மின் நூல்

Monday, January 29, 2018

படித்ததில் பகிர நினைத்தவை

புதிய பகுதி  ஆரம்பம்           

                                       1
விஷயம் நல்லதோ,  கெட்டதோ ஒரு அலசல் செய்யத் தோன்றுகிறது.

ரீ கலெக்ஷன் ஆஃப் தாட்ஸ் மனுஷனுடைய பெரிய சொத்து.  நடந்ததை நினைவுக்குக் கொண்டு வந்து யோசனை பண்ணத்  தன்னை பக்குவப் படுத்திக்கறது மனுஷனுக்கு மட்டுமே உண்டு.  மிருகம் மாதிரி சட்டென்று கோபமோ காமமோ வந்திடறதில்லே;  வாலை மிதிச்ச உடனே பாஞ்சிடறதில்லே.  கோபப்பட்டா என்னாகும்ன்னு நம்மாலே யோசிக்க முடியும்.  தொடர்ந்து யோசிக்கிறவன் ஞானி.

முடியாதவன்  மிருகம்.  யோசனை பண்ணினதின் விளைவு, ஏன் என்ற கேள்வி  கேட்டதின் பதில் இன்றைய வாழ்க்கை வளர்ச்சி.  அன்றையிலிருந்து இன்று வரைக்கும் மிருகத்திற்கு பசி தான் பிரச்னை.  நமக்கு ஆயிரம்.  வளர்ச்சின்னா இடைஞ்சல் உண்டு.  இடைஞ்சலைத் தாண்டறது தான் வளர்ச்சி.                                                                                                     

நாய்க்குட்டியை நிலைக்கண்ணாடிக்கு  முன்னாடி வச்சா என்ன  பண்ணும்?.. நக்கிப் பாத்துட்டு தின்ன முடியலேன்னு  போயிடும்.  மனுஷன் நின்னா, அடடா,  நான் இவ்வளவு அழகான்னு யோசிப்பான்.  தன் இருப்பும் தெரிந்து எதிர்ப்பக்கம் போய் தன்னையே பாத்துக்கற சுபாவம் வர்றது.

நாய்க்குட்டிக்கோ இருப்பு  மட்டும் தான் முக்கியம்.   மனுஷனுக்கு இருப்பும் தொலைவும் உண்டு.  தொலைவுப் பார்வை இருக்கறதாலே வீடும், அரிசி சேமிப்பும் அல்லது ஏதாவது ஒண்ணு வந்திடறது.  இதற்குண்டான  பிரச்னையும் வளர்ந்திடறது.  படருவதால், வளர்வதால் வரும் பிரச்னை. படர்ந்த இடம் மரமோ,  முள்ளுச் செடியோ,  மலையோ, தரையோ அந்த சூழ்நிலை பிரச்னை.

மனிதனுக்கு சந்தோஷம் என்பது என்ன?..  தன்னைப் பிறரிடமிருந்து உயர்த்திக் காட்டிக் கொள்ளுதலா?  எதையும் பிறரிடம் பகிர்ந்து கொள்ளுதலே சந்தோஷம்.   இந்தப் பகிர்தலின் பொருட்டே உறவும், உறவுக்கான சடங்கும்.  பகிர்ந்து கொள்ள மறுப்பவன்  பயமுள்ளவன்.

'தனிமை கண்டதுண்டு; அதிலே சாரமிருக்குதம்மா'   என்கிற  த்வனியிலேயே ரகசியம் பரிமாறும் உணர்வு இருக்கிறது.

                                                                                                                  --  பாலா

                                     2

ள்ளங்கையில் ஓர் அற்புதம்!

ஒருவனின் கைரேகையைப் போலவே மற்றொருவனின் கைரேகை இருக்காது என்பதை முதன் முதலில் கண்டுபிடித்தவர் சர் பிரான்ஸிஸ் கால்டன் என்பவர்.  ஆண்டு:  1892.                                                 
                                                                                                           
'எந்த இரு கைரேகைகளும் ஒரே மாதிரியானவை அல்ல' என்பதை முதன்  முதலாக உலகத்துக்கு நிரூபித்துக் காட்டினார்.  கைரேகையைக் கொண்டே குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் முறைஒயை சர் எட்வர்ட் ஹென்றி என்பார் பிரபலப்படுத்தினார்.

அப்பா மாதிரியே மூக்கு இருக்கலாம்  அம்மா மாதிரியே கண் இருக்கலாம். ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் கூட ஒரே மாதிரி  இருக்கலாம்; ஆனால் கைரேகை மட்டும் இந்த உலகத்தில் வாழும் கோடிக்கணாக்கான மக்களுக்கும் வெவ்வேறு தான்.

கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் கொஞ்சம் யோசித்தால் நல்லது.


                                    3
காதுகளின் மீது  மச்சம் இருப்பது மிகவும் நன்மையைத் தரும். இரண்டு  காதுகளின்  மீதும் மச்சம் இருந்தால், அவன் மிக்க செல்வ குடும்பத்தில் பிறந்தவன்.  தன் முயற்சியாலும் மென்மேலும் செல்வத்தை வளர்த்து மிகவும் பாக்கியசாலி என பாராட்டப் பெறுவான்.


செவிகளின்  பின்புறத்தில் மச்சம் இருந்தால் வாழ்க்கைக்குத்  தேவையான  சகல வசதிகளும் பெற்றவனாகவும், பித்ரார்ஜிதம், ஸ்வார்ஜிதம், இரண்டும் நிறைந்தவனாகவும்,  தனக்கு ஈடான  ரூபமும் , குணமும், செல்வமும் நிரம்பப் பெற்ற மனைவியை மணப்பவனாகவும் நீண்ட ஆயுள் உள்ளவனாகவும் புகழுடன்  வாழ்வான்.

வலது செவி நுனியில் மச்சம் இருப்பவர்களுக்கு ஜலகண்டம் ஏற்படுமென்று சாஸ்திரம் கூறுகிறது.  மற்றும் இயற்கையாகவே இவர்களுக்குத் தண்ணீர் உள்ள இடங்களில் பயம் ஏற்படும்.

இடது செவி நுனியில் மச்சம் இருந்தால்---  இது வேண்டாம்.

வலது  செவியின் அடியில் மச்சம் இருந்தால் , அவனுக்கு வாழ்க்கைக்குரிய வசதிகள் இருந்தும் வீணாகப் பலவிடங்களில் கடன் வாங்கி கடன்காரர்களின் தொந்தரவுகளால் மனம் கலங்குவான்.

இடது செவியின் அடியில் மச்சம் இருந்தால்,  எந்த வசதியும் இல்லாமல் ஏழ்மையால் வருந்துவான்.

==  உடல் மச்சங்களும் உங்கள் வாழ்க்கை ரகசியங்களும் என்ற நூலிலிருந்து.
ஆசிரியர்:  கீழாத்தூர் ஸ்ரீநிவாஸாச்சாரியார். வெளியீடு:  லிஃப்கோ.




                                    4     

எது எது எங்கும் இருந்தாலும் காணக்  கிடைக்காததோ

எது அறியப்படாவிட்டாலும் நம்மை அதைப்பற்றியே பேச வைக்கிறதோ அது கடவுள்.

எது உணர்வில் மட்டும் வசிக்கிறதோ எது உணர்வு மயமானதோ அது கடவுள்.

மனிதனை நேசிக்க கற்றுக் கொடுப்பது,  இந்த வாழ்க்கையை மேலானதாக மாற்றக் கற்றுக் கொடுப்பது கடவுள்.

இலக்கியமும் கடவுள் வடிவந்தான்.  மனிதனையே கடவுளாகப் பார்க்கச் செய்வது தான் இலக்கியம்.

                                                                                       
                                                                                                                                                 --- ஜெயகாந்தன்



                                       5

ஷியாம் பெனகல் நேதாஜி பற்றிப் படம் எடுத்தார்.  வடநாடு ஞான ராஜசேகரன் அவர்.  மிகப் பொருத்தமான தலைப்பு--  'BOSE FORGOTTEN HERO'.

இது பற்றிய 'ஹிந்து' விமரிசனம் வரிக்கு வரி நெஞ்சில் சுட்டது நினைவுக்கு வருகிறது.  நேதாஜியை இந்நாடு எவ்வளவுக்கு மறந்து விட்டது என்பதை அந்த விமர்சகர் அழகான வார்த்தைகளில் அங்கலாய்த்திருந்தார்.

போஸ் மட்டும் தானா?..'UNSUNG HEROS' என்கிற 'ரெடிமேட்' தலைப்பை இதற்காகவே தயாரித்திருந்தார்கள்.  காய்ந்த பனை மட்டைகள் எழுப்புகிற சலசலப்பு இங்கே ரொம்ப அதிகம்.  அந்தப் பெருங்கூச்சலில் இனிமை மிகு வீணை நாதங்கள் அமுங்கிப் போகின்றன.                               

நாட்டுக்காக சர்வ பரித் தியாகம் செய்து தங்களின் எல்லாவற்றையும் இழ்ந்தவர்கள் அடியோடு மறக்கப்பட்டாயிற்று.  இப்போது 'மேலே' இருக்கிற பலர், தகுதித் தராசிலும் 'மேலே' இருக்கிற தட்டுகள் தான்.

இளைய தலைமுறைக்கு நம் சுதந்திரப் போராட்ட வரலாறு உரிய முறையில் சொல்லப்படவே இல்லை.  சுதந்திரம் கிடைத்த கையோடு, பொறுப்பில் இருந்தவர்கள் இதைச் செய்யத் தவறி விட்டார்கள். இரண்டு மூன்று தலைமுறைகள் திசை திரும்பி விட்டதற்கு இதுவே முதற் காரணம்.  இந்தப் பெரும் குறை இனியாவது சரி செய்யப்பட வேண்டும்.  ஏற்கனவே சிலர் களத்தில் இருப்பது உண்மை தான்.  போதாது. இது ஒரு இயக்கமாகவே நடத்தப் பட வேண்டும்.  மூத்த--இளைய தலைமுறைகள் இணைந்து முனைய வேண்டும்.
                                                                   
                                                                                                               --  பாஹே
                                                                       


                                                                     6

னது முதலாவது ஆசிரியப் பணி ஜவ்வாது மலைக் காடுகளில் பஸ் போக்குவரத்து இன்று வரை கூட இல்லாத புலியூர் என்ற ஆதிவாசி ஊரின் வனத்துறைப் பள்ளியில் ஓராசிரியப் பள்ளியில் தான் தொடங்கியது.  என்னைச் சென்னைக்குப் போகச் சொன்னவர்கள் நான் வனவாசம் போனதைப் பார்த்து வருத்தப் பட்டார்கள்.  அங்கு வாழ்ந்த ஓராண்டில் அந்த கானக வாசம் தந்த கற்பனை தான்  'இன்று  புதிதாய்ப்  பிறந்தோம்' என்ற தமிழக அரசின் இரு ஆண்டுகளுக்குமான நாவல் பரிசினைப் பெற்றது.  1967-ல் மலேசியா தின ஏடான தமிழ் நேசன் இதழில் ஓராண்டு வெளியான அந்த நாவலுக்கு வருடா வருடம் ஒரு வாசகர் கடிதமாவது வந்து கொண்டே இருக்கும்.  எங்கள் ஊரிலே என் ஆப்த நண்பரின் அண்ணன் நடத்திய ஹோட்டலில் அடிக்கடி சென்று அவரோடு காலம் கழித்த நாட்கள் ஏராளம். அந்த ஹோட்டல் ஒரு குடும்பமாக விளங்கியதையும் அந்தக் காலத்தில் மனித மதிப்பீடுகளுக்கு இருந்த மரியாதையும் என் 'ஜமுனா' நாவலில் வடிவம் பெற்றன.

எட்டு ஆண்டுகள் பள்ளிகொண்டா என்ற பெரிய கிராமம் ஒன்றில் பணியாற்றிய பொழுது சுற்றியிருந்த ஊர்களின் தோல் ஷாப்புகளால் ஆற்றங்கரையும் விவசாயமும் அழிந்து கொண்டு வரும் காட்சியைக் கண்டு மனம் பதறிய அனுபவம் 'கன்னியராகி நிலவினிலாடி'   என்ற நாவலாக வெளிப்பட்டது.  அங்கு  சந்திக்க நேர்ந்த ஒரு இன்ஸ்பெக்டர் 'மணல்வெளி மான்கள்' நாவலில் கதாபாத்திரமானார்.                                           
                                               
                   
இப்படி ஒவ்வொரு படைப்புக்கும் பின்னால் ஒரு கதை உண்டு.  சொல்லிக் கொண்டே போகக் கூடிய கதை.  புகழ் தேடியோ பணம் தேடியோ எழுதாதே என்று எனக்கு நான் போதித்துக் கொண்ட கதை புகழ் பொருளற்றுப் போகிறது.  போட்டி பொறாமையை வளர்த்து பொல்லாங்கி விடுகிறது. நான் கண்ட அனுபவம் இது.

பணம் அர்த்தமிழக்கிறது.  அர்த்தங்களை மேன்மையான மதிப்பீடுகளை அழிக்கிறது.  மனித மதிப்பீடுகளை மண்ணுக்குள் வீழ்த்தித் தேய்ந்து மாய்த்து விடுகிறது.  இதுவும் கண்ணார நான் கண்ட அனுபவம்.  இதையெல்லாம் வெளியிட்டுக் கொண்டு போனால் பைத்தியக்காரன் என்றோ  போலிப் பாசாங்குக்காரன் என்றோ கெட்ட பெயர் தான் மிஞ்சுகிறது.  நல்லது.  அப்படிச் சொல்வதில் ஒரு நஷ்டமுமில்லை.  எல்லாக் காலங்களிலும் சில பைத்தியக்காரர்கள் இருந்து கொண்டே தான் வருகிறார்கள்.  ஒரு பாதிப்பும் இல்லை.  காலம் ஓடிக்கொண்டே இருக்கிறது. எனக்குத் தோன்றுவதை வெளியிட்டு மன ஈடுபாட்டோடு உழைக்க வேண்டியது தான் எனக்கு விதிக்கப்பட்ட பணி.  இந்த நெடிய அனுப்வங்களுக்குப் பின் எனக்கு விளங்கியது இது தான்.

வேதனைகளை வெளியேற்று.

பரவசங்களைப் பகிர்ந்து கொள்.

வெளிச்சத்தைச் சுட்டிக் காட்டு.

வேலையைப் பார்த்துக் கொண்டு போ.

-- இவை தான் எனக்கு நான் தேர்ந்தெடுத்துக் கொண்ட சாலைத் திருப்பங்கள். ஆத்ம கெளரவம் என்ற பாதையை நோக்கி நடந்தது என் பயணம்.

ஆத்ம கெளரவம் என்ற சொல் மனித மதிப்பீட்டின் உச்சிப் படிக்கட்டு.


                                                                                                            ----  வையவன்.



படங்கள் உதவிய நண்பர்களுக்கு நன்றி.

12 comments:

நெல்லைத் தமிழன் said...

படித்து முடித்தவுடன் எனக்குத் தோன்றியது, இரண்டு இடுகைக்கான ஆழமான விஷயங்களை ஒரு இடுகையில் கொடுத்திருக்கிறாரே என்றுதான். ஒவ்வொன்றையும் ரசித்துப் படித்தேன். எல்லாமே போகிற போக்கில் படித்துவிட்டுச் செல்வதல்ல. ஒவ்வொன்றையும் படித்து மனதில் என்ன சொல்ல வந்திருக்கிறார் என்று ஆழப் பதிந்துகொள்ளும் அளவுக்கு விஷயம் கொண்டவை.

பிடித்திருந்தது. பிறகு வருகிறேன்.

தனிமரம் said...

நெஞ்சில் நிறுத்தக்கூடிய போதணைகள் அனைத்தும்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

இவ்வாறாகச் செய்திகளைத் திரட்டுவது என்பது சற்று சிரமமே. அனைத்தும் பயனுள்ளவை.

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்
@ தனிமரம்
@ Dr. B.Jambulingam

-- வாசிப்பின் ரசனையைப் பகிர்ந்து கொண்ட நண்பர்களுக்கு ரொம்ப நன்றி.

தொடர்ந்து வர வேண்டுகிறேன். கொஞ்சம் கொஞ்சமாக இந்தப் பகுதியைப் பிரமாதமாக்கலாம்.

G.M Balasubramaniam said...

ஒரே ஒரு வேண்டுகோள் படிக்கும்போது மனதில் தோன்றியது பகிர்வதற்காகப் படித்ததா ?படித்ததைப் பகிரவா சில எழுத்துகள் பலரை ஈர்க்கும் எல்லோரையும் ஈர்க்கும் என்று சொல்ல முடியுமா நான் படிப்பதில் ரசிப்பது சிலநேரங்களில் பதிவுக்கு வரும்பின்னூட்டங்களைத்தான் ஏற்கனவே இரு தொடர்கள் இருக்கின்றன எதுவும் அந்தரத்தில் இருக்கக் கூடாது தவறாகக் கூறி விட்டேனா

innaiyaveli.blogspot.in said...

Just remarkable. Continue it: so that it may result in as a good book

ஜீவி said...

@ G.M. Balasubramaniam

எல்லோரும் எல்லாவற்றையும் படிப்பார்கள் என்று சொல்ல முடியாது. அதனால் நாம் படித்ததை பிறருக்குப் பகிர்ந்து அவர்களையும் ரசிக்க வைப்பது. உண்மையான பகிர்தல் இது தானே, ஜிஎம்பீ சார்!

நம் பதிவுகளுக்கு வரும் பின்னூட்டங்களை ரசிப்பது நம்மையே நாம் ரசிப்பது மாதிரி.

இந்த மாதிரியான பகுதிகள் பரந்த வாசிப்பு அனுபவத்தை பிறருக்கும் நல்கி, சிறந்த எழுத்துக்களை ரசிக்கும் அனுபவத்தை ஏற்படுத்தும் இல்லையா?..

தொடர்களும் தொடர்ந்து வெளிவரும் தான்.

நிச்சயம் தவறாக ஏதும் இல்லை. கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதில் தவறேது இருக்கும்?.. நன்றி, ஐயா.

ஜீவி said...

@ வையவன்

வையவன் ஐயாவின் அன்பான வழிகாட்டலுக்கும் நுண்ணிய பார்வைக்கும் நன்றி.
தங்களின் ஆசியோடு தொடர்ந்து எழுதி வருவேன், ஐயா.

ஜீவி said...

G+-ல் அன்பான நண்பர் பரந்த வாசிப்பு அனுபவம் கொண்ட திரு. கிருஷ்ணமூர்த்தி ஸார்.

Krishna Moorthy S: நெல்லைத்தமிழன் சொன்னதுபோல, பல சுவாரசியமான வாசிப்பைச் சொல்ல ஆரம்பித்திருக்கிறீர்கள்!

அடுத்த ரவுண்டில் என்ன வரும் என்று தெரிந்துகொள்கிற ஆவல் இப்போதே ஆரம்பித்துவிட்டது!
Venkataraman Ganesan: நன்றி, கிருஷ்ணமூர்த்தி, ஸார்.
தங்களைப் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி.

ஸ்ரீராம். said...

நன்றி. நன்றி.

Thulasidharan V Thillaiakathu said...

அனைத்தும் ஆழமான கருத்துகள். இப்படி ஒவ்வொரு பிரபலங்களும் சொன்ன கருத்துகளை வாசிப்பதும் ஒரு ஸ்வாரஸ்யம்தான்!!! ரசித்தோம்... அட! பாஹேயும் வந்திருக்கார்!!!!

இதுதான் புதிய பகுதினு ஸ்ரீராம் சொன்னதா!! இப்பத்தான் புரியுது!! ஸ்வாரஸ்யமான பகுதி..தொடர்கிறோம்

கீதா

வே.நடனசபாபதி said...

தேர்ந்தெடுத்து பதிவிட்டிருக்கும் அனைத்தும் அருமை. அதிலும் திரு ஜெயகாந்தன் அவர்களின் கடவுள் பற்றிய கருத்தும் திரு வையவன் அவர்களின் தனக்குத் தானே தேர்ந்தெடுத்து கொண்ட நான்கு சாலைத் திருப்பங்களும் சிந்திக்க வைக்கின்றன. பகிர்ந்தமைக்கு நன்றி!

Related Posts with Thumbnails