மின் நூல்

Saturday, September 22, 2012

பார்வை (பகுதி-60)

கீழ்த்தளம் வாடகைக்குக் கிடைத்தது அதிர்ஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும்.  அதுவும், வீட்டுக்குப் பக்கத்திலே மெயின் ரோடிலேயே என்பது பல விஷயங்களுக்கு ரொம்ப செளகரியமாகப் போயிற்று.

ஒரு வாரமாக வித்யாவும் உஷாவும் யோசித்து யோசித்து எடுத்த முடிவு.  முடிவு எடுத்தவுடன் அடுத்து செய்ய வேண்டியவைகளை விவரமாக ஒரு நோட்டுப் புத்தகத்தில் குறித்துக் கொண்டனர்.  குறித்துக் கொண்ட விஷயங்களில் தகுந்த இடம் கிடைப்பது தான் முக்கியமாகப் பட்டது. வல்லப கணபதி கோயிலுக்கு தரிசனத்திற்காகப் போயிருந்த பொழுது தான் புதுசாகக் கட்டிய அந்த கட்டிடத்தின் கீழ்த்தளத்தில் 'வாடகைக்காக' என்று போட்டிருந்த அறிவிப்பை வித்யா பார்த்தாள்.  அறிவிப்போடேயே தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் நம்பரும் இருந்தது.

வீட்டிற்கு வந்ததும் உஷாவிடம் முதல் வேலையாக விஷயத்தைச் சொன்ன பொழுது வேறு யாரும் முந்திக் கொள்வதற்குள் விஷயத்தை முடித்து விட வேண்டும் என்று அவள் துடியாய்த் துடித்தாள்.  அவள் கணவர் ஆபிஸூக்கு அன்று விடுப்பு போட்டிருந்தது நல்லதாகப் போயிற்று.  அந்த இடத்திற்குச் சொந்தக்காரர் அவருக்குத் தெரிந்தவராய் இருந்தது, அடுத்த நல்லதாய் அவர்களுக்கு ஆயிற்று..  வித்யா ரிஷிக்கு போன் போட்டுச் சொன்னாள்.  ரிஷி, உஷாவின் கணவரிடம் பேசினான். அடுத்து உஷாவின் கணவர், இடத்திற்குச் சொந்தக்கார நண்பரிடம் பேச கிட்டத்தட்ட அந்த விஷயம் முடிந்த மாதிரியே ஆகிவிட்டது. அன்று மாலை எல்லோரும் உட்கார்ந்து பேசும் போது வாடகை விஷயமும் முடிவாகி அலுவலகத்தைத் தொடங்க நாளும் குறித்து விட்டார்கள்.;

'அ' முதல் 'ஒள' வரை-- என்று முதலிலேயே தீர்மானித்திருந்த பெயரில் எந்த மாற்றமும் இல்லாமல், போர்ட் எழுத ஆர்டிஸ்ட்டிடம் ஆர்டர் கொடுத்தார்கள்.  ஆர்டிஸ்ட் மிகவும் பழக்கப்பட்டவர்.  இரண்டே நாட்களில் அற்புதமாக வேலையை முடித்துத் தந்தார்.  தன்னையும் அவர்கள் குறித்து வைத்திருந்த லிஸ்ட்டில் சேர்த்துக் கொள்ள விண்ணபித்தார். "நீங்களில்லாமலா?" என்று உஷா சொன்னதே அவருக்கு மகிழ்ச்சியாக இருந்தது. 

இந்த வியாபாரத்திற்கான நெட் ஒர்க்கை வித்யாவும் உஷாவும் சேர்ந்தே தயாரித்தார்கள்.  நகர்ப்புறங்களில் வாழ்பவர்களின் பல சங்கடங்கள் விசித்திரமானவை.  ஒரு பக்கம் தேவைகள், மறுபக்கம் அந்தத் தேவைகளுக்கு தரமான முறையில் உடனடித் தீர்வுகள் காணமுடியாத தவிப்பு. அப்படியான அவர்களின் தேவைகளைக்க் குறிவைத்து ஒரு பெரிய பட்டியலையே அவர்கள் தயாரித்திருந்தார்கள்.  ப்ளம்பர் வேலையிலிருந்து கல்யாண ஏற்பாடுகள் வரை எதையும் விட்டு வைக்கவில்லை..  இன்னொரு பக்கம் அப்படியான தேவைகளை உடனடியாகப் பூர்த்தி செய்யக் கூடிய நம்பகமான நபர்களைக் கொண்ட நிறுவனங்கள்.  கணக்கெடுத்ததில் அப்படியான நிறுவனங்கள் சிறிதும் பெரிதுமாக இருநூறுக்கும் மேலே தேறிற்று.  நிறுவன உரிமையாளர்களிடம் பேசிப்பார்த்த பொழுது தான், அவர்களின் முயற்சி மிகப் பெரிய அளவில் வெற்றியடைவதற்கான வெளிச்சம் தெரிந்தது.  நிறுவனங்களும், வாடிக்கையாளர்களுக்கும் தங்களுக்கும் இடையே இவர்கள் தொடங்கியிருக்கிற மாதிரியான ஒரு கம்பெனி இருந்தால் தங்கள் வேலை மிகச் சுலபமாக முடியும் என்று அபிப்ராயப் பட்டார்கள்.  ஒரு வேலைக்கு குறைந்த பட்சம் மூன்று நிறுவனங்கள் என்கிற விகிதாச்சாரத்தில் பட்டியலிட்டு முடித்த பொழுது முக்கால் வாசி வேலை முடிந்த மாதிரி இருந்தது.

வீட்டிற்குப் பெயிண்ட் அடிக்க வேண்டுமா, தண்ணீர் குழாய் ரிப்பேரா, சாக்கடை அடைத்துக் கொண்டு விட்டதா, எலெக்டிரிக் வேலையா இல்லை எலெக்ட்ரானிக் வேலையா, கல்யாணத்திற்கு சத்திரம் ஏற்படா, சமையல் வேலையா எதுவென்றாலும் உடனடியான தீர்வுக்கு 'அ' முதல் 'ஒள'வைத் தொடர்பு கொண்டால் போதும், இரண்டு மணி நேரத்திற்குள் அட்டண்ட் செய்யப்படும் என்று விளம்பர நோட்டீஸ்கள் அச்சடிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டன.

"நமக்குன்னு வாடிக்கையாளர்கள் அமைய வேண்டும்.  அதற்கு என்ன செய்யலாம்?" என்று உஷா தவித்தாள்.

"பேசாமல் உறுப்பினர் அட்டை வழங்கி விடலாம்.  அது வாடிக்கையாளர்களுக்கும் நமக்கும் ஒரு பந்தத்தை ஏற்படுத்தும்" என்றாள் வித்யா.

"உறுப்பினர் அட்டை இலவசமாகக் கொடுத்தால், அதில் சுவாரஸ்யம் இருக்காது.  குறைந்தபட்சமாக ஒரு தொகையை உறுப்பினர் சேர்க்கைக் கட்டணமாக வசூலித்து விடலாம்" என்றான் ரிஷி.  "அது எளிய மக்களும் உறுப்பினராக சேருவதற்கு வசதியாக மிகக் குறைந்த தொகையாக இருக்க வேண்டும்.  அதே சமயத்தில் அவர்களாக 'அ' முதல் 'ஒள' வரை சேவையை உபயோகப்படுத்திக் கொள்ள விருப்பமின்றி விலகும் பொழுது, அவர்கள் செலுத்தியிருக்கும் உறுப்பினர் கட்டணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும்" என்றான் அவன்.

உறுப்பினர் சேர்க்கைக் கட்டணத்தை ரூ.100/- ஆகத் தீர்மானித்தனர். பெரிய நிறுவனங்கள் தங்களுக்குக் கிடைக்கும் ஆர்டர்களுக்கு 30% கமிஷன் கொடுக்கத் தயாராக இருந்தார்கள்.  சிறிய நிறுவனங்கள் 15% கொடுக்க சம்மதித்தார்கள்.  பெரிய வேலைகளுக்கு பெரிய நிறுவனங்களையும் சிறு சிறு வேலைகளுக்கு சிறிய நிறுவனங்களையும் உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என்று தீர்மானமாயிற்று.  பெரிய நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் வேலைக்கு 20%-ம், சிறிய நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் வேலைகளுக்கு 10%-ம் தள்ளுபடி வாடிக்கையாளர்களுக்குத் தந்து விட வேண்டுமென்று கொள்கை ரீதியாகவே முடிவெடுத்தார்கள்.   பெரிசோ, சிறிசோ செய்கிற வேலை நறுவிசாக இருக்க வேண்டுமென்றும், குறித்த காலத்தில் கொடுக்கப்பட்ட பணியை முடித்துக் கொடுப்பதில் இரண்டாவது கருத்து இருக்கக் கூடாது என்பதிலும் கறாராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார் உஷாவின் கணவர்.  ஒவ்வொரு கட்ட ஆலோசனையிலும் வாடிக்கையாளர் திருப்திக்கே முதலிடம் கொடுக்க வேண்டும் என்பதிலும் அதில் எந்த சறுக்கலுக்கும் இடமில்லை என்பதில் மிக மிக கவனமாக இருந்தார்கள்.

நேரிலும் தொலைபேசி மூலமாகவும் உறுப்பினர்கள் 'அ' முதல் 'ஒள' வரை சேவையை உபயோகித்துக் கொள்ளலாம் என்று தீர்மானிக்கப் பட்டது.  வாடிக்கையாளர்கள் தங்களுக்கு வேண்டிய பணி தொடங்கும் நாளில் மொத்த செலவில் 50% பட்டுவாடாவும், பணி முடிந்தவுடன் பாக்கி பணத்தில் அவர்களுக்கான தள்ளுபடி கழித்துக் கொண்டு செலுத்த வேண்டும் என்றும் முடிவெடுத்தார்கள்.  எந்தப் பணியிலும் பணி முடிந்த பிறகு எந்தக் குறைபாடும் இருந்தால் அந்த குறைபாடு நிறுவனத்தின் செலவில் களையப்பட்டு வாடிக்கையாளர் திருப்திக்கே முதலிடம் கொடுக்கப்படும் என்கிற உறுதிமொழி, உறுப்பினர் விண்ணப்பப் படிவத்திலேயே கொட்டை எழுத்துக்களில் அச்சடித்து அதை உறுதிபட வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.


ரு சுபயோக சுபதினத்தில் 'அ' முதல் 'ஒள' வரை நிறுவனத்தின் தொடக்க நாள் விழா, களைகட்டியது.

சந்தனப் பேலா நீட்டி பன்னீர் தெளித்து என்று வெளி போர்டு பார்த்து உள்ளே நுழைந்தவர்கள், கிடைத்த வரவேற்பில் நனைந்தனர்.  புதுமாதிரியான உபசரிப்பு, புது மாதிரியான அனுபவம், புது மாதிரியான உற்சாகம் என்று கலந்து கட்டி எல்லாவற்றிலும் திட்டமிட்டு கலக்கியிருந்தாள் உஷா.

ஆரம்ப நாளன்றே அந்த அதிசயம் நடந்தது.  காலையிலேயே பதினோறு மணியளவிலேயே முன்யோசனையாக 'அ' முதல் 'ஒள' வரை சேவையை சுகிக்க உறுப்பினர் ஆனவர்கள் எண்ணிக்கை எழுபதைத் தாண்டியது.

"இது என்னங்க, புது மாதிரி கடை?"

"கடை இல்லை.  பதிவு அலுவலகம்.. சொல்லப்போனால் சேவை நிறுவனம்"

"என்ன பதிவு பண்ணுவாங்க?"

"எல்லாம். தினம் பொழுது விடிந்தால் எத்தனை தேவை இல்லை நமக்கு?.. நியாயமான உங்களோட அனைத்துத் தேவைகளின் தீர்வுகளுக்கும் இங்கே அணுகலாம். நல்ல தரமான சேவை.  விரைவான சேவை.  குறைவான தொகையில். மொத்த கட்டணத் தொகையில் நிறுவனம் தன் அன்பளிப்பாகக் கொடுக்கும் தள்ளுபடியும் உண்டு."

"மெய்யாலுமேவா?  இல்லை, சும்மாக்காச்சுமா?.."

"சும்மா இல்லை, நிஜமாவே!  வீட்டிற்கு கலர் வாஷ்-- பளபள பெயிண்ட்! இவ்வளவுக்கும் எவ்வளவு ஆகும் என்று நினைக்கிறீர்கள்?.. உள்ளே வந்து விசாரியுங்கள். உறுப்பினர் ஆகுங்கள்.  உங்களுக்கு அளிக்கும் ஒவ்வொரு சேவைக்கும் உண்மையான தள்ளுபடி உண்டு."

"அதுசரி, அது என்னங்க,  புது மாதிரி பேரு?  'அ' முதல் 'ஒள' வரைன்னா"

"இங்கிலீஷ்லே சொல்லலையா,  A to Zன்னு?..  அந்த மாதிரி தமிழ்லே! தமிழ் உயிரெழுத்திலே! அ முதல் ஒள வரைன்னு!  உங்கள் எல்லாத் தேவைகளுக்கும் தீர்வு, ஒரே கூரையின் கீழே!  வருக! வருக!"

ஓர் ஆணும், பெண்ணும் மாற்றி மாற்றி கேள்வியும் பதிலுமாய் பேசுவதை புதுவகை விளம்பரமாய் 'அ' முதல் 'ஒள' வரை அலுவலக வாயிலில் கட்டியிருந்த லவுட் ஸ்பீக்கர் சொல்லிக் கொண்டிருந்தது....  வாசகங்களை மாற்றி வெவ்வேறான வகையில் இப்படி நிறைய தயாரித்து வைத்திருந்தார்கள்.  கேட்பவர்களுக்கு சலிப்பேற்படுத்தாமல், ஆவலைத் தூண்டும் வகையில் அந்த தயாரிப்புகள் இருந்தன.  மொத்தத்தில் தெருவில் சென்றவர்களின் முக்கால் வாசிப்பேர் கவனத்தை அந்த 'அ' முதல் 'ஒள' வரை அலுவலக விளம்பரம் கவர்ந்து கொண்டிருக்கையில்....

அந்த சமயத்தில் இரண்டு வாழைமர லோடோடு வாசல் பக்கம் டயர் வண்டி.  ஒன்று வந்து நின்றது.   வண்டிக்கு முன்னால் பைக்கில் வந்தவர், "சீட்டு வாங்கியாந்துடறேன். வெயிட் பண்ணு.." என்று வண்டியோட்டியிடம் சொல்லிவிட்டு, 'அ' முதல் 'ஒள' வரை அலுவலகத்திற்குள் நுழைந்தார்.

முன் அறையில் வித்யா கிடைத்தாள்.  வாழைமரங்கள் போய்ச்சேர வேண்டிய விலாச அட்டை கொடுத்து விளக்கினாள். "மேட்லி பிரிட்ஜ்ஜாண்டே திரும்பி கொஞ்ச தூரம் உள்ளார போனா கல்யாண சத்திரம் தெரியும்"  என்று சத்திரத்தின் பெயரைச் சொன்னாள்.  சத்திர வாசல்லே பெரிய டிஜிட்டல் போர்ட்லே, திருவளர் செல்வி லஷ்மி - திருவளர் செல்வன் நாராயணன்-ன்னு பெயர்கள் பளபளக்கும். அதான் அடையாளம்.  பெரியசாமி இல்லத் திருமணம்ன்னு பெரிசா வளைவு கூட கட்டியிருப்பாங்க..

"சத்திரம் தெரியும்மா.  சேர்த்திடறேன்."

"மணமகனுக்கு அப்பா பெரியசாமி.  அவர் அங்கே தான் இருக்கார்.  அவர் கிட்டே கேட்டுகிட்டு, அவங்க சொல்றபடி வாழைமரங்களைக் கட்டிட்டு வாங்க..  கையோட மொபைல்லே அம்சமா ஒரு போட்டோவும் எடுத்திட்டு வாங்க" என்றாள். "பில் செட்டில்மெண்ட்லாம் இங்கே தான்.  அவங்க கிட்டே ஒண்ணும் கேட்கப்படாது.  சரியா?.."

"சரிம்மா.."

அலுவலகம் ஆரம்பித்து முதல் பணியாக ஒரு கல்யாணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளுமாக, அதுவும் நாராயணன்-லஷ்மி கல்யாண ஏற்பாடாக இருந்ததில் வித்யாவிற்கு ஏக குஷி.

அந்தக் கல்யாண சத்திரத்தில் தான் எழுத்துப்பட்டறையின் போது தான் பையன் ஜாதகத் தேவை பற்றி ஊர்மிளா வித்யாவிடம் பிரஸ்தாபித்தாள். அவள் கேட்டதற்கு அடுத்த நாளே நாராயணனின் ஜாதகத்தை வித்யா அந்த கல்யாணச் சத்திரத்தில் தான் ஊர்மிளாவிடம் கொடுத்தாள்.  எழுத்துப் பட்டறைக்குப் போகும் போது இந்த மணமகன் நாராயணனின் தந்தை பெரியசாமி தான் தன் ஆட்டோவில் இந்த கல்யாண சத்திரத்தில் தான் உஷாவையும் அவளையும் இறக்கி விட்டார்.  அப்பொழுது கூட, 'கல்யாண பேச்சு பேசிக் கொண்டே கல்யாண சத்திரத்திற்கு கொண்டு வந்து விட்டிருக்கீங்க.. உங்க பையனின் கல்யாணமும் இனிதே நடக்கட்டும்' என்று வித்யா பெரியசாமியிடம் சொன்னாள்.

இந்தக் கல்யாணம் சம்பந்தப்பட்ட நிறைய விஷயங்களுக்கு சம்பந்தப்பட்ட இந்தக் கல்யாண சத்திரத்திலேயே இவர்கள் கல்யாணமும்! என்ன பொருத்தம், இந்தப் பொருத்தம்?  உம்?..

எது தான் முன் கூட்டியே தெரிகிறது?..

பின்னால் எல்லாம் நடந்த பிறகு தான், முன்னால் நடந்ததெல்லாம் வரிசை வரிசையாக நினைவுக்கு வந்து 'அட, இதெல்லாம் முன்கூட்டியே தெரியாம போச்சே'ங்கற நினைப்பும் வர்றது.

நிகழ்வுகளின் வரிசைப்படுத்துதலில் இருக்கும் சூட்சுமமே அது தானோ என்று வித்யா நினைத்தாள்.




                                           (நிறைவுற்றது)



    






25 comments:

ஸ்ரீராம். said...

ஏன் ஃ காணோம்?!
திடீரென நிறைவு பெற்று விட்ட உணர்வு!

அப்பாதுரை said...

எதிர்பாராத நேரத்தில் கதை முடிகிறது. நிறைவாக இருக்கிறது.
நிகழ்ச்சியின் நிகழ்வுகளுக்கு ஒரு அங்கீகாரம்.
பிரமாதமான நடை. அபார உழைப்பு.
பாராட்டுக்கள்.

கோமதி அரசு said...

வீட்டிற்குப் பெயிண்ட் அடிக்க வேண்டுமா, தண்ணீர் குழாய் ரிப்பேரா, சாக்கடை அடைத்துக் கொண்டு விட்டதா, எலெக்டிரிக் வேலையா இல்லை எலெக்ட்ரானிக் வேலையா, கல்யாணத்திற்கு சத்திரம் ஏற்படா, சமையல் வேலையா எதுவென்றாலும் உடனடியான தீர்வுக்கு 'அ' முதல் 'ஒள'வைத் தொடர்பு கொண்டால் போதும், இரண்டு மணி நேரத்திற்குள் அட்டண்ட் செய்யப்படும் என்று விளம்பர நோட்டீஸ்கள் அச்சடிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டன. //
தினம் தினம் வீட்டுப் பெண்கள் எவ்வளவு விஷ்யங்களை சாமாளிக்க வேண்டி உள்ளது இனி ’ ‘அ’ முதல் ஒள’ வரையை தொடர்பு கொண்டு சொல்லி விட்டு நிம்மதியாக இருக்க போகிறேன்.

முதல் வேலையே கல்யாண மண்டபத்திற்கு வாழை மரம் கட்டுவதா! அதுவும், லக்ஷ்மி, நாராயணன் திருமண விழாவுக்கு என்ன பொருத்தம்.
இறைவன் எப்படி எல்லாம் வழி நடத்துகிறார்.
விதயா, உஷா ஆரம்பித்த அலுவலகம் சீரும் சிறப்புமாய் நடைபெற வாழ்த்துக்கள் கதை நிறைவு பெற்றது என்று படிக்கும் போது ஏதோ எல்லோரையும் (விதயா,ரிஷி, ஊர்மிளா, ல்க்ஷ்மணண், ) இனி எப்போது பார்ப்போம் என்ற எண்ணத்தை தடுக்க முடியவில்லை.
பூவனம் அருமை.
வாழ்த்துக்கள்.

sury siva said...

நன்றாக இருக்கிறது.
தொண்டு செய்யவேண்டும் என்ற எண்ணமே
ஆண்டவன் அனுக்ரஹம் இருக்கிறது என்று தான்
பொருள் கொள்ளவேண்டும்.

அந்தத் தொண்டுக்கு ஒரு சிறு கட்டணம் வசூலித்தாலும்
செய்யும் தொழிலை தெய்வமாகவும், மனஸ்சுத்தியுடன்
செய்கையில் மனிதனில் தெய்வம் வெளிப்படுகிறது.

இந்த ஏ டு இசெட் பணிகளில் நிறுவனத்தார்கள் அவர்கள்
அனுப்பும் பணியாரளர்களைப் பற்றிய நம்பகத்தன்மை,
பூர்வீகம், அவர்களது உண்மையான இருப்பிடம் ஆகிய‌
தகவல்கள் தருவதில்லை, அல்லது, அவர்களிடமும் அவை
இல்லை என்பதால், வாடிக்கையாளர்கள் பெருமளவில்
ஏமாற்றம் அடைகின்றனர் . சிலர் என்னைப்போல நொந்துபோயும்
இருக்கின்றனர்.

ஒரு கதை என்று பார்த்தால் மிகவும் நன்றாக இருக்கிறது.
அதை சொல்லும் பாணியும் சிறந்ததே.

சுப்பு ரத்தினம்.

Geetha Sambasivam said...

etho avasarama mudichappola irukku! santhekangalai ketka ippo time illai. marupadi varen.

G.M Balasubramaniam said...


நிறைவு தந்து நிறைவுற்றது. வாழ்த்துக்கள்.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

'ஃ' உயிரெழுத்து இல்லையே, ஆயுத எழுத்துன்னா?..

ஆரம்பித்தது அக்.2011-ல். கிட்டதட்ட ஒரு வருடம். இந்த 'பார்வை' தவிர வேறெந்த பதிவும் எழுதவில்லை. 60-வது அத்தியாயத்திற்காகக் காத்திருந்தேன்.

பேருக்கு கதை என்ற ஒன்றை வைத்துக் கொண்டு பல விஷயங்களை பேசியிருக்கிறோம்.
(பார்த்திருக்கிறோம்) அதனால் தான்
இன்னும் நிறைய விஷயங்களைப் பேசலாமே என்று தோன்றுகிறது.

சிறுகதை, பெருங்கதை ஆன நினைவுகளை மறக்க வில்லை. நன்றி. தொடர்ந்து வேறு வேறு தளங்களில் சந்திக்கலாம்.

ஜீவி said...

@ அப்பாதுரை

உங்களது பின்னூட்டமும் தனித்த முத்திரை தாங்கிய அங்கீகாரம் தான்.
உணர்ந்த பாராட்டிற்கு நன்றி.

நிறைவாக இருக்கிறது என்று உங்களிடம் சான்றிதழ் வாங்குவது என்ன லேசுப்பட்ட காரியமா? நன்றி, அப்பாஜி!

ஜீவி said...

@ கோமதி அரசு

கதா பாத்திரங்களோடு நீங்கள் ஒன்றிப் படித்தது தெரியும். அதனால் தான் ரொம்ப நீட்டாமல், திருவளர்ச் செல்வி, செல்வன் திருமணத்தை சீக்கிரமாகவே நிகழ்த்தி விட்டேன்.

தங்கள் வாழ்த்துக்கள் இன்னும் நிறைய எழுத சக்தி அளித்திருக்கிறது. அடிக்கடி வாருங்கள், கோமதிம்மா. நன்றி.

ஜீவி said...

@ Sury Siva

வாருங்கள், சூரி சார்! தாங்கள் தொடர்ந்து படித்துக் கொண்டு வந்திருக்கிறீர்கள் என்பதே மகிழ்ச்சியாக இருக்கிறது.

மனிதனில் தெய்வம் வெளிப்படுவது தாங்கள் சொல்லியிருப்பது போல உண்மை.

//ஒரு கதை என்று பார்த்தால் மிகவும் நன்றாக இருக்கிறது.அதை சொல்லும் பாணியும் சிறந்ததே.//

சொல்ல வேண்டியதை அழுத்தமாகச் சொல்லிப் பாராட்டியதற்கு நன்றி, சூரி சார்!

ஜீவி said...

@ Geetha Sambasivam

கதையை எழுதி முடித்து விட்டு, வேண்டுமென்றே இரண்டு நாட்கள் எந்த பின்னூட்டத்தையும் பார்க்கவில்லை. அதனால் அவற்றை வெளியிடவும் இல்லை. இந்தத் தொடரைப் பிரசுரமானவுடனேயே படித்துத் தொடர்ந்து பின்னூட்டம் இட்டவர்கள் ஏழு, எட்டு பேர்கள் தான். அவர்களின் தனித்தனியான கருத்தைத் தெரிந்து கொள்ளவதற்கும் காத்திருந்து பின்னூட்டங்களை வெளியிடாமல் இருந்தேன். இன்னும் இருவருக்காகவும் காத்திருக்கிறேன்.
முழுமையான உங்கள் கருத்திற்கும் காத்திருப்பேன்.

படித்து விட்டதைத் தெரியப்படுத்தி விட்டமைக்கு நன்றி, கீதாம்மா.
அவசரமில்லை. முடிந்த பொழுது வாருங்கள். நன்றி.

ஜீவி said...

@ G.M. Balasubramanian

'நிறைவு தந்தது' என்கிற வார்த்தைகள் மகிழ்சியையும் கூடவே தந்தது.

வேறெந்த வேலைகளிலும் வேண்டிய கவனம் செலுத்தாது, இதிலேயே கவனமாக இருந்ததற்கு பரிசு, இது தான்.

மிக்க நன்றி, ஜிஎம்பீ சார்!

ஸ்ரீராம். said...

ஒரு புதிய தளத்தில், புதிய பிஸினஸில் எல்லோரும் மும்முரமாகி விட்டார்கள் என்று சொல்லி, திருமணம் நிச்சயமாகி விட்டது என்பதை மறைபொருளில் சொல்லி நிறைவு செய்து விட்டீர்கள். தொடங்கியது ஒரு நாள் நிறைவு பெறத்தான் வேண்டும்! ஆனால் உங்களுக்கு நிறைவு பெற்றதில் ஏதோ நிறைவு இல்லாதது போல எனக்குத் தோன்றுவது பிரமையா! உங்கள் பின்னூட்டங்கள் படித்ததில் தோன்றியது! ஏதோ வளர்த்த குழந்தையை இளவயதில் திருமணம் செய்து பிரிந்தது போல உணர்வோ... தோன்றியது, கேட்டு விட்டேன்.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

//ஒரு புதிய தளத்தில், புதிய பிஸினஸில் எல்லோரும் மும்முரமாகி விட்டார்கள் என்று சொல்லி, திருமணம் நிச்சயமாகி விட்டது என்பதை மறைபொருளில் சொல்லி நிறைவு செய்து விட்டீர்கள்.//

வாருங்கள், ஸ்ரீராம். மறுவருகைக்கு நன்றி.

சென்ற அத்தியாயத்தில் வராஹமிஹிரருடன் வித்யா பேசிக்கொண்டிருந்த போது:

"ப்ளஸ்ன்னா, நமக்கு நன்மை கொடுக்கறது. மைனஸுன்னா நமக்குத் தீமை கொடுக்கறதா?"

"நமக்கில்லை. சமூகத்திற்கு. இந்த நமக்கு என்பதெல்லாம் கொஞ்ச காலத்துக்குத் தான். அப்புறம் நமக்கு என்பதே நம்முள் அருகிப் போயிடும். நற்காரியங்களில் நாம் ஈடுபட ஈடுபட நாமும் சமூகமும் ஒரே நேர்கோட்டில் ஒண்ணாயிடுவோம். ஒரு ஸ்டேஜில் நமக்கு நன்மைங்கறது சமூகத்தின் நன்மையாயிடும். 'பயன் மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம் நயனுடையான் கண் படின்'ங்கற நிலை."

"புரியறது. மனசிலே பதியற மாதிரி ரொம்ப எளிமையா சொல்றீங்க. அப்படிப் பதியறதெல்லாம் அப்படியே எங்களை நடந்துக்க வைக்கும்" என்று ஏதோ உறுதி தன்னுள் பிறந்த மாதிரி சொன்னாள்.

-- இந்த உறுதியின் நீட்சி தான், அ முதல் ஒள வரை. கற்பனையில் காணும் சாதிப்புகளை விட நிஜ வாழ்க்கையில் தன்னால் முடிந்தவரை சமூகத்திற்கு உதவியாய் இருக்க வேண்டும் என்கிற எண்ணம் கொஞ்சம் கொஞ்சம் வித்யாவின் மனசில் வலுவடைவதை அதற்கு முந்தைய அத்தியாயங்களில் கோடி காட்டியிருந்தேன். நிதர்சன உலகம், வணிகவியல் படிப்பு, ஷேர் மார்க்கெட்டில் பங்கு கொள்ளல்,
ஷேரின் விலை உயர்தல், எதிர்கால தன் உலகை ஸ்தரப்படுத்திக் கொள்ள வித்யா கொள்ளும் ஈடுபாடுகள், இதெல்லாமே எதிர்கால வித்யாவை படம் பிடித்துக் காட்ட எடுத்த முயற்சிகள். வேலைக்குச் செல்லாவிட்டாலும் பொருளாதார விஷயங்களில் ஈடுபாடு கொண்டு 'மத்யமர்' வித்யா மாதிரி பெண்கள் வாழ்க்கையை சவாலாகக் கொள்ள வேண்டும் என்கிற ஆசை வித்யா ரூபத்தில் வெளிப்பட்டிருக்கிறது.

பல அத்தியாயங்களுக்கு முன்பே லஷ்மியின் கல்யாணம் குறித்து நிறைய எழுதி, நீட்டி, எப்பொழுது அந்தப் பெண்ணின் திருமணம் நடக்கும் என்கிற எதிர்பார்ப்புக்கு வாசித்தவர்கள் வந்து விட்டனர். கோமதிம்மா இதைக் குறிப்பால் வேறு உணர்த்த ஆரம்பித்து விட்டார்கள். இனிமேலும் லஷ்மியின் கல்யாணத்தை நீட்டுவது சலிப்பேற்ப டுத்தும் என்கிற நிலை. நாராயணனின் மனசுக்கேத்த மனைவியாய் அவள் அமைவதாகவும், புது ஃபிளாட்டை வாடகைக்கு விட்டு விடலாம், அம்மா-அப்பாவோடையே (மாமியார்-மாமனாருடன்) அம்மாவின் வியாபாரமான பூ வியாபாரத்தில் உதவியாக இருக்க லஷ்மி விரும்புவதாக அந்த பாத்திரத்தை இன்னும் உயர்த்திப் பிடிக்கத் தீர்மானித்திருந்தேன். ஒரே தொடரில் எல்லாம் என்று இல்லாமல் மற்றதுகளில் இனி நிறைய விரவ உத்தேசம்.

லஷ்மிக்கு அடுத்து அவள் தங்கை கிருஷ்ணவேணியின் கல்யாணம் இருக்கிறது. லஷ்மியே குழந்தை என்றால், அவள் இன்னும் சின்ன குழந்தை அல்லவா?.. வேலை பார்க்கும் பெண். கவலையில்லை.
அதனால் கவலையெல்லாம் லஷ்மிக்குத் தான் என்று ஆயிற்று.
நல்ல மாப்பிள்ளை- நல்ல குணவதியான பெண். புதுக் கல்யாண தம்பதிகளுக்கு வாழ்த்துச் சொல்லுவோம்.

இதற்கு முந்தைய அந்த பார்வையற்றவரின் கதை பாகத்தில்,
வாத்திய இசை - சிந்தஸைஸர் இசை, மியூசிக் தெரபி என்று வேறு சில விஷயங்களைப் பேசினோம். இதில் பத்திரிகைகள், பிரசுரங்கள், மற்ற வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயங்கள் என்று... நிறைய நிறைய பேச வேண்டியிருக்கிறது என்று நிறைவு பெறாமல் இன்னும் பாக்கியிருக்கிறது.

'வாசகருடன் கதை தான் பேச வேண்டுமே தவிர, அந்தக் கதையை எழுதியவன் வலிந்து எழுதியதற்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு பேசக் கூடாது' என்பார் எனதருமை ஜே.கே.

பதிவுலகில் அத்தனை நம் சக பதிவர்களும் எழுத்தாளத் தோழர்கள்.
பகிர்தலே இங்கு வேலை. அந்த பகிர்தல் தான் நடக்கிறது.

இன்னும் நிறைய பேசலாம்;பகிர்ந்து கொள்ளலாம்; பழகிக் களிக்கலாம்.
மிக்க நன்றி, ஸ்ரீராம்!

dondu(#11168674346665545885) said...

முதலில் வந்த பார்வை கதையுடன் அதை நிறுத்தி விட்டு இப்போதைய கதையை புதிதாகத் துவங்கியிருக்கலாம்.

இரண்டும் ஒன்றாக ஒட்டவில்லை.

முதல் கதையில் ஒரு கதை கோணத்தை கொண்டு செல்ல முயன்று பிற்கு அதை மாற்றிக் கொண்டது தெரிந்தது (பார்வையற்றவர் காதால் கேட்ட அவதூறு).

கதை நடக்கும் காலகட்டத்தில் குழப்பம், ஏனெனில் நீங்கள் காண்பித்த ஒரு பிரயாணம் சென்னையில் இப்போது ஒன் வே விதிகளால் சாத்தியமேயில்லை.

மொத்தத்தில் ஏமாற்றமே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பாச மலர் / Paasa Malar said...

நிறைய விஷயங்களை அறிந்து அலசி மகிழ்ந்த நிறைவு....
தற்காலத்தில் வியாபாரம் தொடங்கி முன்னேற வேண்டும் என்ற எண்ணம் அனைவரிடமும் மேலோங்கி வருகிறது..நேற்றுத்தான் ஒரு நண்பர் இந்த A to Z அமைப்புகள் பற்றியும் online shopping e-commerce பற்றியும் பேசிக் கொன்டிருந்தார்.

திருமணச் செய்தியுடன் மங்களகரமாக முடிந்துள்ளது...

அடுத்த பகுதி எப்போது என்று காத்திருக்க வேண்டியதில்லை என்ற நினைவு சற்று வருத்தத்தைத் தருகிறது..

என்றாலும் உங்கள் எழுத்தில் நான் பயிலும் பாடங்கள் தொடரும் என்ற நம்பிக்கை மகிழ்வு தருகிறது..

கூர்மையான பார்வையின் கோணங்கள் புத்தியைத் தீட்டத் தவறவில்லை...

வாழ்த்துகள்..பாராட்டுகள்..

கோமதி அரசு said...

"வீட்டார் என்று எல்லாரையும் சொல்ல முடியாது. சொல்லப் போனா, கல்யாணப் பெண் அந்த லஷ்மியைக் கூட நான் பார்த்தது கிடையாது. ஆனா, அந்த லஷ்மியோட தங்கையை நன்னாத் தெரியும்.." என்று சொன்ன போது 'அந்த தங்கை யார் என்று இப்பொழுது நான் சொன்னால், உனக்குக் கூட அவளைத் தெரியும்' என்று சொல்ல நினைத்ததை ஊர்மிளா கஷ்டப்பட்டு சொல்லாமல் தவிர்த்தாள்...

"ரொம்ப நல்லதாப் போச்சு.." என்றான் நாராயணன். "எனக்கும் தெரிஞ்சவங்களா, அந்த குடும்பத்துக்கும் ஓரளவு தெரிஞ்சவங்களாய் நீங்க இருக்கறது ரொம்ப செளகரியமாய் போச்சு.." என்றான்.

நாராயணன் வேணியை தெரிந்து கொண்டு இருப்பார் இல்லையா!

ஊர்மிளா, லக்ஷ்மணன் கடைசி அத்தியத்தில் வராதது என்னோவோ போல் உள்ளது.
அவர்கள் நாராயணன் மணவிழாவில் எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்து கொண்டு இருப்பார்கள் இல்லையா?
லக்ஷ்மி, நாராயணன் திருமணத்தை நான் கேட்டதால் சீக்கிரமே முடித்து விட்டதை அறிந்து மகிழ்ச்சி தான்.
இன்னும் சிலவாரங்கள் நாராயணன் எதிர்பார்த்த மாதிரி லக்ஷ்மி நடந்து கொண்டாள் என்றோ அல்லது லக்ஷ்மி, நாராயணன் வீட்டு திருமண விழாவில் எல்லா பாத்திரங்களையும் கூட்டி ஒரு மகிழ்ச்சி உரையாடல் நிகழ்த்தி நிறைவு செய்து இருக்கலாம்.

கோமதி அரசு said...

புதுக் கல்யாண தம்பதிகளுக்கு வாழ்த்துச் சொல்லுவோம். //

லக்ஷ்மி,நாராயணன் தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள்.
அவர்கள் வாழ்வில் எல்லா நலங்களும், வழங்களும் பெற்று மனநிறைவாக பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.

ஜீவி said...

@ Dondu

//மொத்தத்தில் ஏமாற்றமே.//

அந்தளவுக்கு எதிர்பார்ப்பு இருந்திருப்பது தெரிகிறது.

உங்களுக்குப் பிடித்துப் போன 'ஆத்மாவைத் தேடி..'யைத் தொடரப் போகிறேன். அங்கு உங்களுக்கான இந்த ஏமாற்றத்தைச் சரிக்கட்டிக் கொள்ளலாம்.

தொடர்ந்து வாசித்து முடித்து கருத்து சொன்னமைக்கு நன்றி, டோண்டு சார்!

அப்பாதுரை said...

//வாசகருடன் கதை தான் பேச வேண்டுமே தவிர, அந்தக் கதையை எழுதியவன் வலிந்து எழுதியதற்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு பேசக் கூடாது

அசை போட வைத்த மேற்கோள்.

ஆன்மாவைத் தேடி பற்றி நானும் கேட்க நினைத்திருந்தேன்.

ஜீவி said...

@ பாசமலர்

எதிர்பார்த்திருந்தேன், வந்து கருத்து சொன்னமைக்கு நன்றி, பாசமலர்.

இது வேறு மாதிரி என் கற்பனையில் தோன்றிய A to Z. 'அ முதல் ஒள வரை' செயல்பாட்டை உற்று நோக்கினால் அந்த வித்தியாசம் புரியும்.

தனக்கு வரும் கமிஷனை (வெகு நியாயமாக) உண்மையாகவே வாடிக்கையாளர்களுடன் பகிர்ந்து கொள்ளும் புத்திசாலித்தனம் தான் அதன் வெற்றிக்கு வித்து. இரண்டாவது, நிறைவேறும் பணியின் சிறப்பில் எந்த வித சமரசமும் இன்றி முழுக்கவனம் செலுத்துவது. வாடிக்கையாளர் நலனே பெரிது என்று எண்ணிச் செயல்படுவது.
சமூக நலனுடன் சேர்ந்த சொந்த வளர்ச்சிக்கு என்றைக்குமே வெற்றி உண்டு என்கிற நம்பிக்கையின் வெளிச்சக் கீற்று.

காத்திருந்ததில் வெளிப்பட்ட சந்தோஷம் பெரிய விஷயம். உங்கள் உயர்ந்த ரசனைக்கும் அன்பிற்கும் மிக்க நன்றி, பாசமலர்.

ஜீவி said...

@ கோமதி அரசு

//"ரொம்ப நல்லதாப் போச்சு.." என்றான் நாராயணன். "எனக்கும் தெரிஞ்சவங்களா, அந்த குடும்பத்துக்கும் ஓரளவு தெரிஞ்சவங்களாய் நீங்க இருக்கறது ரொம்ப செளகரியமாய் போச்சு.." என்றான்.

நாராயணன் வேணியை தெரிந்து கொண்டு இருப்பார் இல்லையா!//

இல்லை, மேடம். 'கல்யாணப் பெண்ணின் தங்கையை யார் என்று சொன்னால்' என்று ஊர்மிளா மனத்தில் நினைத்ததோடு சரி.
யார் என்று தான் சொல்லவில்லையே!

அதே மாதிரி, நாராயணன் தான் தன் அக்காவைப் பார்க்க வரப்போகும் மாப்பிள்ளை பையன் என்று கடைசி வரை வேணிக்கும் தெரியாது.

இந்தத் தெரியாதுகளுக்கும், தெரியப் படுத்தாமைகளுக்கும் காரணம் நிகழ்ச்சிகளின் இயல்பான வளர்ச்சிப் போக்குகளைக் கண்காணிப்பதற்காகத் தான். 'அவ்வளவு பெரிய ப்ளாட்டுக்கு தான் உரிமையாளன் என்கிற விஷயத்தையும் சொல்ல வேண்டாம்'
என்று ஊர்மிளாவிடம் நாராயணன் கேட்டுக் கொண்டதும் இதே மாதிரியான காரணத்தினால் தான்!

அறுபது அத்தியாயங்களோடு கண்டிப்பாக முடித்து விட வேண்டுமென்று எண்ணம்.ஐம்பத்தாறு அத்தியாயம் வரும் பொழுதே அறுபதாவது அத்தியாயத்திற்கான மேட்டர் ரெடி. அப்படியும் 59வது அத்தியாயம் வரும் பொழுது இந்த அத்தியாயத்திற்கு என்ன எழுதலாம் என்கிற யோசனையில் வராஹமிஹிரர் கை கொடுத்தார்.

சில விஷயங்களை கோடி காட்டிச் சொல்வதோடு விட்டுவிடுவது வழக்கம் தான். கதையின் பின்னால் வருவது கூட அடைகாக்க முடியாமல் சிலர் கற்பனையில் முன்னாலேயே முகிழ்த்து விடுவதும் உண்டு.

கண்ணகி- கோவலன் கல்யாணத்தின் போதே, பெண்கள் கூடி ஆடிப் பாடி வாழ்த்தும் சாக்கில்,"காதலர் பிரியாமல், கவவுக்கை நெகிழாமல் தீதறுக.." என்று பின்னால் நடக்கப் போவதைத் தனி உத்தியாகச் சொல்லிப் போவார், இளங்கோ அடிகளார். அவர் மன்னன்!

இன்னும் எழுதப்போகிற பதிவுகள்
காத்திருக்கிற எண்ணத்தில் நிறைவு செய்து விட்டேன்.

தனி ஈடுபாட்டுடன் கதா பாத்திரங்களோடு ஒன்றி தொடர்ந்து
படித்துக் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி, கோமதிம்மா.

ஜீவி said...

@ அப்பாதுரை

//அசை போட வைத்த மேற்கோள்.//

ஜே.கே.யின் கதைகளில், அவரது புதினங்களுக்கான முன்னோட்டங் களில்,இலக்கிய அரங்கப் பேச்சுக்களில் என்று ஒரு காலத்தில் இந்த மாதிரி நிறைய அசை போட்டிருக்கிறேன். நினைத்துப் பார்க்க நினைத்துப் பார்க்க இன்றும் அவற்றின் வீச்சு பிரமிப்பூட்டுகிறது.

கொஞ்சம் இடைவெளி விட்டு, தயாரிப்புகளை சேகரம் பண்ணிக் கொண்டு 'ஆத்மாவைத் தேடி'யைத் தொடர்ந்து விடலாம்.

தங்கள் நினைவுகளுக்கு நன்றி, அப்பாஜி!

இராஜராஜேஸ்வரி said...

முதல் வேலையே கல்யாண மண்டபத்திற்கு வாழை மரம் கட்டது !!!!
லக்ஷ்மி, நாராயணன் திருமண விழாவுக்கு என்ன பொருத்தம்.

என்ன பொருத்தம், இந்தப் பொருத்தம்?

பூவனம் மலர்ந்து மனம் நிறைக்கிறது...

(நிறைவுற்றது)

ஜீவி said...

@ இராஜராஜேஸ்வரி

தங்கள் வருகைக்கும் பூவனத்தின் அழகைச் சொல்லி மகிழ்ந்தமைக்கும் மிக்க நன்றி, மேடம்.

Related Posts with Thumbnails