரியறது. பேசாமல் ஆபீஸ் வேலை, குடும்பம்,  குட்டியென்று இருக்கக்கூடாதோ? சில பேருடைய தலையெழுத்து;  எல்லாம் வாய்த்திருந்தும் நிம்மதியில்லாம எதையாவது இழுத்துப் போட்டுண்டு இப்படியெல்லாம் அல்லாடணும்ன்னு' என்று நினைத்துக் கொண்டாள்.

தான் கேட்டதற்கு அவளிடம் எந்த சலனமும் இல்லாதிருந்தது பார்த்து, "என்ன யோசனை? அசதியா இருக்கா?" என்றான் ரிஷி.

"இல்லே."

"பின்னே?"

"எதுக்கு இதெல்லாம்ன்னு தோண்றது..."

"எதெல்லாம்?.."

"ஆபீஸ் உண்டு குடும்பம் உண்டுன்னு நிம்மதியா இல்லாம எப்பப் பாத்தாலும் எதையாவது யோசிச்சிண்டு, எழுதிண்டு எதுக்கு இதெல்லாம்ன்னு தோண்றது."

அவள் சொன்னதிற்கு இப்பொழுது அவனால் சட்டென்று எதுவும் பதில் சொல்லத் தோன்றவில்லை.  

அவனது மெளனத்தைப் பார்த்து,"நான் ஏதும் தப்பாசொல்லிட்டேனா?" என்று துணுக்குற்று கேட்டாள் வித்யா.

"இல்லே.."

"பின்னே?" என்று கேட்ட பொழுது அவள் குரல் குன்றிப் போயிருந்தது நன்றாகத் தெரிந்தது அவனுக்கு. "இத்தனை நாளும் இல்லாம திடீர்ன்னு இப்படிக் கேக்கறத்துக்கு இப்போ என்ன வந்ததுன்னு தான் தெரிலே." என்றான்.

"நானும் தான் கொஞ்ச நாளா பாக்கறேன்.  உங்களை ரொம்ப வருத்திக்கற மாதிரித் தெரியறது..  சரியாச் சாப்பிடறதில்லே.  சரியாத் தூங்கறதில்லே. மூஞ்சியைப் பாக்க சகிக்கலை..  தாடியும் மீசையுமா ஏதோ ஜூரத்திலே விழுந்து கிடந்து எழுந்த மாதிரி..."

அவள் கேட்டது கேட்டு அவன் சிரித்தே விட்டான். "எங்க ஆபீஸிலே கூட என் ஃப்ரண்ட் ஒருத்தன் இதான் கேட்டான். என்னடா, காதல் ஜூரமான்னு.."

"ஜூரமான்னு கேக்கலாம்.  அது என்ன காதல் ஜூரமான்னு கேள்வி?.." என்று முறைத்தாள்.

"'காதல் தேசம்' எழுதப் போறேன்லே. அதுனாலே.  காதல் தேசம் மாதிரி, காதல் ஜூரம்.  எதையுமே காதலோடு இணைச்சுப் பேசினா அப்படி இணைச்சுப் பேசறதோட மகிமையே கூடிடும் மாதிரி இருக்கு."

"க்குங்.." என்று வித்யா அழகு காட்டியது ஹாலில் படிந்திருந்த அரை இருட்டில் அழகாக இருந்தது..  "அது என்னங்க அப்படி ஒரு தலைப்பு வைச்சாங்க?..  உங்க பிள்ளையாண்டான் கூட கேட்டுட்டான்.  காதல் தேசம்ன்னா என்னம்மானுட்டு?..." என்று சொல்லும் பொழுது அவளையே வெட்கம் பிடுங்கித் தின்றது.  தலையைத் தாழ்த்திக் கொண்டாள். "ஸ்டோர்லே பாக்கற பொண்ணுங்க கூட என்னை ஒரு மாதிரி பாக்கறாங்க.. இப்பவே இப்படி.. நாளைக்கு கதை வெளிவர்றச்சே, என்னவாகும்ன்னு எனக்குத் தெரிலே."

"இப்ப அப்படித்தான் பாப்பாங்க..  கதை வெளிவரட்டும், பாரு! விழுந்து விழுந்து படிப்பாங்க.." என்றான்.

"படிக்கவும் செய்வாங்க;  பாக்கவும் செய்வாங்க.  ரெண்டும் நடக்கும்."

"படிக்கவும் செய்வாங்க; பாராட்டவும் செய்வாங்கங்கற மாதிரி எழுதிக் காட்டறேன், பாரு!.  விற்பனை செய்யறவனுக்கு கலர்க்கலரா கவர்ச்சியா போடற லேபிள் முக்கியம்; பாக்கறவன் பொருளை வாங்கறத்துக்கான தூண்டில்.  உற்பத்தி பண்றவனுக்கு லேபிளைப் பத்தி என்ன கவலை?.. உள்ளே இருக்கற பொருளின் தரம் தான் அவனுக்கு முக்கியம்.  ஏன்னா, தரமாயிருந்தாத்தான் அதைச் சாப்பிடறவங்க ரசிச்சு சாப்பிட்டு மேலும் மேலும் அதைச் சாப்பிட விரும்புவாங்க.. சரியா?"

"எப்படியோ பேசி மடக்கிடறீங்க.." என்ற வித்யா பெருமூச்சு விட்டாள். "எழுதறது உங்க ஆசை;  உங்களாலே எழுதாம இருக்க முடியாது.  செய்யுங்க.  ஆனா...."

"ஆவ்..." என்று கொட்டாவி விட்டான் ரிஷி.  "உனக்குத் தூக்கம் வரலையா?"

"வராம என்ன?.." என்றவள் எழுந்தாள். "நான் என்ன நினைக்கிறேங்கறதை அப்புறமா சாவகாசமா சொல்றேன்"

"அப்போ நாளைக்கு 'எழுத்துப் பட்டறை'க்கு வரேலியோ?"

"கட்டாயம் வரணும்ங்க..  ஊர்மிளா ஒண்ணு சொல்லியிருக்காங்க..  அதுக்கானும் வரணும்.." என்றாள்.

"அட, அவங்களா?.. நான் என்னன்னு தெரிஞ்சிக்கலாமா?"

"உங்களுக்குச் சொல்லாமலா?..  நிச்சயம் சொல்றேன்;  ஆனா அப்புறம்.."  என்றவள் சமையலறைக்குள் நுழைந்தாள்.

நாளை தேய்க்கவிருந்த நாலைந்து பாத்திரங்களில் லேசாகத் தண்ணீர் ஊற்றி ஸிங்கில் போட்டாள்.  மிதமாக ஆறிப்போய் மீதமிருந்த பாலில் புறை ஊற்றி விட்டு நிமிர்ந்த பொழுது அவளுக்கும் தூக்கம் கண்களைச் சுழற்றியது.

புலறப்போகிற காலை விசேஷமாக அவளுக்குத் தோன்றியது.


(இன்னும் வரும்)















10 comments:

ஸ்ரீராம். said...

ஒரு மாலைப் பொழுதின் இயல்பான நிகழ்வுகளை அழகாகக் கடந்திருக்கிறது இந்தப் பதிவு. தங்கள் எழுத்து பிரசுரமாகி விட வேண்டும் என்ற எழுத்தாளர்களின் வெறி பற்றிய வித்யாவின் ஆயாசம் எனக்கும் தொற்றிக் கொண்டது! அது ஒரு தனி உலகம்! ஒரு மனைவிக்கு காதல் என்ற அந்த வார்த்தை பற்றிப் பேசும் போது அந்த அளவு வெட்கம் பிடுங்குமா! :)))

இராஜராஜேஸ்வரி said...

புலறப்போகிற காலை விசேஷமாக அவளுக்குத் தோன்றியது.///

புலரும் காலைப்பொழுதாய் பளிச்சென்று நிறைய மன உணர்வுகளை வடித்த அருமையான கதைக்குப் பாராட்டுககள்..

Geetha Sambasivam said...

'எப்படியாவது தான் எழுதுவது எல்லாம் பத்திரிகையில் வெளிவந்து விட வேண்டும்; அல்லது அது புஸ்தகமாகி விட வேண்டும்' என்கிற ஒரே ஆசையே அங்கிருந்த அத்தனை பேருக்கும் இருந்ததாகத் தோன்றியது. //

ஆமாம், நானும் பலரைப் பார்த்திருக்கேன். அதிலும் சிலருக்கு அவங்க எழுத்தில் உள்ள குறைகளை நாம் சுட்டிக் காட்டவே கூடாது என்பார்கள். எல்லாரும் பாராட்டறாங்க, நீ மட்டும் ஏன் இப்படினு கேள்வி வேறே வரும்! மற்றபடி குறிப்பிட்டுச் சொல்லும்படியான நிகழ்வு வித்யாவின் திடீர் மனமாற்றம் தான். தானும் எழுதணும்னு ஆசைப்பட்ட வித்யா இந்த ஒரே ஒரு நிகழ்ச்சியில் பங்கெடுக்கவும் அலுத்துப் போனதற்கு என்ன காரணம்?

அடிப்படையிலேயே எழுத்தின் மேல் ஆர்வம் இல்லையோ? அல்லது கணவனுக்கும், தனக்கும் இடையே இந்த எழுத்து உண்டாக்கும் இடைவெளியா? பின்னது தான் எனத் தோன்றுகிறது.

ஆனால் ரிஷிதான் வித்யாவிடம் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்கிறார். அப்படி இருந்தும்?????????

Geetha Sambasivam said...

ஒரு மனைவிக்கு காதல் என்ற அந்த வார்த்தை பற்றிப் பேசும் போது அந்த அளவு வெட்கம் பிடுங்குமா! :)))//

அதே, அதே, சபாபதே, ஶ்ரீராமுக்கு வந்த சந்தேகம் எனக்கும் வந்தது. :))))))

ஜீவி said...

@ ஸ்ரீராம்

ஆச்சரியப்பட்டதற்கு வருவோம்.

'கணவன்-மனைவி என்றால் ஆயிரம் இருக்கும்' என்பார்கள். அந்த ஆயிரத்தில் இது ஒன்றாக இருக்கக் கூடாதா, என்ன?..

ஹி..ஹி.. ஒருவழியா சமாளிச்சாச்சு :)))

ஜீவி said...

@ இராஜராஜேஸ்வரி

தொடரைத் தொடர்ந்து வருவதற்கு நன்றி, ராஜி மேடம்!

ஜீவி said...

@ Geetha Sambasivam

பாராட்டறது ரொம்ப ஈஸி. அதுவும் வெற்றுப் பாராட்டு, அப்பவே உதறிவிடுகிற மாதிரி ஒட்டாமல் இருக்கும். சுலபமாகக் கண்டுபிடித்து விடலாம். ஒன்றிப் படிப்போருக்குத் தான் உள்ள குறை, நிறை தெரியும். அதனால் தான் பொதுவாக பின்னூட்டங்களுக்கு அதிக முக்கியத்வம் கொடுத்து நீண்டதாகப் போனாலும் பதிவில் சொல்லாததைச் சொல்ல இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்வேன்.

இந்தத் தொடரை இன்னும் விரிவாக எழுத வேண்டும். அப்பொழுது கதை மாந்தர்களின் இயல்புகளை இன்னும் அழகாகச் சொல்லலாம். பதிவுகளில் எதையும் முழுமையாகச் செய்ய முடியவில்லை. காரணம் உங்களுக்கும் தெரிந்து நீங்களும் அனுபவப்பட்டது தான். பதிவில் எழுதுவதை குறிப்புகளாகக் கொண்டு விரிவாக எழுத வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. பார்க்கலாம்.

வரப்போகிற அத்தியாயங்களில் வரப்போகிற வித்யாவின் எண்ணங்கள் அவரை உங்களுக்கு தெளிவாகத் தெரியப்படுத்தும்.

தொடர்வதற்கு நன்றி. தொடர்ந்து வாருங்கள்.

கோமதி அரசு said...

'எழுத்துப் பட்டறை'யின் இன்றைய அனுபவம் வித்யாவிற்கு வேறு மாதிரி இருந்தது. பேச்சு.. பேச்சு... ஒரே பேச்சாக, அதுவும் ஒரே விஷயத்தைப் பற்றிய பேச்சாக இருந்தது அவளுக்கு எரிச்சலாக இருந்தது. கதைகள் என்கிற பெயரில் கற்பனையாக எதையாவது எழுதுவது, அது பத்திரிகையில் பிரசுரமாவது இதைத் தவிர இவர்களுக்கு வேறு வேலை எதுவும் இல்லையா என்று அவள் நினைத்த நேரத்தில் அது ஒன்றே தான் அவர்கள் வேலை என்று அறிந்த பொழுது அதிர்ச்சியாக இருந்தது. '//

எழுத்தை தொழிலாளாக கொண்டவர்கள் வேறு என்ன செய்ய முடியும்!
அவர்கள் எண்ணம் பத்திரிக்கையில் தங்கள் கதை வரவேண்டும், பணமும், புகழும் வேண்டும் என்ற எண்ணம் தவிர வேறு எதை நினைக்க முடியும்!

ஆத்மார்த்தமாய் எழுதி அதில் பெருமை சேர்ப்பது தான் அவர்கள் எண்ணமாய் இருக்க வேண்டும், அது தான் நமது விருப்பமும்.

G.M Balasubramaniam said...

ஒரு நாளில் சில பொழுதுகளில் கதைமாந்தர்கள் நினைப்பதையும் பேசுவதையும் கோர்வையாக எழுதியே தொடரை நகர்த்தும் உங்கள் சாமர்த்தியம் பாராட்டுக்குரியது.

பாச மலர் / Paasa Malar said...

நாணயத்தின் மறுபக்கமாய் வித்யாவின் எண்ணங்கள்...பளிச்

Related Posts with Thumbnails