மின் நூல்

Monday, September 30, 2019

மனம் உயிர் உடல்

10.  தியானம் வேண்டுவோருக்கு


காதலர்களுக்கு மட்டுமல்ல கவிஞர்களுக்கும் இதயம்  தான் மனதைக் குறிப்பிட்டுச் சொல்லும் சொல்லாகப் போயிற்று.  இதயம் என்பது இரத்த சுத்திகரிப்பு நிலையம்.  அவ்வளவு தான் அதன் வேலையே.  இருந்தும் என்ன காரணத்தினாலோ  அல்லது  காரணம் ஏதுமில்லையாயினும்  எப்படியோ இதயம் மனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சொல்லாயிற்று. 

மனத்திற்கும் இதயத்திற்கும் எந்தச் சம்பந்தமில்லை என்பதினால் அறிவியலின் வழிகாட்டலில் மனம் என்பதின் இருப்பிடம் இதயம் அல்ல என்ற துணிபிற்கு வருவோம்.

சென்ற பதிவுக்கான பின்னூட்டத்தில்  'தியானம் சொல்லித் தரவங்க  மனசு புத்தி இரண்டும் வெவ்வேறுன்னு சொல்றாங்க' என்று  மனம்--புத்தி பற்றி நெல்லைத் தமிழன் பிரஸ்தாபித்திருக்கிறார்.  மனம், புத்தி இரண்டையும் ஒரே புள்ளியில் நிறுத்த முடிந்தால் தியானத்தில் நாம் முழுமையாகி விட்டோம் என்று அர்த்தம் என்றும் சொல்லியிருக்கிறார்.

மனம் என்பது  தான்  என்ன?..  மனம் என்பது மூளைப் பகுதிக்குச் சொந்தமான  சதைக் கோளம்.  மடிப்பு மடிப்பாக இருக்கும் சதைப்  பிரதேசம்.  மனம் என்பதனை  MIND  என்ற ஒரே சொல்லில்   அடைத்து விட்டனர்    மேல் நாட்டினர்.     ஆனால் நாமோ   மனம் செயல்படும்   செயல்பாடுளை விரிவாக்கி   மனம், புத்தி, சித்தம் என்றெல்லாம் வேறு படுத்திச் சொல்கிறோம்.  அதனால் மனம், புத்தி என்பதெல்லாம் வெவ்வேறல்ல என்று தெளிவோம்.  விரல்கள் என்பவை கை  என்ற  ஒற்றைச் சொல்லில் அடக்கம் மாதிரி.

சரி,  தியானம் என்றால்  தான் என்ன?..                           

சதா எதையாவது நினைத்துக் கொண்டு அல்லாடிக் கொண்டிருப்பது மனத்தின்  இயல்பு.  போஷாக்கான மனதிற்கு அறிகுறியும் அது தான்.   யானை நின்று கொண்டிருக்கும் பொழுது லேசா அசைந்து கொண்டே இருக்குமே அதைப் போல.   யானை அப்படி அசையவில்லை என்றால் தான் கோளாறு என்பது போல.

அந்த அல்லாட்டலை ஒருமுகப்படுத்தும் முயற்சியைத் தியானம் என்று சொல்கிறார்கள்.  ஒருமுகப்படுத்துதல் என்ற பெயரில் மனத்தின் அந்த அசைவோட்டத்தை நிறுத்துவதல்ல.  இங்கு ஒருமுகப்படுத்துதல் என்பது எண்ணத்தை.  பல்வேறு விஷயங்களில் அலைபாயும் எண்ணத்தை சீர்படுத்திக் கூர்மையாக்குவது.    பஞ்சை தரையில் வைத்து விட்டு  அதற்கு சற்று மேலாக ஒரு குவிலென்ஸை அதன்  மேல் சூரிய ஒளி படும்படி பிடித்தால் என்னவாகும்?..   சூரிய ஒளியின் வெப்பம் லென்ஸால் ஒருமுகப்படுத்தி குவிக்கப்பட்டு அந்த வெப்பம் பஞ்சைத் தாக்கி பஞ்சு பற்றி எரியும்.  தியானத்தில் நடப்பதும் இது தான்.

உள்ளிழுக்கும், வெளிவிடும் சுவாசத்திற்கும் மன அமைதிக்கும் சம்பந்தம் இருப்பதாக தியானத்தைப் பரிந்துரைப்போரின் கருத்து.   அந்த மூச்சுக் காற்றை உள்ளிழுக்கும் பொழுதும் வெளிவிடும் பொழுதும்  வேகமாக அல்லது மெதுவாக என்று இல்லாமல் ஒரே சீராக ஆக்கிக் கொள்வது தான் தியானத்தின் முதல் படி.

 எதாவது ஒன்றின் மீது மனதை நிலைப்படுத்தும் பொழுது மனம் ஒருமுகப் படுகிறது.   அப்படி நிலைப்படுத்துவதற்கு பலருக்கு  கடவுள் கிடைத்திருக்கிறார்.

தியானம் என்பது ஏதோ கடவுள் சம்பந்தப்பட்ட விஷயம் மாதிரி ஒரு தவறான புரிதல் பலரிடம் உண்டு.  கடவுள் தயவு வேண்டாதவர்கள்  தங்களுக்கு மிகவும் பிரியமான அல்லது மரியாதை கொள்கிற எதை வேண்டுமானலும் தீட்சண்யமாக மனத்தால் ஓர்ந்து மனதை ஒருமுகப்படுத்தலாம்.  தியானிக்க ஒரு புள்ளியில் ஆழ்ந்து கவனம்  கொள்ள வேண்டும்.  அவ்வளவு தான்.    தியானத்தின்  மீதான அதீத ஈடுபாட்டில் நாளாவட்டத்தில் நம்மை மீறிய ஒரு சக்தியின் மீது ப்ரேமை ஏற்பட்டால் நான் ஜவாப்தாரியல்ல.   :))

எதை வேண்டுமானாலும் கடவுளுடன் பிணைத்து அறிவு பூர்வமான விஷயங்களை ஒதுக்குவது  தமிழக இன்றையச் சூழலில் வெகு சுலபமாக இருப்பதால் ஒதுக்குபவர்களிடமிருந்து எப்படி ஒதுங்க வேண்டும் என்பதற்காக இதைக் குறிப்பிட வேண்டியிருந்தது.  அடுத்த வெறுப்பு சமஸ்கிருத வார்த்தைகள் மீது.   தியானம் என்ற சமஸ்கிருத  வார்த்தை பிடிக்கவில்லை அல்லது உச்சரிக்க அசெளகரியமாக இருக்கிறது என்றால் 'சும்மா இருத்தல்'  என்று கொள்ளுங்கள்.

'சும்மா இரு' என்பது முருக பெருமான் குருவாக அருணகிரியாருக்கு வாய்த்து உபதேசித்த தெய்வ வாக்கு என்பார்கள்.

'சும்மா இருக்கும் திறம் அரிது' என்று தாயுமானவரே சொல்வார்.

'சும்மா இருக்க வைத்தான் சூத்திரத்தை நான் அறியேன்' என்பது பட்டினத்தார் சொன்னது.

'சும்மா இருக்கும் சுகம்' என்று அனுபவித்துச் சொல்வார் வள்ளலார்.

சுயமாகவே  மனிதனின் இயல்பு  சாந்தியும் சந்தோஷமும் ஆகும்.  இந்த தனித் தன்மையான அந்த இயல்பு தான்  அதன் சொரூபமும் கூட.  இயல்பாக இருக்க வேண்டிய அவனது சாந்தியையும், சந்தோஷத்தையும் அனாவசியமான சிந்தனைகள் கலைக்கின்றன.  அல்லது ஒரு  மூடு திரை போட்டு மறைத்து அவ்வப்போது  சிந்தையில் உருவாகும் எண்ணங்களுக்கு ஏற்ப  இயல்பான இயல்பை  மாற்றி  கூத்தாட வைக்கின்றன.   அந்தக் கூத்தாடல்களுக்கு ஏற்ப உள்ளிழுக்கும் வெளிவிடும் மூச்சுக் காற்றில் மாற்றங்கள் ஏற்படுகின்றன.  அந்த மாற்றம்  தலையிலிருந்து கால் வரை பரவி விரவிக் கொண்டிருக்கும் இரத்த ஓட்ட சீர்மையில் பாதிப்பு உண்டாக்குகிறது.   இரத்த ஓட்டத்தில் ஏற்படும்  மாற்றப் போக்கு இதயத்தின் லப்டப்பிலும் பிரதிபலிக்கிறது.

சும்மா இருத்தலான   தியானம் என்பது  இன்றைக்குப் பிரபலமாக இருக்கும்  வார்த்தைப் பிரயோகமான யோகா அல்ல.    ஆசனங்களும்,  உடற்பயிற்சி சார்ந்த கைகால் அசைப்புகள் இவையெல்லாம் தியானம் அல்ல.  தியானம் என்பது  இவற்றையெல்லாம் விட தீவீரம் கொண்டது.    தொடர்ந்து பார்ப்போம்.


(வளரும்)

Related Posts with Thumbnails