மின் நூல்

Wednesday, July 11, 2012

பார்வை (பகுதி-54)

வித்யாவின் விழிகள் டி.வி. திரையில் நிலைகொள்ளாது தவித்தன.  ஆங்கில அகர வரிசைப்படி திரையில் நகர்ந்து கொண்டிருந்த நிறுவனங்களின் பெயர்களுடன் காணப்பட்ட அந்த நொடியிலான பங்கின் மதிப்பு விலையை அவள் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டு வந்தாள்.  அவள் குறிவைத்திருந்தது ஐந்து நிறுவனங்கள்.  அந்த ஐந்து நிறுவனங்களின் அப்பொழுதிய பங்கு விலை மிகவும் இறங்கித் தான் இருந்தது. இந்த இறக்கம் எந்த அளவுக்கு இறங்கப் போகிறது என்பது தான் கேள்வி.  எவ்வளவு குறைவான விலைக்கு வாங்குகிறோமோ அந்த அளவுக்கு அந்தப் பங்குகளின் விலை ஏறும் போது லாபம்.  இன்றைய ஷேர் மார்க்கெட்டின் இந்த இறக்கம் தனக்காகவே இறங்கியது போலிருந்தது அவளுக்கு.

'இதற்குத் தானே காத்திருந்தேன்- தாங்க் காட்' என்று முணுமுணுத்தபடி வித்யா தொலைபேசியை நெருங்கினாள்.  ஷேர்களின் ஏற்ற இறக்க விவரங்களை எழுதி வைத்திருந்த அந்த நோட்டுப் புத்தகத்தின் முதல் பக்கத்திலேயே ஸ்டாக் புரோக்கரின் அலுவலக தொலைபேசி எண்களை கொட்டை எழுத்துக்களில் குறித்து வைத்திருந்தது நல்லதாகப் போயிற்று.

மொத்தம் மூன்று எண்கள்.  முதல் எண்ணை அழைத்த பொழுது அந்தத் தொலைபேசி எங்கேஜ்டாக இருப்பது தெரிந்தது.  ஒரு கண் டி.வி. திரையில் பதிந்திருக்க, அவசரமாக ஹூக் ஸ்விட்சை அழுத்தி டயல்டோன் ஏற்படுத்திக் கொண்டு அடுத்த எண்ணை அழைத்த பொழுது கிடைத்த வாய்ஸ், லயனில் காத்திருக்கச் சொன்னது.  காத்திருக்க அவளுக்குப் பொறுமை இல்லை. இன்னொரு பக்கம் டி.வி. திரையில் மிகமிகக் குறைந்திருந்த அந்த சிமிண்ட் கம்பெனியின் ஷேர் மதிப்புத் தொகை கொஞ்சம் கொஞ்சமாக ஏறுவதைப் போலிருந்தது. ஸ்டீல் நிறுவனத்தின் பங்கும் இறங்கிய விலையிலிருந்து ஏற ஆரம்பிக்க.. ஆக, இந்த வீழ்ந்த விலை தான் நிறைய பேரை வாங்கத் தூண்டி ஏறத் தொடங்கியிருக்கிறது என்று நினைத்துக் கொண்டாள்.  பார்த்துக் கொண்டே இருக்கையில் நான்கு ரூபாய்கள் ஏறியிருந்தது ஏழாகி ஏற...  சரசரவென்று அந்தப் பங்குவிலை இன்னும் ஏறுவதற்குள் வாங்கி விட வேண்டும் என்கிற துடிப்பில், தொலைபேசியில்  மூன்றாவது எண்ணைத் தேர்ந்து அழைப்பதற்குள்  டி.வி. திரையில் மார்க்கெட் நேரம் முடிந்து விட்டதைத் தெரிவிக்கும் மணியோசை கிணுகிணுத்து திரையின் இடது பக்க மேல் மூலையில் பூஜை மணி மாதிரி சின்னம் தோன்றி குலுங்கிக் கொண்டிருந்தது.  கடிகாரத்தில் மணியைப் பார்த்தாள்.  சரியாக மூன்றரை! இன்றைய ஸ்டாக் மார்க்கெட்டின் வர்த்தக நேரம் முடிந்து விட்டது;  அவ்வளவு தான். இனி நாளை தான்.

'ச்சை'என்று மனம் கசந்தது.  கைக்கெட்டும் வரை வந்ததைக் கோட்டை விட்டாயிற்று. இந்த இழப்பு உணர்வு அவளுக்கு புது அனுபவம்.  முதன் முதல் நிஜமாக ஷேர் வாங்கலாம் என்று உட்கார்ந்த பொழுது ஏற்பட்ட அனுபவம் கசந்தது.  கெளதம் விளையாடுகிற டிரேட் விளையாட்டு மாதிரி தான்.  விளையாட்டு மாதிரி கற்பனையில் கோட்டை கட்டும் பொழுது எல்லாம் நடந்து விடுகிற மாதிரி சுலபமாகத் தான் இருக்கிறது.  நிஜம் என்று வருகிற பொழுது நிறைய யோசனைகள் வந்து சடாரென்று துணிந்து இறங்க முடியாத தயக்கத்தை ஏற்படுத்துகிறது என்று நினைத்துக் கொண்டாள்.  'அவ்வளவு நேரம் ஏன் யோசித்தாய்; வாங்கியிருக்கலாமில்லையா' என்று மனசின் இன்னொரு மூலையிலிருந்து அவளைப் பழித்துக் காட்டி கேள்வி எழுந்தது.  பத்து நிமிஷம் போலிருக்கும்.  டி.வி. திரையைப் பார்த்தபடி சோர்ந்து உட்கார்ந்திருந்தவள், ஒரே நாள் அனுபவத்திற்கு, அதுவும் எதுவுமே நிகழாத ஒன்றுக்கு இவ்வளவு குமைச்சல் கூடாதென்று ஒருவாறு தன்னை சமாளித்துக் கொண்டு எழுந்தாள்.

லேசாகத் தலையைக் கோதிவிட்டபடி சீப்பெடுத்து வாரிக் கொண்டாள். சோப் போட்டு முகம் அலம்பி டர்க்கி டவலால் துடைத்துக் கொண்டிருக்கையில் கொஞ்சம் உற்சாகம் தொற்றிக் கொண்ட மாதிரி இருந்தது.  ஸ்டிக்கர் பொட்டை நெற்றியில் கண்ணாடி பார்த்து அழுத்திக் கொண்ட பொழுது அம்மாவின் நினைவு வந்தது.  'எங்காலத்தில் எல்லாம் சாந்து தாண்டிம்மா.. கொட்டாங்கச்சி யில் குழைச்சு வைச்சிருப்போம்.  நீ கூட குழந்தையாய் இருக்கறச்சே உனக்கு இட்டிருக்கேன்' என்பாள்.  நடுவயிறு பெருத்து மீன் மாதிரி இருக்கும் சின்ன சிமிழிலிருந்து பிளாஸ்டிக் குச்சியில் மை எடுத்து விழிக்கடையில், நீட்டி விட்ட மாதிரி அம்மா தீட்டி விட்ட நினைவு கூட இருக்கிறது.  அப்படி கண் மை தீட்டும் பொழுதெல்லாம் கண்ணசைத்து விடாமல் இவள் கவனத்தைக் குவிக்க அம்மா கீழ் உதடை உட்புறமாகக் குவித்து 'களக்,களக்' என்று ஒரு விநோத ஒலியை எழுப்புவாள்.  பாவம், அம்மா.  அவள் மேல் ரொம்பவும் பிரியம். என்ன அடம் பிடித்தாலும் துளிக் கோபம் வர வேண்டுமே! சாதாரணமாய் இருக்கும் பொழுதே சந்தோஷமாய் இருக்கிறது மாதிரியான முகம். சிரித்துக் கொண்டே பார்த்துப் பார்த்து எல்லாம் செய்வாள்.  கல்யாணம் ஆன பிறகு, பொதுவாக வீட்டில் இருக்கும் பொழுது பவுடர் போடும் பழக்கம் வித்யாவுக்கு இல்லை.  எங்காவது வெளியில் கிளம்பும் பொழுது முகத்தில் எண்ணைய் வழிகிற மாதிரி டல்லடிக்கற உணர்வு வந்தால், முகம் அலம்பியவுடன் லேசாகத் தீற்றிக் கொள்வாள்.  வீட்டில் பெளடர் டப்பா இருக்கிறது தான்; ஆலிலை கிருஷ்ணன் டி.எஸ்.ஆர். சாண்டல் டப்பா.  தினமும் பள்ளிக்கூடத்திற்குக் கிளப்புகையில் கெளதமிற்கு அதைப் பூசி விடுவதோடு சரி.  ரிஷிக்கானால் ஹேர் ஆயில், பெளடர், செண்ட் என்று அத்தனை சமாச்சாரங்களும் அலர்ஜி. மொத்தத்தில் இந்த காஸ்மடிக் சமாச்சாரங்களுக்கு செலவு செய்வது தன் வீட்டில் ரொம்பவும் குறைச்சல் தான் என்று நினைத்துக் கொண்டாள்.

கெளதம் ஸ்கூல் விட்டு வருவதற்குள் சாயந்தர டிபனுக்கு ஏதாவது பண்ணலாமா என்று தோன்றியது.  காய்கறிக் கூடையைத் திறந்து பார்த்ததில்  வெங்காயம் இருந்தது தெரிந்தது. சிவப்பாய் நான்கு எடுத்துக் கொண்டாள்.  நல்லவேளை, கடலைமாவும் இருந்தது. எடுத்துக் கரைத்து வைத்துக் கொண்டாள்.  கால்மணியில் வெங்காய பஜ்ஜி ரெடியாவதற்கும் கெளதம் வருவதற்கும் சரியாக இருந்தது.

வந்தவன் ஸ்கூல் பையை முன் அறையில் போட்டிருந்த அவனது குட்டி ஸ்டடி டேபிளின் மேல் வைத்து விட்டு, கைகால் அலம்பித் துடைத்துக் கொண்டு வந்தான்.  ஷெல்ப் மாதிரி தடுத்துக் கட்டியிருந்த பூஜை இடத்திற்குப் போய் சம்புடத்திலிருந்து விபூதி இட்டுக் கொண்டு வந்தவன், அவள் பக்கத்தில் நெருங்கி வந்து வாசனை பிடித்தபடி, "என்னம்மா?.. வெங்காய பஜ்ஜியா?" என்றான்.

"ஆமாண்டா.  தட்லே உனக்கு வைச்சிருக்கேன், பாரு. எடுத்துக்கோ.." என்று அவனுக்குச் சொன்னவாறே காப்பி கலந்தாள்.

பஜ்ஜித் தட்டை எடுத்துக் கொண்டு சோபா பக்கம்  போனதும், "என்னம்மா.. வானவில் வந்தாச்சா?" என்று ஆச்சரியப்பட்டவன், "ஹை! அப்பா கதை.." என்று குதித்தான். பத்திரிகை அட்டை பார்த்து 'காதல் தேசம் - தொடர்கதை - இந்த இதழில் தொடக்கம்' என்று கட்டம் கட்டி போட்டிருப்பதை ஒவ்வொரு எழுத்தாகக் கூட்டிப் படித்தான்.  "அப்பா தொடர்கதை ஆரம்பிச்சாச்சு, அம்மா! பாத்தியா?"

அவளுக்குக் கூட இப்பொழுது தான் நினைவுக்கு வந்தது.  வரும் பொழுதே போஸ்ட் பாக்ஸில் கிடந்த பத்திரிகையை எடுத்து வந்து சோபாவின் மேல் போட்டவள், டி.வி.யில் ஷேர் மார்க்கெட் நிலவரத்தைப் பார்த்த ஜோரில் மறந்தே போய் விட்டாள்!  'காதல் தேசம்' ஆரம்பித்து விட்டதா?'..  என்று மனம் கூப்பாடு போட்டது.  அடுத்த நிமிடமே, தொய்ந்து போய், 'எது ஆரம்பித்து என்ன?.. கதைன்னா எல்லாமே வெறும் கற்பனை தானே! கற்பனையில் மனம் போன போக்கில் என்ன வேண்டுமானாலும் எழுதலாம்.  ஆனால் நிஜம் வேறு.  இப்போ ஷேர் வாங்க முடியாமல் போச்சே! அந்த மாதிரி நிஜம் வேறு' என்று நினைத்துக் கொண்டாள்.  'இதற்குள் உஷா ஆரம்ப அத்தியாயத்தைப் படித்திருப்பாள். இதோ கொஞ்ச நேரத்தில் நிச்சயம் வருவாள்.  வந்து கதையின் ஆரம்பம் பற்றி என்ன சொல்லப் போகிறாளோ?.. அவளுக்கு பதில் சொல்வதற்காவது படித்து வைக்க வேண்டும்' என்று நினைப்பு மண்ணுளிப் பாம்பாய் சுருக்கிச் சுருக்கி நீண்டது..

பத்திரிகையோடு சில தபால்களையும் கொண்டு வந்து வைத்த ஞாபகம் வந்தது.  எல்லாவற்றையும் ரிஷியின் அறைக்குப் போய் அவன் டேபிளின் மேல் வைத்தாள்.  வெளி ஹாலுக்கு வந்த பொழுது தொலைபேசி அழைத்தது. வேகமாய்ப் போய் எடுத்தாள்.

"ஹலோ..."

"ஹலோ, வித்யா.. நான் ஊர்மிளா பேசறேன்."

"ஓ!.. எப்படியிருக்கீங்க?.. " என்று கேட்ட பொழுது புதுமனுஷியாய் சந்தோஷம் குரலில் வழிந்தது.

"நாங்க ஃபைன்.  'காதல் தேசம்' தொடங்கியிருக்கே?.. பாத்தீங்களா.. தொடக்கம் லாம் நல்லாத்தான் இருக்கு..  படம்லாம் தூள் கிளப்பியிருக்காங்கள்லே?.."

"வெளிலே போயிருந்தேன், ஊர்மிளா.. 'வானவில்' வந்திருக்கு.. ஆனா, இன்னும் பிரிச்சுப் பாக்கலை.." என்று பொய் சொல்ல விரும்பாமல் தவித்தாள். "ரொம்ப தேங்க்ஸ். ஊர்மிளா.. இவர் இன்னும் ஆபிஸ்லேந்து வரலே.. லஷ்மணன் சார் நல்லா இருக்காரா?"

"ஓ.. நல்லா இருக்கார்..  அப்புறம், எதுக்குக் கூப்பிட்டேன்னா.. இன்னொரு சந்தோஷத்தையும் உங்க கிட்டே பகிர்ந்துக்கறத்துக்காக.."

"அப்படியா?" என்று கேட்ட ஆவலில் வித்யாவின் குரல் குழைந்தது.


(இன்னும் வரும்)

21 comments:

இராஜராஜேஸ்வரி said...

கற்பனையில் கோட்டை கட்டும் பொழுது எல்லாம் நடந்து விடுகிற மாதிரி சுலபமாகத் தான் இருக்கிறது. நிஜம் என்று வருகிற பொழுது நிறைய யோசனைகள் வந்து சடாரென்று துணிந்து இறங்க முடியாத தயக்கத்தை ஏற்படுத்துகிறது

நிதர்சன்ப் பார்வை...பாராட்டுக்கள்..

கோமதி அரசு said...

'எங்காலத்தில் எல்லாம் சாந்து தாண்டிம்மா.. கொட்டாங்கச்சி யில் குழைச்சு வைச்சிருப்போம். நீ கூட குழந்தையாய் இருக்கறச்சே உனக்கு இட்டிருக்கேன்' என்பாள். //

என் ஆச்சி அப்போது எல்லாம் சாந்து வீட்டில் செய்வார்கள். இப்போது குழந்தைக்கு வைக்க கொட்டாங்கச்சி சாந்து கடையில் கிடைக்கிறது அதை வாங்கி வைக்கிறோம்.

குழந்தை பிறந்த சமயம், குழந்தைக்கும், தாயுக்கும் வைக்க கர்றாழையில் மைசெய்து மைகூட்டில் வைத்து போட்டுவிடுவார்கள் .
உங்கள் பதிவை படித்தவுடன் அது நினைவுக்கு வந்து விட்டது.

ஸ்ரீராம். said...

கல்யாணம் நிச்சயமாகி விட்டதோ... வேணியின் அக்காவுக்கு? என்ன சந்தோஷ நியூஸ் என்று பார்க்க வேண்டும். ஷேர் அனுபவம் பற்றி விளக்கமாக எழுதி இருக்கிறீர்கள்.

அப்பாதுரை said...

கொட்டாங்கச்சியில் சாந்து.. தெரியவே தெரியாத விவரம். சின்ன ப்லேஸ்டிக் பாட்டிலில் குச்சி வைத்த மூடியுடன் சாந்து பார்த்திருக்கிறேன். திறந்தால் தாங்க முடியாத நாற்றம் வரும். வீட்டில் பெண்கள் எனக்கு கற்பூர வாசனை தெரியாது என்பார்கள்.

"போன் எங்கேஜ்டாக இருக்கு" என்றால் "to whom?" என்பார்கள். படிப்படியாகக் குறைந்து "லைன் பிசியாக இருக்கிறது" என்று சொல்லப் பழகிக் கொண்டது நினைவுக்கு வருகிறது :)

இன்னொருவரின் சந்தோஷத்தில் தன் ஏமாற்றத்தை உரசிப் பார்த்துப் பொறுமும் முதிர்ச்சி (!) எனக்கும் உண்டு.

G.M Balasubramaniam said...

இந்த ஷேர் மார்கெட் விவகாரம் அதில் கிடைக்கும் லாப நஷ்டங்கள் ஒரு விளையாட்டுதானோ என்று தோன்றுகிறது. சொத்தின் மதிப்பு கூடுவதோ குறைவதோ பேப்பர் அளவில்தானோ என்று எண்ணம் வருவதுண்டு. நிஜமாகவே பணம் கை மாறுகிறதா. 30 வருடங்களுக்கு முன் வாங்கிய நிலம் இன்று விற்று பணம் பண்ணினால் லாபம் அதில்லாமல் சொந்த உபயோகத்துக்கு என்று விட்டிருந்தால் மன அளவில்தான்லாப நஷ்டம்.ஷேர் மார்கெட் லாபம் வெறும் கானல் நீரா.?

Geetha Sambasivam said...

//கல்யாணம் ஆன பிறகு, பொதுவாக வீட்டில் இருக்கும் பொழுது பவுடர் போடும் பழக்கம் வித்யாவுக்கு இல்லை.//

நமக்கு எப்போவுமே இல்லை; பெண், மா.பெ.க்கும் தான். என்னோட ஃபோட்டோ அலர்ஜிக்காக வெளியே போகும்போது காலமைன் லோஷன் போட்டுக்கறதோடு சரி. அதுவும் ப்ளைன் காலமைன் லோஷன் மட்டுமே. லாக்டோ காலமைன் கூட இல்லை. :)))))))

Geetha Sambasivam said...

சாந்து எங்க அம்மாவோட அம்மா கூட்டிச் சிவப்புக்கலர் சேர்த்துக் கொட்டாங்கச்சியில் கொடுத்திருக்காங்க. அதற்கு விதவிதமான பொட்டு அச்சுக்கள் உண்டு. சூரிய, சந்திரர், முழுநிலா மாதிரி வட்டம், பிறை நிலா, மாம்பிஞ்சு, திலகம், ஸ்வஸ்திக், முக்கட்டு மாதிரி மூன்று பொட்டு, கிளாவர் மாதிரி எனப் பல அச்சுக்கள் விற்கும். எல்லாமும் ஒரு வளையத்தில் போட்டிருப்பாங்க. ஒரு நாளைக்கு ஒண்ணாக நவராத்திரிக்கு வைத்துக்கொண்டது உண்டு.

கரிசலாங்கண்ணிச் சாறு எடுத்துப் பாட்டி(அம்மாவோட அம்மா) மை கூட்டுவாங்க. மை கூட்டுகையில் அதை இருட்டறையில் வைக்கப் போகையில் வாய் திறந்து பேசக் கூடாது என்று மெளனமாகப் போவாங்க. அப்போத் தான் நாங்க சீரியஸாப் பேச்சுக் கொடுத்து வம்பிழுப்போம். இப்போல்லாம், மையும் இல்லை, சாந்தும் இல்லை, தலையில் பூவும் இல்லை.:))))

ஐந்து வருஷமாகப் பார்க்கும் கல்யாணங்களில் எல்லாம் கல்யாணப் பெண் தலையிலேயே பூவைக் கொஞ்சமாகத் தான் பார்க்க முடிகிறது. :))))

நான் இன்னமும் குங்குமம் தான். மதுரை போறவங்க வாங்கிட்டு வந்து கொடுத்துடுவாங்க. ஸ்டிக்கர் ஒத்துக்காது, பிடிக்கவும் பிடிக்காது. :))))))

Geetha Sambasivam said...

ஹிஹி, சாந்து மும்முரத்தில் இந்த அத்தியாயத்தின் விமரிசனத்தை மறந்தே போனேன். அவ்வளவு சுவாரசியமா இல்லையோனு தோணுது. முக்கியமாய் எதுவும் நடக்காதது காரணமோ? கல்யாணம் நிச்சயம்னு தெரிஞ்சால் சூடு பிடிக்கும்னு நினைக்கிறேன். பார்க்கலாம்.

பாச மலர் / Paasa Malar said...

சாந்து சமாச்சாரம்..நடுவில் மீன் போன்ற உப்பிய வயிறு...
ரசித்தேன்..

//ஒரே நாள் அனுபவத்திற்கு, அதுவும் எதுவுமே நிகழாத ஒன்றுக்கு இவ்வளவு குமைச்சல் கூடாதென்று ஒருவாறு தன்னை சமாளித்துக் கொண்டு எழுந்தாள்.//

பங்குச்சந்தை இறக்கம்...மனம் சொல்லிக்கொள்ளும் சமாதானம் வாழ்க்கையின் இறக்கத்தின் போது கூடப் பொருத்தமானதாகத் தோன்றுகிறது..

ஜீவி said...

@ இராஜராஜேஸ்வரி

இனிக் கதையை வழிநடத்திச் செல்லப் போகிற பார்வை இது தான்.

தொடர் வருகைக்கு நன்றி, ராஜி மேடம்.

ஜீவி said...

@ கோமதி அரசு

கோயில் சந்நிதிக் கடைகளில் கொட்டாங்கச்சி சாந்து கிடைக்கும் என்று நினைக்கிறேன்.

கற்றாழை மை! நினைவுக்கு வருகிறது.
அந்தக் கால அந்த மைக்கூட்டின் அழகே அழகு!

பகிர்ந்தலுக்கு நன்றி, கோமதிம்மா.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

நிஜத்தின் உருக்கொள்ளலுக்கு சில சேர்க்கைகள் தேவையாக இருக்கிறது.
இதுவும் அதுவும் சேர்ந்தால் தண்ணீர் என்று சொல்கிறோம். அப்படியான வேதியியல் சேர்க்கைகள் போலவே எல்லா நிகழ்வுகளுக்கும் அதற்கேற்ப வான சேர்க்கைகள் இருக்கக் கூடும். இந்த சேர்க்கையில் மாறுதல் ஏற்படும் பொழுது நினைப்பதற்கு மாறான நிகழ்வு. இந்த சேர்க்கை எப்படி நிகழ்கிறது, அதில் மனிதரின் பங்களிப்பு என்பதெல்லாம் உங்கள் யோசனைக்கு.

ஷேர்களும் இந்தக் கதையில் அவற்றிற்கான பங்களிப்பைச் செய்து
பங்கு கொள்கின்றன. இன்னும் அவற்றின் பங்களிப்பு தொடரவும் செய்கிறது.

பகிர்தலுக்கு நன்றி, ஸ்ரீராம்!

ஜீவி said...

@ அப்பாதுரை

வாருங்கள், அப்பாஜி!

சாந்து குழைத்து வைக்க கொட்டாங்கச்சி வாகாக இருக்கும். இப்பொழுதும் இந்த வகை கிடைப்பதாக கோமதிம்மா சொல்கிறார்கள்.

லைன் பிசி அவ்வளவு பழக்கப்படவில்லையோ என்று நினைத்தேன். அதே மாதிரி, 'ஹலோ' விளிப்புக்கும் உண்டு. ஆனால், 'ஹலோ' என்றாலே போன் தான் என்று ஆகிவிட்டதால், அதன் சிரஞ்சீவித்துவம் நீடிக்கிறது.

அது ஏமாற்றமாக இல்லாமல், உண்மையை உள்ளபடியே உணருகிற
மாற்றமாக படிப்படியாக வித்யாவின் உள்ளத்தில் உருவாகிக் கொண்டு வருகிறது. ஒருவிதத்தில், இது அடுத்த பார்வை.

ஜீவி said...

@ Geetha Sambasivam

சாந்து சமாச்சாரத்தில் பி.எச்டி., மாதிரி ஏதாவது இருந்தால், நிச்சயமாய் அது உங்களுக்குத் தான். :))

பலருக்கு குங்குமமும் அலர்ஜி என்பதால், ஸ்டிக்கர் பொட்டுக்குத் தாவி விட்டார்கள். அதனால், ஸ்.பொட்டு விற்பனை கொடி கட்டிப் பறக்கிறது! அதில் தான் எத்தனை வகை?.. யாராச்சும் இதை ஆராய்ச்சி சப்ஜெக்ட்டாக எடுத்துக் கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

//அவ்வளவு சுவாரசியமா இல்லையோனு தோணுது. முக்கியமாய் எதுவும் நடக்காதது காரணமோ?..//

அதில்லை, காரணம். நீங்கள் கதைப் போர்ஷனை மட்டும் கவனிப்பதால் வரும் விளைவு. 'நினைப்பதை எல்லாம் எப்படி எழுத்தாய் உருமாற்றி வடித்தெடுக்கிறோம்' என்கிற ஒரு மயன் வேலையும் மறைந்திருக்கிறது.
அதில் உங்கள் கவனம் செல்லவில்லை அதான் காரணம்.

தொடர்ந்து வந்து கருத்தைச் சொல்வதற்கு நன்றி, கீதாம்மா.

ஜீவி said...

@ பாசமலர்

அந்த ரசிப்பு உணர்ந்து மனத்தில் ஓட்டிப் பார்த்ததின் வெளிப்பாடு. அந்த ரசனைக்கு நன்றி, பாசமலர்!

ஏமாற்றம் எதிர்ப்படும் போது ஏதேதோ சமாதானங்கள் ஓடி வருகின்றன. அந்த சமாதானங்கள் இல்லை என்றால் தொய்ந்து போய் விடுவோம். அதுமட்டுமில்லை, இதோடு இந்த வேலை இல்லை, என்றாகிவிடும்.
அப்புறம் ராபின்ஸன் க்ரூஸோ எழுச்சிகளுக்கு வழியில்லை.
அதனால், மனசுக்கு இந்த சமாதான மருந்து பூசல் தேவை என்று தோன்றுகிறது.

ஜீவி said...

@ G.M.B.

தங்கள் கேள்விக்கான பதிலைக் கதைப்போக்கில் சொல்கிறேன்.

தொடர்ந்து வாசித்து வருவதற்கு மிக்க நன்றி, ஐயா!

கிருத்திகா ஸ்ரீதர் said...

நிறைய பின் தங்கிட்டேன் போலிருக்கு… எத்தனை முயன்றும் கடந்த பகுதிகள் ஞாபகம் வரவில்லை… முதலில் இருந்து படிச்சுட்டு வரேன்…

கிருத்திகா ஸ்ரீதர் said...

நிறைய பின் தங்கிட்டேன் போலிருக்கு… எத்தனை முயன்றும் கடந்த பகுதிகள் ஞாபகம் வரவில்லை… முதலில் இருந்து படிச்சுட்டு வரேன்…

சிவகுமாரன் said...

எத்தனை தொடர்களை விட்டுவிட்டு படித்தாலும், ஒரு சிறுகதையைப் படிப்பது போல் சுவாரசியமாகத் தான் இருக்கிறது.
சேர் மார்க்கெட் பற்றிய அலசலும் GMB யின் பின்னூட்டமும் யோசிக்க வைத்தன

ஜீவி said...

@ கிருத்திகா

அத்தியாயம் அத்தியாமாகத் தொடர்ந்து படிப்பதிலும் சில செளகரியங்கள் உண்டு.
மொத்த எழுத்தையும் ஒரே சமயத்தில் உள்வாங்கிக் கொள்கிற அனுபவம் வாய்க்கும். உங்கள் செளகரியப்படி படித்து விட்டு வாருங்கள்.

வருகைக்கு நன்றி, கிருத்திகா.

ஜீவி said...

@ சிவகுமாரன்

அந்த சுவாரஸ்யம் விடுப்பட்ட அத்தியாயங்களையும் படித்துப் பார்ப்பதற்கான விறுவிறுப்பைக் கூட்டட்டும்.

இன்றைய உலகம், தகவல் தொழில் நுட்ப உலகம். எதையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் இருந்தால் விரல் நுனியில் விவரங்கள் விரவிக் கிடக்கின்றன. ஒரு கதையில் சொல்வது கதைக் களனுக்கேற்பவான கதாபாத்திரங்களின் அனுபவமாகி குறுகிப் போகும். பங்குச் சந்தை மட்டுமல்ல, நமக்குச் சரிவரத் தெரியாத எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் தெரிந்து கொள்வதற்காக நாம் கொள்ளும் ஆர்வம் தான் நமக்குத் துணை. அது புதுசு புதுசாக பல கதவுகளைத் திறக்கும். இருந்தாலும் ஒரு கதையில் கதை படிக்கும் சுவை குன்றாத அளவுக்கு என்ன சொல்ல முடியுமோ அதைச் சொல்ல முயலுகிறேன்.

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி, சிவகுமாரன்.

Related Posts with Thumbnails