மின் நூல்

Tuesday, June 12, 2012

பார்வை (பகுதி-49)

ர்மிளாவுக்கானால் ஆச்சரியமான ஆச்சரியம்.

முதலில் மத்ய கைலாஷ் அருகில் எதிர்பார்த்தாள்.  இல்லை என்றாகி அனுமதி கிடைத்தது.  அண்ணா பல்கலைக் கழகம் தாண்டித் திரும்பி சைதாப்பேட்டை கோர்ட் தாண்டி மறைமலை அடிகள் பாலம் தாண்டி, அவளால் அந்த ஆச்சரியத்தைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை, நந்தனத்திற்கு முன் எதிர்பார்த்து அதுவும் இல்லை என்றாகி சுதந்தர பறவையாய் பயணித்து தேனாம்பேட்டை ஜங்க்ஷல் நிச்சயம் மாட்டிக் கொண்டு விடுவோம் என்று நன்றாகத் தெரிந்து நெருங்க நெருங்க அங்கேயேயும் அனுமதி கிடைத்து டிஎம்எஸ்ஸை குஷாலாகக் கடந்து அண்ணா மேம்பாலம் ஏறி இறங்கி சர்ச் பார்க் கான்வெண்ட் தாண்டி கிரிம்ஸ் ரோடு திரும்பும் வரை எந்தத் தடையும் இல்லாமல் அத்தனை சிக்னல்களும் பச்சையாய் சிரித்து போ,போ என்று வழிவிட்டதில் ஆச்சரியமான ஆச்சரியம்.  கிரிம்ஸ் ரோடு திரும்பியதும் நீலாபவனுக்கு எதிரே நாலைந்து பேர் சாவகாசமாக ரோடை கிராஸ் பண்ண ஒருவினாடி தயங்கி அனுமதித்து அலுவலக காம்ப்ளக்ஸில் வண்டியை நிறுத்தும் வரை இன்றைய இந்த ஆச்சரியமே மனசில் உற்சாகத்தை இழையாக படிய விட்டிருந்தது.

இந்த மாதிரியே கிருஷ்ண வேணியின் அக்கா கல்யாணமும் எந்தத் தடங்கலும் இல்லாமல் க்ளியர் ரூட்டில் பயணித்து முடிந்து விட வேண்டும் என்று அடுத்த எண்ணம்.  நுழைகையிலேயே, "குட் மார்னிங், அக்கா.." என்று வேணி புன்னகையுடன் வரவேற்றாள்.

வேணியின் வரவேற்பைக் கேட்டதுமே ஊர்மிளாவின் உள்ளத்தில் உற்சாகம் கரை புரண்டது.  "குட்மார்னிங், வேணி! உனக்கு நிறைய சேதி வைச்சிருக்கேன்.  அப்புறம் வா.." என்றாள்.

"சரிக்கா" என்று சந்தோஷத்துடன் தலையை ஆட்டினாள் வேணி.

வழக்கமான ஆயத்தங்களுக்குப் பிறகு நாற்காலியில் அமர்ந்தவுடனேயே அவளுக்காக இன்று காத்திருக்கும் வேலைகள் வரிசைகட்டி நினைவுக்கு வந்தன.  மொத்தம் 52 புதினங்கள்; இந்தக் குவாட்டருக்கான அச்சுக்குக் காத்திருந்தன.  ஒவ்வொரு ஆண்டுக்கான பதிப்புக்களையும் நான்கு கால் ஆண்டு பதிப்புகளாகப் பிரித்து ஒவ்வொரு குவாட்டருக்கும் ஐம்பது புதினங்களுக்குக் குறைவில்லாமல் வெளியிட வேண்டுமென்று திட்டம் வகுத்திருந்தனர். இந்தக் காலண்டுக்கானவை பதிப்புக்கு போவதற்கு முன்னான முன் ஏற்பாடுகள் அத்தனையும் முடிந்திருந்தன..  மதியம் அச்சக மானேஜர் கிரீம்ஸ் ரோடு அலுவலகத்திற்கு வருவதாக ஏற்பாடு.  இந்த ஐம்பத்திரண்டு புதினங்களுக்கான கணினியில் பிரதி எடுத்த காகித பைல்களை அவரிடம் கொடுத்து விட்டால் ஊர்மிளாவின் பொறுப்பு முடிந்து அச்சக அலுவலர்களின் பொறுப்புக்கு அவை மாற்றப்பட்டு விடும்.

பதிப்பக உதவியாளர் சண்முகத்தைக் கூப்பிட்டு, அத்தனை ஃபைல்களையும் அலமாரி அடுக்கல்களிலிருந்து எடுத்து மேஜையின் மேல் அடுக்கச் சொன்னாள்.  ஒவ்வொரு புதின ஃபைல் ஃபோல்டரின் மேல் அட்டையில் அந்தந்த புதினத்தின் பெயரும் எழுதிய ஆசிரியரின் பெயரும் பெரிய எழுத்துக்களில் அச்சிடப்பட்டிருந்தது.  சண்முகத்தை விட்டு ஒவ்வொரு பெயராகப் படிக்கச் சொல்லி கணினியில் இட்டிருந்த அட்டவணையோடு சரி பார்த்துக் கொண்டாள்.  பின் முழுத்திருப்தியுடன் ஒவ்வொரு ஃபைலையும் அதற்காகவே இருந்த பழுப்பு நிறக் கவரில் உள்ளிடச் சொன்னாள்.  அரைமணி நேரத்தில் அந்த வேலை முடிந்தது.

சண்முகத்தை அனுப்பி விட்டு அச்சகத்திற்கு அனுப்பும் புதின ஃபைலுக்கான கவரிங் லெட்டருக்கு இரண்டு நகல்கள் எடுத்துக் கொண்டாள். ஆக, எல்லா வேலைகளும் முடிந்தது என்று நிறைவாக நினைக்கும் பொழுது நேற்றைய எழுத்துப் பட்டறை அலசல்கள் நினைவில் புரண்டது.  அந்த நினைப்பில் லஷ்மணன் யோசிப்பவை எல்லாம் எவ்வளவு யதார்த்தமாக இருக்கின்ற என்று நினைத்துக் கொண்டாள்.

பெரியவரின் சிபார்சின் பேரில் தான் இந்த 52 புதினங்களிலேயே புதிய எழுத்தாளர்களின் புதினங்கள் நாலைந்து தேறிற்று. மற்றதெல்லாம் புத்தகங்கள் படிக்கிற வாசகர்களுக்குத் தெரிந்திருந்த, வழக்கமாய் அவர்கள் ரசிக்கிற பழைய எழுத்தாளர்கள் எழுதின நாவல்கள் தாம். சின்னவர் ரொம்பவும் கெட்டி. இப்போ போடறதெல்லாம் குறைஞ்சது அஞ்சு, ஆறு தடவையாவது மறுபிரசுரம் ஆகணும்ங்கறது அவர் கணக்கு.  யாரோ கேட்டதுக்கு ஒரு தடவை சின்னவர் காட்டமா சொல்லக் கூடச் சொன்னார். "என்னை என்ன பண்ணச் சொல்றீங்க.. பொஸ்தகம் போட்டோமா, கடைக்கு வந்ததா, பாத்தவங்க வாங்கிப் போனாங்களான்னு பழையவங்க எழுதினது தான் கடகடன்னு வித்துத் தீர்றது.. அவங்கல்லாம் எழுத்திலே ஏதோ வசியம் வைச்சிருக்காங்களோன்னு எனக்கு ஒரு சம்சயம்.."ன்னு ஒரு தடவை சொன்னார்.  இன்னொரு தடவை இன்னொண்ணு.  காகிதம்லாம் காசாகணும். அவ்வளவு தான் அவருக்கு.

யாரோ வேணீ என்று கூப்பிட்டது இங்கே கேட்டது.  நேற்று எழுத்துப் பட்டறையில் இருக்கும் பொழுது கிருஷ்ண வேணி போனில் கூப்பிட்டுச் சொன்னது ஊர்மிளாவின் ஞாபகத்திற்கு வந்தது.  கடைசியாக லஷ்மியை பெண் பார்த்து விட்டுப் போன அந்தப் பையனுக்கும் வேறே இடத்தில் செட்டில் ஆகிவிட்டதாக அவர்களிடமிருந்து போன் வந்ததாம். அதைத் தான் சொன்னாள்.

இப்பொழுது வித்யா தந்திருக்கும் இந்த ஜாதகமாவது லஷ்மிக்குப் பொருத்தமாக அமைய வேண்டுமே என்று நினைத்துக் கொண்டே ஊர்மிளா தன் கைப்பையிலிருந்து ஜாதகத்தை எடுத்தாள்.  நேற்றே மேலோட்டமாக அவள் அதைப் பார்த்திருந்தாள்.  அப்போதே பையனைப் பற்றி இன்னும் சில தகவல்களைக் ஜாதகத்தைக் கொடுத்திருந்தவர்கள் குறிப்பிட்டிருந்திருக்கலாம் என்று தோன்றியது இப்பொழுது நினைவுக்கு வந்து ஜாதகத்தின் கீழே குறித்திருந்த விவரங்களைப் பார்த்தாள்.

வேலை என்று குறிப்பிட்டு அச்சக மேனேஜர் என்று குறித்திருந்தார்கள்.  எந்த அச்சகம், எந்த ஊரில் என்று தெரியவில்லை.  அதைத் தெரிந்து இந்த ஜாதகத்திலேயே எழுதிக் கொடுத்து விடலாமே என்கிற எண்ணம் எழுந்த போது வாசல் பக்கம் சப்தம் கேட்டது.

புதுசாகப் போடவேண்டிய நூல்களின் அச்சுக்கான மேட்டரை வாங்கிப் போக அம்பத்தூர் அச்சகத்திலிருந்து வந்து விட்டார்கள் போலும் என்று நினைத்தாள். அவர்கள் வந்துவிட்டால் பெரியவரிடமிருந்தோ இல்லை சின்னவரிடமிருந்தோ தகவல் வரும்.  அதற்குள் இதைத் தெரிந்து கொண்டு விடலாம் என்று தன் செல்லை எடுத்தாள்.  நல்ல வேளை ஜாதகத்தின் கீழே தொடர்புக்கு என்று  பெரியசாமி என்று பெயர் போட்டு மொபைல் எண் காணப்பட்டது. அந்த எண்ணை ஊர்மிளா தன் செல்லில் பதிந்து தொடர்பு கொண்டாள்.

இரண்டாவது ரிங்கிலேயே தொடர்பு கிடைத்து விட்டது. "ஹலோ.. பெரியசாமிங்களா?"

"இல்லிங்க.  அவர் சன் பேசறேன்.  சாரி.. இன்னிக்கு தவறிப்போய் என் செல்லுக்கு பதிலா அப்பா செல்லை எடுத்து வந்திட்டேன்.  அதான்.   உங்களுக்கு என் அப்பாகிட்டே பேசணும்ங்களா?"

"ஆ..மா..ம்..  அப்படீன்னு கூட இல்லை.. நீங்களே..."

"சொல்லுங்க, மேடம்..  நீங்க யார்ன்னு நான் தெரிஞ்சிக்கலாமா?"

"நான் க்ரீம்ஸ் ரோட் குகன் பிரசுரத்திலேந்து ஊர்மிளா பேசறேன்.."

"ஓ.. ஊர்மிளா மேடமா..  நான் நாராயணன் பேசறேன், மேடம்.  பிரசுர வாசல்லேந்து தான் பேசறேன்.. " என்று சொன்ன குரலில் ஆச்சரியம் அலை மோதியது என்றால், ஊர்மிளா அயர்ந்தே போய் விட்டாள்..

"சரியாப் போச்சு.. நீங்க தானா இந்த நாராயணன்!" என்று சொன்ன ஊர்மிளாவின் குரலில் உற்சாகம் வழிந்தது.  எவ்வளவு துடிப்பான, அறிவார்ந்த கணவன் லஷ்மிக்கு அமையப் போகிறான் என்கிற சந்தோஷத்தில்,  "நாராயணன்! விஷயம் ரொம்ப ரொம்ப பர்ஸனல்..  உடனே என் கேபினுக்கு வாங்களேன்.." என்றாள்.

"இதோ... வரேன், மேடம்" என்றதைத் தொடர்ந்து, "வேணி! ஊர்மிளா மேடம் கூப்பிடறாங்க..  என்னன்னு கேட்டுட்டு வர்றேன்.." என்ற நாராயணின் குரல் ஊர்மிளாவுக்கு செல்லில் இங்கு கேட்டது.

உடனே ஊர்மிளாவின் புருவங்கள் முடிச்சுப் போட்டுக் கொண்டன.



(இன்னும் வரும்)










21 comments:

Geetha Sambasivam said...

ஆஹா, அக்காவா, தங்கையா? யார் ஜெயிக்கப் போறாங்க? கல்யாணப் பரிசு சரோஜா தேவி மாதிரி அக்காவுக்காக வேணி விட்டுக் கொடுக்கப்போறாளா?:))))))))சஸ்பென்ஸ் வைச்சுட்டீங்களே! :D

ஸ்ரீராம். said...

எல்லா சிக்னல்களையும் நிற்காமல் தானிடிச் செல்வது - இது மாதிரி சமயங்களில் மனம் தானாக இந்த சிக்னலில் நிற்காவிட்டால் இன்று இது நடந்து விடும் அது நடந்து விடும் என்று சூதாடும்!

வேணியிடம் பெயர் சொல்லி உரிமையுடன் அழைத்துப் பேசும் நாராயணன்..... "ஆஹா.....!"

G.M Balasubramaniam said...

நான் எந்த ஒரு முடிவுக்கும் வரமாட்டேன். அதைத் தெர்ந்தெடுப்பது கதாசிரியர் உரிமை. கதையில் ஸஸ்பென்ஸ் நன்றாகத்தான் இருக்கிறது.

பாச மலர் / Paasa Malar said...

கல்யாணச் சிக்கல்?!

சிக்னல் தொடர்ந்து கிடைக்கும் சந்தோஷம்...அதுவும் சென்னை வீதிகளில்...என் சமீபத்திய அனுபவம் நினைவுக்கு வந்தது...

ஒரே மூச்சில் படித்தேன் விட்டுப் போன பகுதிகளை....நிறைவாகச் செல்கிறது கதையின் ஓட்டம்...

இராஜராஜேஸ்வரி said...

ஆச்சரியமே மனசில் உற்சாகத்தை இழையாக படிய விட்டிருக்கும் கதைச் சம்பவங்கள் !! பாராட்டுக்கள்..

அப்பாதுரை said...

வழியில சிக்னல் விழும் சாதாரண நிகழ்வு எத்தனை பெரிய சலுகை என்று எனக்கும் அடிக்கடி தோன்றும். நான் அடிக்கடி பயணம் செய்யும் பதிமூன்று மைல் வழியில் சிக்னல் வரிசையாக விழுந்தால் பதிமூன்று நிமிடப் பயணம்.. சில நேரம் இருபத்திரண்டு நிமிடம் வரை இழுக்கும். அசைபோட்டபடி ரசித்தேன். மத்யகைலாஷ் மட்டும் பிடிபடவில்லை.

காலாண்டுத் திட்டம் அச்சகங்களின் practiceஆ? ஒரு வருடத்துக்கான மெடிரீயல் வச்சிருப்பாங்களா என்ன? இல்லை ரோலிங்க் ப்லேன் மாதிரியா? சுவாரசியமான விவரம்.

பத்திரிகை அதிபர்கள் வணிக நோக்கோடு செயல்படவில்லையென்றால் ரொம்ப சிக்கல். பத்திரிகை விற்கவில்லை என்றால் புதியவர்களுக்கு எப்பவாவது கிடைக்கும் ஆதரவும் நின்றுவிடும். வணிக ரீதியில் வெற்றி முக்கியம். இலக்கியம் எல்லாம் ரெண்டாம் பட்சம்.

dondu(#11168674346665545885) said...

//அண்ணா பல்கலைக் கழகம் தாண்டித் திரும்பி சைதாப்பேட்டை கோர்ட் தாண்டி மறைமலை அடிகள் பாலம் தாண்டி, அவளால் அந்த ஆச்சரியத்தைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை, நந்தனத்திற்கு முன் எதிர்பார்த்து அதுவும் இல்லை என்றாகி சுதந்தர பறவையாய் பயணித்து தேனாம்பேட்டை ஜங்க்ஷல் நிச்சயம் மாட்டிக் கொண்டு விடுவோம் என்று நன்றாகத் தெரிந்து நெருங்க நெருங்க அங்கேயேயும் அனுமதி கிடைத்து டிஎம்எஸ்ஸை குஷாலாகக் கடந்து அண்ணா மேம்பாலம் ஏறி இறங்கி சர்ச் பார்க் கான்வெண்ட் தாண்டி கிரிம்ஸ் ரோடு திரும்பும் வரை எந்தத் தடையும் இல்லாமல் அத்தனை சிக்னல்களும் பச்சையாய் சிரித்து போ,போ என்று வழிவிட்டதில் ஆச்சரியமான ஆச்சரியம்.//
கதை எந்த காலகட்டத்தில் நடக்கிறதாக எழுதியுள்ளீர்கள்? இப்போதெல்லாம் ராஜ் பவனிலிருந்து வலப்புறமாக திரும்ப இயலாது. நேராக போய் ஜிஎஸ்டீ ரோடை பிடித்து சின்னமலை, மறைமலையடிகள் பாலம் என்றுதான் போக வேண்டும். அதே போல நந்தனம் சிக்னலுக்கு அருகில் இடது பக்கம் வெங்கட நாராயணா ரோடு, போக் ரோடு, ஜீ.என். செட்டி ரோட் என்றுதான் கிரீம்ஸ் ரோடுக்கு போக இயலும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஜீவி said...

@ Geetha Sambasivam

'விட்டுக் கொடுக்கப் போறாளா?' -- ஆஹா, இந்த வார்த்தையைக் கேட்டுத் தான் எவ்வளவு காலமாச்சு?.. அதுவும், காதல் என்றால், அந்த விட்டுக் கொடுத்தலும் விசேஷ அர்த்தம் கொள்கிறது! பெருமையான விட்டுக் கொடுத்தல்! உடனே கல்யாண பரிசு நினைவு வந்தது தான் ஸ்ரீதருக்கான பெருமை!

'கல்யாண பரிசு' தான்!
'மீண்ட சொர்கம்' தான்!

-- எட்டெழுத்து அலர்ஜியான ஸ்ரீதர்!
அந்த காதல் என்கிற மூன்றெழுத்திற்கும் ஸ்ரீதர் என்ற மூன்றெழுத்திற்கும் அப்படி ஒரு சம்பந்தம்! என் காலத்து காதல் நாயகன்! எங்கிருந்தாலும் அவர் நினைவுகள் வாழ்க!

ஜீவி said...

@ ஸ்ரீராம்

நின்று விட்டாலும் அதே மாதிரியான அந்த சூதாட்டம் உண்டு. மனம் பேசும் மர்மங்கள்! அது பற்றி நிறைய எழுத இந்த மர்மமான மனசு துடிக்கிறது!

அந்த ஆஹா, கீதாம்மாவின் ஆஹாவிலிருந்து வேறு பட்டதா, இல்லை, அதே தானா?..

ஜீவி said...

@ G.M. Balasubramaniam

வெளியே சொல்லாட்டாலும், மனசுக்குள்ளேயாயினும் ஒரு முடிவுக்கு வந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

ஸஸ்பென்ஸைக் கூட ரசிக்க முடிவது தான் ஸஸ்பென்ஸான ஒன்று.

ஜீவி said...

@ பாசமலர்

சிக்கல் - சிக்னல். ரசித்தேன்.
சிக்கல் விடுபட்டாலும் சந்தோஷமே.

ஊரிலிருந்து நல்வருகையான வருகை.
சேர்த்து வைத்துப் படித்து விட்டமைக்கு நன்றி. நிறைவாயிருந்தது என்ற வார்த்தை நிறைவளிக்கிறது.

இனித் தொடரலாம்.

ஜீவி said...

@ இராஜராஜேஸ்வரி

'கதைச் சம்பவங்கள்' என்கிற வார்த்தைக் கோர்வை தான் கிடைத்த துரும்பு. அதை எப்படிக் கையாளலாம் என்று தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன். பார்க்கலாம்.

தங்கள் ரசனைக்கு நன்றி, ராஜி மேடம்.

ஜீவி said...

@ அப்பாதுரை

CLRI-யைத் தாண்டி எதிர்ப்புறம். மத்ய கைலாஷ் கோயில். பக்கத்துத் திருப்பம் பழைய மஹாபலிபுரம் ரோட்.. இன்றைய ராஜீவ் காந்தி சாலை.

பதிப்பகங்கள் -திட்டமிடுதல்-அவற்றின் வெளியீடுகள் பற்றியான செய்திகள் அத்தனையும் 'இப்படியிருந்தால் எவ்வளவு அழகாக இருக்கும்' என்கிற என் கற்பனையே. முழுக் கதையும் முழுசான கற்பனை.

வாசகர்கள் தாம் எதையும் தீர்மானிப்பவர்கள். மற்றபடி வணிகம்- அவணிகம் என்பதெல்லாம் மாயையே.
பெருவாரியான வாசகர்கள் விரும்பிப் வாசிப்பது வணிகமாகிறது. அவ்வளவு தான்.

எது இலக்கியம் என்பதிலும் ஏகப்பட்ட கருத்து வேறுபாடுகள். வளர்ச்சிப் போக்குள்ள இலக்கியக் கோட்பாடு களை எந்த நேரத்தும் எந்த சட்டத்துள் ளும் சிறைப்படுத்த முடியாது. ஆனால் ஒன்று. இலக்கியம் என்பது மக்களுக்காக இருக்க வேண்டும். அவர்கள் ரசனைக்காக இருக்க வேண்டும். அதையே வேறொரு விதத்தில் சொல்லப் போனால், அவர்கள் ரசனையே இலக்கியமாக வேண்டும்.

எது இலக்கியம் என்பதில் இதுவும் ஒரு பார்வை. வெவ்வேறு விதமான பார்வைகளுக்கிடையேயான முரண்பாட்டில் நாளைய இலக்கியமும் தீர்மானமாகும். அப்படித் தீர்மானவாவது விஞ்ஞான பூர்வமான வளர்ச்சியாக இருக்கும்.

தங்கள் தொடர் வருகைக்கும், பகிர்தலுக்கும் மிக்க நன்றி, அப்பாஜி!

ஜீவி said...

@ Dondu

கதையில் குறிப்பிட்டிருக்கும் வழித்தடம் இருந்த காலத்தை, கதையின் நிகழ்வு காலமாகக் கொண்டால் போயிற்று. சிக்னல்களில் தடங்கல்கள் இல்லாமல் பச்சை காட்டி வழி கிடைத்ததை, கதைப் போக்கோடு ஒப்பிட்டு பாஸிட்டிவான ஒரு சேதி சொல்ல வேண்டும். அதற்காகத் தான் சிக்னல்கள் வந்ததே தவிர,வழிப்பாதை முக்கியமில்லை.

எழுத்தாளர் பகீரதனின் கதையான தேன்மொழியாள் நாடகம் பற்றி சொல்லியிருந்தேனே?.. பார்த்தீர்களா?..

தொடர்ந்து வாசித்து வருவதற்கு நன்றி, டோண்டு சார்!

சிவகுமாரன் said...

இந்த பார்வை பகுதியையும் பின்னூட்டங்களையும் படித்ததும் அடடா இத்தனை தொடர்களை தவற விட்டோமே என்று வருத்தமாய் இருக்கிறது.
நூலாய் வெளிவந்தால் நன்றாக இருக்கும்.

சிவகுமாரன் said...

|||இலக்கியம் என்பது மக்களுக்காக இருக்க வேண்டும். அவர்கள் ரசனைக்காக இருக்க வேண்டும். அதையே வேறொரு விதத்தில் சொல்லப் போனால், அவர்கள் ரசனையே இலக்கியமாக வேண்டும்.///
அருமையான சிந்தனை

ஜீவி said...

@ சிவகுமாரன்

நீங்கள் தான் அப்பப்போ படித்து வருகிறீர்களே.. இந்தத் தொடரைக் கதை என்று பார்க்காமல் பார்த்தால், எப்போ வேணா, எங்கே வேணா தொடர்ந்து படிக்கலாமில்லையா?.. சொல்லப் போனால், இத்தொடரின் முழுமை இனிமேல் தான்..

இலக்கியம் என்பது மக்களுக்காக என்பது நீங்களும் உணர்ந்த நம் நெடுநாள் எண்ண வார்ப்பு தானே?..

தொடர் வருகைக்கும் பகிர்தலுக்கும் நன்றி, சிவகுமாரன்.

ஜீவி said...

@ அப்பாதுரை

//மக்கள் ரசனைக்காக எழுதப்படும் எத்தனையோ பாணிப் புத்தகங்கள் படித்திருந்தாலும் அவற்றை இலக்கியத் தட்டில் வைக்க முடியவில்லை.
எல்லாமே மக்கள் ரசனைக்காக எழுதப்படுபவை :). இலக்கியப் பார்வை என்பது ஒரு discrimination என்பது என் எண்ணம். தேவையான discrimination, அவ்வளவு தான். //

மன்னிக்கவும். தங்கள் கருத்து சிதைவு படாத லேசான ஒரு எடிட். புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு.

கலை கலைக்காகவே; கலை மக்களுக்குக்காகவே என்பது நெடுங்காலத்திய இலக்கிய குமைச்சல். மக்களுக்காக என்று பொதுவாகச் சொல்பவை, எளிய ஜன சமுகத்தின் நலனுக்காக, அவர்களின் நேர்மையான நியாயமான ஆசை அபிலாஷைகளைப் பிரதிநிதித்துவப் படுத்துவதற்காக என்று விரிவுபடுத்திக் கொள்ளலாம்.

கலைக்காகவே படைக்கப்படும் கலைகள் கூட எளிய மக்களிடமிருந்து விலகி விடாமல், அவர்களின் மேம்பாட்டையும் நலனையும் உள்ளடக்கிக் கொண்டு செயல்பட முடியும் என்பது தெரிகிறது.

எது இலக்கியம் என்பதில் இது ஒரு பார்வை. அவ்வளவு தான். இருந்தாலும் அந்தந்த காலகட்டத்தில் புதிது புதிதாக முகிழ்க்கும் பல்வேறு கருத்தோட்டங்கள் இடையே ஏற்பட்டே யாக வேண்டிய முரண்பாட்டின் வெளிப்பாடாக தீர்மானமாவது விஞ்ஞான பூர்வமான வளர்ச்சியாக இருக்கும்.

தங்கள் பகிர்தலுக்கு மிக்க நன்றி, அப்பாஜி!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

முன் பகுதிகளை படிக்கத் தூண்டும் பதிவு.

ஜீவி said...

@ T.N. Muralidharan

வாருங்கள், டிஎன்எம்!

தங்கள் முதல் வருகைக்கு நன்றி.

இங்கிருந்து கூடத் தொடரலாம். சாவகாசமாக முன்பகுதிகளைக் கூடப் படித்துக் கொள்ளலாம்.

அப்படியான நம் இஷ்டப்படி வாசிக்கக் கூடியத் தொடர் இது.

தொடர்ந்து வாருங்கள்.

கோமதி அரசு said...

இந்த மாதிரியே கிருஷ்ண வேணியின் அக்கா கல்யாணமும் எந்தத் தடங்கலும் இல்லாமல் க்ளியர் ரூட்டில் பயணித்து முடிந்து விட வேண்டும் என்று அடுத்த எண்ணம். //

சிக்னலில் மாட்டாமல் பயணிப்பது என்பது இந்த காலக் கட்டத்தில் கடினம்.

போகும் வேலைக்கு முன்னதகவே வீட்டிலிருந்து புறப்பட்டால் தான் உண்டு, இல்லையென்றால் சிக்னலில் மாட்டி கொள்வோம்.
வேணியின் அக்கா திருமணம் தடை இல்லாமல் நடக்க வேண்டும்.

வேணி என்று நாராயணன் கூப்பிட்டு சொல்வது ஊர்மிளாவிற்கு தெரிந்த வேணிதானா?

Related Posts with Thumbnails