மின் நூல்

Thursday, June 21, 2012

பார்வை (பகுதி-50)

"ஒரு நிமிஷம், அண்ணே... டெலிவரி சலான் ரெடியாயிடுத்து; இந்தாங்க..." என்ற வேணியின் குரல் அடுத்துக் கேட்டு ஊர்மிளாவின் உதடுகள் புன்னகைத்தன.

கிருஷ்ணவேணி தங்கமான பெண்.  பெற்றோர்களின் சுமை அறிந்த பொறுப்பான பெண்.  அவள் சொன்ன அந்த ஒரு நிமிஷம் தான். அதற்குள் எப்படி எல்லாம் மனசு எண்ணிக் களைத்து விட்டது என்று ஊர்மிளா எண்ணிக் கொண்டாள்.

நாராயணனைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.  பெரியவரின் அன்பான மதிப்பைப் பெற்றவன்.  சின்னவருக்கோ அலாதிப் பிரியம் அவன் மேல்.  'வெட்டிண்டு வான்னா, கட்டிட்டிண்டு வர்ற' சாமர்த்தியம். அவன் ஒரு நாள் லீவ் போட்டால் குகன் பிரசுரத்தின் அம்பத்தூர் பிரான்ஞ் அச்சகம் தடுமாறிப்போகும். எல்லாம் ஊர்மிளா அறிவாள். இருந்தாலும், அந்த ஒரு நிமிஷ அல்லாட்டம்?.. 'ஒரு ஆணும் பெண்ணும் சகஜமாகக் கூட பேசிப் பழக முடியாத அவலம் சுற்றிச் சூழ்ந்திருக்கையில் அறிவு அஸ்தமித்துத் தான் போய்விடுகிறது' என்று நினைத்த தருணத்தில், "வணக்கம், மேடம்! தாங்கள் நலமா?" என்று கேட்டுக் கொண்டே அவள் கேபின் நுழைவிடத்தில் நின்றான் நாராயணன். நாராயணன் போகும் இடத்திற்கெல்லாம் உற்சாகத்தையும் தன் கூடவே கூட்டிக் கொண்டு வருவான் என்று அந்த அலுவலகத்தில் எல்லோருக்கும் தெரியும்..

அவன் அந்த இடத்தில் பிரச்சன்னமானவுடனே தொற்றிக்கொண்ட மகிழ்வில், "வாங்க, நாராயணன்.." என்று ஊர்மிளா மலர்ந்தாள்.

"இதோ வந்துகிட்டே இருக்கேன், மேடம்!" என்று எதிரில் நாற்காலியில் நாராயணன் அமர்ந்தான். "ஸார், எப்படியிருக்கார்?.." என்றவன், அதே மூச்சில் "என்னம்மா எழுதறார்ங்க! வாராவாரம் 'காந்தளூர் சாலை' படிக்கலைனா... என்ன சொல்றது?.. அவ்வளவு தான் நான்! நான் விசாரிச்சதா சொல்லுங்க, மேடம்!" என்றவன் பார்வை அடுக்கி வைத்திருந்த பழுப்பு நிற கவர்கள் பக்கம் திரும்பியது. "எல்லாம் ரெடியா இருக்கு போல இருக்கு! இந்த குவாட்டருக்கு எத்தனை மேடம்?"

"ஐம்பத்திரண்டு.." என்றவள் "ஆபிஸ் விஷயமெல்லாம் அப்புறம். அதுக்கு முன்னாடி பெர்சனலாய் ஒண்ணு.." என்று தீவிரமாய் அவன் முகத்தை ஆராய்ந்தபடியே சொன்னாள்.

"பெர்சனல்?.. குட்.. ஒரு நிமிஷம் இருங்க..என்னான்னு நானே சொல்லிடறேன்".. என்னாவாயிருக்கும் என்று இன்னொரு பக்கம் அவன் மனசு யோசனையில் ஆழ்ந்தது, மோவாயைத் தடவி விட்டுக் கொண்டு மேல் சீலிங்கைப் பார்த்ததில் தெரிந்தது.

"அது என்ன, நாராயணன்?.. யாரைப் பாத்தாலும் சொல்லி வைத்தாற் போல இந்த ஒரு நிமிஷக் கணக்கு?அடிக்கடி கேட்டுட்டேன்.." என்றாள்.

"மேடம்! ஒரு நிமிஷத்தை விஞ்சக் கூடிய ஒரு வினாடிக்காரங்க கூட இருக்காங்க.. அந்த just a second ஆட்களைப் பாத்திருக்கீங்களா?"

ஊர்மிளாவால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை..

நாராயணன் தன் இரு கைகளையும் பரக்க விரித்தான். "மேடம்! எனக்கு இந்த ஒரு நிமிஷம்ன்னாலே அபராஜிதன் ஸார் ஞாபகம் தான் வரும்.  'ஒரு நிமிஷம்'ன்னு நாவல் ஒண்ணு எழுதியிருக்கிறார். படிச்சிருக்கீங்களோ?.. திகிலான திகில் மனசை மருட்டும். தப்பித் தவறி ராத்திரி வேளைலே படிச்சிடக் கூடாது.." என்றான்.

"இஸ் இட்?" என்று தெரியாத மாதிரி ஊர்மிளா அவன் சொல்வதைக் கேட்டுக் கொண்டாள். "அப்போ.. ஓக்கே.  இன்னிக்கு ராத்திரி அதைப் படிச்சிட வேண்டியது தான்.."

"எதுக்கும் ஸாரை பக்கத்லே வைச்சிகிட்டே படிச்சிடுங்க.. அவர் பக்கத்லே இருந்தாத் தான் அட்லீஸ்ட் கதைங்கற நெனைப்பானும் இருக்கும். இல்லேனா, அந்த ஜமீந்தார் கால பழைய பங்களாக்குள்ளார நொழையறச்சேயே பயம் குரல்வளையை நெருக்கற மாதிரி இருக்கும்.  ஜாக்கிரதை மேடம்" என்றான்.

"பழையனூர் பங்களான்னு ஒரு பங்களா வருமே, அந்தத் திகில்க் கதையைத் தானே சொல்றீங்க.. அதெல்லாம் ஜூஜூபி எனக்கு."

"பழையனூர் பங்களாவா? அது எந்தக்கதை?.. தெரியாதே! 'பழையனூர் நீலி'ன்னு தான் ஒரு புஸ்தகம்.  'காதல்' பத்திரிகை அரு.ராமநாதன் எழுதியிருக்கார்.   ஞாபகம் இருக்கு. அது கூட நம்ம பெரியவர் தான் தந்தார். படிச்சிருக்கேன்."

"காதல்ன்னதும் கேட்டுட வேண்டியது தான்.  உங்கது என்ன காதல் கல்யாணமா?  பொண்ணெல்லாம் ரெடியா இருக்காங்களா?.. எப்பக் கல்யாணச் சாப்பாடு போடப் போறீங்க?.." என்று பற்றக் கிடைத்தத் துரும்பைச் சரியாகப் பற்றினாள் ஊர்மிளா.

"சரி.. இந்த டாபிக் வந்தாலே, அந்த பெர்சனல் மேட்டருக்கு வந்தாச்சுன்னு அர்த்தம்.  இல்லையா?.. அப்போ அந்த ஒரு நிமிஷ கெடுவையெல்லாம் மறந்திட வேண்டியது தான்.." என்றவன் தலையைச் சாய்த்து, "என்ன கேட்டீங்க, மேடம்?"

"பொண்ணெல்லாம் பாத்து வைச்சிட்டீங்களா, உங்க கல்யாணம் காதல் கல்யாணமான்னு..."

"காதல்-- ஊதல்ன்னு சிக்கிட்டா மத்த சமாச்சாரம்லாம் அம்போ ஆயிடும் மேடம்..  வாழ்க்கைலே முன்னேற துடிக்கிறவன் கால்லே பூட்டற சங்கிலி தான் இதெல்லாம்ங்கறது எனக்கு நல்லாவே தெரியும். இப்பவே இருபத்தைஞ்சு வயசாயிடுத்து.  உருப்படியா செய்ய வேண்டியது நிறைய காத்திருக்கு.  கல்யாணத்திற்கு ரெடியாகத் தாவலை?.."

"ஃபைன்.. அப்போ ரெடியாகிட்டு இருக்கீங்கன்னு சொல்லுங்க..

"அஃப்கோர்ஸ்..  கல்யாணத்திற்கு முன்னாடி முடிக்க வேண்டிய முக்கியமானதெல்லாம் கிட்டத்தட்ட முடியற நிலை.."

"அப்படியா?.. வாழ்த்துக்கள்.  முக்கியமானதுன்னா?.. ஒண்ணு ரெண்டு சொல்லலாம்ன்னா சொல்லுங்க.." என்று மேற்கொண்டு தெரிந்து கொள்ளும் ஆவலில் கேட்டாள் ஊர்மிளா.

"உங்ககிட்டே சொல்றதுக்கு என்ன மேடம்?.." என்று வலது கையை நீட்டி விரல் மடக்கினான் நாராயணன். "முதல் பெரிய வேலைன்னா சொந்த வீடு கனவு. ஆபிஸுக்கு வரப்போக செளகரியமா இருக்கும்ன்னு ரெண்டு வருஷத்துக்கு முந்தியே அம்பத்தூர்லேயே ஒரு பிளாட், பிளாட்ன்னா எஃப் எல் ஏ ட்டீ,  புக் செஞ்சிருந்தேன்.  அது இன்னும் ரெண்டு,மூணு மாசத்லே ஹேண்ட் ஓவர் ஆயிடும்ன்னு நைனைக்கிறேன்.  பேங்க்லே கொஞ்சம் கடன் வாங்கியிருக்கேன். அந்த லோனும் இன்னும் நாலே வருஷத்லே அடைஞ்சிடும். வீடு கைவசம் வந்தவுடனேயே வுட் ஒர்க் ஆரம்பிச்சிடணும். அப்புறம் கொஞ்ச எக்ஸ்ட்ரா வேலைகள். எல்லாத்துக்கும் ரெண்டு லட்சம் வரை ஆகும்ன்னு எஸ்ட்டிமேட் போட்டு வைச்சிருக்கேன்."

"குட்..  டூ பெட் ரூம் பிளாட்டா?" என்று ஊர்மிளா கேட்டதில் அவள் சந்தோஷம் தெரிந்தது.

"இல்லை, மேடம்.  த்ரீ பெட்ரூம்.  மொத்தம் ஆயிரத்து இருநூறு ஸ்கொயர் ஃபீட் பிளிந்த் ஏரியா."

"ஓ.." இப்பொழுது தான் ஊர்மிளாவின் மனசில் லேசாக அந்த சந்தேகம் தட்ட ஆரம்பித்தது.  அம்பத்தூர் புது பிளாட்டிற்கே ஐம்பது லட்சத்திற்கு மேல் ஆகியிருக்கும்.  வேணி வீட்டுப் பொருளாதார நிலைக்கு இது ஏணி வைத்தாலும் எட்டாத ஒரு சம்பந்தம் தான்.  ஜாதகம் பொருந்தி வந்தாலும் அதற்கு மேலான எதிர்பார்ப்புகள் என்னவெல்லாம் தீர்மானிக்குமோ என்கிற கவலை அவள் மனசில் லேசாகத் தலைகாட்ட ஆரம்பித்தது.

ஏதோ நினைத்துக் கொண்டது போல நாராயணனே சொன்னான்."இப்போ இருப்பதும் சொந்த வீடு தான், மேடம். ஆனா, அடைசலான தெரு. ஓட்டு வீடு. மழைன்னா பொத்திண்டு கொட்டும்.  நாம படற சிரமமே போதும், நாளைக்கே கல்யாணம் ஆச்சுன்னா, வரக்கூடியப் பெண்ணையும் கஷ்டப்படுத்த வேண்டாம்ன்னு அப்பா தான் ஆரம்பத்திலேயே இந்த இன்னொரு வீட்டுக் கனவுக்கு அஸ்திவாரம் போட்டது.   பி.எஃப்.லேந்து கடன் வாங்கி அப்பா தான் பில்டருக்கு அட்வான்ஸ் கொடுத்தார். அவர் ஆரம்பித்து வைச்சதை, ரொம்பவும் சிரமப்பட்டு கிட்டத்தட்ட சமாளிசிட்டு வர்றேன்ன்னே சொல்லணும். ரொம்ப முடியாம போயிட்டா இப்ப இருக்கற வீட்டை வித்து எல்லாக் கடனையும் செட்டில் பண்ணிடலாம்ன்னு அப்பா சொல்றார்.  பாக்கலாம்ங்கற ஒரு நம்பிக்கை தான்."

"ஐ ஆம் ப்ரெளட் ஆஃப் யூ நாராயணன். இந்தக் காலத்து இளைஞர்களுக்கு நீங்க நிச்சயமா ஒரு மாதிரி."

"அப்படிலாம் இல்லீங்க..  எல்லாப் பெருமையும் என் அப்பாவுக்கே. அவர் தான் தகப்பனார்களுக்கெல்லாம் எடுத்துக் காட்டாத் தெரியற அப்பாவா எனக்குத் தெரியறார்.  எனக்கும் படற கஷ்டத்தையெல்லாம் இந்த இளம் வயசிலேயே பட்டுட்டா பிற்கால வாழ்க்கை கொஞ்சம் சுலபமா இருக்கும்ங்கற சுயநலம் தான்.  அப்பா பாருங்க, ரிடையர் ஆகியும் ஆட்டோ ஓட்டறார்.  கேட்டா வீட்லேயே முடங்கிப் போயிடாம வெளிலே ஜனங்களோட ஜனங்களா சங்கமிக்கறது உற்சாகமா இருக்குங்கார்.  அம்மா.. அவங்க ஒரு தனிப்பிறவி. வரப்போர்ற மருமகளைப் பத்தி ஏகப்பட்ட கனவுகள் அவங்களுக்கு.  கனவுன்னா ரொம்ப பெரிசா ஒண்ணும் இல்லீங்க.. எல்லாத்துக்கும் அனுசரணையா கூடமாட ஒத்தாசையா இருக்கணுமேன்னு தான்.  ஆக, வரப்போர்ற மகாலெஷ்மியை எதிர்பார்த்து எல்லாரும் காத்திருக்கோம்.. சரீங்களா..."

ஊர்மிளாவிற்கு திடீரென்று மனசின் ஒரு மூலையில் ஏதோ நம்பிக்கை துளிர்விட்ட மாதிரி இருந்தது.  நடக்கறதெல்லாம் ஏதோ நமக்குத் தெரியாத கணக்கின் வசப்பட்டு அதன் போக்கில் நடந்து கொண்டிருக்கிற மாதிரித் தோன்றியது.  அப்படி நடப்பவற்றிலும் நாமும் கலந்து கொள்கிற மாதிரி நம் பங்கை நிர்ணயித்து ஏதோ நம்பிக்கை ஒளி வழி நடத்திச் செல்வதாகப் பட்டது.  ஆக, நம்மால் முடிந்தது பாதை தெரியுது பார்ன்னு தெரியும் வழிபார்த்து நம்பிக்கையுடன் நடப்பது தான் என்றுத் தெரிந்தது.

"அதுசரி, மேடம்! என் அப்பாவை உங்களுக்கு எப்படித் தெரியும்?.. 'செல்'லில் அவரைக் கூப்பிட்டீங்களே?" என்று திகைப்பாக நாராயணன் கேட்டது அவள் சிந்தனையைக் கலைத்தது.

"ஓ.. அதுவா?.. ஹக்.. அது பெரிய கதை நாராயணன்.." என்று ஊர்மிளா சொல்ல ஆரம்பித்த கதையைக் கேட்க சுவாரஸ்யமானான் அவன்.


(இன்னும் வரும்)

20 comments:

அப்பாதுரை said...

சுவாரசியமான கொக்கிகள் கதை நெடுக.
'ஒரு நிமிஷம்' நிஜப் புத்தகமா?

ஸ்ரீராம். said...

முதல் வரியிலேயே திடுக்கிட முடியாத அதாவது மென்மையான திருப்பம்.... !
நாராயணன் மாதிரி நல்ல பிள்ளைகள் இப்போ எல்லாம் ரொம்பக் கண்ணில் படுகிறார்கள். (நம் பார்வையை வைத்துத்தானே நம் அளவீடு இருக்கும்?! பீர்பால் கதை மாதிரி!)

G.M Balasubramaniam said...

சஸ்பென்ஸ் என்று நினைக்க வைத்து கதையின்( ? ) போக்கில் லயிக்க வைக்கும் திறமை, ரசித்தேன் ஜீவி.

Geetha Sambasivam said...

ம்ம்ம்ம், வேணி ஏமாத்திட்டா, முன்னாடி எதையும் ஊகிக்கிறது தப்போ? :))))) இருந்தாலும் இப்போப் போற போக்கைக் கணிக்க முடியலை தான். :)))) பார்க்கலாம், என்ன ஆகும்னு.

ஸ்ரீராம். said...

//முன்னாடி எதையும் ஊகிக்கிறது தப்போ? :))))) //

அது தப்பு இல்லை.... ஊகிக்கறதை வெளியில் சொல்றதுதான் தப்பு!!!!!!!!

ஜீவி said...

@ அப்பாத்துரை

கொக்கிகளை மாட்டுவதும் நாமே எடுப்பதும் நாமே என்றாலும், ஒரு கொக்கியை மாட்டிவிட்டு இன்னொரு கொக்கியை மாட்டும் பொழுதே முன்னாடி மாட்டின அந்தக் கொக்கியை எடுத்து விடுவது என் வழக்கம். இல்லைன்னா, நிறைய கொக்கிகள் தொங்கிக் கொண்டு எல்லாவற்றையும் எடுப்பதற்குள் மாய்ந்து போய் விடும். கட்டக் கடைசிலே எடுக்கறத்துக்காக ஒரு மாஸ்டர் கொக்கியை மட்டும் விட்டு வைக்கிறதும் உண்டு.. தப்பித் தவறி ஞாபகம் இல்லாம அந்தக் கொக்கியையும் எடுத்திட்டோம்ன்னு வைச்சிக்கங்க, உடனே அதுக்கு பர்த்தியா இன்னொரு மாஸ்டர் கொக்கியை சடாரென்று தயார்ப்பண்ணி மாட்டி விடுவது உண்டு. கடைசி வரை ஒரு மாஸ்டர் கொக்கி மட்டும் தொங்கிக் கொண்டே இருப்பது அழகாக இருக்கும்.
சில நேரங்களில், நிறைய கொக்கிகளைப் பார்த்து விட்ட அனுபவத்தில், அந்த மாஸ்டர் கொக்கி கூட கொக்கி மாதிரித் தெரியாமல், 'பூ' இவ்வளவு தானா என்று தோற்றமளிப்பதும் உண்டு. அப்படித் தெரியாமல் இருப்பதற்குத் தான் நிறைய நகாசு வேலைகளை அங்கங்கே செய்ய வேண்டிய வேலையும் சேர்ந்து போய்டுது.

அது நிஜப் புத்தகமில்லை. அதுவும் கற்பனையில் பக்கம் பக்கமாய்ப் புரட்டிய மாயப் புத்தகமே.

தொடர்வதற்கு நன்றி, அப்பாஜி!

அப்பாதுரை said...

கொக்கில இத்தனை சூட்சுமமா!
//தப்பித் தவறி ஞாபகம் இல்லாம அந்தக் கொக்கியையும் எடுத்திட்டோம்ன்னு வைச்சிக்கங்க, உடனே அதுக்கு பர்த்தியா இன்னொரு மாஸ்டர் கொக்கியை சடாரென்று தயார்ப்பண்ணி மாட்டி விடுவது உண்டு. கடைசி வரை ஒரு மாஸ்டர் கொக்கி மட்டும் தொங்கிக் கொண்டே இருப்பது அழகாக இருக்கும்.
பாக்கியம் ராமசாமி இந்தக் கலையில் விற்பன்னர். சுஜாதா சூடு போட்டுக் கொண்ட பூனையாக சிலசமயம் தோன்றியதுண்டு.

அப்பாதுரை said...

கற்பனை புத்தகத்தைப் படிக்கணும்னு ஏங்க வச்சுட்டீங்களே...

பாச மலர் / Paasa Malar said...

கல்யாணச் சிக்கல்..கொக்கி..?

கொக்கி விளக்கம் நன்றாக இருக்கிறது...

வீடு முதலிய விஷயங்களைப் பற்றிச் சிந்தித்து சாவகாசமாக கல்யாண வாழ்வில் லயிக்க எண்ணும் நாராயணன் எதார்த்தம் ரசிக்கும்படி இருக்கிறது...

சென்ற இடமெல்லாம் கலகலப்பாக்கும் நாராயணன் பாத்திரம் இந்தப் பகுதியில் வாசகர்களைக் கலகலப்பாக்கியது சிறப்பு..

பாச மலர் / Paasa Malar said...

கல்யாணச் சிக்கல்..கொக்கி..?

கொக்கி விளக்கம் நன்றாக இருக்கிறது...

வீடு முதலிய விஷயங்களைப் பற்றிச் சிந்தித்து சாவகாசமாக கல்யாண வாழ்வில் லயிக்க எண்ணும் நாராயணன் எதார்த்தம் ரசிக்கும்படி இருக்கிறது...

சென்ற இடமெல்லாம் கலகலப்பாக்கும் நாராயணன் பாத்திரம் இந்தப் பகுதியில் வாசகர்களைக் கலகலப்பாக்கியது சிறப்பு..

ஸ்ரீராம். said...

'கொக்கி' போட்டு எழுதுவது கஷ்டம்தான்! மாஸ்டர் கொக்கி? ரொம்பக் கஷ்டம்!பா.ரா எப்படிக் கொக்கி போட்டார் என்றும், சுஜாதா எப்படி எதில் சூடு போட்டுக் கொண்டார் என்றும் அப்பாஜி சொல்ல வேண்டும்!

ஜீவி said...

@ ஸ்ரீராம்

//நாராயணன் மாதிரி நல்ல பிள்ளைகள் இப்போ எல்லாம் ரொம்பக் கண்ணில் படுகிறார்கள்... //

வாங்க, ஸ்ரீராம்!

சேதி கேட்டு ரொம்ப சந்தோஷம்..

நாராயணன் வித்தியாசமான இளைஞன். போகப் போக இந்த பூவின் வாசம் தெரியும்.

ஜீவி said...

@ G.M. Balasubramaniam

இதெல்லாம் தான் எழுத்துப்பட்டறையின் வார்ப்புகள்!

தங்கள் நுண்ணிய பார்வைக்கு நன்றி, சார்!

ஜீவி said...

@ Geetha Sambasivam

என்ன இப்படிச் சொல்லீட்டீங்க, கீதாம்மா! அக்காவுக்கு அடுத்து தான் தனக்கு எல்லாம் என்று வேணிக்கு நல்லாத் தெரியும்! அந்த தங்க மனசுக்கு எல்லாமே நல்லாவும் நடக்கும்!

முன்னாடியே யூகிச்சு அதை வெளியில் சொல்றது பற்றி ஸ்ரீராம் வேறு டிப்ஸ் கொடுக்கிறார், பாருங்கள்.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

//ஊகிக்கறதை வெளியில் சொல்றதுதான்..//

இப்படிப் பாருங்கள். வெளியில் சொன்னால் தான் அது யூகிப்பு என்கிற பெயரே பெறும் போலிருக்கே!

வெளியில் சொல்லாம மனசுக்குள்ளேயே வைச்சிருந்தா, தப்பா இருந்ததா விழுங்கிக்கலாம்; ரைட்டுன்னா மட்டும் வெளிலே சொல்லலாம்னாலும், அப்படி ரைட்டா யூகிச்சதை யார் நம்புவாங்க, சொல்லுங்க. இதனால் பெறப்படும் உண்மை என்னவென்றால்....

ஜீவி said...

@ அப்பாதுரை

வாங்க, அப்பாஜி!

//பாக்கியம் ராமசாமி இந்தக் கலையில் விற்பன்னர். சுஜாதா சூடு போட்டுக் கொண்ட பூனையாக சிலசமயம் தோன்றியதுண்டு.//

அப்புசாமி @ சீதாபாட்டி ஒண்ணுக்குத் தான் அவர் பாக்கியம் ராமசாமி; மத்ததுக்கெல்லாம் ஜ.ரா.சு. தான்.
இல்லேனா, அந்த நால்வர் 'குமுதம்' குழுக்கு மட்டுமே தெரிந்த வேறு ஏதாவது புனைப்பெயர்!
அப்படின்னா.. யோசிக்கிறேன், யோசிக்கிறேன்.. யோசித்துக் கொண்டே இருக்கிறேன், அப்பாஜி!

சுஜாதான்னா... ஒன்லைன் சிறுகதையைத் தான் சேர்க்க வேண்டிய சேர்மானங்கள் எல்லாம் சேர்த்து ஊதிப் பருக்க வைத்துத் தொடர்கதையாக காட்டிய மாயாவி! அதனாலே இருக்கற ஒரே கொக்கியையும் எப்படா கழட்டுவோம்ன்னு நிம்மதியில்லாம தவிச்சிண்டிருப்பார்! இன்னொரு கொக்கி கிடைச்சாலும் அது இன்னொரு கதைக்கு ஆகும் இல்லையா?.. 22 அல்லது 26 அத்தியாயம்; இந்தா பிடி'ன்னு ஒண்ணு முடிச்சு இன்னொண்ணுன்னு போய்க்கொண்டே இருந்த மனிதர் அவர்! சுவாரஸ்ய சுஜாதா! கதையையா ரசிச்சோம்?.. எழுதின எழுத்தையல்லவா ரசிச்சோம்?..

ஜீவி said...

@ பாசமலர்

வாங்க, மலர்!

அடுத்த அத்தியாயமும் வெளிவந்திடுத்து. இந்த அத்தியாயமும் நாராயணனுக்காகத் தான்.

தொடர்ந்து படித்து கருத்துச் சொல்வதற்கு நன்றிங்க.

ஜீவி said...

@ அப்பாதுரை

//கற்பனை புத்தகத்தைப் படிக்கணும்னு ஏங்க வச்சுட்டீங்களே...//

'ஒரு நிமிஷம்' புத்தகத்தைத் தானே சொல்றீங்க.. அதுக்கென்ன, நிஜமாலும் எழுதிட்டாப் போச்சு.

ஆனா ஒண்ணு. வித்யா மேடத்திற்கு
'கதை'ன்னாலே இப்பல்லாம் 'கதை தானே?'ன்னு இளப்பமாக் கேக்கறாங்க. கேட்டா, கதையை விட யதார்த்தம் முக்கியம்ங்கறாங்க. இனிமே அவங்க ராஜ்யம் தான். அடுத்த அல்லது அதற்கடுத்த அத்யாயத்தில் வருவாங்க போலிருக்கு.

தொடர்ந்து வாசித்து வருவதற்கு நன்றி, அப்பாஜி!

கோமதி அரசு said...

ஊர்மிளாவிற்கு திடீரென்று மனசின் ஒரு மூலையில் ஏதோ நம்பிக்கை துளிர்விட்ட மாதிரி இருந்தது. நடக்கறதெல்லாம் ஏதோ நமக்குத் தெரியாத கணக்கின் வசப்பட்டு அதன் போக்கில் நடந்து கொண்டிருக்கிற மாதிரித் தோன்றியது. அப்படி நடப்பவற்றிலும் நாமும் கலந்து கொள்கிற மாதிரி நம் பங்கை நிர்ணயித்து ஏதோ நம்பிக்கை ஒளி வழி நடத்திச் செல்வதாகப் பட்டது. ஆக, நம்மால் முடிந்தது பாதை தெரியுது பார்ன்னு தெரியும் வழிபார்த்து நம்பிக்கையுடன் நடப்பது தான் என்றுத் தெரிந்தது.//

ஆம், ஊர்மிளா சொல்வது உண்மை.
நடப்பது எல்லாம் நன்மைக்கே!
எல்லாம் அவன்செயல், என்று
நம்மால் முடிந்த்து நம்பிக்கையுடன் இருப்பது தான்.

கோமதி அரசு said...

ஊர்மிளாவிற்கு திடீரென்று மனசின் ஒரு மூலையில் ஏதோ நம்பிக்கை துளிர்விட்ட மாதிரி இருந்தது. நடக்கறதெல்லாம் ஏதோ நமக்குத் தெரியாத கணக்கின் வசப்பட்டு அதன் போக்கில் நடந்து கொண்டிருக்கிற மாதிரித் தோன்றியது. அப்படி நடப்பவற்றிலும் நாமும் கலந்து கொள்கிற மாதிரி நம் பங்கை நிர்ணயித்து ஏதோ நம்பிக்கை ஒளி வழி நடத்திச் செல்வதாகப் பட்டது. ஆக, நம்மால் முடிந்தது பாதை தெரியுது பார்ன்னு தெரியும் வழிபார்த்து நம்பிக்கையுடன் நடப்பது தான் என்றுத் தெரிந்தது.//

ஆம், ஊர்மிளா சொல்வது உண்மை.
நடப்பது எல்லாம் நன்மைக்கே!
எல்லாம் அவன்செயல், என்று
நம்மால் முடிந்த்து நம்பிக்கையுடன் இருப்பது தான்.

Related Posts with Thumbnails