மின் நூல்

Thursday, June 28, 2012

பார்வை (பகுதி-51)

பேச்சு வழக்கிற்காக கதை என்று சொன்னாளே தவிர நடந்த நிகழ்ச்சிகளின் சங்கிலிப் பிணைப்பு நாராயணனைத் திகைக்க வைத்து ஊர்மிளா சொன்னதை உன்னிப்பாகக் கேட்க வைத்தது.

"நாராயணன்! உங்க அப்பாவை எனக்கு முன்னே பின்னே தெரியாது.  ஆனா உங்க ஜாதகம் அவர் மூலம் என்னிடம் வந்தது தான் ஆச்சரியம்" என்றாள் ஊர்மிளா.

"அப்பா ஏதோ மேரேஜ் மேட்சிங் சென்டரில் என் விவரங்களைப் பதிவு செய்து வைச்சிருக்கறதா சொல்லிருக்கார்..  அவங்க அனுப்பச் சொல்லி உங்களுக்கு அனுப்பியிருப்பார்ன்னு நெனைக்கிறேன்."

"அப்படிக் கூட இல்லை.." என்று ஊர்மிளா சொன்ன போது நாராயணனின் புருவங்கள் ஏறி இறங்கின. "ஆச்சரியமானா இருக்கு.."

"இதில் இன்னொரு ஆச்சரியமும் எனக்கு உண்டு" என்று ஊர்மிளா முறுவலித்தாள். "யாருக்காக உங்க ஜாதகத்தை வரவழைச்சேனோ அந்தப் பெண்ணை நான் பாத்தது கூட இல்லை..  ஆனா இப்போ என்னன்னா அந்தப் பெண்ணுக்கு உங்க ஜாதகம் பொருந்தி வந்து அந்தப் பெண்ணே உங்களுக்கு மனைவியா வரணும்ன்னு, ஏனோ தெரிலே, எனக்கு ரொம்பவும் ஆர்வமா இருக்கு" என்றாள்.

"போச்சுடா.. ஜோசியர் சொன்னார்ன்னு என் ஜாதகம் பத்தி எங்கப்பா அப்பப்ப ஏதாவது சொல்லிண்டே இருப்ப்பார்.  அவர் சொல்றதிலே பலதைக் கேக்க எனக்கே ஆச்சரியமா இருக்கும். இப்போ நீங்க சொல்றதைப் பாத்தா இன்னும் இன்னும் நிறைய ஆச்சரியங்கள் தொடர்ந்து வரும் போல இருக்கே.. ஒவ்வொண்ணா சொல்லுங்க.  நானும் எனக்குத் தெரிந்த ஆச்சரியங்களோடு உங்களது ஆச்சரியங்களையும் சேர்த்துப் பார்த்து சரியா இருக்கான்னு செக் செஞ்சுக்கறேன்.." என்று சொல்லிச் சிரித்தான்.

"அடேடே! உங்களுக்குக் கூட ஆச்சரியங்கள் கைவசம் இருக்கா? அப்படீன்னா ஏதாவது ஒண்ணைச் சொல்லுங்களேன்" என்று ஊர்மிளா பரபரத்தாள்.

"வேணாம். இப்பச் சொல்லிட்டா சுவாரஸ்யம் இருக்காதுங்க.. பின்னாடி சொல்றேனே!"

"அப்படியா சொல்றீங்க?.." என்று அவள் கேட்ட போது 'பொசுக்'கென்று அவள் முகம் போனதென்னவோ உண்மைதான்.  ஆனால் ஒரே வினாடியில் தன் ஏமாற்றத்தை சரிசெய்து கொண்டு,"நீங்க சொல்றதைப் பாத்தா இப்போ சொல்ல வேண்டாம்ன்னு நீங்க சொல்றதுக்கு ஏதோ காரணம் இருக்கற மாதிரித் தெரியறது.  போனாப் போகட்டும்..   ஆனா, ஒண்ணு எனக்கேத் தெரியறது. உங்க ஜாதகம் எனக்கு வந்த விதம் அதைத் தொடர்ந்து நடக்கறதெல்லாத்தையும் பாத்து எனக்கே ஆச்சரியமா இருக்கு.   நீங்க சொல்றது கூட சரிதான். உங்க ஆச்சரியம் உங்களோட இருக்கட்டும்.  என்னோட அனுபவ ஆச்சரியம் என்னோட.  சரியா?.. பின்னாடி பகிர்ந்துக்கலாம். அப்போ நம் ஆச்சரியங்கள் இன்னும் கூடக் கூடலாம்" என்றாள்.

"நீங்க என்ன சொல்லப் போறீங்கன்னு எனக்குத் தெரியாது.  ஆனா ஒண்ணு தெரியறது, மேடம். என் திருமணத்துக்காக என்னிக்கு எங்க வீட்லே பேச்செடுத்தாங்களோ, அன்னிலேந்தே அது தொடர்பா நடக்கற எல்லாத்தையும் ஒரு இன்ட்ரஸ்ட்டோட கவனிச்சிக்கிட்டு வர்றேன். அதெல்லாம் பாத்து என் மனசிலே புதுசு புதுசா சில விஷயங்கள்லே சில அபிப்ராயங்கங்கள் உருவாகியிருக்கு. அதெல்லாம் பத்தி நிறைய யோசிக்கறேன். ஒரு காலத்திலே நான் நம்பாத சில விஷயங்களை இப்போ நம்ப ஆரம்பிச்சிருக்கேன். நீங்க சொல்லப் போறதும் நிச்சயம், எந்த நினைப்பெல்லாம் ஒண்ணாச் சேர்ந்து என் மனசிலே ஒரு உருவகத்தை உருவாக்க முயற்சிக்கறதோ அதுக்குத் தான் உதவி செய்யப்போறதுன்னு எனக்குத் தெரியறது. அதன் அடிப்படைலே நீங்க இப்பச் சொல்லப் போறதும் சட்டுன்னு நான் ஒரு முடிவுக்கு வர எனக்கு செளகரியமா இருக்கும். அதுக்குத் தான் சொல்றேன். ப்ளீஸ்.. யூ ப்ரொஸீட்.." என்று நாற்காலியில் நன்றாகச் சாய்ந்து தளர்த்தி உட்கார்ந்து கொண்டான் நாராயணன்.

"நாராயணன்! எனக்குக் கூட கல்யாணத்திற்குக் காத்திருக்கிற இந்தப் பெண்ணோட தங்கையைத் தான் தெரியும். அந்தப் பெண் மூலம் தான் அவளோட அக்காவைப் பத்தி கொஞ்ச விவரம் தெரியுமே தவிர நேர்லே பாத்தது கிடையாது.  அந்தப் பெண்ணைத் தெரிந்த இன்னொருத்தர் சொல்லி தங்கையை விட அக்கா அழகா இருப்பாள் என்று கேள்விப்பட்டிருக்கேன். கொஞ்சம் வறுமையான குடும்பம் தான்.  ஆனா, வறுமையில் செம்மைன்னு சொல்லுவாங்களே, அந்த மாதிரியான பக்குவம். அதனாலேயே தங்கைக்காரி மேலே எனக்கு ஒரு பாசம்.  இவளோட அக்கா திருமணத்திற்குத் தயாரா இருந்ததாலே, நம்மாலே இந்தக் குடும்பத்துக்கு ஏதாவது நல்லது செஞ்சாத் தேவலையேங்கற எண்ணத்திலே எனக்குத் தெரிஞ்ச இடங்கள்லே சொல்லி வைச்சிருந்தேன். அந்தப் பெண்ணுக்குக் கல்யாணமும் நிச்சியமாயிடுத்து ன்னா என்னாலே முடிஞ்ச அவங்களுக்குத் தேவையா இருக்கற ஏதாவது உதவியையும் செய்யலாம்ன்னு தீர்மானிச்சிருக்கேன்."

"சொல்லுங்க, மேடம்.  உங்களுக்கு இந்தக் குடும்பத்தின் மேலே இருக்கற நல்லெண்ணம் புரியறது.  ஆரம்பமே எனக்கு சந்தோஷமா இருக்கு.  சொல்லுங்க.."

"சொல்றேன்.  இந்தப் பெண்ணின் திருமண விஷயமா நான் சொல்லி வைச்சிருந்தவங்கள்லே ஒருத்தர் வித்யா; எங்க ஃபேமலி ஃப்ரண்ட். இப்போ ரிஷின்னு கதையெல்லாம் எழுதறாரே, அவர் ஒய்ஃப்."

"ரிஷி?.. 'காதல் தேசம்' ரிஷி தானே?"

 "எஸ். அவரே தான்.  இந்தப் பத்திரிகைக்காரங்களைச் சொல்லணும். கதைக்கெல்லாம் எப்படி பேர் வைக்கறாங்க, பாருங்க.. 'பசக்'ன்னு ஞாபகத்லே ஒட்டிண்டு ஆளையே அடையாளப்படுத்தற மாதிரி.."

"அது நமக்குத் தெரிந்த விஷயம் தானே?.. அப்புறம், என்ன நடந்தது?.." என்று அவன் கேட்ட ஆர்வத்தில் பேசும் பேச்சின் டிராக் மாறிடக் கூடாதெங்கிற கவலை அவனுக்கு இருந்ததை வெளிப்படையாகக் காட்டியது.

"நானும் நாலைஞ்சு பேர்கிட்டே சொல்லி வைச்சிருந்தேன்னு வைச்சிக்கங்க..  ஆனா, முதல் ரெஸ்பான்ஸ் வித்யாகிட்டேயிருந்து வந்தது.-- உங்கப்பாகிட்டே யிருந்து ஜாதகக் காப்பியே வாங்கி அவங்க எங்கிட்டே கொடுத்திட்டாங்க.."

"இன்ட்ரஸ்ட்டிங்.. அவங்களுக்கு எப்படி என் அப்பாவைத் தெரிஞ்சதோ, தெரிலே.."

"கவனிங்க. உங்க ஜாதகப் பயணம் இங்கேயிருந்து தான் ஆரம்பிக்குது. இப்போ நடந்ததே, அந்த எழுத்துப் பட்டறைலே கலந்துக்க வித்யா அவங்க வீட்டு வாசல்லே நின்னுண்டு ஆட்டோவைத் தேடினப்போ அந்தப் பக்கமா வந்த உங்கப்பா ஆட்டோலே ஏறிக்கிறாங்க.."

"ஓ.. அப்புறம்?"

"ஒரு பத்து நிமிஷப் பயணம் தான்.  பொதுவா ஆட்டோக்காரர் வண்டிலே உக்காந்தவங்க கேட்ட இடத்திற்குப் போய் வண்டியை நிறுத்த, பயணம் செய்றவங்களும் இறங்கிண்டு கேட்ட காசைக் கொடுத்திட்டுப் போகன்னு  வழக்கமா அமைஞ்சிருக்க வேண்டிய சவாரியா இது அமையாமப் போனது தான் விசேஷம்.  அந்த பத்து நிமிஷப் பயணத்திலே, அவருக்கும் இவங்களைப் பாத்து என்ன தோணித்தோ தெரியலே, பையனுக்கு பெண் பாத்திண்டிருக்கிற தைப் பத்தி, தன்னைப் பத்தி, தன் ஊர் பத்தி எல்லாத்தையும் உங்கப்பா அவங்க கிட்டே சொல்றார்.  மொத்தத்தலே தன் பேச்சாலே, நடவடிக்கைகளாலே உங்கப்பா அவங்களை ரொம்பவும் இம்ப்ரஸ் பண்ணிடறார். உங்களுக்கு தகுந்த ஒரு பெண் தெரிய வந்தா நிச்சயம் உங்கப்பாக்குத் தெரியப்படுத்தணும் ன்னு வித்யா அந்தப் பத்து நிமிஷப் பயணத்திலேயே தீர்மானிச்சிடறாங்க..  இதுக்கு நடுவே எங்கேயானும் வெளிலே போனா, உபயோகமாக இருக்குமேன்னு உங்கப்பா செல் நம்பரையும் வித்யா வாங்கிக்கறாங்க...

"எழுத்தாளர் பட்டறை ரெண்டு நாள் நிகழ்ச்சி.    ரெண்டாம் நாள் நிகழ்ச்சிக்கு வித்யா வரும் போதே அவங்க கிட்டே நான் சொன்னது ஞாபகம் இருந்து உங்க அப்பாக்கும் போன் செய்து அவரை உங்க ஜாதகத்தோட வரவழைச்சு, அவர் ஆட்டோவிலேயே நிகழ்ச்சி நடந்த கல்யாண சத்திரத்தில் வந்து இறங்கிக்கறாங்க..  சத்திரத்திற்கு வர்ற வழிலே,  யதேச்சையா உங்கப்பா வித்யாகிட்டே ஜஸ்ட் கல்யாணப் பெண் பேர் கேக்கறார்.  பொண்ணு பேரு லஷ்மின்னு இவங்க சொல்றத்தே, ஆட்டோ ஒரு தெருவில் திரும்பறது.  அந்தத் தெரு பேரு லஷ்மி தெரு.  அப்பவே உங்கப்பா வித்யா கிட்டே 'இது ஒரு சுப நிகழ்ச்சியைத் தொடங்கற அறிகுறியா எனக்குத் தெரியறது. அதனாலே  எங்களுக்கு ஜாதகப் பொருத்தம் பாக்க வேணாங்க.. வேணுன்னா அவங்க பாத்து பொருந்தி வர்றதுன்னா அதுவே எங்களுக்கு சரி'ங்கறார்.  அப்புறம், இன்னொண்ணு.  பெண்ணின் பேரான லஷ்மியையும், உங்க பேரையும் சேர்த்துப் பார்த்தா லஷ்மி நாராயணன்னு வர்றதில்லையா..."

"அட! எங்க குலதெய்வப் பெயர்" என்று உற்சாகத்தோடு உரக்கச் சொன்னான் நாராயணன்.  அடுத்த நிமிஷமே குரல் தழைந்து, "மேடம்!   இப்போ எனக்கு அந்த சேதி கிடைச்சிடுச்சி, மேடம்" என்றவனிடம் பரபரப்பு பற்றிக் கொண்டது. "எல்லாத்தையும் பார்த்தா இந்த லஷ்மி தான் என் மனைவியா வர்றப் போறாங்கன்னு என் உள் உணர்வு சொல்றது!.. ஏதாவது பராக்குப் பார்த்து கோட்டை விட்டேனோ, என்னை மாதிரி ஒரு மடப்பயல் இருக்க மாட்டான்." என்று சொன்ன போது அவன் விழிகள் பளபளத்தன.

"எப்படி நாராயணன் அவ்வளவு தீர்மானமாகச் சொல்றீங்க?.."

"எப்படின்னு சொன்னா என்னை ஒரு மாதிரி பார்ப்பீங்க.  அதனால இப்போ வேணாம்.  முதல்லே நினைக்கறது நடக்கட்டும். அப்புறமா சொல்றேன்."

அந்த சமயம் பார்த்து 'நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம்  ஏதுமில்லை' என்கிற திரைப்பாடல் ஊர்மிளாவின் நினைவுக்கு வந்து அதை மறக்க வேண்டி சடாரென்று தலையைக் குலுக்கிக் கொண்டாள் அவள்.

அவள் அப்படிச் செய்தது வித்தியாசமாகத் தெரிந்து, "என்ன மேடம், என்ன ஆச்சு?" என்று பதட்டத்துடன் கேட்டான் நாராயணன்.

"ஒண்ணுமில்லை.." என்று அந்த நினைவைக் கிளறாமல் வலிந்து சிரிப்புக் காட்டினாள் அவள்.

"இல்லை. என்னத்தையோ எங்கிட்டேயிருந்து மறைக்கிறீங்க.. எதுனாலும் பரவாயில்லை.  சொல்லுங்கள்"

"என்னவோ தெரிலே. 'நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்'ங்கற கண்ணதாசனோட பாட்டு நேரம் காலம் தெரியாமல் எக்குத் தப்பா எனக்கு நெனைவுக்கு வந்திடுத்து..  ஸாரி."

அவள் சொன்னதைக் கேட்டு கலகலவென்று சிரித்தான் நாராயணன். "எஸ். அதான் வேணும். பொருத்தமாத் தான் அந்தப் பாட்டு உங்க நினைவுக்கு வந்திருக்கு.." என்று சொன்னவனை விநோதமாகப் பார்த்தாள் அவள். "என்ன சொல்றீங்க?.."

"கவிஞர் சொன்னது என்னன்னா, சகஜமா நாம் நினைப்பதைத் தான். நாம நினைக்கறதெல்லாம் நடந்துட்டா, அப்புறம் தெய்வம்ன்னு ஒண்ணு என்ன இருக்கு?.. நடக்கறதெல்லாம் தெய்வத்தின் செயல்' என்கிறார்.  இந்த விஷயத்லே கூட நாம அப்படித் தானே நினைக்கிறோம், மேடம்?.. தொடர்ச்சியா இப்போ நடந்திருக்கிறதெல்லாம் தெய்வத்தின் வழிகாட்டல். அந்த வழி காட்டும் பாதை பார்த்து நடந்தா, எல்லாம் நல்லபடி முடியும்ங்கறதை மனப்பூர்வமா நான் நம்பறேன். இதுவரை நடந்த எல்லாத்தையும் வரிசையா நீங்க சொல்லிட்டு வந்தப்போ, என் மனசுக்குக் கிடைத்த சேதி இதான்.." என்று சொல்லி முடித்த போது புசுபுசுவென்று லேசாக மூச்சிறைத்தது அவனுக்கு.

அவன் உணர்வுகளுக்கு தன்னாலான உதவிகள் செய்து அதற்கு மதிப்பளிக்க வேண்டும் என்று அந்த சமயத்தில் நினைத்துக் கொண்டாள் ஊர்மிளா.

"கோலம் போடற மாதிரி மேடம்.  சொல்லப்போனா, தெய்வக் கோலம் . இன்ன கோலம் தான்னு தீர்மானிச்சு முன்னாடியே கோலப்புள்ளிகளை இட்டாச்சு.. புள்ளிகளை இணைச்சு கோலத்தைப் பூர்த்தி செய்யற வேலையை மட்டும் மனுஷங்க கையிலே கொடுத்திருக்கு..  அவங்க இல்லாம எதுவும்ன்னா அது அமானுஷ்யம் மாதிரி ஆயிடும் இல்லையா?.. அதுக்காகத் தான் அந்த ஏற்பாடு. . கண்ணுக்குத் தெரிஞ்சி அவங்க இன்வால்வ் ஆனாத் தான் அவங்களுக்கும் ஒரு அசட்டுத் திருப்தி.  அதுக்காக அது.  ஊர்மிளா மேடம்,  நீங்க தான் ஆரம்பிச்சு வைச்சீங்க. அதாவது கோலத்தைத் தொடங்கி வைக்கற பாக்கியம் உங்களுக்குத் தான் கெடைச்சது.  அங்கங்கே போய்ட்டு மறுபடியும் கோலடப்பா இப்போ உங்க கைக்கு வந்திருக்கு. வித்யா மேடம் விட்ட இடத்திலேந்து தொடர்ந்து நீங்களும் புள்ளிகளை கோடிழுத்து இணைச்சுத் தொடருங்கள் மேடம்.  ப்ளீஸ்.." என்று அவன் கேட்டுக் கொண்ட பொழுது ஊர்மிளாவின் உடல் சிலிர்த்தது. ஏதோ தெய்வ ஆக்ஞையைக் கேட்ட மாதிரி அவள் முகம் பரவசத்தில் பளிச்சிட்டது.

"சரி, நாராயணன்.  அடுத்த கட்டம் உங்க ஜாதகம் அவங்க கிட்டே போறது தான். இன்னும் கொடுக்கலே. என் ஹாண்ட் பேக்லேயே இருக்கு.  இன்னிக்கே நான் இந்த ஜாதகத்தை அவங்களுக்குச் சேர்த்திடறேன்" என்ற ஊர்மிளாவின் உதடுகள் ஜபிப்பது போல படபடத்தன.

"எஸ். சேத்திடுங்க. ஒரு ரிக்வெஸ்ட்.  இந்த அம்பத்தூர் புது வீடு சமாச்சாரம் அவங்களுக்குத் தெரிய வேண்டாம்.  எதுக்காகவும் எது ஒண்ணும்ன்னு இருக்கக் கூடாதுங்கறத்துக்காகத் தான் அந்த வேண்டுகோள்.  தெய்வ சங்கல்பம் இருக்கறச்சே அப்படி நேராது.  இருந்தாலும் மனுஷங்களோட குழறுபடிகள் இல்லாம கோலம் எப்படிப் போகணுமோ அப்படிப் போய் அழகாப் பூர்த்தியாகணும்ன்னு நான் ஆசைப்படறேன்.  என்னோட சுய அபிலாஷை இது. பூர்த்தியான கோல அழகைப் பாக்கணும்ன்னு மனசு கிடந்து அடிச்சிக்கறது.."என்று சொல்லி முடித்த போது நாராயணன் குரல் அமுங்கிப் போன மாதிரி இருந்தது.

"கவலையே படாதீங்க.  எனக்கும் இது எப்படிப் போறதுன்னு பார்க்க ஆர்வமா இருக்கு. அதனால எதுவும் லீக் ஆகாது.  என்னை நீங்கள் நம்பலாம், நாராயணன்" என்றாள் ஊர்மிளா.

"தேங்க்ஸ்..." என்று நாராயணன் சொன்ன போது அவன் முகத்தில் ஒரு பரவசம் பளிச்சிட்டது.   ரொம்ப இயல்பாக, "அடுத்தாப்ல ஆபிஸ் வேலையைப் பாக்கலாமா?.  மொத்தம் 52 நாவல்கள் என்றா சொன்னீர்கள்?.. டெலிவரி சிலிப் உங்க கிட்டே தானே இருக்கு?.. நான் ரிஸீவ் பண்ணிக்கலாம்லே?" என்று அவன் சொன்ன போது வேறு ஒரு நாராயணனாக அவன் ஊர்மிளாவுக்குத் தோற்றமளித்தான்.

"எல்லாம் ரெடி, நாராயணன்.  அச்சுக்கான எல்லா பிரிண்ட்ங் மேட்டர்களையும் வழக்கம் போலத் தனித்தனி கவர்லே போட்டு அடுக்கியாச்சு. கவரிங் லெட்டர் இதோ.." என்று மேஜை இழுப்பறை திறந்து ஊர்மிளா அந்த காகிதங்களை எடுத்து அவனிடம் கொடுத்தாள்.

"நீங்க சரிபாத்திட்டீங்கல்லே?.." என்று அந்த லிஸ்ட்டை மேலோட்டமாகப் பார்த்தபடியே கேட்டான் நாராயணன்.

"பாத்திட்டேன்.  இருந்தாலும் உங்க முன்னாடி ஒரு தடவை பாத்திடலாம். எல்லாம் சரியா இருந்து நீங்க கையெழுத்திட்டு வாங்கிண்டா எனக்கும் ஒரு திருப்தி." என்று ஊர்மிளா சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே நாராயணன் அடுக்கி வைத்திருந்த அச்சுக்கான பழுப்பு நிற கவர்களை எண்ணத் துவங்கி விட்டான்.

"ஆமா, ஐம்பத்திரண்டுன்னு தானே சொன்னீங்க?..ஐம்பத்து ஒண்ணு தான்..கொஞ்சம் இருங்க.. இன்னொரு தடவை எண்ணிடறேன்.." என்று மறுபடியும் எண்ண ஆரம்பித்தான்நாராயணன். எண்ணி முடித்து விட்டு,"இப்போ கூட ஐம்பத்து ஒண்ணு தானே வர்றது.." என்று புருவங்கள் வளைய ஊர்மிளாவைப் பார்த்தான்.

"கொஞ்ச நேரம் முன்பு நான் கூட வெரிஃபை பண்ணினேனே?.. சரியா இருந்ததே?" என்று நெற்றியைச் சுளித்த ஊர்மிளா, "ஒவ்வொரு நாவல் பேரா கவர் மேலே எழுதியிருக்கு பாருங்க,  நீங்க படிச்சிண்டே வாங்க, நான் இந்த லிஸ்ட்டோட சரிபார்க்கறேன்.." என்றாள்.

அப்படி சரிபார்த்ததில், ஒரு நாவல் அடுக்கி வைத்திருந்த கவர்க் கூட்டத்தில் இல்லாமலிருந்தது தெரிய வந்தது.

"அதாங்க, லிஸ்ட்டில் ஐம்பத்திரண்டு இருக்க, இங்கே ஐம்பத்தோரு கவர் இருந்திருக்கு.." என்று ஆசுவாசப்படுத்திக் கொண்ட நாராயணன், "விட்டுப் போன அந்த நாவல் பேரு என்னங்க?.. இந்த புத்தகக் குவியல்லே எங்கையானும் இருக்கான்னு தேடிப் பாக்கலாம்.." என்றான்.

"அந்த நாவல் பேரு தானே?" என்று இழுத்த ஊர்மிளா லிஸ்ட்டில் இவள் இப்பொழுது சரிபார்க்கையில் டிக்கடிக்காமல் விடுபட்டிருந்த பெயரைப் பார்த்து, "நாவல் பேர் 'நடக்குமென்பார் நடக்கும்'ன்னு போட்டிருக்கு" என்றாள்.

அவள் சொன்னதைக் கேட்டு திகைத்த நாராயணன், "நல்ல பேருங்க.. நம்பிக்கை கொடுக்கற பேருங்க.. ஆனா.. ஆனா.. அது இப்போ இல்லேனா.." என்று குழப்பத்துடன் அவளைப் பார்த்தான். அவன் முகம் லேசாக வியர்த்திருந்தது. கர்ச்சீப்பை எடுத்து கழுத்துப் பட்டையைத் துடைத்துக் கொண்டவன் சோர்வுடன் நாற்காலியில் விழுந்தான் என்றே சொல்ல வேண்டும்.


(இன்னும் வரும்)

15 comments:

ஸ்ரீராம். said...

சொந்த விஷயங்கள் பேசும்போது நாராயணன் தன் பக்க ஆச்சர்யங்களை சொல்லாமல் விட்டதிலும் ஒரு சூட்சுமம் இருக்கோ.... அபபடி இருந்தாலும் கேட்டவுடன் கவனமாக அது இல்லாமல் பண்ணிடுவீங்களோ...!!!!

'நடக்குமென்பார் நடக்கும்' இவர்கள் கவனத்துக்கு வரவேண்டுமென்பதால்தான் ஒளிந்து கொண்டு கண்ணாமூச்சி காட்டுகிறது. இல்லையா?!! இல்லா விட்டால் அபபடி ஒரு சூசகத் தகவலை இவர்கள் கவனித்திருக்க மாட்டார்களே!

இராஜராஜேஸ்வரி said...

அவர் சொல்றதிலே பலதைக் கேக்க எனக்கே ஆச்சரியமா இருக்கும். இப்போ நீங்க சொல்றதைப் பாத்தா இன்னும் இன்னும் நிறைய ஆச்சரியங்கள் தொடர்ந்து வரும் போல இருக்கே.. ஒவ்வொண்ணா சொல்லுங்க. நானும் எனக்குத் தெரிந்த ஆச்சரியங்களோடு உங்களது ஆச்சரியங்களையும் சேர்த்துப் பார்த்து சரியா இருக்கான்னு செக் செஞ்சுக்கறேன்.." என்று சொல்லிச் சிரித்தான்.

"அடேடே! உங்களுக்குக் கூட ஆச்சரியங்கள் கைவசம் இருக்கா?

ஆச்சரியங்களின் தொகுப்பு அருமை !

Geetha Sambasivam said...

பள்ளியிலே படிக்கையிலே இப்படி எல்லாம் நினைச்சது உண்டு. இன்னும் சொல்லப்போனால் இந்த உடை தான் ராசி, இந்த உடை ராசி இல்லை. இந்தப் பேனா ராசி இல்லைனு எல்லாவிதமான பைத்தியங்களும் இருந்திருக்கு. இப்போ இல்லை. இதைப் படிக்கையில் என்ன சொல்றதுனு தெரியலை. மனித மனம் மாறாது; அதுவும் ஊர்மிளா, நாராயணன் போன்ற பக்குவம் அடைந்தவர்களானாலும் கூட இவ்விதமான நம்பிக்கைகளிலேயே ஊசலாடிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

மேலே எப்படி வேண்டுமானாலும் போகலாம். அதற்கேற்றாற்போல் எழுதி வருகிறீர்கள். அனுமானித்தல் கொஞ்சம் கஷ்டம்(எனக்கு). :)))))))

அப்பாதுரை said...

சாகசக் கதைகளில் தான் விறுவிறுப்பு இருக்கும் என்று நினைத்திருந்தேன்.. பார்வையைப் படிக்கும் வரை.
கண்ணதாசன் பாட்டுக்கு எதிர்பாராத இனிய விளக்கம். கோலம் போடுறதில் இத்தனை நுட்பமா? romantic.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

பெரிசா ஒண்ணுமில்லை. இங்கே ஆரம்பிச்சு இங்கே முடிக்கணும்ன்னு அந்தந்த அத்தியாயம் எழுதறதுக்கு முன்னாடியே தீர்மானிச்சிக்கறோம், இல்லையா? எல்லாத்தையும் எழுத ஆரம்பிச்சா, அந்த ஆரம்பத்தையும் முடிவையும் ஒரே பதிவுலே கொண்டு வர முடியாது. அதுக்காகத் தான். எதை வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் இழுத்துப் பேசலாம் என்கிற செளகரியம் இருக்கையில் வேறே எங்கையானும் வேண்டும்ன்னா சொல்லவும் சொல்லலாம்.இல்லைனா, விட்டுடவும் செய்யலாம். அதுக்காகத் தான்.

எதுக்காக எதுங்கறதுங்கறது தெரியாம
ஒன்றில் ஒன்றாக பதுங்கிப் போறதும் சில நேரங்களில் உண்டு. அது உங்கள் கவனத்திற்கு வந்ததே, அதைச் சொல்லுங்கள். அப்படிப்பட்ட ஒளிதல் இல்லை என்றால் நீங்கள் கூட இந்த 'நடக்கும் என்பார் நடக்குமை' இவ்வளவு கூர்மையாகக் கவனித்திருக்க மாட்டீர்கள் தானே!

சுவாரஸ்யத்தைக் கிளப்பும் பின்னூட்டத்திற்கு நன்றி, ஸ்ரீராம்!
ஆனால், வேறு பாராக்களில் உங்கள் கவனம் செல்லும் என்று நான் எதிர்பார்த்தேன். படித்த அவசரத்தில் பின்னூட்டம் வருவதால் இல்லை போலும்.

G.M Balasubramaniam said...

வாழ்வில் நடக்கும் அநேக விஷயங்கள் ஆச்சரிய மூட்டுபவை. உலகில் ஆச்சரியப்பட எண்ணிலாத விஷயங்கள் இருக்கிறது. பலரும் கண்டு கொள்வதே இல்லை.

ஜீவி said...

@ இராஜராஜேஸ்வரி

இந்தத் தொடரை முடித்து விட்டு காத்திருக்கிற மற்ற பகுதிகளுக்குப் போகணும்னா அது முடியாம இருக்கறதே எனக்கு ஆச்சரியமா இருக்கு! எப்படியோ ஒன்றுக்கு ஒன்று தொடர்ச்சியா நீண்டு போய் நீள்வதால் எங்கையாவது முடித்துக் கொண்டு பின் கதைச் சுருக்கம் மாதிரி கொடுத்து விடலாமா என்று தோன்றுகிறது.

தொடர்ந்து வந்து ரசிப்பதற்கு நன்றி, ராஜி மேடம்!

ஜீவி said...

@ Geetha Sambasivam

//இப்போ இல்லை//

அப்படியெல்லாம் நீங்கள் அன்று நினைத்ததற்கு அது தொடர்பான வேறு சில நிகழ்வுகளான புறக்காரணங்கள் காரணமாக இருந்திருக்கலாம். இப்போ ஏன் இல்லை என்றால் வளர்ச்சிப் போக்கில் அந்த விதமான ஆப்ஸர்வேஷன்களில் உங்கள் கவனம்
குவிந்து போகாமல் சிதறி விட்டது தான் காரணம். நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்களை உன்னிப்பாகக் கவனித்து அதே பார்வை கொண்டு நமக்கு நேரடித் தொடர்பில்லாத வெளி விஷயங்களை ஊகிப்பது ஒருவிதப் பார்வை. நமக்கு நேரடித் தொடர்பில்லாத வெளி விஷயங்களின் ஊகம் கொண்டு நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்களைக் கணித்துக் கொள்வது இன்னொரு விதப் பார்வை. இரண்டாவது சொன்னதின் ஆளுகை அதிகமாகும் பொழுது முதல் சொன்ன கவன ஈர்ப்பில் அக்கறை இல்லாது போய் நாளாவட்டத்தில் மங்கி பிறகு தொலைந்தே போய் விடும்.

//இவ்விதமான நம்பிக்கைகளிலேயே ஊசலாடிக் கொண்டு...//

இவ்விதமான நம்பிக்கைகளின் விதவிதமான வடிவழகுகளை மஹாபாரதம், இராமாயணம். சாகுந்தலம், சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி போன்ற காவியங்களிலும் பார்க்கலாம்.

தொடர்ந்து வாசித்துப் பகிர்ந்து கொள்வதற்கு நன்றி, கீதாம்மா.

ஜீவி said...

@ அப்பாதுரை

//கோலம் போடுறதில் இத்தனை நுட்பமா? romantic.//

உங்களின் ரசனைகள் தாம் உங்களை வித்தியாசப்படுத்திக் காட்டுவதாக உங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவ தாக நான் நினைக்கும் உங்கள் எழுத்துக்களைப் படிக்கையில் நினைப்பதுண்டு.

உங்களுக்கு சில விஷயங்களில் பிடித்தம் இல்லாது இருக்கலாம்.
ஆனால் ரசனை என்று வரும் பொழுது அப்படியான விஷயங்களைக் கூட ரசிக்கவும் மட்டுமில்லை எடுத்துச் சொல்லவும் தவறுவதில்லை நீங்கள்.
அதில் இந்த கோல ரசனையும் ஒன்று.

//இன்ன கோலம் தான்னு தீர்மானிச்சு முன்னாடியே கோலப்புள்ளிகளை இட்டாச்சு..//

இந்த இடம் உங்கள் எண்ணப் போக்கிற்கு மாறுபட்டு இருக்கலாம்.
நமது செயல்பாடுகளின் அடிப்படையில் புள்ளிகளை அழிச்சுப் புதுக்கோலம் போடலாம் என்றும் உங்கள் எண்ணம் விரிவடையலாம். ஆனால் அதை வெளிக்காட்டிக்கொள்ளாது எழுதியதை எழுதிய போக்கிலேயே ரசிக்கும் உங்கள் ரசனை அபாரமானது.உண்மையானது.
பழைய இலக்கியச் செல்வங்களை ரசிக்கத் தேவையான ஒன்று.

ரசிகமணி டி.கே.சி. போன்றோரிடம் காணப்பட்ட ஒன்று. அப்படியான ஓர் அற்புத ரசனைக்கு நன்றி, அப்பாஜி!

ஜீவி said...

@ G.M. Balasubramaniam

ஆமாம், ஜிஎம்பீ சார்!

சின்ன தும்பியின் அலைச்சலை உன்னிப்பாகப் பார்த்தாலும் ஆச்சரியமாக இருக்கிறது. கண்டம் விட்டு கண்டம் தாண்டி நம்ம வேடந்தாங்கலுக்கு வந்து தங்கி இந்த சூழலை அனுபவித்து விட்டுப் போகும் பறவையினங்களை நினைத்தாலும் ஆச்சரியமா இருக்கு! ஒரு தடவை
வாஷ்பேசினின் நீரலைகளில் சிக்குண்டு மீண்ட குட்டியூண்டு எறும்பு ஜீவன்களைப் பற்றி எழுதியது அப்பாஜியின் கவனத்தைக் கவர்ந்தது
நினைவுக்கு வருகிறது.

'ஆச்சரியப்படவும், அனுபவப்படவும், பாடங்கற்கவும் எத்தனை எத்தனை இனியவைகளைப் படைத்தாய், இறைவா' என்று தொழத்தான் தோன்றுகிறது!

கோமதி அரசு said...

தொடர்ச்சியா இப்போ நடந்திருக்கிறதெல்லாம் தெய்வத்தின் வழிகாட்டல். அந்த வழி காட்டும் பாதை பார்த்து நடந்தா, எல்லாம் நல்லபடி முடியும்ங்கறதை மனப்பூர்வமா நான் நம்பறேன். //

நாராய்ணன் நம்பிக்கை நன்றாக இருக்கிறது.

கோமதி அரசு said...

தொடர்ச்சியா இப்போ நடந்திருக்கிறதெல்லாம் தெய்வத்தின் வழிகாட்டல். அந்த வழி காட்டும் பாதை பார்த்து நடந்தா, எல்லாம் நல்லபடி முடியும்ங்கறதை மனப்பூர்வமா நான் நம்பறேன். //

நாராய்ணன் நம்பிக்கை நன்றாக இருக்கிறது.

கோமதி அரசு said...

"கோலம் போடற மாதிரி மேடம். சொல்லப்போனா, தெய்வக் கோலம் . இன்ன கோலம் தான்னு தீர்மானிச்சு முன்னாடியே கோலப்புள்ளிகளை இட்டாச்சு.. புள்ளிகளை இணைச்சு கோலத்தைப் பூர்த்தி செய்யற வேலையை மட்டும் மனுஷங்க கையிலே கொடுத்திருக்கு.. அவங்க இல்லாம எதுவும்ன்னா அது அமானுஷ்யம் மாதிரி ஆயிடும் இல்லையா?.. அதுக்காகத் தான் அந்த ஏற்பாடு. . கண்ணுக்குத் தெரிஞ்சி அவங்க இன்வால்வ் ஆனாத் தான் அவங்களுக்கும் ஒரு அசட்டுத் திருப்தி. அதுக்காக அது. ஊர்மிளா மேடம், நீங்க தான் ஆரம்பிச்சு வைச்சீங்க. அதாவது கோலத்தைத் தொடங்கி வைக்கற பாக்கியம் உங்களுக்குத் தான் கெடைச்சது. அங்கங்கே போய்ட்டு மறுபடியும் கோலடப்பா இப்போ உங்க கைக்கு வந்திருக்கு. வித்யா மேடம் விட்ட இடத்திலேந்து தொடர்ந்து நீங்களும் புள்ளிகளை கோடிழுத்து இணைச்சுத் தொடருங்கள் மேடம். ப்ளீஸ்.." என்று அவன் கேட்டுக் கொண்ட பொழுது ஊர்மிளாவின் உடல் சிலிர்த்தது. ஏதோ தெய்வ ஆக்ஞையைக் கேட்ட மாதிரி அவள் முகம் பரவசத்தில் பளிச்சிட்டது.//

மனிதர்களின் நம்பிக்கைகளை அழகாய் நாராயணன் மூலமாய் நீங்கள் எழுதி இருக்கிறீர்கள்.

ஆனால் கடைசியில் நம்பினால் நடக்கும் புத்தகம் இல்லை என்றதும் நாராயணன் சோர்ந்து விடுவது கஷ்டமாய் உள்ளது.

புத்தகம் கிடைத்து லக்ஷ்மி, நாராயண் திருமணம் இனிதாய் நடந்தால் நல்லது.

கோமதி அரசு said...

நடக்கும்மென்பார் நடக்கும் நாவல் கிடைத்து எல்லாம் நல்லபடியாக நடக்கட்டும்.

பாச மலர் / Paasa Malar said...

கோலங்களைப் பற்றிய கோலங்கள் அழகு...அடுத்தடுத்த பகுதிகளைப் படிக்க்ப் போகிறேன்..

Related Posts with Thumbnails