மின் நூல்

Friday, April 3, 2020

நினைவு நதியில் வண்ணதாசன்

நெருங்கிய  வட்டத்தில்  கல்யாணியாகிறவர்,  கவிதைகள் எழுதும் போது கல்யாண்ஜி ஆவார்   பெற்றோர் வைத்த பெயர்,   கல்யாண சுந்தரம்  வேலை பார்த்த பாரத  ஸ்டேட் வங்கியோடு சரி     போலிருக்கு.  சகோதரர்    வல்லிதாசனிடமிருந்து   எடுத்துக் கொண்ட வண்ணதாசன்  கதைகளுக்காகவும்,  கல்லூரி நண்பர் அழைத்த  கல்யாண்ஜி  கவிதைகளுக்காகவும் ஆயிற்று. ஆனால் வண்ணதாசனை  தெரிந்த அளவுக்கு ரொம்பப் பேருக்கு  கல்யாண்ஜியைத் தெரியாது.  அதாவது இவர் தான் அவர் என்று தெரியாது.  வண்ணதாசனும்  எந்த காலத்தும் இலக்கிய உலகில் தன்னைப் படாடோபமாகக்  காட்டிக் கொண்டதில்லை.  எழுத்திலும்  அப்படித்தான்.  எல்லோமே அவரைப் பொருத்த மட்டில் இயல்பாகிப் போன விஷயங்கள்.

வண்ணதாசனின் கதைகளைப் படிப்பது சுவாரஸ்யமான ஒரு விஷயம்.   கதையை எங்கு ஆரம்பிப்பது என்பது தான் அவருக்கு  யோசிக்க வேண்டிய விஷயமாக இருக்கும் என்பதைச் சுலபத்தில் தெரிந்து கொண்டு விடலாம்.  சொல்ல வேண்டிய கதையின் அடி நாதத்தை  கறாராகத் தீர்மானித்து விடுவார் போல.  மற்ற விஷயங்கள்  எல்லாம்  அது அது அதுபாட்டுக்க வந்து  போகும்.

ஒரு மையப்புள்ளியில்  காம்பஸின் ஒரு ஊசி முனைய ஊன்றிக் கொண்டு  பென்ஸில் செருகிய இன்னொரு முனையை அகட்டி வட்டமடிப்பது போல,   எழுதுகையில் அது பாட்டுக்கு வந்து விழும் ஒவ்வொரு விவரணையும் அது தொடர்பான நிறைய  ஜோடனைகளைச் சுற்றிக் கொண்டு பம்மென்று திரட்சியாக இருக்கும்.    இது வேண்டாம்,  அல்லது இது இதற்கு சம்பந்தமில்லாமல் இருக்கிறது என்று ஒன்றைக் கூடச் சொல்லி விட முடியாது.    சொல்ல எடுத்துக் கொண்ட விஷயத்திற்கு  அந்த  அளவுக்கு ஒவ்வொன்றும் பாந்தமாகப் பொருந்தி வரும்.  ஒவ்வொன்றும் நுணுகி நுணுகிப் பார்த்து தேர்ந்த பொற்கொல்லர்  மாதிரி அவரே சேகரித்து சேர்த்த அழகு  சமாச்சாரங்கள்.  அத்தனையிலும் அத்தனை நகாசு படிந்திருக்கும்.

வண்ணதாசனின் நினைவுகளில் படிந்துள்ள ஞாபகப் படிமங்கள்  தாம் அவரது கதைகள்.   வண்ணதாசனின் தளமும் சிறுகதைகள்  தாம்.  சின்னச் சின்ன கதைகளின் எல்லை தாண்டிப் போவது  அவருக்குப் பிடிப்பதில்லை.  இந்த இடத்திலிருந்து இந்த இடம் வரை என்று மனத்தில் கோடு போட்டு வைத்திருப்பது போல  முடிக்க வேண்டிய அந்த இடம் வந்ததும்  அப்ரப்ட்டாக  முடித்து  விடுவார்.  அப்படி அவர் முடித்ததும்  கனக்கச்சிதமாக  இருக்கும்.  சில நேரங்களில் அந்தக்  கடைசி வரி கூட மேற்கொண்டான கதையை  வாசகர்களே  தங்கள் யோசனையில்  நீட்டித்து முடித்துக் கொள்கிற மாதிரி வசதி வேறு  பண்ணிக் கொடுத்திருப்பார்.

அன்பு தான் ஆரம்பம்.  இருந்தாலும்  எல்லோராலுமே அந்த இடத்திலிருந்து  ஆரம்பிக்க முடியாது என்பது தான் சூட்சுமம். அன்பு செலுத்துதல்  கூட சிலருக்கு மட்டுமே சாத்தியப்பட்டச் செயலாக இருப்பது தான் விநோதம்.   சில பேருக்கு சிலரிடம் அது ஆழ்ந்து விகசிக்கும் பொழுது  காதலாக மலர்கிறது.  ஞானப்பனுக்கு  சற்றே காலை சாய்த்து  சாய்த்து நடக்கும் தனுவிடம் ஏற்பட்டதும்  அது தான்.  சொல்லப் போனால் டெஸ்சி   டீச்சருக்கும்  அதே மாதிரியான ஒன்று  தான் ஞானப்பன்  மீதும்.    ஆனால் தனலெட்சுமியின் பால் ஞானப்பன் கொள்வதற்கும்,  ஞானப்பன் மீது  டெஸ்சி கொள்வதற்கும்  மென்மையான வித்தியாசத்தை  புலப்படுத்துவார்  வண்ணதாசன்.  இந்த நுண்மையானப் புரிந்து கொண்டோருக்கு    அவரின் 'தனுமை'   அற்புதமான சிறுகதை.

மருத்துவமனையும்   ஒரு  உலகம்  இல்லாவிட்டாலும்  ஒரு சிற்றூர் தான்.   வகைவகையான  நோய்களுக்கு ஏற்றவாறு வகைவகையான  மனிதர்கள்.   மனிதர்க்கு  மனிதர் கொள்ளும்  உறவுகளும்  சில நாட்களுக்காயினும் அவர்களுக்குள்  ஒருவருக்கு ஒருவர் கொள்ளும் அக்கறையும்
இயல்பாகப் படியும் அன்பு விசாரிப்புகளும்,  உதவிகளும் 'கடைசியாய்த் தெரிந்தவர்'  கதையில் அழகாகப் பதியப்பட்டிருக்கும். 

காதலித்தவளை  கரம் பிடிக்க முடியாமல் போகிறது அண்ணனுக்கு.   வேறோர் இடத்தில் அவளுக்குத் திருமணமாகி,  கைக்குழந்தையுடனான அவளை  தம்பி தன் நண்பனுடன் எதேச்சையாக வழியில் சந்திக்கும் கதை 'ரதவீதி'.   அந்தக் குட்டியூண்டு கதைக்குள்  கோடானுகோடி உணர்வுகளைப்  பதித்துத் தருவார்  வண்ணதாசன்.

'கிருஷ்ணன் வைத்த வீடு'  மனசைக் குடையும்.  அந்த மாதிரி கிருஷ்ண பொம்மை பதிக்கப்பட்ட  ஒரு வீட்டைப் பார்த்த அனுபவம்,  வேறோரு நிகழ்ச்சியின்  அதிர்ச்சியை  இங்கு கொண்டு வந்து சேர்த்து கதையாகியிருப்பதாகத் தோன்றுகிறது.

அவர் பிறந்து வளர்ந்த திருநெல்வேலிப் பகுதியை அவரால் மறக்கவே  முடியாததினால்  தான்  அந்த சுலோச்சனா முதலியார் பாலமும்   குறுக்குத் துறையும்,  கல் மண்டபமும். நெல்லையப்பர் கோயிலும்,  கொக்கிரகுளமும்,  வாகையடி அம்மன் கோயிலும்,  சந்திப்பிள்ளையார் முக்கும்,  பாளையங்கோட்டை வாய்க்கால் பாலமும்,  அவர் எழுத்தில் அங்கங்கே தலைகாட்டிக் கொண்டே  இருக்கும்.  அதே போல  விறகுக் கடையில் விறகைப்   பிளக்கும் சம்மட்டி அடி,  ஈர விறகின்   ஒரு புளிப்பான பச்சை வாசனை,  திரும்ப சங்கடப் பட்டிருக்கும் என்று  உணர்த்திய  கடையிலிருந்து  ரோடு வரை மடங்கி மடங்கி கிடந்த லாரித் தடம்,  வேப்ப மரத்தின் அடர்த்திக்குள்  ஒளியும் பளீர்  வெயில்,  பாக்கு மரத்திலிருந்து பொத்தென்று விழும்  அணில்,  தாம்புக் கயிறு மாதிரி ஜடை பின்னிக் கொண்டிருக்கும்  போகன் வில்லா  -- என்று என்னன்னவோவான  அனுபவித்த ரசனை  ஜாலங்கள் அங்கங்கே  பளிச்சிட்டு  சித்திரமாய்  நெஞ்சில்  பசக்கென்று ஒட்டிக்  கொள்ளும்.

எழுதிக் கொண்டு வரும் பொழுதே  ஒன்று தெரிகிறது.  வண்ணதாசனின் சிறுகதைகளூக்கு  இது இப்படியான கதை என்று குறிப்பு  கொடுப்பது  ஒருவிதத்தில் அவர் எழுதின அழகைக் குறைத்து மதிப்பிட வழிகோலும் என்று தோன்றுகிறது. அவர்  கதைகளை நேரிடையாக வாசித்து
அவருடன் பரிச்சயம்  கொள்வதே  சரி. 

அவருடைய 'சின்னு முதல் சின்னு வரை'  குறுநாவலை நினைத்தால்  நினைத்தால் எடுத்துக் கொண்டால் அப்படித் தான் முடிவுக்கு வரத் தோன்றுகிறது.   அப்பொழுது தான் எடுத்துக் கொண்ட கதையின்  போக்கினூடேயே  நுணுகி நுணுகி  ஒவ்வொன்றையும்  நெருக்கத்தில் அணுகி  படிப்போருக்கு  அவற்றை எப்படிப் பழக்கப்படுத்துகிறார் என்று  புரிபடும். 

'பெண்கள் துன்பப்படுகிறார்களே என்று கரிசனப்படுகிற ஆண்கள்,  அந்த கரிசனம்  காரணமாகவே அடைகின்ற துன்பங்கள்  ரொம்ப நுட்பமானவை'   என்பன போன்ற மென்மையான   உணர்வுகள்,  ஒரு கதையைப்  படித்தால்  கதையின்  அவுட்லைனை மட்டும்  மேம்போக்காகப் பார்த்து விட்டு  நகரும் மனங்களால்  உணர முடியாதவை.

கல்யாண்ஜியின்  முதல் கவிதைத் தொகுப்பு,  அன்னம் வெளியிட்ட  'புலரி',  மறக்கவே  முடியாத  'அந்த தோட்டத்திற்கு வெளியிலும்  சில பூக்கள்'  பற்றியெல்லாம் வேறொரு  இடத்தில் நிறைய  சொல்ல வேண்டுமென்று தோன்றுகிறது.    அதே மாதிரி தான்  ஆனந்த விகடனில் இவர் எழுதிய  'அகம்  புறம்'  கட்டுரைத் தொடரும்.  ஒரு காலத்தில் 'கண்ணதாசன்'  தீபம்,  நடை,  மீட்சி,   கணையாழி,  உயிரெழுத்து  என்று நிறைய  இதழ்களில் காணக் கிடைத்தார்.  'கண்ணதாசனில்'   வண்ணதாசனைப் பார்த்தது,   அந்த அச்சு நேர்த்தியிலும்  அமுதோன் வரைதலிலும்  அந்தக் கால  அதி அனுபவம்.
                                                                                             
       
இவ்வளவு சொல்லி விட்டு  கல்யாண்ஜியின்  கவிதைகள் பற்றி ஒரு கோடி கூட காட்டவில்லை  என்றால் அது  பெருத்த குறையாகிப் போகும்.  பொத்தி வைத்த மன உணர்வுகளை
பையப் பைய வெளிகாட்டி  நம் நெஞ்சில்   நெகிழ்ச்சியுடன் உலா விடுவார்.  பகிர்தலுக்காக  எனக்குப்  பிடித்த அவர் கவிதை ஒன்று:

நீ  வருவதற்காக
காத்திருந்த  நேரத்தில்
பளிங்கு  போல்
அசையாதிருந்த  தெப்பக்குளம்
பார்க்க  ஆரம்பித்தேன்.
தலை  கீழாய்  வரைந்து கொண்ட 
பிம்பங்களுடன்
தண்ணீர்  என் பார்வையை 
வாங்கிக்  கொண்டது  முற்றிலும்
உன்னை  எதிர்பார்ப்பதையே
மறந்து விட்ட ஒரு கணத்தில்
உன்னுடைய  கைக்கல்  பட்டு
உடைந்தது
கண்ணாடிக்  குளம்
நீ  வந்திருக்க  வேண்டாம்
இப்போது.

எனக்கு  வண்ணதாசனின்  அப்பா  தி.க. சிவசங்கரன் தான் பழக்கம்.    கலை இலக்கிய  பெருமன்றம்,  இலக்கிய ஏடு 'தாமரை'  என்று  தொடர்ந்து   வந்த பழக்கம். 
 சிற்றிதழ்காரர்களுக்கு  சொந்தக்காரர்  அவர்.  வீட்டு  கல்யாணங்களுக்கு சொந்த பந்தங்களுக்கு  பத்திரிகை அனுப்புகிற  மாதிரி,  தமிழகத்தில்  எவரேனும்  சிற்றிதழ் ஆரம்பித்தால்  தவறாமல்  தி.க.சி.-க்கு  ஒரு பிரதி அனுப்பவது  பழக்கமாகிப் போன வழக்கம்...  அனுப்பி  வைத்த ஒரு வார காலத்திற்குள்  ஒரு தபால்  கார்டில்  நுணுக்கி  நுணுக்கி எழுதிய கையெழுத்தில்  அந்த இதழ் பற்றி தாம்  உணர்வதை  அவரும்  எழுதி  அனுப்பி வைத்து விடுவார்.   ஆரம்பித்த சிற்றிதழுக்கு   ஆசி கிடைத்த சந்தோஷத்தில்,  அடுத்த இதழில்  ஆசிரியருக்கு  கடிதங்கள் பகுதியில்  அவரது அந்தக் கடிதத்தைப்  பிரசுரித்து விடுவார்கள்.   தி.க.சி.யின் பதில் கடிதத்தைப் படித்துப் பார்ப்பதில்  அத்தனை சந்தோஷமும் பெருமையும்  அந்த்க் கால  சிற்றிதழ்   வட்டாரத்தில்!..  நானும்   நான் நடத்திய  இரு இதழ்களுக்கு  பெரியவரிடமிருந்து கடிதம் வாங்கிப்  பிரசுரித்திருக்கிறேன்.

அதே  மாதிரி தான்  '77  வாக்கில்  வெளிவந்த  'கமலி காத்திருக்கிறாள்'  என்னும்  என் முதல் சிறுகதைத் தொகுப்பை  வண்ணதாசனுக்கு  அனுப்பி வைத்திருந்தேன்.  தந்தையைப் போலவே  தனயனும்   உடனே பதில் அனுப்பி வைத்திருந்தார்.   ஆனால் இவர் தபால்  கார்டில் அல்ல; ஒரு இன்லாண்ட்  லெட்டரில்.  அந்த  வெளிர் நீலக் கடிதத்தை அசகாய  சாமர்த்தியத்தோடு  உள்ளடக்கம்   கிழிந்து விடாமல்   பிரித்துப் பார்த்தால்,  பேனாவால்  ஒரு ஓட்டு வீடு'  வாதாமரம் மாதிரியான  ஒரு மரம் என்று படமெல்லாம் வரைந்து  நடுவில் ஓட்டு சார்புகளில்  ஓடி விளையாடும்  அணில்கள் பற்றியும், மரத்தின்  இடுக்குகளில்  பளபளக்கும்  சூரியனின் அதியற்புத ஒளிக்கீற்றைப் பற்றியும்,  திண்ணையைத் தொட்டு விடத் துடிக்கும்  நிழலின்  நீட்சி பற்றியும்  கவிதை மாதிரியான வரிகளில்  எழுதி,  வந்து சேர்ந்த  கதைத் தொகுப்பு பற்றி பொதுவாகக் குறிப்பிட்டு  வாழ்த்தியிருந்தார்.  உண்மையில் சாகித்ய  அகாதமி விருது கிடைத்ததே போன்ற  சந்தோஷம் தான் அப்போது.

அவரது  'உப்பு கரிக்கிற சிறகுகள்'  கதையின் நடுவே  'ஊஞ்சல்  அசையும்  போதா,  அசையாத போதா --  எப்போ ரொம்ப அழகு?'  என்ற கேள்வியுடன் ஒரு வரி வரும்.  அதைப் படித்த பொழுது  'ஊஞ்சல்  உறவுகள்'  என்று  தலைப்பிட்ட எனது  பிற்கால சிறுகதைத்  தொகுப்பொன்றின் முன்னுரையில் நானெழுதியிருந்த  'உண்மை தான்.   நிலையாக  ஒரே  இடத்தில் தொங்கிக்  கொண்டிருந்தால் அதற்குப்  பெயர்  ஊஞ்சுல்  இல்லை;   மேலே  உந்தித் தள்ளிய பலகை கீழே  வர  வேண்டும்;  கீழே  வந்தது மேலே போக வேண்டும்.  அப்பொழுது தான் அது  ஊஞ்சல்.  இல்லையென்றால்  வெறும்  தொங்கு பலகை தான்'  என்ற வரிகள்  நினைவுக்கு வந்தன.

வண்ணதாசன்  சார்!  இப்பொழுது  சொல்லுங்கள்.  'ஊஞ்சல் அசையும் போதா,  அசையாத  போதா,  எப்போ ரொம்ப அழகு?'



17 comments:

ஸ்ரீராம். said...

சிறப்பாகச் சொல்லி இருக்கிறீர்கள். அந்தந்த எழுத்தாளர்களின் எழுத்து பற்றி நீங்கள் செய்யும் விவரணம் சுவாரஸ்யம்.

ஸ்ரீராம். said...

கல்யாண்ஜி கவிதை படித்திருப்பேன். வண்ணதாசன் கதைகள் எதுவும் படித்ததில்லை.

ஸ்ரீராம். said...

இவர்நான் துக்ளக் துர்வாசர் இல்லை?

ஜீவி said...

@ ஸ்ரீராம் (1)

தமிழ் நாட்டின் சாபக்கேடு ஒரு தமிழ் எழுத்தாளரை இன்னொரு தமிழ் எழுத்தாளர் பாராட்டி நாலு வரி கூட எழுத மாட்டார்கள். இன்னொரு எழுத்தாளர் எழுதியதை படிப்பார்களா என்பதே சந்தேகம் தான். அதெல்லாம் வாசகர்கள் வேலை என்று நினைக்கும் மனோபாவம். அதனால் தான் அத்தி பூத்தாற் போல ஓரிரண்டு தமிழ் எழுத்தாளர்கள் செய்த அந்த காரியத்தை நினைவில் கொண்டு இந்த பகுதியில் சொல்லவும் செய்கிறேன்.

கிட்டத்தட்ட நிறைய எழுத்தாளர்கள் பதிவுலகிற்கு வந்தாச்சு. இன்னொரு எழுத்தாளரை எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் யாராவதுஇ பாராட்டி எங்காவது படித்திருக்கிறீர்களா? உங்கள் நினைவுகளைத் திரட்டித் தான் பாருங்களேன்.

யார் எது எழுதினாலும் அந்த எழுத்தில் வெளிப்படுகிற சிறப்பு தான் முக்கியமாகிப் போனால் ஸ்ரீராமும் ஒண்ணு தான், வண்ணதாசனும் ஒண்ணு தான் என்று நெஞ்சு நிமிர்த்திச் சொல்ல முடியும். இதற்கெல்லாம் அந்த எழுத்து நம் மனசில் விளைவிக்கும் கிளர்ச்சி தான் காரணம். நாம் பெற்ற உன்னதத்தை வெளியில் சொல்லாமல் மனசில் பூட்டி வைத்துக் கொண்டு என்னத்தைக் கண்டோம்?.. சொல்லுங்கள்.

நல்ல எழுத்துக்களை மனம் தோய்ந்து படிக்கும் பொழுது அதைப் பாராட்டிச் சொல்ல வேண்டும் என்று தோன்றுவது எழுதுகோலைப் பிடித்தவனின் இயல்பு. சொல்லப்போனால் கடமையும் கூட.

ஜீவி said...

@ ஸ்ரீராம் (2)

வண்ணதாசன் கதைகள் நிறைய இணையத்தில் கிடைக்கிறது. படித்துத் தான் பாருங்களேன். மற்றவர்களிடமிருந்து விலகி அவர் தனித்துத் தெரிவார்.

ஜீவி said...

@ ஸ்ரீராம் (3)

இல்லை, ஸ்ரீராம். துக்ளக் துர்வாசர் வண்ணநிலவன். அவரைப் பற்றியும் அவரது எஸ்தர் கதை பற்றியும் எழுதுகிறேன்.

Thulasidharan V Thillaiakathu said...

ஜீவி அண்ணா நீங்க ஒவ்வொரு எழுத்தாளரைப் பற்றியும் மிக மிக அழகாகப் பாராட்டி அவர்களது எழுத்தைப் பற்றி நுணுக்கமாகவும் சொல்லி வருகின்றீர்கள். விட்டதையும் வாசித்து வருகிறேன்.

வண்ணதாசன் அவர்களின் கதைகள் https://www.valaitamil.com/literature_short-story_vannadhasan/

இதிலிருந்து தான் அவர் கதைகள் வாசிக்கிறேன். கிருஷ்ணன் வைத்த வீடும் வாசித்தேன். காற்றின் அனுமதியும். கணினி சரியானால் மற்றவையும் வாசிக்க வேண்டும்..

வெங்கட்ஜி எனக்கு இவரது/கல்யாண்ஜி யின் கவிதைப் புத்தகம் அன்பளிப்பாகக் கொடுத்தார். அது வாசிப்பதற்காக மேசையில் வைத்திருந்த போது உறவு வந்து அதை எடுத்துக் கொண்டு போக பின்பு வரவே இல்லை...கேட்டு சலித்துவிட்டது.

கீதா

வெங்கட் நாகராஜ் said...

இவரது ஒரு கவிதைத் தொகுப்பு படித்து ரசித்திருக்கிறேன். சிறுகதைத் தொகுப்பு படித்ததில்லை.

உங்கள் மூலம் பல எழுத்தாளர்களின் சிறப்புகளை நாங்களும் தெரிந்து கொள்ள முடிகிறது. நன்றி.

வல்லிசிம்ஹன் said...

இன்னொரு எழுத்தாளரை எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் யாராவதுஇ பாராட்டி எங்காவது படித்திருக்கிறீர்களா? உங்கள் நினைவுகளைத் திரட்டித் தான் பாருங்களேன்.///
அன்பு ஜீவி சார்,
நீங்கள் இருக்கிறீர்களே.
என்னைப் போன்ற எழுத்துக்கடலின் கரையில் நிற்பவரின்
எழுத்துகளை மெச்சுபவர் நீங்கள்.
வண்ணதாசன் அருமையான எழுத்துக்குச் சொந்தமானவர்.
கல்யாண்ஜியின் கவிதை மிகவும் யதார்த்தம்.
அந்தக் குளத்தின் அருகே நின்று பார்ப்பது போல இருந்தது.

டி கே கலாப்ரியாவின் எழுத்தும் எனக்கு மிகப் பிடிக்கும்.
வண்ண நிலவன் எஸ்தர் ஒன்று தான் படித்திருக்கிறேன்.

சிவகுமாரன் said...

வெகு காலத்திற்கு வண்ணதாசன் தான் கல்யாண் ஜி என்று தெரியாமல் இருந்தேன். சுமார் 25 வருடங்களுக்கு முன்னர் கலை இலக்கிய பெருமன்ற பயிற்சி பட்டறையில் சந்தித்தேன்.பிரமிப்பு அடங்க வெகு களமாயிற்று.

வே.நடனசபாபதி said...

எழுத்தாளர் வண்ணதாசனின் கதைகளைப் படித்ததில்லை. தங்களின் பதிவைப் படித்தவுடன் அவரது கதைகளை படிக்கும் ஆவல் உண்டாகிறது. அவரது கதையில் ஒவ்வொரு விவரணையும் ஒரு மையப்புள்ளியில் காம்பஸின் ஒரு ஊசி முனைய ஊன்றிக் கொண்டு பென்ஸில் செருகிய இன்னொரு முனையை அகட்டி வட்டமடிப்பது போல,எழுதுகையில் அது பாட்டுக்கு வந்து விழும் என்ற தங்களின் உவமையை இரசித்தேன்.

‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.’ என்பது போல் கல்யாண்ஜி யின் கவிதை ஒன்றினைத் தந்து அவரது கவிதையின் வீச்சு எவ்வாறு இருக்கும் என்பதையும் கோடி காட்டிவிட்டீர்கள்.

இவரது 'ஒரு சிறு இசை' என்ற சிறுகதை நூலுக்காக இந்திய அரசின் 2016 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது கிடைத்தது என்பதையும் இவரது தந்தை தி. க. சிவசங்கரன் அவர்களும் சாகித்ய அகாதமி விருது பெற்றவர் என்பதை குறிப்பிட்டிருக்கலாமே.

இவரது எழுத்து பற்றி மறைந்த என் அண்ணன் திரு சபாநாயகம் அவர்கள் அவரது வலைத்தளத்தில் இவர்களது எழுத்துமுறை என்ற தலைப்பில் எழுதியிருக்கிறார்.

ஜீவி said...

@ கீதா

வண்ணதாசன் சிறுகதைகள் விரவிக் கிடக்கும் சுட்டியை வாசிக்க விருப்பமுள்ளவர்களுக்குக் கொடுத்தமைக்கு நன்றி, சகோதரி.

அட! நம்ம வெங்கட்ஜி கல்யாண்ஜியின் கவிதைத் தொகுப்பைக் கொடுத்தாரா?.. யாராவது வாசித்தால் சரி. வாசிக்கத் தானே புத்தகங்களே!

தொடர்ந்து வாருங்கள். தமிழ் எழுத்தாளர்களை ஒவ்வொருவராக இங்கு வரிசை கட்டலாம்.

ஜீவி said...

@ வல்லிசிம்ஹன்

பதிவுலகத்திலிருக்கும் பத்திரிகை எழுத்தாளர்களைச் சொன்னேன். ஒரு பத்திரிகை எழுத்தாளர் இன்னொரு பத்திரிகை எழுத்தாளரின் சிறுகதை, நாவல்களைப் பற்றி விமர்சன ரீதியில் (பாராட்டாகக் கூட) எழுதிப் படித்ததில்லை. ஜெயமோகன் செய்திருக்கிறார் என்றாலும் சில பத்திரிகைகள் தவிர்க்க முடியாமல் கட்டுரைகளுக்கு அவரை நாடியதே தவிர அவரது படைப்பிலக்கிய எழுத்தாக்கங்களுக்கு ஆக்கபூர்வமான ஆதரவுகளை அளித்ததில்லை. தனிப்பட்ட தனது சொந்த முயற்சிகளின் வெளிப்பாடாகவே அவர் தமிழ் உலகிற்குத் தெரிய வந்தார்.

கேரள இலக்கிய உலகில் இந்த போக்குகள் இல்லை என்பதையும் நீங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். தமிழ் நாட்டில் ஒரு நாலு பத்திரிகைகள் 'இவர்கள் தான் எழுத்தாளர்கள்' என்று முத்திரை குத்தப்பட்டவர்கள் தாம் தமிழ் எழுத்தாளர்களாக பவனி வந்த அவலங்களும் இங்கு நிகழ்ந்திருக்கின்றன. அதனால் இந்தப் பகுதியில் கூடிய வரை
பிரபல அந்நாளைய பத்திரிகைகளால் அடையாளம் காட்டப்படாத எழுத்தாளர்களைப் பற்றி எழுத வேண்டும் என்ற ஆர்வமும் கூடியிருக்கிறது. ராஜம் கிருஷ்ணன், சூடாமணி, சிவசங்கரி, அகிலன் போன்ற குறிப்பிட்ட சில சாதனையாளர்களையும் இந்தத் திருக்கூட்டத்தில் சேர்த்துக் கொள்வதில் தவறில்லை என்ற முடிவுக்கும் வந்திருக்கிறேன்.

நான் குறிப்பிடுவது கூட என் அறியாமையில் விளைந்த ஆதங்கமாக இருக்கலாம். பதிவுலகில் நான் வாசிப்பது மிகவும் குறைச்சலே. நமது ஸ்ரீராம் தான் நிறைய பதிவுகளை வாசிக்கிறார். அவர் இதுபற்றி எதுவும் சொன்னால் சரியாக இருக்கும்.

ஜீவி said...

@ வல்லிசிம்ஹன்

ஆஹா! நிச்சயம் கலாப்பிரியாவைப் பற்றி எழுதுகிறேன். குறித்துக் கொண்டு விட்டேன்.
நன்றி, வல்லிம்மா.

ஜீவி said...

@ சிவகுமாரன்

வாருங்கள், கவிஞரே! வணக்கம்.

எவ்வளவு நாளாச்சு, பார்த்து?..

ஒரு கவிஞரைப் பற்றி எழுதியதும் தான் இன்னொரு கவிஞரின் கண்ணில் பட்டிருக்கிறது, பாருங்கள்! கலை இலக்கியப் பெருமன்ற தொடர்பை அறிந்ததில் மிகவும் மகிழ்ச்சி. துணைக்கு இன்னொருவராய் கிடைத்திருக்கிறீர்கள். அந்நாட்களில் மாதாமாதம் 'தாமரை'யின் 30 பிரதிகளையாவது விற்றுத் தர வேண்டும் என்று காஞ்சிபுரத்தில்
கங்கணம் கட்டிக் கொண்டு சைக்கிளில் அலைவேன். தங்களை இந்த இடத்தில் பார்த்தட்னில் மிகவ்ம் மகிழ்ச்சி.

ஜீவி said...
This comment has been removed by the author.
ஜீவி said...

@ வே. நடன சபாபதி

வண்ணதாசன் கதைகளுக்கு சகோ. கீதா சுட்டி கொடுத்திருக்கிறார், ஐயா.

தங்கள் சகோதரர் சபாநாயகம் ஐயா எழுத்துக்களை சென்ற காலத்தில் நான் மிகவும் விரும்பிப் படித்ததுண்டு. அவர் மிகப் பிரமாதமாக அந்தப் பணியைச் செய்தார். தமிழ்
எழுத்துலகிற்கான கொடை அவை.

தன் எழுத்துக்கள் பற்றி ஒரு எழுத்தாளனின் (வண்ணதாசன்) சொந்த எண்ணங்கள் எப்படி இருக்கிறது, பாருங்கள்.

இந்தப் பதிவை வாசிக்கிறவர்கள் தவறாது தாங்கள் தந்திருக்கும் அந்த சுட்டியையும் வாசிக்க வேண்டும். அதுவே ஒரு நல்ல அனுபவமாக அவர்களுக்கு இருக்கும்.

தொடர்ந்து தாங்கள் இந்தப் பகுதியை வாசித்து தங்கள் மன எண்ணங்களைப் பதிவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, ஐயா. நன்றி.

Related Posts with Thumbnails