மின் நூல்

Monday, April 22, 2019

வசந்த கால நினைவலைகள்...

                                                                           14


பொதுவாக எது நமக்குப் பிடித்திருக்கிறதோ அதன் மேலேயே ஆழ்ந்த கவனம் செல்லும். நமக்குப் பிடித்திருப்பதே இன்னொருவருக்கும் பிடித்திருப்பது நமக்குத் தெரியவந்தால் அவருடன் நெருக்கம் அதிகமாகும். நமக்குப் பிடித்திருப்பதில் பாண்டித்தியம் பெற்றவர்களைக் கண்டால் அவர் மேல் நமக்கு ஒரு மரியாதையும் அன்பும் பெருகும்.  இப்படித் தான் தமிழ் எழுத்தாளர்கள் பலர் என் உள்ளம் கவர் கள்வர்கள் ஆனார்கள்.  தமிழ்ப் பத்திரிகைகளை வாசிப்பதும் நேசிப்பதுமே பொழுது போக்கைத் தாண்டிய என்னை இயக்கிய ஆதார சுருதி ஆயிற்று.

எழுத்து சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு எப்படி அந்நாளைய தமிழ் எழுத்தாளர்கள் பிடித்துப் போனதோ  அப்படியே மேடைப் பேச்சில் பல புதுமைகளைப் புகுத்திய அந்நாளைய திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் மனசுக்கு மிகவும் பிடித்துப் போனவர்கள் ஆனார்கள்.  அவர்கள் பேசிய  தமிழ் மனதைக் கவர்ந்தது.  மேடைப் பேச்சிலும் உரைநடையிலும் அடுக்கு மொழியைப் புகுத்திய அண்ணாவின் தமிழ் கேட்டு தேன் மாந்திய  வண்டானேன்.  வீட்டு வெளித் திண்ணையில் படுத்துக் கொள்வதாக  சொல்லி விட்டு பாயும் தலையணையையும் போட்டு  விட்டு முன் இரவு தாண்டியதும்  அண்ணா பேசுகிறார் என்றால் பொதுக் கூட்டத்  திடலுக்குப் போய்விடுவேன்.

அண்ணா மைக்கைப் பிடிக்க எப்படியும் பதினொன்றுக்கு மேலாகி விடும். 
பாரதி சொன்னானே, தேன் வந்து  பாயுது  காதினிலே என்று.  அப்படித் தமிழ்த் தேன் காதில் பாய்வதைக் கேட்டு பரவசம் அடைந்தவன்  நான்.  அது ஒரு ரசவாத  வித்தை தான்.  எப்படி இப்படி  ஆற்றொழுக்காக ஒருவரால் எந்தத் தடுமாற்றமும் இல்லாமல் தொடர்ச்சியாகப் பேச முடியும் என்பது அந்நாட்களில் புரியாத புதிராக இருந்தது.  சிலர் வரவழைத்துக் கொண்டு அடுக்கு மொழியாய் பேச முயற்சிப்பார்கள்.  அண்ணாவுக்கோ இயல்பாக வாய்த்த திறமை அது.   வடமொழி வார்த்தைகள் இயல்பாய்த்  தமிழோடு பின்னிப்  பிணையும்.   அ-வில் ஒரு வார்த்தை ஆரம்பித்தால் அவர் சிந்தனையில் தொடர்வண்டித் தொடர் போலத் தொடரும் அடுத்த வார்த்தை அ-வில் ஆரம்பிக்கும் வடமொழி  வார்த்தையாக இருக்கிறதே என்று அந்த வார்த்தையைத் தவிர்க்க மாட்டார்.  வடமொழியும் தமிழும் கலந்து ஆற்றொழுக்காக அவர் பேசுவது தமிழ்ச் சங்கீதத்  தாலாட்டு போல இருக்கும்.   சீர்திருத்த கருத்துக்களை இயல்பான நம் அன்றாட   நிகழ்வுகளில் பொறுத்தி   அவர் சொல்லும் பொழுது மாற்றுக் கருத்து கொண்டோரும் கேட்டு மகிழும் வண்ணம் இருக்கும்.  எனக்கோ கட்சி, கொள்கை, கோட்பாடு  என்றெல்லாம் ஆழ்ந்த ஈடுபாடுகள் ஏதுமில்லை.  ஈடுபாடுகள்  கொள்வதற்கான வயதும்  இல்லை.   அரும்பு  மீசை பருவத்தை,  adolescent  பருவம் என்று  சொல்வார்களே, அந்த மாதிரியான எதையும்  ரசிக்கும் கேளிக்கை பருவம்.   இன்றும் அண்ணா தனித்தன்மை கொண்டவராக  மனத்தில் பதிந்திருக்கிறார்.

தமிழ் வாழும் இடமெல்லாம் நமக்கான இடம் என்ற பரந்த வட்டத்தை எனக்குள் போட்டுக் கொண்டது மனதுக்குப் பிடித்திருந்தது.  அந்த பெரிய வட்டத்துள் வருவோரில் வேண்டுவோர், வேண்டாதோர் என்று யாருமில்லை. எனது நேசிப்பு, தமிழை நேசித்தோருடையேயான பிணைப்பு சங்கிலி ஆயிற்று.

ணி புக் ஸ்டால் பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கிறேன், அல்லவா?.. அவர்களின் விற்பனைக்காக புத்தக நிலையங்களிலிருந்து  வந்திருந்த ஏகப்பட்ட புத்தகங்களில் விற்பனையானவை  தவிர்த்து நிறைய புத்தகங்கள்  தேங்கிப் போயிருந்தன.  அவற்றையெல்லாம் திரட்டி சேலம் தேரடித்  தெருவிலேயே ஒரு வாடகை நூல் நிலையத்தைத் துவங்கினர்.  புத்தகம் வாசிக்கும் என் ஆர்வத்தைப் பார்த்து இந்த வாடகை நூல் நிலையத்தைப் பார்த்துக் கொள்ள  இவனே சரியான நபர் என்று தீர்மானித்து என்னிடம் விஷயத்தைச் சொன்னார்கள்.

காலை எட்டு மணியிலிருந்து மாலை எட்டு மணி வரை நூல் நிலையத்தின் வேலை நேரம்.  இடையில் மதியம் 1 மணியிலிருந்து 4 மணி வரை  ஓய்வு நேரம் என்றும் அந்த  நேரத்தில் என் தட்டச்சு, சுருக்கெழுத்து பயிற்சிகளைப் பெறலாம் என்றும்  ஆலோசனை சொன்னார்கள்.   நான் தட்டச்சு பயின்ற கணேஷ் டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட்டும் அடுத்த கட்டிட மாடியிலேயே இருந்தது.  தட்டச்சு+சுருக்கெழுத்து இரண்டுக்குமான பயிற்சிக்காக மாதம் பத்து ரூபாய் செலவாயிற்று.   அந்தத் தொகையையே நூலகத்தைப் பார்த்துக் கொள்வதற்கான சம்பளமாகத் தருவதாக  நண்பர் மணி சொன்னார்.  அறுபது ஆண்டுகளுக்கு முன் பத்து ரூபா காசுக்கு அவ்வளவு மதிப்பு இருந்தது.

எனது புத்தக வாசிப்பு ஆர்வம் கரும்பு தின்னக் கூலியா என்று தான் இருந்தது. இருந்தாலும் வீட்டில் கேட்டுச் சொல்வதாகச் சொல்லி வீட்டில் சொன்னேன்.

அவர்களோ "அதெல்லாம் ஒண்ணும் வேணாம்.  பேசாமல் டைப்ரைட்டிங் இன்ஸ்டியூட்டுக்கு போனோமா, வந்தோமா என்றிரு.." என்று சொல்லி விட்டார்கள்.  அவர்களுக்கு படிக்கிற வயசில்  வேலைக்குப் போய் பையன் மனசை இறுக்கமாக்கிக் கொள்ள வேண்டாம் என்ற எண்ணம்.  எனக்கோ  புத்தகம் வாசிக்கும் நேரம் தான்  பொன்னான நேரம் என்ற எண்ணம். கடைசியில் எப்படியோ வீட்டாரை சரிப்படுத்தி அந்த வாடகை நூல் நிலையத்தை நிர்வகிக்கும்  பொறுப்பை ஏற்றுக் கொண்டேன்.

அம்மாடி!. என் வாழ்க்கையின் மகிழ்ச்சியான காலம் அது.  நிறைய வேற்று மொழி இந்திய எழுத்தாளர்களை வாசித்துத் தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்த  காலம்.  காண்டேகர், சரத்சந்திரர்,  கே.ஏ. அப்பாஸ், பங்கிம் சந்திரர், பிரேம்சந்த், எம்.டி. வாசுதேவன் நாயர், தகழி, முகமது பஷீர், பொற்றேகாட் என்று யாரையும் விட்டு  வைக்க வில்லை.   அத்தனை பேர் எழுத்தையும் தமிழில் தான்  படித்தேன்   என்பது இன்னொரு அதிசயம்.   அந்நாட்களில் அகில இந்திய எழுத்தாளர்களின்  அறிமுகம் தமிழில்
கிடைத்ததும் இப்பொழுது  அந்த வாய்ப்பு சுருங்கிப் போனதும் நம் மொழிக்கான இன்னொரு இழப்பு.  இதனால் தான் காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு கதையாய் நமக்குள்ளேயே முடங்கிப் போகும் அவலமும் இங்கு அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

அந்த வாடகை நூல் நிலையத்திற்கு இன்னொரு பக்கத்தில் பத்துக்கு பத்து அளவில் சின்ன கடை மாதிரியான இடம் இருந்தது.   அங்கு எம்.என்.ஆர். ஏஜென்ஸி  என்ற பெயரில் பத்திரிகைகளின்  ஏஜெண்டாக ஒரு  பெரியவர்  செயல்பட்டுக்  கொண்டிருந்தார்.  கதர் வேட்டி,  கதர் ஜிப்பா, நல்ல உயரம், கொஞ்சம் தாட்டியான   உடல்வாகு.  சைக்கிளில் வந்து கால் ஊன்றி இன்னொரு காலை சைக்கிள் முன் பக்க பார் வழியாக வெளிக் கொண்டு வந்து இறங்குவார்.  முன்பக்க ஹாண்ட் பாரில் ஒரு பெரிய காக்கிப் பை நிறைய புத்தகங்கள் இருக்கும்.  பின் பக்க கேரியரில் நிறைய   புத்தகங்கள்   அடுக்கிக் கட்டப் பட்டிருக்கும்.  சாதுவான முகம்.  நெற்றியில் ஒற்றைக் கோபிக் கோடு.    அவரை முதன் முதலாகப் பார்த்த பொழுதே எனக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது.  சந்தர்ப்பம் கிடைத்த பொழுதெல்லாம் அவருடன் பேசி மிகவும் பிடித்துப் போய் விட்டது.   பத்திரிகை ஆபிஸ்கள், பிரபல எழுத்தாளர்கள் இவர்கள் பற்றியெல்லாம் நிறைய தகவல்கள் சொல்வார்.  அவருடனான பழக்கம் நாமும் ஏன் ஒரு பத்திரிகைக்கு  உள்ளூர் முகவராக செயல்படக் கூடாது என்ற எண்ணத்தை  என்னுள் விளைவித்தது.   அடுத்த நாள் 'தினமணி' செய்தித்தாளில் ஒரு விளம்பரம் பார்த்தேன்.    புதிதாக  திருவாரூரிலிருந்து   வெளிவரவிருக்கும்  'மாதவி' என்ற  ஏட்டிற்கு    முகவர் தேவை என்ற விளம்பரம்  பார்த்து எம்.என்.ஆரிடம் எப்படி விண்ணப்பிப்பது போன்ற சடங்கு நடவடிக்கைகளைத் தெரிந்து கொண்டு விண்ணப்பித்தேன்.


(வளரும்)


16 comments:

வே.நடனசபாபதி said...

அறிஞர் அண்ணாவின் பேச்சு எனக்கும் பிடிக்கும். அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் நான் படித்தபோது இரண்டு தடவை பேச வந்துள்ளார். ஒருதடவை ஆங்கிலத்திலும் மற்றொருமுறை ஆங்கிலத்திலும் பேச அழைக்கப்பட்டிருந்தார். இரண்டு பேச்சுகளையும் இன்னும் என்னால் மறக்க இயலவில்லை. அவர் பேச்சைக் கேட்க அந்நாட்களில் மக்கள் பல மைல்கள் தொலைவு சைக்கிளில் சென்றதை பார்த்து வியந்திருக்கிறேன். அவர் பேச்சுக்கு மயங்காதோர் அப்போது யாரும் இல்லை.

தங்களின் நூல் வாசிப்பு மணி புக் ஸ்டாலில் ஆரம்பமானதால் தான் பின்னாட்களில் புகழ்பெற்ற எழுத்தாளராக பரிணமிக்க முடிந்தது போலும். தாங்கள் கொடுத்து வைத்தவர். ‘கரும்பு தின்ன கூலி’ போல் பிரபல எழுத்தாளர்களின் நூல்களைப் படிக்க ஊதியமும் பெற்றிருக்கிறீர்கள்.

மாதவி ஏட்டின் முகவராக இருந்தீர்களா என அறிய காத்திருக்கிறேன்.

நெல்லைத்தமிழன் said...

தொடர்ந்து படித்து வருகிறேன். ரசனையாகச் செல்கிறது.

ஸ்ரீராம். said...

சுவாரஸ்யமான அனுபவங்கள். நூலகத்தை பார்த்துக்கொள்ளும் வேலை மிக் சுவாரஸ்யம். நானும் சிலநாட்கள் என் பதின்ம பருவத்தில் இந்த வேலையைப் பார்த்திருக்கிறேன்.

Bhanumathy Venkateswaran said...

திருநெல்வேலியில் இருந்த வரை கவலை இல்லாத சிறுவன் சேலம் வந்த பிறகு மெல்ல வளர்ந்து பொறுப்புள்ள இளைஞனாக பரிணமித்த வளர்ச்சி உங்கள் எழுத்திலே வெளிப்படுவது சிறப்பு.

நெல்லைத்தமிழன் said...

//நானும் சிலநாட்கள் என் பதின்ம பருவத்தில் // - நான் 5-6வது படிக்கும்போதே நூலகத்தில் முதல் ஆளாகப் போய் உட்கார்ந்துவிடுவேன். அப்போதுதான் துப்பறியும் சாம்பு போன்ற புத்தகங்களைப் படித்தேன். எங்க அப்பா, நான் 6வது படிக்கும்போது, நூல்கள் படிக்கும் எண்ணம் வரணும் என்று, ஸ்கூலில் நிறைய ஆர்வமுள்ள பசங்களுக்கு பள்ளி நூலகத்திலிருந்து புத்தகங்கள் கொடுத்துப் படிக்க வைப்பதுபோல், எனக்குக் கொடுத்த முதல் புத்தகம் (அவர் ஹெட்மாஸ்டர்), 'கழுதையின் காதல்'-ஷேக்ஸ்பியரின் தமிழ்ப்படுத்தப்பட்ட நாடகம் ஒன்று.

ஸ்ரீராம் - அப்போ ஏதேனும் புத்தகத்தைக் கவர்ந்துகொண்டீர்களா (வீட்டில் வைத்துப் படிப்பதற்கு?). நாங்கள் மதுரை காமராசர் யூனிவர்சிட்டியில், நூல் நிலையத்தில், எங்கள் படிப்புக்கு முக்கியமான புத்தகங்களை, கண்ட கண்ட அலமாரிகளில் (உதாரணம் 'கவிதை', 'நாவல்' போன்று) பதுக்கிவைப்போம்..

ஸ்ரீராம். said...

ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன் நெல்லை. பாரீசுக்குப் போ, இனிக்கும் நினைவுகள் என்கிற புத்தகம் போன்றவற்றை லவட்டினேன்!!!! (என்ன ஒரு பெருமை என்று நினைக்க வேண்டாம். அறியாத வயதில் செய்த பிழை!) நானே நூலகராய் பணியாற்ற வேண்டிய நேரங்கள் இருந்தது. சோதனைக்கு யாராவது வந்தால், நூலகர் மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்று அப்போதுதான் வீடு சென்றார் என்று சொல்லவேண்டும் என்று சொல்லிக் கொடுத்திருந்தார். ஆனால் சோதனைக்கு என்று யாரும் வந்ததில்லை.

வாராந்திர பத்திரிகைகளை நூலகம் முடிந்ததும் பகலும் இரவும் வீட்டுக்கு கொடுவந்து விடுவேன். படித்து விட்டு மறுநாள் திறக்கும்போது உள்ளே வைத்துவிடுவேன்.

நான் நடத்திய கையெழுத்துப்பத்திரிகையும் நூலகத்தில் போடமுடிந்தது! தென்றல் என்று பெயர்.

கோமதி அரசு said...

அம்மாடி!. என் வாழ்க்கையின் மகிழ்ச்சியான காலம் அது.//

மகிழ்ச்சியான காலம். பூந்தோட்டம் போல் நூல் தோட்டத்தில் வேலை. தேனீ போல் புத்தகங்கள் படித்து களித்து இருக்கும் காலம் பொற்காலம் தான்.
இன்றைய நாளுக்கு பொருத்தமான பதிவு.

புத்தக வாசிப்பு ஒரு வரபிரசாதம்.

ஜீவி said...

@ நடன சபாபதி

அண்ணாவின் 'ஹோம் லேண்ட்' மற்றும் 'ஹோம் ரூல்' இதழகள் வாசித்திருக்கிறீர்களா?
தமிழைப் போலவே ஆங்கிலமும் அவர் நாவில் நர்த்தனமிடும்.

புகழ்பெற்ற என்றெல்லாம் இல்லை, சார்.. நானும் அவ்வப்போது சில வாய்ப்புகள் பெற்றேன். அவ்வளவு தான். எக்காலத்தும் பத்திரிகைகளுக்கென்று குறிப்பிட்ட சில குணாம்சங்கள் அன்றிலிருந்து இன்று வரை தொடர்ந்தே வந்திருக்கின்றன. அதில் நமக்காக என்று எதுவும் எழுத முடியாது என்பது முக்கியமான ஒன்று. இந்தக் கோட்பாட்டை
தமிழ் எழுத்துலகில் தகர்த்தெறிந்த முதல் தளகர்த்தர் தோழர் ஜெயகாந்தன் ஒருவரே.

பின்வரும் பதிவுகளில் அதெல்லாம் பற்றிச் சொல்கிறேன். தொடர்ந்து வாசித்து வருவதற்கு நன்றி, சார்.

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்

அப்படியா, நெல்லை?.. தொடர்ந்து வாருங்கள். நன்றி.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

சின்ன அறை ஒன்றில் நூல்களை அடுக்கி வைத்திருந்தார்கள். மாலை நேரங்களில் திடுமென நிறையப் பேர் உள்ளே நுழையும் பொழுது தடுமற்றமாகிப் போய் விடும். யார் என்ன செய்கிறார்கள் என்பதை நாகரிகமாகக் கண்காணிக்க முடியாது. துணிக்கடை கதையும் சில நேரங்களில் நடக்கும். இல்லாததைக் கேட்பார்கள். வரவழைத்துத் தர முடியுமா என்று கேட்பார்கள். நூல்கள் பற்றி விவரங்கள் கேட்பார்கள்.

"ஏங்க.. ஜோசிய புஸ்தகமே ஒண்ணுமில்லையா?"
"இருக்கே.. கடலக்குடி..."
"அதெல்லாம் வாணாம் சார்.."
"பின்னே?.. மாத ஜோதிடம் இதழ்லே எழுதறாரே?"
"பேர் என்ன?"
"... அதான் சார்.. நெஞ்சிலே இருக்கு.. சட்டுனு ஞாபகத்துக்கு வரலே.."
" சரி.. ஞாபகத்துக்கு வந்ததும் ஒரு தபா இந்தப் பக்கம் வந்து வாங்கிண்டு போறீங்களா.."
"இனிமே நா எங்கே வர்றது?.. நா வெளியூரு சார்.."

இந்த மாதிரி, இன்னொரு மாதிரி, எது மாதிரியுமில்லாத புது மாதிரியா.. இப்படி நிறைய..

ஜீவி said...

@ Banumathy. V.

கரெக்டா அவதானித்திருக்கிறீர்கள்.

எப்படி இந்தத் தொடரைக் கொண்டு போக வேண்டும் என்று நினைக்கிறேனோ, அதை மிகச் சரியாகக் குறிப்பிட்டுச் சொல்லி விட்டீர்கள். வாசித்து வருவதற்கு நன்றி.

ஜீவி said...

@ நெல்லைத் தமிழான் (2)

மதுரை காமராஜர் யூனிவர்சிட்டி?..

அந்தப் பல்கலைக் கழகம் பற்றியும் இந்தத் தொடரில் வருகிறது, நெல்லை!

ஜீவி said...

@ ஸ்ரீராம் (2)

கையெழுத்துப் பத்திரிகை?

அது மாதிரி இன்னொரு கையெழுத்துப் பத்திரிகை, இந்தத் தொடரில் உண்டு, ஸ்ரீராம்.

ஜீவி said...

@ கோமதி அரசு

பூந்தோட்டத்தில் யாரும் பூக்களைக் கவர்ந்து விடலாகாது என்று பொறுப்புகளும் உண்டு.

கூட்டம் இல்லாத நேரங்களை வாசிப்புக்கு ஒதுக்கியிருந்தேன். வாசித்து விட்டு சும்மா இருக்க முடியாது என்பது தான் தொல்லை. அதற்கு ஒரு வழி கண்டு பிடித்தேன். குறிப்புப் புத்தகம் ஒன்ற் வைத்துக் கொண்டு மனதுக்குப் பிடித்ததை குறிக்க ஆரம்பித்தேன். சடாலென்று நுழைபவருக்கு நான் அந்த நூல் நிலையத்துக்கு சம்பந்தப்படாத ஆள் மாதிரி சில நேரங்களில் தோன்றும்.. "சார்.. லைப்ரரியன் வெளிலே போயிருக்காரா, சார்?"

"ஹி..ஹி... நான் தான். சாருக்கு என்ன வேணும்?"

Thulasidharan V Thillaiakathu said...

அருமையான அனுபவங்கள். அந்த வயதிலேயே லைப்ரரியனாக என்று என்ன அனுகூலமான அனுபவம் உங்கள் விருப்பத்திற்கேற்ப.

முதல் பாராவில் சொல்லியிருப்பதை நானும் வழிமொழிகிறேன்! உண்மையே.

உங்கள் வாசிப்பு அனுபவம் பிரமிக்க வைக்கிறது!

எனக்கும் அப்படி ஒரு அனுபவம் கிடைத்திருந்திருக்கக் கூடாதா என்ற ஓர் ஏக்கமும் வருகிறது!
மிகவும் ஸ்வாரசியமாக எழுதுகின்றீர்கள். தொடர்கிறோம்

கீதா

ஜீவி said...

@ தி. கீதா

முதல் பாரா என் அனுபவங்களின் சாறு.
அந்த வாசிப்பு இப்பொழுது குறைந்து போய் விட்டதில் எனக்கு வருத்தம் தான்.

Related Posts with Thumbnails