மின் நூல்

Friday, April 3, 2020

நினைவு நதியில் வண்ணதாசன்

நெருங்கிய  வட்டத்தில்  கல்யாணியாகிறவர்,  கவிதைகள் எழுதும் போது கல்யாண்ஜி ஆவார்   பெற்றோர் வைத்த பெயர்,   கல்யாண சுந்தரம்  வேலை பார்த்த பாரத  ஸ்டேட் வங்கியோடு சரி     போலிருக்கு.  சகோதரர்    வல்லிதாசனிடமிருந்து   எடுத்துக் கொண்ட வண்ணதாசன்  கதைகளுக்காகவும்,  கல்லூரி நண்பர் அழைத்த  கல்யாண்ஜி  கவிதைகளுக்காகவும் ஆயிற்று. ஆனால் வண்ணதாசனை  தெரிந்த அளவுக்கு ரொம்பப் பேருக்கு  கல்யாண்ஜியைத் தெரியாது.  அதாவது இவர் தான் அவர் என்று தெரியாது.  வண்ணதாசனும்  எந்த காலத்தும் இலக்கிய உலகில் தன்னைப் படாடோபமாகக்  காட்டிக் கொண்டதில்லை.  எழுத்திலும்  அப்படித்தான்.  எல்லோமே அவரைப் பொருத்த மட்டில் இயல்பாகிப் போன விஷயங்கள்.

வண்ணதாசனின் கதைகளைப் படிப்பது சுவாரஸ்யமான ஒரு விஷயம்.   கதையை எங்கு ஆரம்பிப்பது என்பது தான் அவருக்கு  யோசிக்க வேண்டிய விஷயமாக இருக்கும் என்பதைச் சுலபத்தில் தெரிந்து கொண்டு விடலாம்.  சொல்ல வேண்டிய கதையின் அடி நாதத்தை  கறாராகத் தீர்மானித்து விடுவார் போல.  மற்ற விஷயங்கள்  எல்லாம்  அது அது அதுபாட்டுக்க வந்து  போகும்.

ஒரு மையப்புள்ளியில்  காம்பஸின் ஒரு ஊசி முனைய ஊன்றிக் கொண்டு  பென்ஸில் செருகிய இன்னொரு முனையை அகட்டி வட்டமடிப்பது போல,   எழுதுகையில் அது பாட்டுக்கு வந்து விழும் ஒவ்வொரு விவரணையும் அது தொடர்பான நிறைய  ஜோடனைகளைச் சுற்றிக் கொண்டு பம்மென்று திரட்சியாக இருக்கும்.    இது வேண்டாம்,  அல்லது இது இதற்கு சம்பந்தமில்லாமல் இருக்கிறது என்று ஒன்றைக் கூடச் சொல்லி விட முடியாது.    சொல்ல எடுத்துக் கொண்ட விஷயத்திற்கு  அந்த  அளவுக்கு ஒவ்வொன்றும் பாந்தமாகப் பொருந்தி வரும்.  ஒவ்வொன்றும் நுணுகி நுணுகிப் பார்த்து தேர்ந்த பொற்கொல்லர்  மாதிரி அவரே சேகரித்து சேர்த்த அழகு  சமாச்சாரங்கள்.  அத்தனையிலும் அத்தனை நகாசு படிந்திருக்கும்.

வண்ணதாசனின் நினைவுகளில் படிந்துள்ள ஞாபகப் படிமங்கள்  தாம் அவரது கதைகள்.   வண்ணதாசனின் தளமும் சிறுகதைகள்  தாம்.  சின்னச் சின்ன கதைகளின் எல்லை தாண்டிப் போவது  அவருக்குப் பிடிப்பதில்லை.  இந்த இடத்திலிருந்து இந்த இடம் வரை என்று மனத்தில் கோடு போட்டு வைத்திருப்பது போல  முடிக்க வேண்டிய அந்த இடம் வந்ததும்  அப்ரப்ட்டாக  முடித்து  விடுவார்.  அப்படி அவர் முடித்ததும்  கனக்கச்சிதமாக  இருக்கும்.  சில நேரங்களில் அந்தக்  கடைசி வரி கூட மேற்கொண்டான கதையை  வாசகர்களே  தங்கள் யோசனையில்  நீட்டித்து முடித்துக் கொள்கிற மாதிரி வசதி வேறு  பண்ணிக் கொடுத்திருப்பார்.

அன்பு தான் ஆரம்பம்.  இருந்தாலும்  எல்லோராலுமே அந்த இடத்திலிருந்து  ஆரம்பிக்க முடியாது என்பது தான் சூட்சுமம். அன்பு செலுத்துதல்  கூட சிலருக்கு மட்டுமே சாத்தியப்பட்டச் செயலாக இருப்பது தான் விநோதம்.   சில பேருக்கு சிலரிடம் அது ஆழ்ந்து விகசிக்கும் பொழுது  காதலாக மலர்கிறது.  ஞானப்பனுக்கு  சற்றே காலை சாய்த்து  சாய்த்து நடக்கும் தனுவிடம் ஏற்பட்டதும்  அது தான்.  சொல்லப் போனால் டெஸ்சி   டீச்சருக்கும்  அதே மாதிரியான ஒன்று  தான் ஞானப்பன்  மீதும்.    ஆனால் தனலெட்சுமியின் பால் ஞானப்பன் கொள்வதற்கும்,  ஞானப்பன் மீது  டெஸ்சி கொள்வதற்கும்  மென்மையான வித்தியாசத்தை  புலப்படுத்துவார்  வண்ணதாசன்.  இந்த நுண்மையானப் புரிந்து கொண்டோருக்கு    அவரின் 'தனுமை'   அற்புதமான சிறுகதை.

மருத்துவமனையும்   ஒரு  உலகம்  இல்லாவிட்டாலும்  ஒரு சிற்றூர் தான்.   வகைவகையான  நோய்களுக்கு ஏற்றவாறு வகைவகையான  மனிதர்கள்.   மனிதர்க்கு  மனிதர் கொள்ளும்  உறவுகளும்  சில நாட்களுக்காயினும் அவர்களுக்குள்  ஒருவருக்கு ஒருவர் கொள்ளும் அக்கறையும்
இயல்பாகப் படியும் அன்பு விசாரிப்புகளும்,  உதவிகளும் 'கடைசியாய்த் தெரிந்தவர்'  கதையில் அழகாகப் பதியப்பட்டிருக்கும். 

காதலித்தவளை  கரம் பிடிக்க முடியாமல் போகிறது அண்ணனுக்கு.   வேறோர் இடத்தில் அவளுக்குத் திருமணமாகி,  கைக்குழந்தையுடனான அவளை  தம்பி தன் நண்பனுடன் எதேச்சையாக வழியில் சந்திக்கும் கதை 'ரதவீதி'.   அந்தக் குட்டியூண்டு கதைக்குள்  கோடானுகோடி உணர்வுகளைப்  பதித்துத் தருவார்  வண்ணதாசன்.

'கிருஷ்ணன் வைத்த வீடு'  மனசைக் குடையும்.  அந்த மாதிரி கிருஷ்ண பொம்மை பதிக்கப்பட்ட  ஒரு வீட்டைப் பார்த்த அனுபவம்,  வேறோரு நிகழ்ச்சியின்  அதிர்ச்சியை  இங்கு கொண்டு வந்து சேர்த்து கதையாகியிருப்பதாகத் தோன்றுகிறது.

அவர் பிறந்து வளர்ந்த திருநெல்வேலிப் பகுதியை அவரால் மறக்கவே  முடியாததினால்  தான்  அந்த சுலோச்சனா முதலியார் பாலமும்   குறுக்குத் துறையும்,  கல் மண்டபமும். நெல்லையப்பர் கோயிலும்,  கொக்கிரகுளமும்,  வாகையடி அம்மன் கோயிலும்,  சந்திப்பிள்ளையார் முக்கும்,  பாளையங்கோட்டை வாய்க்கால் பாலமும்,  அவர் எழுத்தில் அங்கங்கே தலைகாட்டிக் கொண்டே  இருக்கும்.  அதே போல  விறகுக் கடையில் விறகைப்   பிளக்கும் சம்மட்டி அடி,  ஈர விறகின்   ஒரு புளிப்பான பச்சை வாசனை,  திரும்ப சங்கடப் பட்டிருக்கும் என்று  உணர்த்திய  கடையிலிருந்து  ரோடு வரை மடங்கி மடங்கி கிடந்த லாரித் தடம்,  வேப்ப மரத்தின் அடர்த்திக்குள்  ஒளியும் பளீர்  வெயில்,  பாக்கு மரத்திலிருந்து பொத்தென்று விழும்  அணில்,  தாம்புக் கயிறு மாதிரி ஜடை பின்னிக் கொண்டிருக்கும்  போகன் வில்லா  -- என்று என்னன்னவோவான  அனுபவித்த ரசனை  ஜாலங்கள் அங்கங்கே  பளிச்சிட்டு  சித்திரமாய்  நெஞ்சில்  பசக்கென்று ஒட்டிக்  கொள்ளும்.

எழுதிக் கொண்டு வரும் பொழுதே  ஒன்று தெரிகிறது.  வண்ணதாசனின் சிறுகதைகளூக்கு  இது இப்படியான கதை என்று குறிப்பு  கொடுப்பது  ஒருவிதத்தில் அவர் எழுதின அழகைக் குறைத்து மதிப்பிட வழிகோலும் என்று தோன்றுகிறது. அவர்  கதைகளை நேரிடையாக வாசித்து
அவருடன் பரிச்சயம்  கொள்வதே  சரி. 

அவருடைய 'சின்னு முதல் சின்னு வரை'  குறுநாவலை நினைத்தால்  நினைத்தால் எடுத்துக் கொண்டால் அப்படித் தான் முடிவுக்கு வரத் தோன்றுகிறது.   அப்பொழுது தான் எடுத்துக் கொண்ட கதையின்  போக்கினூடேயே  நுணுகி நுணுகி  ஒவ்வொன்றையும்  நெருக்கத்தில் அணுகி  படிப்போருக்கு  அவற்றை எப்படிப் பழக்கப்படுத்துகிறார் என்று  புரிபடும். 

'பெண்கள் துன்பப்படுகிறார்களே என்று கரிசனப்படுகிற ஆண்கள்,  அந்த கரிசனம்  காரணமாகவே அடைகின்ற துன்பங்கள்  ரொம்ப நுட்பமானவை'   என்பன போன்ற மென்மையான   உணர்வுகள்,  ஒரு கதையைப்  படித்தால்  கதையின்  அவுட்லைனை மட்டும்  மேம்போக்காகப் பார்த்து விட்டு  நகரும் மனங்களால்  உணர முடியாதவை.

கல்யாண்ஜியின்  முதல் கவிதைத் தொகுப்பு,  அன்னம் வெளியிட்ட  'புலரி',  மறக்கவே  முடியாத  'அந்த தோட்டத்திற்கு வெளியிலும்  சில பூக்கள்'  பற்றியெல்லாம் வேறொரு  இடத்தில் நிறைய  சொல்ல வேண்டுமென்று தோன்றுகிறது.    அதே மாதிரி தான்  ஆனந்த விகடனில் இவர் எழுதிய  'அகம்  புறம்'  கட்டுரைத் தொடரும்.  ஒரு காலத்தில் 'கண்ணதாசன்'  தீபம்,  நடை,  மீட்சி,   கணையாழி,  உயிரெழுத்து  என்று நிறைய  இதழ்களில் காணக் கிடைத்தார்.  'கண்ணதாசனில்'   வண்ணதாசனைப் பார்த்தது,   அந்த அச்சு நேர்த்தியிலும்  அமுதோன் வரைதலிலும்  அந்தக் கால  அதி அனுபவம்.
                                                                                             
       
இவ்வளவு சொல்லி விட்டு  கல்யாண்ஜியின்  கவிதைகள் பற்றி ஒரு கோடி கூட காட்டவில்லை  என்றால் அது  பெருத்த குறையாகிப் போகும்.  பொத்தி வைத்த மன உணர்வுகளை
பையப் பைய வெளிகாட்டி  நம் நெஞ்சில்   நெகிழ்ச்சியுடன் உலா விடுவார்.  பகிர்தலுக்காக  எனக்குப்  பிடித்த அவர் கவிதை ஒன்று:

நீ  வருவதற்காக
காத்திருந்த  நேரத்தில்
பளிங்கு  போல்
அசையாதிருந்த  தெப்பக்குளம்
பார்க்க  ஆரம்பித்தேன்.
தலை  கீழாய்  வரைந்து கொண்ட 
பிம்பங்களுடன்
தண்ணீர்  என் பார்வையை 
வாங்கிக்  கொண்டது  முற்றிலும்
உன்னை  எதிர்பார்ப்பதையே
மறந்து விட்ட ஒரு கணத்தில்
உன்னுடைய  கைக்கல்  பட்டு
உடைந்தது
கண்ணாடிக்  குளம்
நீ  வந்திருக்க  வேண்டாம்
இப்போது.

எனக்கு  வண்ணதாசனின்  அப்பா  தி.க. சிவசங்கரன் தான் பழக்கம்.    கலை இலக்கிய  பெருமன்றம்,  இலக்கிய ஏடு 'தாமரை'  என்று  தொடர்ந்து   வந்த பழக்கம். 
 சிற்றிதழ்காரர்களுக்கு  சொந்தக்காரர்  அவர்.  வீட்டு  கல்யாணங்களுக்கு சொந்த பந்தங்களுக்கு  பத்திரிகை அனுப்புகிற  மாதிரி,  தமிழகத்தில்  எவரேனும்  சிற்றிதழ் ஆரம்பித்தால்  தவறாமல்  தி.க.சி.-க்கு  ஒரு பிரதி அனுப்பவது  பழக்கமாகிப் போன வழக்கம்...  அனுப்பி  வைத்த ஒரு வார காலத்திற்குள்  ஒரு தபால்  கார்டில்  நுணுக்கி  நுணுக்கி எழுதிய கையெழுத்தில்  அந்த இதழ் பற்றி தாம்  உணர்வதை  அவரும்  எழுதி  அனுப்பி வைத்து விடுவார்.   ஆரம்பித்த சிற்றிதழுக்கு   ஆசி கிடைத்த சந்தோஷத்தில்,  அடுத்த இதழில்  ஆசிரியருக்கு  கடிதங்கள் பகுதியில்  அவரது அந்தக் கடிதத்தைப்  பிரசுரித்து விடுவார்கள்.   தி.க.சி.யின் பதில் கடிதத்தைப் படித்துப் பார்ப்பதில்  அத்தனை சந்தோஷமும் பெருமையும்  அந்த்க் கால  சிற்றிதழ்   வட்டாரத்தில்!..  நானும்   நான் நடத்திய  இரு இதழ்களுக்கு  பெரியவரிடமிருந்து கடிதம் வாங்கிப்  பிரசுரித்திருக்கிறேன்.

அதே  மாதிரி தான்  '77  வாக்கில்  வெளிவந்த  'கமலி காத்திருக்கிறாள்'  என்னும்  என் முதல் சிறுகதைத் தொகுப்பை  வண்ணதாசனுக்கு  அனுப்பி வைத்திருந்தேன்.  தந்தையைப் போலவே  தனயனும்   உடனே பதில் அனுப்பி வைத்திருந்தார்.   ஆனால் இவர் தபால்  கார்டில் அல்ல; ஒரு இன்லாண்ட்  லெட்டரில்.  அந்த  வெளிர் நீலக் கடிதத்தை அசகாய  சாமர்த்தியத்தோடு  உள்ளடக்கம்   கிழிந்து விடாமல்   பிரித்துப் பார்த்தால்,  பேனாவால்  ஒரு ஓட்டு வீடு'  வாதாமரம் மாதிரியான  ஒரு மரம் என்று படமெல்லாம் வரைந்து  நடுவில் ஓட்டு சார்புகளில்  ஓடி விளையாடும்  அணில்கள் பற்றியும், மரத்தின்  இடுக்குகளில்  பளபளக்கும்  சூரியனின் அதியற்புத ஒளிக்கீற்றைப் பற்றியும்,  திண்ணையைத் தொட்டு விடத் துடிக்கும்  நிழலின்  நீட்சி பற்றியும்  கவிதை மாதிரியான வரிகளில்  எழுதி,  வந்து சேர்ந்த  கதைத் தொகுப்பு பற்றி பொதுவாகக் குறிப்பிட்டு  வாழ்த்தியிருந்தார்.  உண்மையில் சாகித்ய  அகாதமி விருது கிடைத்ததே போன்ற  சந்தோஷம் தான் அப்போது.

அவரது  'உப்பு கரிக்கிற சிறகுகள்'  கதையின் நடுவே  'ஊஞ்சல்  அசையும்  போதா,  அசையாத போதா --  எப்போ ரொம்ப அழகு?'  என்ற கேள்வியுடன் ஒரு வரி வரும்.  அதைப் படித்த பொழுது  'ஊஞ்சல்  உறவுகள்'  என்று  தலைப்பிட்ட எனது  பிற்கால சிறுகதைத்  தொகுப்பொன்றின் முன்னுரையில் நானெழுதியிருந்த  'உண்மை தான்.   நிலையாக  ஒரே  இடத்தில் தொங்கிக்  கொண்டிருந்தால் அதற்குப்  பெயர்  ஊஞ்சுல்  இல்லை;   மேலே  உந்தித் தள்ளிய பலகை கீழே  வர  வேண்டும்;  கீழே  வந்தது மேலே போக வேண்டும்.  அப்பொழுது தான் அது  ஊஞ்சல்.  இல்லையென்றால்  வெறும்  தொங்கு பலகை தான்'  என்ற வரிகள்  நினைவுக்கு வந்தன.

வண்ணதாசன்  சார்!  இப்பொழுது  சொல்லுங்கள்.  'ஊஞ்சல் அசையும் போதா,  அசையாத  போதா,  எப்போ ரொம்ப அழகு?'



Related Posts with Thumbnails