மின் நூல்

Tuesday, March 26, 2019

வசந்த கால நினைவலைகள்

                                                 5

சீட்டுப் பணம், எல்.ஐ.ஸி. வீட்டுக் கடன், GPF அட்வான்ஸ்கள் என்று எல்லாம் சேர்ந்து  இரண்டே வருடங்களில்   சென்னையில்  நகர்ப்புறத்தில்  730 சதுர அடி புத்தம் புது வீடாக உருவெடுத்தது.  எல்லாமே மூன்று இலட்சத்திற்குள் அடக்கம்.   அந்த மூன்று  இலட்சத்திற்குத் தான்  அந்தக் காலத்தில் அவ்வளவு படாத பாடு.!..

சென்னை மீனாட்சி கல்லூரியில் தனியொரு கட்டிடத்தில் AMIE படிப்புக்காக வகுப்புகள் நடந்தன.  பெரும்பாலும் வெளியூர் மாணவர்கள்.  ஹாஸ்டல் தங்கல்.  என் பையனுக்கோ  +2 வில் கிடைத்த அனுபவம் ஹாஸ்டல் என்றாலே வெறுத்துப் போய்விட்டது.  சொந்த வீடு, சொந்த சமையல் என்று தீர்மானித்து விட்டான்.  அந்த நேரத்தில் Datapro என்ற கணினி நிருவனத்தில்  கணினிக் கல்வியும் கற்று வந்தான்.  அதற்காகவே தினமும் மைலாப்பூர் சென்று வந்தான்.  AMIE படிப்புக்காக சைதாப்பேட்டை ஜோன்ஸ் ரோடில் இருந்த ஒரு கல்லூரி விரிவுரையாளரிடம் காலை நேரத்தில் ஓரிரண்டு பாடங்களுக்கு  ட்யூஷன்.

AMIE படிப்பை முடித்தால் சார்ட்டர்டு இன் ஜினியர் பட்டம் கிடைக்கும்  அதற்கு மேல்  தொழிற்கல்விக்கான  மேற்படிப்பு படிக்க முடியும். ஆனால் ரெகுலர் வகுப்புகள் இல்லாமல் சொந்தத் திறமையில் படிக்க வேண்டியிருப்பதாலும் கல்லூரிக்குப் போகும் சந்தோஷம் இல்லாத வெறுமையினாலும் இளையோர் மத்தியில் இந்தக் கல்விக்கு ஆர்வம் இல்லாமலும் பெரும்பாலும் தெரியாமலும் இருந்தது.   பல தொழிற்கூடங்களில் AMIE  முடித்தால் இன்ஜினியருக்கான பதவி உயர்வு உண்டு என்பதாலும் ரெகுலர் கல்லூரிக்குப் போக வேண்டிய அவசியம் இல்லை என்பதினாலும் தொழிற்கூடங்களில் பணியாற்றும் பல வயதானவர்கள் வீட்டுப் படிப்பாகக் கொண்டு AMIE கல்வி கற்று வந்தனர்.  அதனால் இந்த படிப்புக்கே ஒரு வயதான களை என்றும் உண்டு.  தேர்வுக் கூடங்களில் கூட 40 வயதிற்கு மேலானவர்களே பெரும்பாலும் இருப்பர்.  அவர்களுக்கிடையே சிறு வயது  இளைஞர்களைக் கற்பனை பண்ணிக் கூடப் பார்க்க முடியாது.  என்றாலும் இந்தச் சூழ்நிலைகள் எல்லாம் என் மகனின் AMIE படிப்பு ஆர்வத்தைக் குலைத்து விடவில்லை  தனக்கு மறுக்கப் பட்டதை எப்படியாவது பெற்று விட வேண்டும் என்ற கூடுதல் உழைப்பார்வம்  மனத்தின் அடி ஆழத்தில்  பசுமரத்தில் பொறித்த எழுத்துக்கள் போலப் படிந்து  போய் விட்டது.

AMIE படிக்கும் பொழுதே என் மகன்  AMIETE என்ற கல்வியும் கற்று வந்தான்.
AMIE,  AMIETE என்ற இரண்டுமே ஒரே மாதிரியானவை தான்.  இரண்டுமே நான்கு வருட படிப்பு.  இரண்டுமே தொழிற்கல்வியில் மேற்படிப்புக்காக தகுதி உள்ளவை.  AMIE-க்கு தலைமையகம் கல்கத்தாவிலும்,  AMIETE-க்கு தலமையகம் தில்லியிலும் இருந்தது.  AMIETE  என்பதற்கு விரிவு,  Associate Member of Institute of  Electronics and Telecommunication Engineers.  அதனால் தொலைபேசித் துறையில் வேலை செய்வோருக்கு பதவி உயர்விற்கான வாய்ப்பளிக்கும் தேர்வாகவும் இது இருந்தது.   AMIE மற்றும் AMIETE இரண்டிலும் எடுத்திருந்த பாடம் என்னவோ Electonic and Telecommunication  கல்வி தான்.

நான் தொலைபேசித்  துறையில் இருந்தாலும் இதெல்லாம் பற்றிய ஞானம் இல்லாமலேயே இருந்தேன்.  எல்லாமே தன் முயற்சியில் என் மகன் தானே தெரிந்து கொண்டது தான்.   மவுண்ட் ரோடில் இருந்த  British  Consulate General அலுவலத்திலிருந்த  நூலகத்தில்  உறுப்பினராக பதிவு செய்து கொண்டான்.   அந்த வாசகசாலையில் தான் இந்த படிப்புகளுக்கான reference புத்தகங்கள் கிடைக்கும் என்று எனக்குப் பின்னால் தெரிந்தது.    மகனைப் பார்க்க  சென்னை வந்திருந்த பொழுது   ஒரு நாள் "ஏம்ப்பா.. இப்படி ஒரே மாதிரியான ரெண்டு படிப்பு படிக்கறதுன்னு  ஏன் அவஸ்த்தைப் படறே? . . படிப்பைக் குறுக்கிக்கோ.. ரொம்ப சிரமப்படாதே.." என்று அஞ்ஞானத்தில் நான்  சொன்ன போது, "இருக்கட்டும்ப்பா.. ஒண்ணும் சிரமமில்லை.." என்று ஒரே வரியில் பதில் சொல்லி விட்டான்.

ஒரே பாடதிட்டத்தில் அப்படியான இரண்டு கல்வி இறைவனின் ஏற்பாடு என்பது பின்னால் தெரிந்த பொழுது சிலிர்த்துப் போனேன்.   முன்னால் நடந்த சில செயல்களின் தாத்பரியம் முகத்தில் அறைந்த மாதிரி பின்னால் தெரியும் போது நாம் பல சமயங்களில் திகைத்துப் போகிறோம்.  இறைவனின் இருப்பு அப்பொழுது தான் நமக்கு புலப்படுகிறது.   இதற்காகத் தான் இதுவா என்று   கைகூப்பித் தொழுகிறோம்.

IETE கல்வியினுடனான தொடர்பு  National Book Trust, India-வை என் மகனுக்கு அறிமுகப்படுத்தியது.  தேசத்தின் தலைநகரிலிருந்த  NBT-யின் தலைமையகத்துடன் பழக்கம் ஏற்பட அவர்கள்  வெளியிட்ட சில ஆங்கில  புத்தகங்களை தமிழில் மொழியாக்கம் செய்ய  முடியுமா என்று கடிதத்  தொடர்பு கொண்டு என் மகனைக் கேட்டனர்.   அவனின் சம்மதம் கிடைத்ததும்   அவர்கள் அனுப்பி வைத்த முதல் புத்தகம்,   ROBO AND  ROBOTICS . இந்தப் புத்தகம் ஐஇடிஇ - எம்பிடி இணைந்த பதிப்பாக வெளியிடப் பட்டிருந்தது.

மூலப் புத்தகத்தை  ஆங்கிலத்தில் எழுதியவர் திரு. எம்.ஆர். சிதம்பரா.  கர்னாடக மாநிலம் 'சிரா'வில் பிறந்தவர்.  அமெரிக்காவில் வாஷிங்டன் பல்கலைக் கழகத்தில் பத்தாண்டுகள் பணியாற்றியவர். பின்னர் இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தின்  (Indian  Institute of Science)  கணினித் துறையில் பேராசிரியராக இருந்தவர்.  இங்கு ரோபோ பற்றிய கல்விக்காகவே  இளநிலை பட்டப்படிப்பைத் தொடங்குவதில் ஆர்வம் கொண்டிருந்தவர். இவரது  பெயர் அமெரிக்க அறிவியல் துறைசார் ஆண்கள், பெண்கள்  (American Men and women of Science)   பட்டியலில்  இடம் பெற்றுள்ளது. 

இந்த அறிஞரின் ROBOTS  AND  ROBOTICS  நூலை ஜீவா NBT-க்காக  தமிழில் மொழியாக்கம் செய்தான்.  'இயந்திர மனிதனும் அதன் இயக்கவியலும்' என்று தலைப்பிட்டிருந்தான்.  அந்நாளைய நேஷனல் புக் டிரஸ்ட் ஆஃப் இந்தியாவில்  திருமதி சுப்புலஷ்மி என்ற அறிஞர் தமிழ் மொழிபெயர்ப்புக்கான பிரிவில் தலைமைப் பதவியில் இருந்தார்.  இந்த நூல் தலைப்பை அவர் மிகவும் பாராட்டி தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதியிருந்தார்.

எந்த ஒரு மொழிபெயர்ப்பும் வார்த்தைக்கு வார்த்தை ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு மாற்றுவதில்லை. சொல்லும் கருத்தை உள்வாங்கிக் கொண்டு அர்த்தம் சிதைந்து விடாமல் இன்னொரு மொழியில் எடுத்துச் சொல்வது தான் நல்ல
மொழியாக்கத்திற்கான இலக்கணம்.  அந்த லாவகம் இந்த நூலில் மிகச் சிறப்பாக மிளிர்ந்தது என்றே சொல்ல வேண்டும்.

அறிவியல் நூலை மொழிபெயர்ப்பது மற்ற மொழியாக்கங்களை விட கொஞ்சம் சிரமம்.  பாடப்புத்தகங்கள்  மாதிரி வரட்டுத்தனமான நடை  அமைந்து விடக் கூடாது.  அதே நேரத்தில் நம் சொந்தக் கற்பனையில் எதுவும் எழுதி விடலாகாது.    அறிவியல் விஷயம் தான். இருந்தாலும் பண்டிதர்களின் கட்டுரை போலவும் இருந்து விடக் கூடாது.  படக் குறிப்புகளிலிருந்து முன்னட்டை, பின்னட்டை, முன்னுரை என்று  எல்லாவற்றையும் வாசிப்பவர் பார்த்தவுடன் இயல்பாய் வாசிக்கிற நடையில் அமைக்க வேண்டும்.   புதுப்புது தமிழ்ச் சொற்களை நம் மொழியில் நாமே தேர்ந்தெடுத்து அங்கங்கே மொழியாக்கத்தில் உபயோகப்படுத்தினால் இன்னும் எடுப்பாக இருக்கும்.  மொத்தத்தில்  பிற மொழிப் படைப்பை நம் மொழியில் ஆக்கப்பெற்ற நூல் போலவே  படித்துக் களிக்கிற நேர்த்தியில் அமைக்க வேண்டும்.

கன்னி முயற்சி தான்.  இருந்தாலும் தனக்கென்று தொற்றிக் கொண்ட உற்சாகத்திலும்,  ரோபோ இயக்கத்தை தமிழில் தெளிவாக எடுத்துரைக்க ஒரு அகில இந்திய அமைப்பின் ஆதரவில் அரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்ற தாகத்தில்  எந்தத் தவறும் நேர்ந்து விடக் கூடாது என்ற பொறுப்புணர்ச்சியுடன்  மொழியாக்கம் நிறைவுற்று  கையெழுத்துப்   பிரதியை தட்டச்சு செய்து    பதிவுத் தபாலில் NBT தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தாயிற்று...  ஒரே வாரத்தில் உங்கள் மொழிபெயர்ப்பு பிரமாதம் என்று என்பிடி தமிழ்ப் பதிப்பிலிருந்து கடிதம் வந்து விட்டது. அந்தக் கடிதத்திலேயே அடுத்து இன்னொரு அறிவியல் நூலை தங்களால் மிகச் சிறப்பாக தமிழில் மொழியாக்கம் செய்ய முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது;  நூலை தங்கள் முகவரிக்கு அனுப்பி வைக்கலாமா  என்றும் கேட்டிருந்தார்கள்..


(தொடரும்)


நூல் வேண்டுவோருக்கு:

இயந்திர மனிதனும் அதன்  இயக்கவியலும்   (ISBN 81-237-1905-1)

தமிழாக்கம்:  ஜீவா

நேஷனல் புக் ட்ரஸ்ட்,  இந்தியா

ஏ-5,  கிரீன் பார்க்,  புதுதில்லி -  110016

விலை:  ரூ. 24/-





18 comments:

ஸ்ரீராம். said...

​//தனக்கு மறுக்கப் பட்டதை எப்படியாவது பெற்று விட வேண்டும் என்ற கூடுதல் உழைப்பார்வம் //

இது போன்ற ஆர்வங்கள்தான் உழைப்பை உயிர்ப்பாக்குகின்றன.

படிக்கும்போதே மொழிபெயர்ப்புப்பணி... அவரது வீச்சை அறிந்துகொள்ள முடிகிறது.

நான் said...

நல்ல செய்தி. மகிழ்ச்சி.

கோமதி அரசு said...

//தனக்கு மறுக்கப் பட்டதை எப்படியாவது பெற்று விட வேண்டும் என்ற கூடுதல் உழைப்பார்வம் மனத்தின் அடி ஆழத்தில் பசுமரத்தில் பொறித்த எழுத்துக்கள் போலப் படிந்து போய் விட்டது.//

உழைப்பார்வத்தால் உயர்ந்த உங்கள் மகனின் அனுபவங்கள் உழைத்து உயர துடிக்கும் இளைஞர்களுக்கு உதவும்.
உங்கள் மகனுக்கு வாழ்த்துக்கள்.

கோமதி அரசு said...

//ஒரே வாரத்தில் உங்கள் மொழிபெயர்ப்பு பிரமாதம் என்று என்பிடி தமிழ்ப் பதிப்பிலிருந்து கடிதம் வந்து விட்டது. அந்தக் கடிதத்திலேயே அடுத்து இன்னொரு அறிவியல் நூலை தங்களால் மிகச் சிறப்பாக தமிழில் மொழியாக்கம் செய்ய முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது; நூலை தங்கள் முகவரிக்கு அனுப்பி வைக்கலாமா என்றும் கேட்டிருந்தார்கள்.//

தனக்கு கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாக செய்து இன்னொரு நூலை மொழியாக்கம் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை அவர்களுக்கு வழங்கி விட்டது அறிந்து மகிழ்ச்சி..

வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

G.M Balasubramaniam said...

மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை எந்நோற்றான் கொல் எனும்சொல்

முற்றும் அறிந்த அதிரா said...

படிச்சேன் எனச் சொல்ல வந்தேன்...

வெங்கட் நாகராஜ் said...

அறிவியல் நூல் மொழியாக்கம் கடினமானது. அதைச் சிறப்பாக செய்து இருப்பது அறிந்து மகிழ்ச்சி.

மேலுன் தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

படியாக்கம் (cloning) எனப்படுகின்ற என் நூலை எழுதியபோது சிரமப்பட்டேன். அறிவியல் நூல் மொழியாக்கம் சிரமமே. நூலாசிரியர் பாராட்டத்தக்கப்படவேண்டியவர். அறிமுகத்திற்கு நன்றி.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

உழைப்பை உயிர்ப்பாக்குகின்றன--- வார்த்தைக் கோர்வையை ரசித்தேன்.

உங்கள் பின்னூட்டம் உணர்ந்த ஒன்றாய் இருப்பதில் மகிழ்ச்சி.

ஜீவி said...

@ அ. நம்பி

நல்ல செய்திகளுக்கு மகிழ்வது மனித இயல்பு.

நம்பி என்றால் ஆடவரில் சிறந்தோர் என்று அர்த்தம். நம்பிகள் அறிவிலிகளாய் இருப்பதில்லை என்பது சரித்திர உண்மை.

அறிவுடை நம்பியைத் தெரியுமோ, உங்களுக்கு?

தெரியவில்லை என்றால் சொல்லுங்கள்.. அவனைப் பற்றி ஒரு பதிவே போடுகிறேன்.

ஜீவி said...

@ கோமதி அரசு

எதை எழுதினாலும் யாருக்காக உதவ வேண்டும் என்ற எண்ணமே நோக்கமாகிறது.

சொந்த விஷயங்களை எழுதுவதில் இயல்பாகவே சுணக்கமும், கூச்சமும் கொண்டவன் நான். ஜிஎம்பீ சார் கூட இப்பொழுது தான் உங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படுத்துகிறீர்கள் என்ற அர்த்தத்தில் சொல்லியிருக்கிறார். பிறருக்கு பயனப்டுவதை எதற்காக மறைக்க வேண்டும் என்ற உணர்வில் எழுதத் தொடங்கியிருக்கிறேன்.

தொடங்கியதும் தான் தெரிகிறது, இந்தப் பகுதியில் ஒரு நாவல் அளவிற்கு நிறையப் பேசலாம் என்று. ஆகத் தொடர்கிறேன்.

ஜீவி said...

@ ஜிஎம்பீ

மகன் -தந்தை, தந்தை - மகன் என்று நிறையத் தான் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

மகள் - தாந்தை, தந்தை - மகள் என்று வரும் பொழுது அவை கடமையாகி விடுகிறது போலும்.

மகள் தந்தைக்காற்றும் உதவிகள் இந்தக் காலத்தில் நிறைய உண்டு.

உங்கள் அனுபவத்தில் பதிவு எழுதக் கூடிய சப்ஜெக்ட் இது.

ஜீவி said...

@ தீர்க்கதரிசி அதிரா

அடுத்த பதிவையும் படிக்கப் போகிறேன் என்று தீர்க்கதரிசமாய் சொல்லக்கூடாதோ?

ஜீவி said...

@ வெங்கட் நாகராஜ்

வாங்க, வெங்கட்! IETE - NBT பற்றியெல்லாம் தலைநகர்ச் செய்திகளைச் சொல்வீர்கள் என்று எதிர்பார்த்தேன்.

எனக்கு இப்பொழுத்லெல்லாம் தில்லி என்றாலே உங்கள் ஞாபகம் தான் வரும்.

ஜீவி said...

@ Dr. Jambulingam

Cloning - பிரதி--க்குப் படியா?.. பிரதி எடுப்பது போலவான உருவாக்கம் எனபதினால் படியாக்கமா?..
எனக்கு இப்படி டக், டக்கென்று வார்த்தைகள் நினைவில் படிவதில்லை. அதனால் சிரமமாக இருக்கிறது. நான் அந்நாளைய மணிப்பிரவாள நடைக்குப் பழக்கப்பட்டவன் ஆதலால் அடுக்குமொழி தோற்றம் கொடுக்கும் வடமொழி கலந்த தமிழ் பின்னிப் பிணைந்து பிரவாகமெடுக்கும்.
அண்ணாவும், கலைஞரும் மணிப்பிரவாள நடையில் வித்தகர்கள். அவர்கள் அடுக்கு மொழியில் தமிழின் அழகு மிளிர்வதற்குத் தான் முக்கியத்வம் கொடுத்தவர்களாய் உணர்கிறேன்.

தங்கள் பாராட்டை என் மகன் பார்ப்பான். அறிஞரிடமிருந்து வந்த பாராட்டிற்கு அகமகிழ்வான்.

jeevagv.blogspot.com என்பது ஜீவாவின் வலைத்தளம். படித்துப் பாருங்களேன். உங்களுக்குப் பிடிக்கும்.

வே.நடனசபாபதி said...

நீங்கள் சொன்னதுபோல் அநேகம் பேருக்கு AMIE என்ற படிப்பும் AMIETE என்ற படிப்பும் இருப்பது இன்னும் தெரியாது. தங்கள் மகனின் விடாமுயற்சியையும் தன்னம்பிக்கையையும் கண்டு என்னால் வியக்காமல் இருக்க முடியவில்லை. தான் என்ன படிக்கவேண்டும் என்று தீர்மானித்த அவரை எப்படிப் பாராட்ட! அவருக்கு என் வாழ்த்துகள்!

‘முன்னால் நடந்த சில செயல்களின் தாத்பரியம் முகத்தில் அறைந்த மாதிரி பின்னால் தெரியும் போது நாம் பல சமயங்களில் திகைத்துப் போகிறோம். இறைவனின் இருப்பு அப்பொழுது தான் நமக்கு புலப்படுகிறது.’ என்ற தங்களின் கருத்து ஏற்புடையது. இதை நானும் உணர்ந்திருக்கிறேன்.

மொழிபெயர்ப்பு இலக்கணம் பற்றி சரியாய் சொல்லியிருக்கிறீர்கள். மூலக்கருத்தை உள் வாங்கி பொருள் மாறாமல் எழுதுவது என்பது ஒரு கலை. அதை தங்கள் மகன் திறம்பட செய்திருப்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்ன?
தங்களின் நினைவலைகளில் மூழ்க காத்திருக்கிறேன்.

ஜீவி said...

@ நடனசபாபதி

உங்கள் ஆசிகளுக்கு நன்றி, ஐயா.

'இதை நானும் உணர்ந்திருக்கிறேன்'-- என்ற வரி தான் முக்கியம். இந்த உணர்தல் தான் மனிதப் பிறப்பின் ஆகப் பெரிய சக்தியாகத் திகழ்கிறது.

என் மகனின் மொழிபெயர்ப்பு நூல்களைப் பற்றி இந்த நினைவலைகள் வரிசையில் கூற வேண்டும் என்ற நினைப்பை ஏற்படுத்தியதே நீங்கள் தான். சமீபத்திய உங்களது மொழிபெயர்ப்பு பற்றிய பதிவு தான். மிக்க நன்றி.

Thulasidharan V Thillaiakathu said...

உங்கள் மகன் வியக்க வைக்கிறார். அப்போதே மொழி பெயர்ப்பு அதுவும் அறிவியல் புத்தகம் மொழி பெயர்த்ததில் நல்ல அனுபவனும் கிடைத்திருக்கும் கற்கவும் முடிந்திருக்கும். மிக மிக அருமை!

துளசிதரன், கீதா

கீதா: //தனக்கு மறுக்கப் பட்டதை எப்படியாவது பெற்று விட வேண்டும் என்ற கூடுதல் உழைப்பார்வம் //

இந்த வரிகள் என் மகனுக்கும் அப்படியே பொருந்தும்.

Related Posts with Thumbnails