மின் நூல்

Thursday, July 25, 2024

இது ஒரு தொடர்கதை -- 8

                                               
                                                                                8

ன்று கோயில் ஜனசந்தடியே அற்று 'ஹோ'வென்றிருந்தது.  காலை தாண்டிய முன் பகல் நேரம் என்பதினால் கூட்டமில்லையோ என்று நினைத்துக் கொண்டான் பாண்டியன்.

சுவாமி  சன்னதிக்குள் நுழைந்தவனைப் பார்த்து சன்னதி கீழ்ப்படியில் ஒருக்களித்தவாறு அமர்ந்திருந்த குருக்கள் எழுந்து வந்தார்.  அவன் கையில் ஒன்றும் இல்லை என்பதினால், அர்ச்சனைக்காரர் இல்லை என்று  நிச்சயித்துக் கொண்டவர் போலத் திரும்பினார்.  குறுகலான படிகள் ஏறி சுவாமி
கருவறைக்குள் சென்றவர் தட்டெடுத்து கற்பூரம் ஏற்றி சுவாமிக்குக் காட்டினார். இங்கிருந்தே கன்னத்தில் லேசாகத் தட்டிக்கொண்டு கைகுவித்து சுவாமி தரிசனம் செய்த பொழுது பாண்டியனுக்கு உடல் சிலிர்த்தது.

தீபாராதனையில் தெரிந்த உப்பிய  கன்னத்தில் குமிழாய் விளைந்த இறைவனின் குறுஞ்சிரிப்பு தனக்கு மட்டுமே அருள் பாலிப்பதான குறு நகைப்போல அவன் நினைப்பில் பதிந்தது. தன்னைத் தவிர வேறு யாரும் சன்னதியில் இல்லை என்கிற உணர்வு, தனக்காக மட்டுமேயான இறைவனின்  தரிசனம் இது என்கிற எண்ணமாய் அவனுள் உருக்கொண்டது.  அந்த எண்ணம் பாண்டியனின் மனசில் உருக்க்கொண்ட ஷணத்திலேயே குருக்கள் அங்கு இருப்பதையும் வலிய மறக்கடித்துக் கொண்டு இந்த இடத்தில் தானும் இறைவனும் தான் என்கிற நிலையாய் ஒரு நினைப்பு மனசில் வியாபித்தது. அந்த நினைப்பு அந்த நிலையே நெடுநேரம் நீடிக்கக் கூடாதா என்கிற ஆசையாய் தவித்து அலைபாய்கையில் குருக்களின் குரல் பாண்டியனின் எண்ண  அலையை அறுத்தது.  அவர் என்ன சொன்னார் என்று உணர்வில் படியவில்லை. தீபாராதனைத் தட்டுடன் நின்று கொண்டிருந்த அவர் உருவம் மட்டும் மங்கலாய் அவன் தோற்ற உணர்வில் படிந்தது.

கற்பூர ஜ்வாலை பக்கம்  கைவிரல் மடக்கி அந்த இளஞ்சூட்டை கண்களில் ஒற்றிக்கொண்டு,  அவர் தந்த வீபூதியை பாண்டியன் நெற்றியில் இட்டுக் கொண்டான்.  பாண்ட் பாக்கெட்டில் கைவிட்டு கிடைத்த சில்லரையை எடுத்து தட்டில் இட்டான்.  'இருங்கோ..' என்று சொல்லி விட்டு குருக்கள் படியேறி கருவறைக்குள் சென்றார்.  திரும்பியவர்  கையில் சின்ன பூச்சரமும் ஒரு வீபூதிப் பொட்டலமும் இருந்தது. அதை அவரிடம் பெற்றுக்கொண்டு கண்களில் ஒற்றி சட்டை பாக்கெட்டில் போட்டுக் கொண்டு அவரைப் பார்த்து முறுவலித்தான்.

"ஈஸ்வரன் சக்தி வாய்ந்தவர்.  நன்னா வேண்டிக்கோங்கோ.." என்றவராய் குருக்கள் திரும்பினார்.

சட்டென்று என்ன வேண்டிக்கொள்வது என்று தெரியவில்லை.  வேண்டிக்கொள்வதற்கு மட்டுமே தான் இறைவனா என்றும் தெரியவில்லை.  இப்பொழுது பாண்டியன் அடைந்த அனுபவம் அதையெல்லாம் தாண்டிய ஒன்றாக அவனுக்கு இருந்தது.   இன்னொரு முறை இறைவனைப் பார்க்க வேண்டுமென்ற குறுகுறுப்பில் அவன் மனசு  அலைபாய்ந்தது.  அந்த குறுகுறுப்பை அடக்க  முடியாமல் தலை நிமிர்த்தி இறைஞ்சும்  பார்வையில்  விழிவிரித்து அவன் பார்த்த பொழுது கர்ப்பகிரக தீபஒளியின் பொட்டு  போன்ற வெளிச்சத்திலேயே இறையனாரின் கன்னக் குமிழ்ச்சிரிப்பு இங்கிருந்தே பளிச்சென்று அவனுக்குத் தெரிந்தது. இதே மாதிரி இதற்கு முன் இப்படிப் பார்த்த தருணத்தில் சிறைபிடித்து அவன் நினைவில் தேக்கிக்கொண்ட இறைவனின்  குறுஞ்சிரிப்புக் கீற்று பளீரிட்டு இப்போது அதோடு சேர்ந்து கொண்ட மாதிரி இருந்தது.  அப்படிச் சேர்ந்தது, இரண்டாய் சேர்வது  தெரியாமல்,  ஒன்றில் ஒன்றாய் ஒன்றி ஒன்றாகிப் போன மாதிரி அவன்  பார்வைக்குப் பட்டது...

பட்ட தருணத்தில் நினைவின் அடி ஆழத்திலிருந்து, ஒரு குரல் கேட்டது.  மங்கை தான் சொல்கிறாள்: 'இங்கே-அங்கே'ன்னு ரெண்டு  இல்லே; ரெண்டாத் தெரிஞ்சாலும் ரெண்டும் ஒண்ணுதான். தெரிஞ்சிக்கங்க..'

 'கொஞ்ச நேரம் முன்னாடி இறைவன்-நீ இருவர் மட்டுமே இங்கிருப்பதாக நினைச்சியே?  இப்போ சொல்லு. பரமனும் ஜீவனும் வெவ்வேறான இரண்டா?.. இல்லை, ரெண்டா உணர்ந்தாலும் ரெண்டும் ஒண்ணு தானா?' என்ற கேள்வி பாண்டியன் மனசில் அந்த ஷணமே புரண்டது.

ரொம்ப சிரமப்பட்டு எண்ணம் குவித்து "இதையெல்லாம் கேட்க மூணாவதாக நீ யார்?" என்று பாண்டியன் தனக்குள்ளேயே கேட்டுக்  கொண்டான். 'மூணாவதும் ரெண்டு ஒண்ணான அந்த ஒண்ணில் அடக்கம்" என்று அவனுக்குள்ளே கேட்ட கேள்வியே பதிலாய் கிளர்ந்த பொழுது அதை ஆமோதிப்பது போல   கோயில் மணி கணகணத்தது. உபதேசத்தை உள்வாங்கிய விதிர்விதிர்ப்பில் தானாகவே பாண்டியனின் கைகள் கூப்பிக் கொண்டன.

கால் துவளுகிற மாதிரி இருந்தது.  அப்படியே உட்கார்ந்து கொள்ளலாம்
போலிருந்தது. சன்னதியின் ஒரு மூலையில் யாருக்கும் இடைஞ்சலில்லாமல் உட்கார்ந்தான் பாண்டியன்.  உட்கார்ந்ததும் அலைஓசையாய்  மனசில்  ஆர்ப்பரித்த இரைச்சல் எங்கே போனது என்று தெரியவில்லை.

மங்கையுடன்  கோயில்களுக்கு செல்லும் பொழுதெல்லாம் ஏற்படாத உணர்வுகள், தனியாக வரும் பொழுது மட்டும் ஏற்படுகிறதே என்று திடுதிப்பென்று தோன்றியது.  கவனக்குறைவுகளும், கவன ஈர்ப்புகளும் அதற்குக் காரணமாக இருக்கலாமோ என்று நினைத்துக் கொண்டான்.  தனித்திருப்பதில் அவையெல்லாம் களையப்படுகிறதோ இல்லை காணப்படுகிறதோ என்று எண்ணிக் கொண்டான். தனித்திருப்பதில் எண்ணம் குவிந்து தீட்சண்யப்படுவதை மட்டும் அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.

அப்படி கூர்மையடைந்தது தான் காரணமாக இருக்கலாம். இப்படித் தனியாக கோயிலுக்கு வந்திருக்கும் தருணத்திலேயே, நின்று நிதானித்து வெளிச்சத்தில் அத்தனை நாயன்மார்களையும்  தரிசித்து விடவேண்டுமென்று பாண்டியனுக்குத் தோன்றியது. எழுந்திருந்தான்.  ஈஸ்வரனின் சன்னதிக்கு இடப்பக்கம் திரும்பிய பிராகாரத்தில் வரிசையாக பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த அறுபத்து மூவர் சிலைகளுக்கருகில் வந்தான்.

எல்லா சிலைகளும் வரட்சியின்றி எண்ணெய் முழுக்கில் பளபளத்தன. இடுப்பில் பூண்டிருந்த வஸ்திரங்கள் புதுசாக இருந்தன.  மூன்று பெண் நாயன்மார்களுக்கும் புடவை கட்டிய தோரணையில் அலங்காரம் செய்திருந்திருந்தனர். எல்லா நாயன்மார் பாதக்கமலங்களிலும் ஒற்றைப் புஷ்பம் வைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு  பெயராகப் படித்துக்  கொண்டு அந்தந்த நாயன்மார்களின் தோற்றம் இப்படித்தான் இருந்திருக்கும் போலும் என்று எண்ணிப் பார்த்துக் கொண்டே வந்த பாண்டியன், நின்ற சீர் நெடுமாற நாயனாருக்கு அருகில் வந்ததும் சட்டென்று நின்றான்.

களையான முகம்.  கம்பீரமான தோற்றம்.  விசாலமான நெற்றி. நாயனார்க்குள்ளும் ஒளிந்திருந்த ராஜ  மிடுக்கு உணர்வாய் அவனுள் படிந்து அவனுக்கும் தொற்றிக் கொண்ட மாதிரி இருந்தது..

'ஐயே! மனசிலே ராஜாங்கற நெனைப்பு தான்'-- என்று மங்கையின் குரல் பாண்டியனின் மனசின் அடி ஆழத்தில் கேட்டது.


(தொடரும்)



குறிப்பு:  படங்கள் உதவியோருக்கு நன்றி.

Wednesday, July 24, 2024

இது ஒரு தொடர்கதை --7

                                              



பெண்டுலம் இணைத்த சுவர்க் கடியாரம் நான்கு  முறை  ஒலித்தது.

மரபீரோவைக் குடைந்ததில் நின்ற சீர் நெடுமாறனார் பற்றி உருப்படியான செய்திகள் எதுவும் தேறவில்லை.  பி.லிட்., பாடப்புத்தக பாடத்திட்டத்தில் நாயன்மார்களின் ஆக்கிரமிப்பு மேலோட்டமாகவே இருந்தது, இரண்டு மணி நேரத் தேடலுக்குப்  பிறகு தான் தெரிந்தது.  பொதுவாக  63 நாயன்மார்கள் பெயர்களை மட்டும் குறிப்பிட்டிருந்தார்கள்.  அவர்களில் 50-ம் எண்ணிட்டு நின்றசீர் நெடுமாற நாயனார் குறிப்பிடப்பட்டிருந்தார். மற்றபடி அப்பர், சுந்தரர், சம்பந்தர் பற்றி மட்டும் விவரமான கட்டுரைகள் இருந்தன.

நீண்ட கொட்டாவி விட்டபடியே, "அவ்வளவு தானா?" என்றான் பாண்டியன்.  சித்திரங்கள் கூட இந்த மூன்று பேருக்கு மட்டுமே என்று வஞ்சித்திருந்தது அவனுக்கு எரிச்சலூட்டியது.  அந்த எரிச்சலுக்கு ஒரு வடிகால் வேண்டி, "நாயன்மார்கள்  சரி. ஆழ்வார்கள் விஷயம் எப்படி?" என்று தலைசாய்த்து மங்கையைக் கேட்டான்.

அவள் பக்கங்களைப் புரட்டிப் பார்த்து, "அங்கே மூணுன்னா இங்கே கொஞ்சம் கூட.  அஞ்சு தேறும்.  எதுக்காகக் கேக்கறீங்க?.."

மையமாகப் புன்னகைத்தான் பாண்டியன். "அங்கே அப்படின்னா, இங்கே எப்படின்னு தெரிஞ்சிக்கறத்துக்காகத் தான்."

"தெரிஞ்சிக்கிட்டு என்ன ஆகப்போகுது?"

"ஒண்ணுமில்லே. ஒரு க்யூரியாசிடி. ரெண்டுக்கும் ஒரு கம்பாரிஸன் ஸ்டடின்னு வைச்சிக் கோயேன்."

"நல்ல கம்பாரிஸன்!  'இங்கே-அங்கே'ன்னு ரெண்டு  இல்லே.  ரெண்டாத் தெரிஞ்சாலும் ரெண்டும் ஒண்ணு  தான். தெரிஞ்சிக்கங்க..."

"ஒண்ணுதான்ங்கறது ஒருத்தர் கட்சி;  இல்லே, ரெண்டுங்கறது இன்னொருத்தர் கட்சி.."

"ஒண்ணு தான்னா அத்வைதம்;  ரெண்டுன்னா துவைதம்  இல்லியா?"
என்று ஆசைஆசையாகத் தமிழில் தத்துவம் படித்தது நினைவில் நின்று கேட்டாள் மங்கை.

"ஓ.. நீ அங்கே போறியா?.." என்று மலர்ந்து சிரித்தான் பாண்டியன்.  "அப்படித் தான் வைச்சிக்கோயேன்/.."

"அப்படிப் பாத்தா ரெண்டையும் இதில் கொஞ்சம் அதில் கொஞ்சம்ன்னு சேர்த்திகிட்ட மூணாவதும் ஒண்ணு இருக்கில்லியா?.."

"கரெக்ட்! அதனால் தான் எல்லாத்தையும் ஒண்ணாச் சேர்த்தா அந்தக் கலவைக் கல்வி அற்புதமா இருக்கும்ன்னு தோண்றது.. வெத்தலை, பாக்கு, சுண்ணாம்பு சேர்ந்தா மாதிரி."

"அதுசரி.. ஆனா அப்படிச் செஞ்சா இந்த மூணும் அது அதோட ஐடண்ட்டிடியை இழந்திடுமில்லியா?"

"ஐடண்ட்டியா முக்கியம்?.."

"ஆமாம்.." என்று தீர்மானமாகச் சொன்னாள் மங்கை.

ந்தப் பத்திரிகையில் கேள்வி-பதில் பகுதியை மூன்று உதவி  ஆசிரியர்கள் கவனித்துக் கொண்டார்கள்.  வைத்தீஸ்வரன், தேவதாஸ், கிருஷ்ணமூர்த்தி. கேள்வி-பதில் பகுதிக்கு அவர்கள்  பெயர்களின்  முதல் எழுத்தை மட்டும் எடுத்து ஒன்று சேர்த்து வைதேகி என்பவர் பதில் சொல்பவராகக்  குறிப்பிட்டிருந் தார்கள்.  வைதேகி என்கிற பெண் தான் இந்தப்  பகுதியில் வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்கிறாராக்கும் என்று  மோகன் கூட எண்ணியிருந் தான்.  இந்தப் பத்திரிகையில் வேலைக்குச் சேர்ந்த பிறகு  தான் 'வைதேகி' பெயரின் கூட்டுச் சேர்க்கை ரகசியம் இவனுக்கும் தெரிய வந்தது.

பொதுவாக பத்திரிகைகளில் கேள்வி-பதில் பகுதியைக் கவனித்துக் கொள்பவர்கள் சகல மட்டத்திலும் விஷய ஞானம் கொண்டவர்களாய் இருப்பார்கள்.  இல்லை, அவசியத்தின்  அடிப்படையில் எல்லாத்தையும் பற்றித் தெரிந்து கொண்டிருக்க வேண்டிய தேவை அவர்களுக்கு இருந்து கொண்டே இருக்கும்.  அதுவும் இந்தப் பத்திரிகையில் அந்த 'எல்லாத்தை'யையும் ஆன்மிகம், அரசியல், சினிமா, இலக்கியம் என்று நான்காக  வகைப்படுத்தியிரு ந்தார்கள். இந்த நான்கு தலைப்புகளில் 'எல்லாத்தை'யும் அடக்கிவிடலாமென்ற கணிப்பு ஆசிரியருக்கு இருந்தது.

ஆன்மிகத்தை வைத்தீஸ்வரனும், இலக்கியத்தை கிருஷ்ணமூர்த்தியும் கவனித்துக் கொண்டார்கள்.  அரசியலும் சினிமாவும் ஒன்றுக்குள்  ஒன்று புதைந்ததாக ஆகிப்போனதினால் தனி ஒருவராக தேவதாஸே இரண்டையும் கவனித்துக் கொண்டார்.  சினிமா ஸ்டூடியோவிற்கெல்லாம் போய் செய்தி திரட்டி வருவதற்காக தீபக் என்ற சுறுசுறுப்பான இளைஞன் தேவதாஸுக்கு வலது கையாக இருந்தான்.

நின்ற சீர் நெடுமாறனைப் பற்றி ஒரு நெடும்பார்வையில் மேலதிகத் தகவல்கள் திரட்டாவிட்டால் கதை மேற்கொண்டு நகராது போலிருந்தது மோகனுக்கு.

ஆசிரியர், பத்திரிகையின் நூலகப்  பிரிவு பற்றி சொல்லியிருந்தது  நினைவுக்கு வந்தது.  அங்கும் அரைமணி நேரத்திற்கு மேலாக மேலோட்டமாக மேய்ந்ததில் சலிப்பே மிஞ்சியது.  ஆனால் சேக்கிழாரின்  பெரிய புராணம் கிடைத்தது, இதை விட்டால் வேறு வழியில்லை என்பது போலத் தோன்றியது.  செய்யுள் வடிவில் இருந்ததினால், குறிப்புகள் எடுத்து வைத்துக் கொள்ளலாம் என்று மோகன் நினைத்தான்..  அங்கிருந்த ஒரு ரிஜிஸ்தரில் நூல் பற்றிய விவரங்களைக்  குறிப்பிட்டு கையெழுத்திட்டு வீட்டுக்கு எடுத்துச் செல்வதற்காக பத்திரப்படுத்திக் கொண்டான்.

மோகன் தன் இருக்கைக்கு வந்த பொழுது பொறுப்பாசிரியர் ஜி ஏதோ சிந்தனையில் இருந்தார்.  இவனைப்  பார்த்ததும் நிகழ் உலகத்திற்கு வந்தவர் போல தலையசைத்து, "மோகன், உன்னோட  'இது ஒரு தொடர்கதை..' ரொம்ப நன்னாப் போறதுப்பா... ஆசிரியர் கூட போன அத்தியாயத்தின் சில இடங்களை எடுத்துச் சொல்லி பாராட்டினார்.." என்றார்.

'ஆசிரியர் தன்னை கூப்பிட்டு அருகில் அமர்த்திக்  கொண்டு பாராட்டக்கூடாதா' என்று மோகனுக்குத் தோன்றியது.  'வேலைக்குச் சேர்ந்து இவ்வளவு சீக்கிரத்தில் இதையெல்லாம் எதிர்பார்க்கக் கூடாது' என்று அடுத்த நொடியே மனசில் நினைப்பு படர்ந்தது.  இருந்தாலும் சென்ற அத்தியாயத்தின் எந்த பகுதியை அவர் பாராட்டினார் என்று தெரிந்து  கொள்ளும் ஆவலில், "எந்த இடங்களைக் குறிப்பிட்டுப் பாராட்டினார், சார்?" என்று கேட்டு அவர் முகத்தை உன்னிப்பாகப் பார்த்தான்.

"ரெண்டு மூணு எடத்லே சப்-டெக்ஸ்ட்டா எழுதியிருப்பியே.. அதெல்லாம் எடுத்துச் சொல்லி பாராட்டினார்" என்றார்.

"குறிப்பா ஒரு இடத்தைச் சொல்லுங்களேன், சார்.." என்றான்.

"அதான்.. அந்த பிறவிப் பெருங்கடல் நீந்தல் சமாச்சாரம்.  ஒரு வரிதான். அந்த ஒருவரிக்குள்ளேயே இன்னொரு வரி ஓடுது பார்.  மங்கை சொன்னது--பாண்டியன் சொன்னது ரெண்டும் வேறு வேறு அர்த்தம் கொடுக்கற மாதிரி நன்னா சொல்லிருக்கேன்னு சொன்னார்" என்றார்.

இவன் மெளனமாக அவர் சொல்வதையே உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து, "ஆசிரியர் இன்னொன்றும் சொன்னார்" என்றார் ஜி.

"என்ன சார்?" என்று ஆவலோடு கேட்டான் இவன்.

"ஆரம்பத்திலே நாலஞ்சு அத்தியாயம் வந்தால் போதும்ன்னு நெனைச்சேன்.  கதை நன்னாப் போறதினாலே, வாசகர்களோட ரெஸ்பான்சும் இருக்கறதாலே இன்னும் கொஞ்சம் நீட்டலாமோன்னு தோண்றது.. இதை மோகன் கிட்டே சொல்லி முடியுமான்னு ஆசிரியர் கேக்கச் சொன்னார்" என்றார் ஜி.

மோகன் முகம் பிரகாசமடைந்தது. "இப்பத்தான் கதைக்கு பேஸ் போட்டிருக்கேன்.  அதுக்குள்ளே எப்படி முடிக்கறதுன்னு எனக்கும் யோசனையாய் தான் இருந்தது.. ஆசிரியரும் தொடர்ந்து எழுத அபிப்ராயப் படறதாலே, தொடர்ந்து எழுதலாம் சார்..  இன்னும் கொஞ்சம் ஆழமா ஒரு சோதனை முயற்சி மாதிரி இந்தக் கதையை எழுதலாம்ன்னு  தோண்றது. கதையைத் தொடர்ந்து எழுதறதுக்கு சில இடங்களுக்குப் பயணபட்டு சில சரித்திர குறிப்புகளைச் சேகரிக்கணும்.  பொதுவா சில செய்திகள் பற்றிய விவரங்கள் எனக்குத் தேவையா  இருக்கு.  அதையெல்லாம் திரட்டணும்.."

"அப்படியா, மோகன்?.. ஆசிரியர் இதைக் கேட்டா ரொம்ப சந்தோஷப்படுவார்.  அதுக்கான எல்லா வசதிகளையும் செஞ்சு தருவார்.  என்னன்ன வேணும்ன்னு சொன்னேன்னா, அதுக்கான எல்லா ஏற்பாடையும்  செஞ்சுடலாம்" என்றார்.

"சொல்றேன், சார்.. இப்போதைக்கு நின்ற சீர் நெடுமாறனைப் பத்தி டீடெயில்டா சில தகவல்கள் வேணும்."

"நம்ம பத்திரிகை ஆபீஸ்லேயே பெரிய லைப்ரரி இருக்கே.. அங்கே பாத்தியா?.."

"ஓ.எஸ். பாத்திட்டேன். போதாது.  இன்னும் கொஞ்சம் விவரமா கிடைச்சா தேவலை." என்று சொன்னவன் லேசா சிரித்தான். "எனக்கு இது விஷயமா ஒண்ணு  தோணித்து, சார்...  சொன்னா சிரிக்க மாட்டீங்களே?"

"என்னப்பா இப்படி கண்டிஷன்  போட்டா எப்படி?.. வாழ்க்கைலே சிரிக்கறத்துக்கே இப்பலாம் சந்தர்ப்பம் கிடைக்க மாட்டேங்குது.  கிடைக்கற சந்தர்ப்பத்தையும் பயன்படுத்திக் கூடாதுன்னா எப்படிப்பா?" என்று அப்பாவி போல் முகத்தை வைத்துக் கொண்டு ஜி கேட்டார்.

"சரி.. கண்டிஷனைத் தளர்த்திட்டேன்.. ஆனா, ஒண்ணு.  சிரிப்பு வந்தாத்தான்  சிரிக்கணும்.  நான் சொன்னேங்கறத்துக்காக சும்மாவானும் சிரிக்கக்கூடாது."

"சரி.. சொல்லு.."

"நான் என்ன நெனைச்சேன்னா, நம்ம பத்திரிகை கேள்வி-பதில் பகுதிக்கே நின்ற சீர்  நெடுமாறனைப் பத்தி கேட்டு எழுதிடலாம்ன்னு நெனைச்சேன், சார்.."

"ஹஹ்ஹஹ்ஹா.." என்று இயல்பாய் சிரித்தார் ஜி.  "குட் ஐடியா.. எழுதிக் கேப்பானேன்?.. நேர்லேயே கேட்டுட்டாப் போச்சு..  வைதேகிலே   நிச்சயம் 'தே' இல்லே. 'கி' கூட இப்போதைக்கு வேணாம். 'வை' கிட்டே கேட்டாப் போச்சு. வைத்தீஸ்வரன் விஷயகனம் உள்ள பெர்ஸன்.  எனக்கும் நி.சீ.நெ. பத்தி தெரிஞ்சிக்கணும்ன்னு  ஆசையா இருக்கு.  வர்றையா, கேட்டுடலாம்" என்று ஜி தன் இருக்கையை விட்டு எழுந்திருந்தார்.

வைத்தீஸ்வரனிடம் மோகன் தான் கேட்டான். ஜி வெறும் பார்வையாளராக இருந்தார்.

தனது பட்டை கண்ணாடியை ஒரு தடவை வேஷ்டி நுனியில் துடைத்து போட்டுக் கொண்டு வைத்தீஸ்வரன் மோகனைப் பார்த்த பொழுது விஷய ஞானம் உள்ளவர் என்று அவர் கண்களே பளபளத்ததுச் சொன்னது..

"உங்களுக்கு ஒண்ணு ரெண்டு விவரம் சொன்னா பத்தாதில்லையா?..." என்று அவரே யோசனையுடன் இழுத்தார்.

"ஆமாம், வைத்தி சார்.."

"எது பத்தியும் முழுத் தகவல் வேணும்னா, நான் இங்கே தான் கேக்கறது.." என்று எழுந்திருந்தார். "சித்தே என்னோட வர்றேளா?" என்று லைப்ரரி இருக்குமிடம் திரும்பினார்.

"லைப்ரரிலே தானே?.. முழுசா அலசலே.  இருந்தாலும் ஓரளவு தேடிப் பாத்துட்டேன்.." என்று அவருடன் நகர்ந்தான் மோகன்.  லேசான புன்முறுவலுடன் அவர்களைத் தொடர்ந்தார் ஜி.

"நம்ம லைப்ரரிலே தான்.  ஆனா அதிலேயே ஒரு மகா லைப்ரரி இருக்கு பாருங்கோ.." என்று நூலகத்தின் பிரதான வாசல் தாண்டி வலதுப்பக்கம் இருந்த அறைக்குள் கூட்டிச் சென்றார்.  அங்கிருந்த மெஹா சைஸ் கணினி முன் அமர்ந்து ஸ்விட்சை அழுத்தி உயிர்ப்பித்தார்.

"ஏன் நிக்கறேள்? உக்காருங்கோ.." என்று கம்ப்யூட்டர் திரையைப் பார்ப்பதற்கு வாகாக தனக்கு இரண்டு பக்கமும் இருவரையும் அமரச் செய்தார்.

"இங்கே கூகுளாண்டவரிடம் கேட்டால், தகவலா கொட்டிடுவார்.." என்று தமிழ் உரு எழுத்துக்கு மாறி நின்ற சீர் நெடுமாறன் பற்றி கேட்டார்.

தேடிக் கண்டுபிடித்து குறித்துக் கொண்ட தகவல்கள் இன்னும் தேடச் சொன்னது.  ஒரே தகவலை பலபேர்  பங்கு போட்டுக்  கொண்ட ப்ளாட்டிங் பேப்பர் வேலையும் சலிப்பூட்டியது. "இது போதாதுன்னா 'அறுபத்து மூவர்'ன்னு தேடிப்பாக்கலாமா?" என்று தனக்குத் தானே முணுமுணுப்பாய்ச் சொல்லிக் கொண்ட வைத்தீஸ்வரன்,  'அறுபத்து மூவர்' என்று தட்டச்சி அந்த வரிசையில் தேடிய பொழுது தான் புதையல் போல வேறு சில விவரங்கள் கிடைத்தன.

யதேச்சையாய் மழலைகள்.காம் என்கிற வலைத்தளத்தில் அவர் கிடைத்தார்.  புகைப்படம் போட்டு கீதா சாம்பசிவம் என்று பெயர் போட்டிருந்தது.  அறுபத்து மூவர் என்னும் தலைப்பில் நாயன்மார்களைப் பற்றி குழந்தைகளுக்கு  கதை சொல்கிற மாதிரி அழகாக கோர்வையாக எழுதியிருந்தார்.  அங்கங்கே படங்கள் வேறே. ஆனால் அவர் எழுதியிருந்த கட்டுரைகளில் நின்ற சீர் நெடுமாறனைக் கண்டு பிடிப்பதற்குள் தான் உன்பாடு என்பாடு என்றாகிவிட்டது.

தேடிக் கண்டுபிடித்து படித்துப் பார்த்த பொழுது மோகனுக்கு நிறைவாக இருந்தாலும் "எல்லாரும் திருப்பி திருப்பி   நாலைஞ்சு பாயிண்டுகளையே சொல்றாங்க, இல்லை?" என்று பொதுவில் கேட்டான்.

"அந்த நாயனாரைப் பத்தி லோகத்திற்கு தெரிஞ்சிருக்கற தகவல்கள் அவ்வளவு தான் போலிருக்கு.." என்றார் ஜி.

"அப்படித்தான் இருக்கணும்... இருந்தாலும் வேறே எங்கையானும் இன்னும் இவர் பற்றித் தெரிஞ்சிக்க முடியுமான்னு பாக்கணும்.." என்றான் மோகன்.

"எங்கிட்டே சொல்லிட்டீங்கல்லே.. கொண்டு வந்து சேக்கறேன், பாருங்க.." என்று புது உற்சாகத்துடன் கணினியை கைவிட்டு எழுந்திருந்தார் வைத்தி.

அவர் சொன்ன தோரணை, நிச்சயம் செய்வார் போலிருந்தது மோகனுக்கு.





Tuesday, July 23, 2024

இது ஒரு தொடர்கதை -- 6

         
                           

'மனவாசம்' வார இதழ் வெள்ளிக்கிழமை கடைகளுக்கு வந்து விடும். வியாழக்கிழமை மதியமே வெள்ளிக்கிழமைக்கான டெலிவரிக்கு ஐம்பது இதழ்கள் கொண்ட பண்டல்களாக  பத்திரிகைக் கட்டுகள் தயாராகிவிடும்.   டெஸ்பாட்ச் இலாகா தனியாக இருந்தது.  ரங்கராஜன் தலைமையில் ஆறு பேர்கள்.  ஆறும் ஆறு  சுறுசுறு எறும்புகள்.  விவரங்கள் விரல் நுனியில்  இருக்கும். கணினி என்ட்ரி பார்த்து செக் பண்ணுவதெல்லாம் உபசாந்திக்கு. இந்த வேகம் இல்லையென்றால் பத்திரிகை தமிழகத்தில் வெள்ளிக்கிழமை எந்த நேரத்திற்குக் கடைகளில் கிடைக்கிறதோ, அதே மணிக்கு தில்லியிலும் திருவனந்தபுரத்திலும் கிடைக்கும்.  அந்த அளவுக்கு நெட் ஒர்க் திறமை.

டெஸ்பாட்ச் ரங்கராஜனுக்கு இணையாக விளம்பர இலாகா அய்யாசாமி.  பத்திரிகையின் இந்த ஜீவநாடிப் பிரதேசம் எந்நேரமும் இயங்கிக்கொண்டே இருக்கும். 'மனவாசம்' இதழ் முன்பக்க பின்பக்க அட்டை விளம்பரங்களுக்கு ஆறேழு மாசங்களுக்கு முன்னாலேயே பதிவு என்று திமிலோகப்படும். ஒரு துண்டு புகையிலையை வாயில் அதக்கிக் கொண்டு எல்லாவற்றிற்கும் ஈடு கொடுப்பதில் அய்யாசாமி கில்லாடி.  எந்த நெருக்கடியிலும் அசால்ட்டாக தீர்க்கமான முடிவெடுக்கும் இவர் சாமர்த்தியம் ஆசிரியருக்கு மிகவும் பிடிக்கும். அந்த அவரது சாமர்த்தியத்தை பத்திரிகைக்குக் கிடைத்த அஸெட் என்பார் ஆசிரியர்.

"நீங்கள் எடுத்த முடிவுகளில் மிகவும் சாமர்த்தியமானது  என்று எதை நீங்கள்  நினைக்கிறீர்கள்?" என்று ஆபீஸ் கேண்டினில் அய்யாசாமி குஷாலாகப் பேசிச் சிரித்துக்  கொண்டிருக்கையில் மோகன் ஒரு நாள் அவரிடம் கேட்டான்.

"என் இருபத்தாறாவது வயசில் நான் எடுத்த முடிவு.." என்று அவனைப் பார்த்து கண் சிமிட்டினார் அய்யாசாமி. "ரொம்ப நெருக்கடியான நேரத்தில் எடுத்த முடிவு அது.  அதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாது என்று தத்தளித்த நேரத்தில் எடுத்த முடிவு. கல்யாணம் செய்துக் கொள்ளப் போவதில்லை என்று அப்போ நான் எடுத்த முடிவு இப்பவும் நினைத்துப் பார்க்க முடியாத சுதந்தரத்தையும் சந்தோஷத்தையும் எனக்குக் கொடுத்திருக்கிறது.  என் வாழ்க்கையின் வெற்றிக்கு முக்கியக்காரணம் நான் திருமணம் செய்து கொள்ளாதது தான்.." என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.

மோகன் அவரை விநோதமாகப் பார்த்தான். இதுவரை இப்படி யார் சொல்லியும் அவன் கேட்டதில்லை என்பது அது பற்றி இன்னும் அவரிடம் கேட்க வேண்டும் போலிருந்தது அவனுக்கு..

கேட்டான்: "சார். நான் கல்யாணம் ஆகாதவன். அட்வைஸ் மாதிரி கேக்கறேன். நானும் உங்களை மாதிரி இருந்திடலாம்ன்னு பாக்கறேன்."

"நோ.. நோ.." என்று அவசரமாக இடைமறித்தார் அய்யாசாமி. "வாழ்க்கையின் ஒவ்வொன்றும் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி.  எனக்கு சரிப்பட்டது உங்களுக்கும் சரிப்படும்ன்னு சொல்ல முடியாது. எந்த முடிவும் உங்கள் அனுபவத்திற்கு ஏற்ப நீங்களா எடுக்கற முடிவா இருக்கணும்." என்று சொன்னவர் ஒரு வினாடி கழித்து, "எதுக்காக நீங்கள் அப்படி ஒரு முடிவை எடுக்கணும்?" என்றார்.

"நீங்க சொன்ன காரணம் தான் சார்.  அந்த சுதந்திரமும் சந்தோஷமும்.  கல்யாணம் ஆனா அதெல்லாம் பறிபோய்டும் போல இருக்கு.."

"மோகன், நான் சொன்ன காரணம் எனக்கு சரிப்பட்டு வரலாம். உங்களுக்கும் அப்படின்னு இருக்காமலும் இருக்கலாம் இல்லியா?  திருமணத்திற்கு பிறகும் உங்கள் சுதந்தரமும், சந்தோஷமும் நிச்சயப்படுத்தப்படலாம், இல்லியா?"

".............................."

"உங்கள் கதைகள் சிலதைப் படிச்சிருக்கேன்.  படிச்சு உங்க பேரையும் ஞாபகத்திலே வைச்சிண்டிருக்கேன்.  உங்கள் எழுத்துக்களைப் பார்த்தால்  அப்படித் தெரியலேயே! உங்க எழுத்துக்கள்லே சிருங்கார ரசம் கொப்பளிச்சு வருமே! அட,ராமா! அத்தனையும் கற்பனையா?.. அப்கோர்ஸ், நீங்க சொல்லித் தான் தெரியும்.. நான் என்னடான்னா, நீங்கள் கல்யாணம் ஆகி எல்லாத்தையும் ரசிச்சுச் சுவைத்தவர்ன்னு நெனைச்சேன்.." என்று ஏதோ ஜோக்கை ரசித்துச் சிரிக்கறவர் மாதிரி அய்யாசாமி குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார்.

மோகனும் சிரித்தான். "தப்பா நினைக்கக் கூடாது, சார்!  நீங்க இந்த பத்திரிகைகளுக்கு எழுதறவங்க சமாச்சாரத்தில் ரொம்ப அனுபவப்பட்டவர். அந்த அடிப்படைலே  கேக்கறேன்.  எழுத்தாளர்கள் மனசை அவங்க எழுத்தைக் கொண்டு கண்டு பிடிச்சிடலாம்ங்கறீங்க?.."

பகபகவென்று சிரித்தார் அய்யாசாமி. "என் அனுபவத்லே பார்த்திட்டேன். கிட்டத்தட்ட கண்டுபிடிச்சிடலாம்ன்னே சொல்லலாம். ஆனா அப்படிக் கண்டுபிடிக்கறதுக்கு வாசிக்கறவனுக்கு கூர்மையான ரசனை வேணும். என்ன ரசனை இருந்தாலும், இதிலே பொழுது போக்குக்காக எழுதறவங்களைப்  பத்தி ஒண்ணும் சொல்ல முடியாது.  தன்னையே அவங்களுக்குத் தெரியாது. தனக்காக அவங்க எழுதறதில்லை; மத்தவங்களுக்காக ஆனதாலே அவங்க எழுத்தைப் போலவே பாம்புக்கும் பழுதுக்கும் வித்தியாசம்  தெரியாத மாதிரியே அவங்களும் இருப்பாங்க.  ஆனா, தீவிரமா எழுதவறங்க, கொள்கைப்  பிடிப்போட எழுதறவங்க, இவங்கள்லாம் தாங்க நினைக்கறதை தாங்க எழுதறதிலே சொல்லணும்ங்கறத்துக்காக எழுதறதாலே, அவங்க எழுத்திலே அவங்க இருக்கறதை பாக்கலாம்.  இந்தக் கணக்கு, அநேகமா தப்பினதில்லே."

மோகன் அவரை ஆச்சரியத்தோடு  பார்த்தான்.  எவ்வளவு ஆழமாக எல்லாவற்றையும்  கவனித்திருக்கிறார் என்று அவனுக்குத் தோன்றியது. தும்பைப்பூ கதர் வேட்டியும், அரைக்கை  கதர்சட்டையுமாய் வெளிப்பார்வை க்கு வெகு சாதாரணம் தான் அய்யாசாமி. தனக்கு நேரடியா சம்பந்தப்படாத விஷயங்களையும் எவ்வளவு ஆர்வத்துடன் கவனித்திருக்கிறார் என்று  தோன்றியது.  அதற்குக்  காரணம் கூட, அவருக்குத் திருமணம் ஆகவில்லை என்பதாகத்தான் இருக்குமோ என்று நினைத்துக் கொண்டான்.

'இந்த எழுத்துத் துறையில் பெரிய ஆளாக வர வேண்டும்;  இலட்சிய எழுத்தாளர்களைப் போல தன் ஆசைகள், அபிலாஷைகள், ஆர்வங்கள், எண்ணங்கள் எல்லாமும் தன் எழுத்தில் பிரதிபலிக்க வேண்டும்' என்று மோகன் எண்ணிக் கொண்டான்.  தானே தன் எழுத்தாக மாற வேண்டும் என்கிற அதீத ஆசை அவன் மனசுக்குள் முளைவிடுவதை அந்த ஷணம் அவனே உணருகிற மாதிரி இருந்தது.

ஆசிரியர் இலாகாவில் அவன் நுழைந்த பொழுது, "உன்னை எங்கேலாம் தேடிண்டிருந்தேன், தெரியுமா?" என்றார் ஜீ.

"கேண்டினுக்குப் போயிருந்தேன், சார்.. விளம்பர இலாகா அய்யாசாமி சாரோட பேசிண்டிருந்தேன்.  நேரம் போனது தெரிலே. என்ன சார் விஷயம்?" என்றான்  மோகன்.

"யார், அந்த பீஷ்மர் கிட்டேயா பேசிண்டிருந்தே?" என்றார் ஜீ.  ஜீயின் குரலில்
அய்யாசாமி அறிந்திராத ரகசியங்களெல்லாம் தான் அறிந்திருந்து விதவிதமாக அவற்றை ரசித்துப் பார்த்து கரைகண்டு விட்ட மாதிரியான சந்தோஷம் தெரிந்தது.

அதைப் பொருட்படுத்தாதவனாய், "என்னமானும் அவசர விஷயமா?என்னைத் தேடினேன் என்றீர்களே?" என்றான் மோகன்.

"130 பக்க பத்திரிகைலே ஆசிரியர் உனக்கும் ஒரு பாரம் ஒதுக்கச் சொல்லிட்டார்.  இது அடுத்த இதழுக்கு அடுத்த இதழ்லேந்து அமுலுக்கு வர்றது. வழக்கமான உன் தொடர்கதை சித்திரத்தையும் சேர்த்து எட்டுப் பக்கம் வந்ததுன்னா, மீதிப்  பக்கங்களையும் நிரப்புவதற்கு நீ தான் பொறுப்பு.   பல சமயங்களில் நீயே உன் பக்கங்கள்லே சிறுகதை ஏதாவது எழுதும் படியாவும் இருக்கும்ங்கறதாலே, தொடர்கதைக்குப்  போட்ற உன் பேரையே, சிறுகதைக்கும் போட்டா நன்னா இருக்காதுங்கறதுனாலே முன்னாடி நான் சஜஸ்ட் பண்ணின மாதிரி ஒரு புனைப்பெயர் வைச்சிண்டாக வேண்டிய தேவை உனக்கு இப்போ வர்றது..என்ன புனைப்பெயர் வைச்சிக்கறேங்கறதை  தீர்மானம் பண்ணிடு.  அடுத்தாப்லே வர்ற இதழ்கள்லே அதை உபயோகிச்சிக்கலாம்.  அதுக்காகத்தான் தேடினேன்.  இப்போவே உங்கிட்டே சொல்லிட்டா நீயும்  ஒரு புனைப்பெயரை தேர்ந்தெடுத்து வைச்சிருப்பே, இல்லியா?"

இந்த புனைப்பெயர் விஷயம் தன்னை விடாது போலிருக்கே என்று நினைத்துக் கொண்டான் மோகன்.  'என்ன புனைப்பெயர் வைச்சிக்கலாம் என்று யோசித்த பொழுது, சற்று முன்  ஜீ உச்சரிச்ச 'பீஷ்மர்'ங்கற பெயரையே புனைப்பெயராய் வைச்சிக்கலாமா'ன்னு தோன்றியது.. அந்தப்  பெயர் வெறும் பெயர் என்பதைத் தாண்டி என்னத்தையோ சொல்ற மாதிரி தோன்றியதால், அந்தப்  பெயரைத் தவிர்த்தான்..  'வேறே பெயர் என்னவானும்' என்று சிந்தனை ஓடிய போது...

'ஐயே! ராஜான்னு நெனைப்போ?'ன்னு தன் கதையில் பாண்டியனைப்  பார்த்து மங்கை சொல்லும் வார்த்தைகள் நினைவுக்கு வந்து, இந்த 'ராஜா' பெயரே நன்றாக இருப்பதாக அவனுக்குத் தோன்றியது.. அப்படித் தோன்றியதும் 'மங்கை! தேங்க்ஸ் மங்கை!' என்று அவனறியாமல்  முணுமுணுத்துக்  கொண்ட பொழுது, தன் கதாபாத்திரம் பாண்டியனாகவே ஆகிவிட்ட மாதிரி அவனுக்குத் தோன்றி, 'குபுக்'கென்று சிரிப்பு பீறிட்டுக் கொண்டு வந்தது.

"என்னப்பா, மோகன்! உனக்கு நீயே சிரிச்சிக்கறே?.. சொல்லிட்டுச் சிரிப்பா..  நானும் உன்னோட சேர்ந்திப்பேன்லே?" என்றார் ஜீ, அவன்  முகப்போக்கை ரசித்தபடி.

"ஒண்ணுமில்லே, சார்! எனக்குள்ளே ஏதோ நினைப்பு.." என்று இழுத்தான்.

"தனக்குத் தானே சிரிச்சிக்கணும்ன்னா, அது பெர்ஸனலாய்த் தான் இருக்கும்ன்னு எனக்குத் தெரியும்!" என்றார் ஜீ, பொடிடப்பாவில் இரு விரல்களால் தாளம் போட்டபடி. "உன் யோசனைக்கு நடுநடுவே உன் புனைப்பெயரையும் யோசிச்சு வைப்பா.. திடுதிப்புனு ஆசிரியர் கேட்டா சொல்லணும்.." என்றார்.

மோகன் ஜீயைப்  பார்த்து  மலர்ச்சியுடன் புன்னகைத்தான். "புனைப்பெயர் தானே?..  தீர்மானம்  பண்ணியாச்சு, சார்.."

"என்ன அதுக்குள்ளையா?.. அவசரமில்லைப்பா.. மெதுவா.."

"அப்புறம் மாறிப்போகலாம்.  அதனாலே இப்பவே சொல்லிடறேன், சார்!"

"சரி. சொல்லு.." என்று ஆவலுடன் அவன் பக்கம் திரும்பிப் பார்த்தார் ஜீ.

"ராஜா.." என்றான் மோகன்.  "நல்லாயிருக்கா, சார்?"

"ஃபைன். ஜம்முனு இருக்கு.. " என்றார் ஜீ. "முதன் முதலா இந்தப் பெயர்லே  எழுதற சிறுகதையும் ஜம்முனு  இருக்கட்டும்.. யார் இந்த ராஜான்னு நம்ம வாசகர்கள் கேக்கற மாதிரி 'ராஜா' பேர்லே எழுதற எல்லாத்திலேயும் தனி கவனம் செலுத்து. மோகன்ங்கற பேர் தொடர்கதைக்கு மட்டும் தான். ராஜாங்கற பேர் சிறுகதைகளுக்கு.  ராஜாக்கும் மோகனுக்கும் எழுத்து நடைலே வித்தியாசம் இருக்கற மாதிரி இருக்கணும். ரெட்டை குதிரை சவாரி மாதிரி ஆரம்பத்லே கொஞ்சம் தடுமாற்றமாத்தான் இருக்கும்.  அதுவே ஒரு த்ரில் தான்; போகப்போக எந்தக் குதிரையை அழுத்தி உசுப்பேத்தணும், எந்தக் குதிரையை தடவிக் கொடுக்கணும்ன்னு தெரிஞ்சிடும்.. ஜமாய்!" என்றார்.

"அனுபவிச்சு சொல்றீங்களே, சார்?.. இந்த மாதிரி நீங்க நிறைய ஜமாய்ச்சிருக்கீங்களோ?.."

"அதையேன் கேக்கறே..  ஒரு காலத்லே ஆறு பேர்லே வாசகர் மத்திலே உலாவியிருக்கேன். போதாக்குறைக்கு அதுலே ரெண்டு பெண்கள் பேர். அந்த ரெண்டும் ஆசிரியர் வைச்சது தான்.  ஆன்மீகம், அமானுஷ்யம், த்ரில், காதல், காதல்+ஒரு மாதிரி, நகைச்சுவைன்னு என்னத்தைச் சொல்றது, போ! என்னன்ன பேர்லே எழுதினேன்னு இப்போ நான் சொன்னாலும், 'அட நீங்களா, அது'ன்னு ஆச்சரியப்படுவே! இன்னிக்குத் தேதி வரை அந்த ஆறு பேர் ரகசியத்தைக் கட்டிக் காப்பாத்திண்டு வர்றேனாக்கும்.." என்றார் ஜீ.

மோகன் அவரை பிரமிப்புடன்  பார்த்தான்.  அந்த பிரமிப்பில் மரியாதையும் கலந்து கொண்டது.


(வளரும்)




இது ஒரு தொடர்கதை -- 5

"ஐயே!.. " என்றாள் மங்கை.

"மனசிலே ராஜாங்கற நெனைப்புத் தான்!" என்று முகம் தொட்டு கன்னம்  கிள்ளினாள்.  கிள்ளிய இடத்தில் வலித்தாலும் இன்னொரு  தடவை கிள்ள மாட்டாளா என்று பாண்டியனுக்கு இருந்தது. "நெஜமாலும் அப்படி இல்லை, மங்கை.." என்றான்.

"எப்படி  இல்லை?"

"ராஜாங்கற நெனைப்பு என்னிக்கும் இருந்ததில்லே..  அதுவும் அந்த ராஜா சிலைக்கு முன்னாடி நின்னப்போ,  நாம்பலாம் ராஜாங்கற நெனைப்பு எங்கேயாச்சும் வருமா?"

"வேறே என்ன நெனைப்பு வந்திச்சி?.."

"எந்த நெனைப்பும் இல்லே.  ஆனா மனசு மட்டும் என்னை விட்டுப் பிரிஞ்சி அவரோட ஒட்டிக்கிட்ட மாதிரி இருந்தது.  சிற்பி வடித்திருந்த சிலையை கண்ணைத் திறந்து   பார்த்ததுமே ஆச்சரியத்தோட இந்த நாயன்மார் யாருன்னு தெரிஞ்சிக்க மேலே எழுதியிருந்த பேரைப்  பார்த்தேன்."

'உம்' என்று  சுவாரஸ்யமாகக் கேட்கிற உணர்வில் 'உம்'கொட்டினாள் மங்கை.

"அங்கேயும் நெடுக்க தீபம் ஏத்தி வைச்சிருந்தாங்கன்னாலும், அரைகுறை இருட்லே சரியா தெரிலே..  உச்சிலே வேறே எழுதியிருந்தாங்களா, கழுத்தைச் சாய்ச்சு அண்ணாந்து பாக்க வேண்டிருந்தது..  லேசா அழிஞ்சிருந்தாலும் நின்ற சீர் நெடுமாற நாயனார்ன்னு எழுத்தைக் கூட்டி படிக்க முடிஞ்சது..  அவர்
நாயனார் ஆனாலும் மன்னராய் தான் இருப்பார்ன்னு பேரைக்  கொண்டு யூகிச்சேன்."

"நெடுமாறன்னதும் பாண்டிய ராஜான்னு தெரியறது..  ஐயே! பாண்டிய ராஜான்னா எவ்வளவு சந்தோஷம் பாரேன்!"

"மதுரைதான் நம்ப ஊரு.  அதனாலே பாண்டிய ராஜான்னா ஒரு இது! அதான்!" என்றான் பாண்டியன்.

"ஒங்க பேரும் பாண்டியங்கறதாலே தான் மனசிலே ராஜாங்கற நெனைப்பான்னு  கேட்டேன்.  இப்போ சொல்லுங்க.   கேட்டது நியாயம் தானே!"

"அரை நியாயம்.  அரை அநியாயம்."

"என்ன கணக்கிலே சொல்றீங்க?"

"பாண்டியன்ங்கறதாலே ராஜாவா நினைச்சது நியாயம்;  எல்லாரும்  இந்நாட்டு மன்னர்ன்னு நான்  நினைக்கறதாலே நான்  ஒருத்தன்  தான் ராஜாங்கறது அநியாயம்.."

"ஊருக்கு ராஜா இல்லேனாலும் என் ராஜ்யத்திற்கு நீங்க தானே ராஜா!"

"அப்ப நீ தான் என் ராஜ்ய ராணி.  சோழ ராணி.."

"சோழ ராணியா?" என்று கேட்டு விழி விரித்தாள் மங்கை.

"பின்னே, இல்லியா?  சோழ நாட்டுப் பெண் தானே நீ? அதனாலே சோழ ராணி."

"அத்தை மகளானாலும் பாண்டிய ராஜாவை திருமணம் முடித்த சோழ ராணிங்கறீங்க.. அப்படித் தானே?"

"சரிதான்.." என்று அவள் அருகே கொஞ்சம் நகர்ந்து உட்கார்ந்தான் பாண்டியன்.  "சிவராத்ரிக்கு முழிக்கணும்னா சும்மா  இல்லே..  தெரிஞ்சிக்க.  பாதி ராத்திரி போக இதோ, இது!" என்று பக்கத்தில் மடக்கி வைத்திருந்த பரமபத
விளையாட்டு அட்டையை  எடுத்தான். பிரித்து வைத்து பிளாஸ்டிக் கவரில் இருந்த எண்கள் போட்ட  சதுர பகடையையும்,  இரண்டு பேருக்குமான  இரண்டு நிறங்களில் இருந்த அடையாள வில்லைகளையும் எடுத்து  வைத்துக் கொண்டான்.


"பரமபத விளையாட்டு விளையாட ஆரம்பிச்சா பாதிலே எழுந்திருக்கக் கூடாதுன்னு சொல்லுவாங்கள்லே?" என்று நிமிர்ந்து பார்த்த மங்கையின் முகம் குழல் சுருட்டலுக்குப்  பின்னால் பளபளத்தது.

"அப்படியா?.. நான் கேள்விப்பட்டது இல்லே.  விளையாட ஆரம்பிச்சா எழுந்திருக்க  மனசும் வராது, இல்லியா?.. ஒரு ஆட்டமாவது போட்டுடலாம்.       ஓக்கேவா?"                                                                                                

"ஓ.." என்று உதடைக் குவித்தாள்  மங்கை.   கண்மூடி கைகுவித்து உதடசைத்து வேண்டிக்கொண்டாள்.  அடுத்த  வினாடி விழித்து,  "தாயம் போட்டுத் தானே விளையாட்டை ஆரம்பிக்கணும்?" என்று அவனிடம் கேட்டாள்.

"என்ன தெரியாத மாதிரி கேக்கறே?.. தாயம் போட்டாத்தான்.."என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே தாயத்தைப் போட்டு விட்டு, "ஹையா.." என்று  ஒரு எம்பு  எம்பிக் குதித்தாள் மங்கை.

பாண்டியன் இதை எதிர்பார்க்கவில்லை."என்ன இவ்வளவு ஈஸியா தாயம்  போட்டுட்டே?" என்று முனகியவாறே அவளிடமிருந்த பிளாஸ்ட்டிக் சதுரப் பகடையை வாங்கி உருட்டினான்.  அட! அவனுக்கும் தாயம்!

"அப்பாடி.." என்று அவன்  சிரிக்க, அமர்த்தலாக "தாயம் போட்றதிலே என்ன  இருக்கு? அந்த அருகாஷன் பாம்பு கைலே மாட்டாம இருக்கணுமில்லே.. அதுக்குத் தான் ஆட்டத்தை ஆரம்பிக்கும் போதே வேண்டிக்கிட்டேன்." என்றாள் மங்கை.

"அப்படியா சமாச்சாரம்?.. மங்கை! பாம்பின்  கை  பாம்பறியும்ன்னு ஒரு  வழக்கு மொழி இருக்கு. தெரியுமிலே?"

"என்ன  கிண்டல் அடிக்கிறீங்களா-- எனக்கும் தெரியும், பாம்பின கால் பாம்பறியும்னுட்டு.."

"ஓ.. நீ தமிழ் பி.லிட்.லே?.. தெரியாம கேட்டுட்டேன்" என்றபடி 9 போட்டு 'கொக்கு'க்கு வந்திருந்தவன், ஒரு 7 போட்டு 16 எண் 'சகுனக் கட்ட'த்திற்கு வந்து அங்கிருந்த ஏணியில் ஏறி 28ம் எண் 'கடவுள் உடனுறை' கட்டத்திற்கு வந்து விட்டான்.  கடவுள் உடனுறை!  பெயரே தெய்வீகமாக இருந்தது;  அதனால் அந்த கட்டம் வந்ததில் அவனுக்கு ரொம்ப சந்தோஷம்.

மங்கையோ எட்டும் ஆறும்  போட்டு 14-வது கட்டத்திற்கு வந்திருந்தவள் இப்பொழுது ஒரு 5 போட்டு 'ஸ்தோத்திர கட்ட'த்திற்கு வந்து ஏணி ஏறும் அதிர்ஷ்டம் கிடைத்து 39 எண்ணிட்ட 'கோலோகம்'  கட்டத்திற்கு வந்து சேர்ந்தாள்.  பசுக்கூட்ட லோகம் கிடைத்ததில் அவளுக்கு  ஏகப்பட்ட மகிழ்ச்சி.

அந்த சந்தோஷத்தில், "அப்புறம் என்ன ஆச்சு?.. நாயன்மார்  பேரைப் படிச்சீங்க.  அதற்கப்புறம்?"

"அப்புறம் என்ன?.. உன்னை  மாதிரி பி.லிட்.டா இருந்திருந்தாலும் பேரைப் பாத்ததும் அவரு யாரு என்னன்னு தெரிஞ்சிருக்கும்.  சரித்திரத்திலும் அவ்வளவு பத்தாதில்லையா எனக்கு?.." என்று ஒரு 2 போட்டு 'தியானம்' வந்ததினால் அங்கிருந்த ஏணி ஏறி  50 எண்ணிட்ட 'தவக்கோலம்' அடைந்தான்.

"என்ன யார் முகத்லே முழிச்சீங்களோ, ஒரே  ஏணி ஏத்தமானா இருக்கு!" என்று கேட்டு மங்கை பகடையை உருட்ட அது 2 காட்டி 'யாகம்' கட்டம் அடைந்து அங்கிருந்த ஏணி ஏறி 61 'சுவர்லோகம்' அடைந்தாள்.

"உனக்கு மட்டும் என்னவாம்?.. ஏணி சவாரி இல்லியோ?"

"ரெண்டு பேருக்கும் தான் சொன்னேன்.  நீங்க என் முகத்லேயும் நான் உங்க முகத்லேயும் முழிச்சிருப்பேன்.  ரெண்டு பேரா இருந்தாலே இப்படித்தான். அதுக்குத் தான் மூணாவது ஒருத்தர் வேணுங்கறது.."

"சிவ சிவா.." என்று பாண்டியன் பகடையை உருட்டிப் போட்டான்.  ஒரு 2 விழ 52 அடைந்து அங்கிருந்த ஏணி ஏற்றிவிட 72 'கடவுளை நெருங்குதல்' கட்டம் வந்ததில் சந்தோஷமான சந்தோஷம் அவனுக்கு.

"அட, இதைப் பாரேன்.." என்று மங்கை பகடையை உருட்டினாள். என்ன ஆச்சரியம்! அவளூக்கும் அதே 2 தான்.  அது அவளை 63 'பக்தி'க்கு கூட்டிப்போக அங்கு தயாராயிருந்த ஏணி அவளை  83 'பிரம்ம லோக'த்தில் கொண்டு வந்து விட்டது.

"மறந்திட்டேன்.  நாயனார் பேரு என்ன சொன்னீங்க?.. நின்ற சீர் நெடுமாறன் இல்லியா?.. உம்?..  அவரு யாரு, என்னன்னு சட்டுனு ஞாபகத்துக்கு வரலே.  நாயன்மார்கள் பத்திலாம் படிச்சிருக்கேன்.  பரீட்சைலே அவங்களைப் பத்தி கேள்வி கூட வந்தது.. அதெல்லாம் கூட ஞாபகம் இருக்கு..  63 பேர் இல்லியா?அதான் யார் யார் என்ன என்னன்னு சட்டுனு  நெனைவுக்கு வரலே.. படிப்பு  முடிச்சும் மூணு வருஷம் ஆயிடிச்சில்லா?.. அதான்.  சுவத்து மர பீரோலே கவர் போட்டு பழசெல்லாம் கட்டி வைச்சிருக்கேன்.  எடுத்து பாத்துத் தான் சொல்லணும்" என்று சொல்லிக் கொண்டே பகடையை  உருட்டியவள், 4 போட்டு 87 'வைராக்கியம்' வந்து ஏணி ஏறி 115வது கட்ட 'வைகுண்டம்' வந்து சேர்ந்தாள். சேர்ந்த மகிழ்ச்சியில் பூரித்தாள்.  அந்த பூரிப்பை அவளது கன்னக் கதுப்புக்கள் பளபளத்து புஷ்டியுடன்  வெளிப்படுத்தின..

"என்ன சரசரன்னு ஏறிட்டியே?" என்ற பாண்டியன்  அவளைப் பிடிக்கும் அவசரம் கலந்த ஆவலில் கை பகடையை உருட்ட 7 விழுந்து 79 'ஞானம்' வந்து ஏணி ஏற்றிக் கொண்டது;  117 'கைலாய'த்தில் கொண்டு வந்து விட்டது.

79 எங்கே 117 எங்கே?..  ஏணியே! ஆயிரம் நூற்றாண்டிரும்.  உமக்கு நன்றி.." என்று பாண்டியன் வெற்றிக் களிப்பில் அந்த சமயத்தில் மனசுக்குத் தோன்றிய வசனம் பேசினான்.  "மங்கை!  வைகுண்டத்துக்கும் கைலாயத்திற்கும் ஒரு கட்டம் தான் இடையே. ஒரு 2 போடு.  நீயும் கைலாயம் வந்து சேர்ந்திக்கலாம்.." என்று கும்மாளம் போட்டான்.

"வரேன்.." என்றாள் மங்கை.  வாயால் 'வரேன்..' என்று  உறுதி போலச் சொல்வதால் எங்கே அதற்கு நேர்மாறாக நடந்து விடுமோ என்கிற  பயமும் அவளுக்கு இருந்தது. அந்த பயம் தன்னைப் பாதிக்காமல் இருக்க வேறே ஒரு சந்தோஷத்தால் அதை மூடி மறைக்க வேண்டும் என்கிற உணர்வில்,  "ஒண்ணு தெரியுமா, உங்களுக்கு?.. ரெண்டு  பேருமே அருகாஷனை கடந்து வந்திட்டோம்.  பாத்தீங்களா?  நா வேண்டிக்கிட்டது வீண் போகலை." என்று பகடையை கையில் எடுத்தாள்.

"எதுக்கு வேண்டிகிட்டேன்னு  தெரியாது.  ஆனா, நீ வேண்டிக்கும் போதே உன்  கோரிக்கை நிறைவேறிடும்ன்னு நான் நெனைச்சேன்.."என்றவனை எட்டி குஷியில் புஜம் பற்றி இறுக்கினாள்.

"பாத்து.. பாத்து, மங்கை.. நாலோ ஆறோ போட்டுடாதே..  கர்வமும், அகங்காரமும் ரெண்டு பாம்பாக் காத்திருக்கு.  மாட்டினா அதுங்க நம்பளை கீழே இறக்கிவிட்டிட்டுத் தான் மறுவேலை பாக்கும்..  இவ்வளவு ஏணி ஏணியா ஏறினதெல்லாம் அம்போ ஆயிடும்..  பாத்து.. பாத்து.. ஜாக்கிரதையா உருட்டு" என்று எச்சரித்தான் பாண்டியன்.

"நம்ம கையிலே என்னங்க, இருக்கு.. எல்லாம், அந்த.." பயத்தை வெளிக்குக் காட்டாமல் ஆனால் பயப்பீதியோடையே மங்கை பகடையை உருட்டி விட, 3 விழுந்து "அம்மாடி--" என்று தன் மார் தொட்டாள் மங்கை.  மூன்று கட்டம் தாண்டி பத்திரமாக 120 எண்ணிட்ட 'கோயில்' அடந்தாள்.  பாண்டியனோ தன் பங்குக்கு பயந்தபடியே உருட்ட தாயம் விழுந்து அவன் 118 எண்ணிட்ட இன்னொரு  கோயில் அடைந்தான்.

தாயம் விழுந்தால் போச்சு.  மங்கை இருந்த இடத்திற்கு அடுத்த கட்டம் அகங்காரம் பாம்பு.  அதனிடம் மாட்டினால் ஒரே இழுப்பாக இழுத்து 99-க்கு இறக்கி விட்டு விடும்.   சாமியே, தாயம் விழக்கூடாது என்று பிரார்த்தித்தபடி வேக வேகமாக அவனிடம் பகடையை வாங்கி மங்கை உருட்ட 2 விழுந்து 122 'மறுபிறவி இல்லை' கட்டம் அடைந்து பிரமிப்பில் தத்தளித்தாள். பாண்டியனுக் கும்  நடுக்கம் தான். தாயமும் விழக்கூடாது; மூன்றும் விழக்கூடாது. தாயம்ன்னா 'கர்வ'ப் பாம்பு.  மூணுன்னா 'அகங்காரம்' பாம்பு.  இந்த இரண்டைத் தவிர எதுவானும் விழட்டும் என்று உருட்ட நினைக்கையிலேயே வியர்வையில் வழுக்கி தாயக்கட்டை அவன் கைவிட்டு நழுவியது.  நழுவியது நிமிர்ந்து 4 காட்டியது.  இவர்களின் இரண்டு அடையாள வில்லைகளும் 'மறுபிறவி இல்லை' கட்டத்தில் ஒன்றை ஒன்று தழுவிக்கொண்டு இழைந்தன. அதைப் பார்த்து மங்கை கலகலவென்று சிரித்தாள்.

"அப்பாடி!  இனி பிறவிப் பெருங்கடல் நீந்த வேண்டிய அவசியம்  இல்லை" என்று நிம்மதி பெருமூச்சு விட்டாள்.

"ஏன் அப்படி சொல்லிட்டே?.. ஜோடி கிடைச்சிடுச்சி.  வேண்டியமட்டும் நீந்தலாம்ன்னு நான் நெனைச்சிக்கிட்டிருந்தா?.."

"க்குங்.. ஆளைப் பாரு!"

"ஓக்கே.  ஓக்கே.. விளையாட்டு மத்திலே விளையாட்டுக்காகச் சொல்றதெல்லாம் கணக்கிலே எடுத்துக்கக் கூடாது, இல்லியா?"

"ஆட்டத்தைப் பாத்து விளையாடுங்க..  கும்மாளம் போட்டீங்கன்னா சமயம் பாத்துக் காலை வாரி விட்டுடும்.. ஜாக்கிரதை!" என்று அவனை எச்சரித்தாள்.

122-லிருந்து 132 வரை உல்லாசம் தான்.  தீண்ட பாம்பும் கிடையாது; ஏற்றி விட ஏணியும் கிடையாது.  அந்த சுதந்திரத்தில் எப்படி வந்தோம் என்று  தெரியாத சுகத்தில்  இரண்டு பேருமே 132 'பராசக்தி' கட்டம் அடைந்தனர்.

"பரமபதம் அடையற வரை இனிமே தாயம் போட்டுத் தானே, ஒவ்வொரு கட்டமாக் கடக்கணும்?" என்று பாண்டியன்  கேட்டான்.

"என்ன தெரியாத மாதிரி கேக்குறீங்க.. தாயம் போட்டால் தான்.." என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே தாயம் போட்டு பாண்டியன் கெக்கலிக்க மங்கை தனக்கு  என்னவாகப் போகிறோ என்ற ஐயப்பாடில் பகடையை உருட்டினாள்.  அதிர்ஷ்ட்டம் அவள் பக்கத்தில் இருந்தது..  அவளுக்கும் தாயம் தான்!

"இப்போ  சொல்லுங்க.. அதுக்கப்புறம் கோயில்லே என்ன நடந்ததுன்னு.." பகடையை அவனிடம் தந்து விட்டுக் கேட்டாள் மங்கை.

"நீ என்னவோ விளையாட்டு நடுவே டைம்பாஸ் மாதிரி அந்த கோயில் சமாச்சாரத்தைக் கேட்டினா, நான் நெனைச்சிப் பாத்து நெனைச்சிப்  பாத்து சொல்லணும்ங்கறியா?" என்று பொய்க்கோபம் கொண்டான்.

"ஐயோ, அப்படில்லீங்க...  மனசு அதிலே தான் இருக்கு.  விளையாட்டுனாலும் இதுவும் முக்கியம் இல்லியா?.. சிவராத்திரியும் அதுவுமா பரமபதம் அடைஞ்சா எவ்வளவு புண்ணியம்!  அதுக்குத் தான்.  இதோ கிட்டக்  கிட்ட வந்தாச்சு.. இன்னும் நாலு தாயம் தான்.  தாயம் தாயமா போட்டு பரமபதம் அடைஞ்சு ஆட்டம் முடிஞ்சதும், மரபீரோவைத் திறந்து புஸ்தகமெல்லாம் எடுத்து அலசிப் பார்த்திட வேண்டியது தான்." என்று நிமிர்ந்தவள் கடியாரத்தைப் பார்த்தாள்.
"அட! மணி ரெண்டுங்க..."

இரண்டரை மணியளவில் ஆட்டம் முடிந்தது.  இரண்டு பேரும் சிவராத்திரி திருநாளில் பரமபதம் அடைந்த பெருமையில் எழுந்திருந்தார்கள்.

"ஒரு சின்ன டீ..  குடித்த பின்னாடி மர பீரோவைத் திறக்கலாமா?" என்றான் பாண்டியன்.

"டீ தானே?.. நீங்க கேப்பீங்கன்னு  தெரியும்.. ரெடியா பிளாஸ்க்கிலே போட்டு வைச்சிருக்கேன்  பாருங்க.."

டேபிளின் மேலிருந்த பிளாஸ்க்கை நாடிப் போனான் பாண்டியன்.  அப்படிப் போனவன் என்ன நினைத்துக் கொண்டானோ, சடாரென்று திரும்பி,  "ஏன், மங்கை!  நாயன்மார்களைப் பத்தி புஸ்தகம் பார்த்து விவரம் தெரிஞ்சிக்கலாம். சரி.  அதோட அவங்க படங்கள்லாம் போட்டிருப்பாங்களா?" என்று ஆவலோடு கேட்டான்.

"எதுக்குக் கேக்குறீங்க?" என்றாள் மங்கை, அவளுக்கும் தொற்றிக் கொண்ட  உற்சாகத்தில்.


(வளரும்)



குறிப்பு:  படங்கள் உதவிய நண்பர்களுக்கு நன்றி.


Monday, July 22, 2024

இது ஒரு தொடர்கதை -- 4

                                                        


பாண்டியன் க்யூவின் பின் பக்கம் திரும்பிப் பார்த்தான்.   அது கோயிலுக்கு வெளியேயும் பாம்பு  படுதிருப்பதைப்  போல நீண்டிருந்தது.  வரிசையை விட்டு விட்டு அர்ச்சனை சீட்டு வாங்கப்  போய் வரிசையைத்  தொலைத்து விட்டால் என்ன செய்வது என்ற குழப்பத்தில்  துவண்டு போனான்.

அவன் ஏதோ தர்மசங்கடத்துடன் வரிசையில் நிற்பதைப் பார்த்து அவனுக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த பெண், "என்னன்ணே.. சீட்டைத் தொலைச்சிட்டீங்களா?" என்று பாண்டியனிடம் கேட்டாள்.

"இல்லீங்க.. சீட்டே வாங்கலே.." என்றான் பாண்டியன்.

"அர்ச்சனை சீட்டு தானே?.. அதோ-- அந்த தடுப்புக்கு பின்னாடி டிக்கட் கவுண்ட்டர்..  போய் வாங்கிட்டு வந்திடுங்க.."

"வந்திடலாம்.. ஆனா, அதுக்குள்ளாற வரிசை தப்பிப்  போயிடுமோன்னு பாக்கறேன்.."

"எப்படித்  தப்பிப் போகும்?.. அதான் வரிசைலே தானே நீங்களும் வந்திருக்கீங்க.."                                                                   

"நான் திரும்பி வர்றதுக்குள்ளே நீங்க கோயிலுக்குள்ளேயே போயிடுவீங்க போலிருக்கு..  வரிசை நடுவிலே நொழைஞ்சா யாராச்சும் ஏத்துப்பாங்களா?..
நாலு பேரு  சண்டைக்கு வந்தா அவமானமால்லே போயிடும்?" என்றான்.

"அட சரித்தான், தம்பி.." என்றார் நாலு பேர் தள்ளி பின் வரிசையில்  நின்றிருந்த பெரியவர் ஒருவர்.. "அதெல்லாம் ஒண்ணும் ஆகாது.. நீ  போய்         தெகிரியமாய்  சீட்டு வாங்கிட்டு வா..  எவனாவது கேட்டா, சொல்றத்துக்கு  நா இருக்கேன்.. நீ போயிட்டு வா.." என்றார்.

அவர் கொடுத்த தைரியத்தில் பாண்டியன் டிக்கெட் கவுண்டர் பக்கம் போனான்.  அவன் அதிர்ஷ்டம் கவுண்டர் காலியாக இருந்தது.

அர்ச்சனை சீட்டு வாங்கிக் கொண்டு வேகவேகமாக வரிசைக்குத்  திரும்பிய அவனைப் பார்த்து அந்தப் பெரியவர், "நான் சொன்னேன்லே.. ஒரு இன்ச் கூட நகரலே.  அப்படியே நிக்கறோம்.." என்றார்.

"யாரோ வி.ஐ.பி. இன்னொரு கேட் வழியா வர்றாராம்.  அவர் சாமி கும்பிட்டுப் போன பின்னாடி தான் நமக்கெல்லாம் தரிசனமாம்.  அப்படியே க்யூவை நிறுதிட்டாங்க.." என்றாள் வரிசையில் அவனுக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த பெண்.

"எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது.." என்றார் பெரியவர்.

"நீங்கள் சொல்வது ஏதோ பொன்மொழி மாதிரி இருக்கிறதே?.. எந்த மகான் சொன்னது இது?"  என்றான் பாண்டியன்.

"பகவான் கிருஷ்ணர் சொன்னது இது.." என்று பெரியவரிடமிருந்து பதில் வந்த பொழுது அந்தப் பெண்ணும் ஆச்சரியப்பட்டாள்.   "கிருஷ்ண பகவான் சாமி இல்லையோ?.. அவர் கூட மனுஷங்க மாதிரி இப்படியெல்லாம் பேசி பொன்மொழிகள்லாம் சொல்லியிருக்காரா?"

"மஹாபாரத போர்க்களத்தில் பகவான்  கிருஷ்ணர் அர்ஜூனனுக்கு உபதேசம் செய்கிறார் இல்லையா?..  அந்த கீதா உபதேசத்தில் இந்த உபதேசத்தைச் சொல்கிறார்.  அர்ஜூனனுக்குச் சொல்ற மாதிரி நமக்கெல்லாம் பகவான் சொன்னது இது..  இப்போ நிதர்சனமா க்யூ நகராமப் போனது இவருக்கு சாதகமா போயிருக்கு, இல்லையா?"

"அவருக்கு சாதகமா போயிருக்கலாம்.. நமக்கு பாதகம் தானே?" என்று சட்டென்று கேட்டு விட்ட அந்தப்  பெண் அடுத்த வினாடியே, "சாரி.." என்று பாண்டியனைப் பார்த்துச் சொன்னாள்.

"இவருக்கு மட்டுமில்லை.. இப்படி க்யூ நகராமப் போனதிலே நமக்கும் கூட ஏதாச்சும் நன்மை இருக்கலாம்.  நடக்கறதெல்லாம் எதுக்காக நடக்கறதுன்னு தெரியாத போது எதைப்பற்றியும் எதுவும் சொல்வதற்கில்லை.." என்றார் பெரியவர்.

"அதுவும் சரித்தான்.." என்றாள் அந்தப் பெண்.

பாண்டியனுக்கு அந்தப் பெண்ணை மிகவும் பிடித்துப் போனது.  படித்தவள் போலும்..  தான் நினைப்பதை மற்றவர்களுடன் எவ்வளவு அழகாகப் பகிர்ந்து கொள்கிறாள் என்று அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது   ஏன் இந்த பெண் போல நம்மால் சரளமாகப் பேச முடியவில்லை என்று ஆதங்கமாக இருந்தது.

அவர்கள் கிட்டத்தட்ட சன்னதி பார்வைக்குத் தெரிகிற தூரத்தில் வந்து விட்டார்கள்.   அவர்கள் நின்று கொண்டிருந்த இடத்திற்குக் கொஞ்சம் முன்னால்  வரிசையை இரண்டாகப் பிளவுபடுத்தி  உள்ளே அனுப்பிக் கொண்டிருந்தார்கள்.   அந்த இடத்தில் நின்று கொண்டிருந்த ஒரு
மீசைக்காரன் "இப்படி வாப்பா.." என்று க்யூவில் வந்த ஒருவரின் புஜத்தைப் பற்றி இழுத்தான்.  "நீ அர்ச்சனை ஆள், தானே?  இந்தப்  பக்கம் போ.." என்று கிட்டத்தட்ட அந்த ஆளின் கழுத்தைப்  பிடித்து நெட்டித் தள்ளுகிற மாதிரி வலது பக்க வரிசைக்கு அனுப்பி வைத்தான்.

அர்ச்சனைத்  தட்டு  வைத்திருப்பவரெல்லாம் வலது பக்கம்,  மற்றவர்கள் இடது பக்கம் என்று வரிசைப்படுத்துகிறார்கள் என்று  பாண்டியன் தெரிந்து கொண்டான்.

"அல்லாரும் அர்ச்ச்சனை சீட்டை எடுத்து தெரியற மாதிரி தட்லே வைச்சிக்க.." என்று அடுத்த உத்தரவு மீசைக்காரனிடமிருந்து வந்தது.

பாண்டியன் சீட்டை எடுத்து தட்டில் வைத்து அது ஃபேன் காற்றில்  பறந்து போய் விடாமல் இருக்க வாழைப்பழத்தை எடுத்து வெயிட்  போல வைத்தான்.  க்யூ மெதுவாக நகர்ந்தது.  இரண்டு பக்கமும் வரிசையில் வருவோரைப்  பிரித்து அனுப்புவதால்  நெரிசல் இல்லாமல் இருந்தது.

அந்த மீசைக்காரனுக்கு வெகு அருகில் பாண்டியன் வந்து விட்டான். அவன் கையில் இருக்கும் அர்ச்சனைத் தட்டை மீசைக்காரனும் பார்த்து விட்டான்.

"இப்படி வாப்பா.." என்று பாண்டியனின் தோளில் கை வைக்கிற மாதிரி பின்னுக்கு இழுத்தான்.   அப்படி இழுபட்டதும் பாண்டியனுக்கு 'ஜிவ்' என்று கோபம் தலைக்கேறியது.  இருந்தாலும் கோயிலில் ரசாபாசம் வேண்டாம் என்று சிரமப்பட்டுத் தன்னை அடக்கிக் கொண்டான்.

"அர்ச்சனையெல்லாம் இந்தப்  பக்கம் நிற்கணும்;   தெரிஞ்சதா?" என்று  பாண்டியன்  ஏதோ செய்யாத தவறைச் செய்து விட்டது போல உறுமினான்.  அவன் உறுமல்  இறை சன்னிதானத்து அந்த சூழலுக்கு சம்பந்தபடாதவாறு  இருந்தது.  அவன் அனுமதிக்குப் பிறகு தான் சந்நதிக்கு உள்பக்கமே செல்லலாம் போலிருந்தது.

ஆனால் அதைப்  பற்றி யாரும் அசூயை  கொண்டதாகத் தெரியவில்லை.
கோயில் குருக்கள் பாட்டுக்க ஒரு பக்கம் மந்திர உச்சாடனம் பண்ணிக் கொண்டிருக்க  இன்னொரு பக்கம்  ஜனக்கூட்டம் பக்திப் பரவசத்துடன் இறைவனைத் தொழுது  கொண்டிருக்க பாண்டியன் அந்த மீசைக்காரனைப் பொருட்படுத்தாமல் விலகி  இறைவன் பார்வையில் படும்படி நின்று கொண்டான்.

ஆடலரசனின் ஆனந்த தாண்டவ கோலம் மனசுக்கு ரம்யமாக இருந்தது.   பாண்டியன் கைதொழுது இறைவனை இறைஞ்சித் தொழுதான்.

"அர்ச்சனை தானே?  சங்கல்பம் பண்ணிக்கிறீங்களா?" என்று தனக்கு மிக அருகில் கேட்ட குரலால்  பாண்டியன் சட்டென்று  சிந்தனை கலைந்து திரும்பினான். சட்டென்று தன் கையிலிருந்த அர்ச்சனைத் தட்டை குருக்கள் பக்கம் நீட்டினான்.  குருக்கள் கேட்டு, கோத்திரம், நட்சத்திரம், பெயர் என்று சொல்லி,  மங்கைக்கும் அவற்றைச் சொன்னான்.   அவனிடமிருந்து தட்டை வாங்கிக் கொண்டு அர்ச்சகர் அடுத்த அர்ச்சனைக்காரர் பக்கம் நகர்ந்தார்.

அன்றைக்கு இறைவனுக்குப் பிரமாதமான  அலங்காரம் செய்திருந்தார்கள்.    அர்ச்சகர் தீபாரதனை காட்டும் பொழுது  மனமுருக பிரார்த்தித்துக் கொண்டான்.   அர்ச்சனைத் தட்டு  கைக்கு வந்ததும் ரொம்ப நேரம் சந்நதியில் நிற்க முடியவில்லை.   மீசைக்காரன் வெளிக் கூட்டத்தை உள்ளே பத்து பத்து பேராக அனுப்பிக் கொண்டேயிருந்தான்.

எப்பொழுதுமே நெரிசல் பிடிக்காது பாண்டியனுக்கு.   கூட்டம் நெருக்கஆரம்பிக்கவே நிமிர்ந்து இறைவனின் முக விலாசத்தை நெஞ்சுக்குள் நிரப்பிக் கொள்கிற மாதிரி உள்வாங்கிக் கொண்டு  இரு கரம் கூப்பித் தொழுது  சந்நதியின் பக்க வாசல் வழியாக வெளியே வந்தான் பாண்டியன்.

சந்நதியைச் சுற்றிக் கொண்டு வர எத்தனிக்கையில்,  இந்தக் கோடிக்கு  அந்தக் கோடி நீண்டிருந்த பிராகாரத்தில் வரிசையாக  அறுபத்து மூவர் சிலைகளை பிரதிஷ்டை பண்ணியிருந்தார்கள்.   அறுபத்து மூவர் ஒவ்வொருவருக்கும்  எண்ணை முழுக்காட்டி,  வஸ்திரம் சுற்றி, பூ சாத்தியிருந்தார்கள்.

சற்று தூரத்திலிருந்து வரிசைக் கட்டி நின்றிருந்த சிலைகளைப் பார்க்கும் பொழுது அவனறியாமலேயே  திடுதிப்பென்று ஒரு எண்ணம் மனசில் தோன்றி 'இப்படிச் செய்கிறாயா?' என்று உள்மனம் அவனிடம் கேட்கிற உணர்வில் திகைத்தான் பாண்டியன்.

'நீ என்ன செய்கிறாய் என்றால்,  கண்ணை மூடிக்கொண்டு நேராக அறுபத்து மூவர் சிலைகள் இருக்கும் இடத்திற்குப்  போய்  அந்த சிலைகளில் யார் சிலை முன்னாவது நில்.  யார் சிலை முன் நீ நின்றிருக்கிறாயோ அவராகத் தான் சென்ற பிறப்பில் நீ இருந்தாய்.  சோதித்துப் பார்த்துக் கொள்' என்று உள்மனம் அவனிடம் கிசுகிசுத்தது.  அதைத் தொடர்ந்து பாண்டியனின் தேகம் உச்சி முதல் உள்ளங்கால் வரை ஒரு முறை  சிலிர்த்து அடங்கியது.

அடுத்த வினாடியே பாண்டியன்  தீர்மானித்து விட்டான்.

உத்தேசமாக அந்த பிராகார எதிர் சுவர் நீள பிரதிஷ்டை பண்ணியிருக்கும் சிலைகளைப் பார்த்துக் கொண்டான்.  குத்து மதிப்பாக அவன் நின்றிருக்கும் இடத்திலிருந்து எத்தனை தப்படி வைத்தால்  சிலைகள் இருக்குமிடத்தில் சரியாகப் போய் நிற்கலாம் என்று கணக்குப் போட்டுக் கொண்டான்.

பிராகார வெளியில் யாருமில்லை.  அந்த வெறிச்சோடல் அவனுக்கு செளகரியமாக இருந்தது   விழி இமைகளை இறுக மூடிக் கொண்டான்.

மனசுக்குள் சிலைகள் இருக்குமிடத்தை உத்தேசமாகக் கணக்குப் போட்டு ஒவ்வொரு தப்படியாக எடுத்து வைத்தான்.

பாண்டியன்  அறுபத்து மூவர் சிலைகள் இருக்குமிடத்தை நோக்கி கண்களை மூடிக் கொண்டே முன்னேறி,  காலடி கணக்கு முடிந்ததும் சட்டென்று நின்றான்.

போன ஜென்மத்தில்,   யார் சிலை முன் இப்பொழுது நிற்கிறமோ அவராகத் தான் தான் இருந்திருப்போம் என்ற எண்ணம் அவன் மனசு பூராவும் வியாபித்தது.

அது யார் சிலை என்று அறிந்து கொள்ளும் பதட்டம் இன்றியே பாண்டியன் நிதானமாகக் கண்களைத் திறந்தான்.

Sunday, July 21, 2024

இது ஒரு தொடர்கதை -- 3

                                                

"காளியண்ணன் இல்லியா?" என்று கடைக்காரரைப்  பார்த்துக் கேட்டான் பாண்டியன்.

அவர் பதிலே பேசவில்லை.. வியாபாரத்தில் மும்முரமாக இருந்தார்.  கடைக்கு முன் நிற்பவர் கேட்டதை எடுத்துக் கொடுத்து விலை சொல்ல,  அவர் கொடுக்கும் காசை வாங்கிக் கல்லாப் பெட்டியில் போடுவதற்கே அவருக்கு நேரம் சரியாக இருந்தது.

இவனைப் போல நின்றிருந்த நாலைந்து பேர் இரண்டாகக் குறைய, "காளியண்ணன்,  இல்லியா?" என்று அவரை மீண்டும் கேட்டான் பாண்டியன்.

இப்பொழுதும் அவர் எதுவும் சொல்லவில்லை.  அந்த இரண்டு பேர் கேட்டதையும் எடுத்துக் கொடுத்து காசு வாங்கிப் போட்டுக் கொண்டு  இவன் பக்கம் திரும்பினார்.  "உனக்கென்னப்பா, வேணும்?"

"காளியண்ணன் இல்லியா?" என்றான்.                       

"அதான் இல்லேன்னு தெரியுதில்லே.. அதையே ஏன் கேட்டுத் தொணப்பிகிட்டு  இருக்கே..  என்ன வேணும், சொல்லு.." என்று அவசரப்படுத்தினார் அவர்.

"அர்ச்சனைத் தட்டு வேணும்.."

"அதுக்குத்தான் இம்புட்டு நேரம் நின்னியா?.. அப்பவே கேட்டிருந்தா எடுத்துக் கொடுத்திருப்பேன், இல்லியா?" என்று அவர் தன் பின்பக்கம் திரும்பி தேங்காய் ஒன்றை எடுத்து சோதித்துப் பார்த்து முன்னால் இருந்த தட்டில் வைத்தார்.  வெற்றிலை, பாக்கு, பழம், பூ, ஊதுபத்தி, கற்பூர வில்லை பாக்கெட் எல்லாம் ஏற்கனவே அதில் வைக்கப்  பட்டிருந்தது.

"எவ்வளவு தரணும்?.."

"எழுபது ரூபா.."

வில்வ இலை வாங்கிக்கச் சொல்லி மங்கை சொன்னது திடுக்கென்று ஞாபகத்திற்கு வந்தது.  "கொஞ்சம் வில்வமும் வைச்சிடுங்கங்க.."

"வில்வம் பத்து ரூபா.." என்று கொஞ்சம் வில்வ இலைகளை சின்ன பிளாஸ்டிக் பையில் இட்டு அர்ச்சனைத் தட்டில் வைத்தார் கடைக்காரர்.  பிறகு பிரம்புத்  தட்டில் இருந்தவற்றை எடுத்து ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு நீட்டினார்.

"அர்ச்சனைத் தட்டிலேயே கொடுங்களேன்.  பழம் நசுங்காமல் செளகரியமாக இருக்கும். தரிசனம் முடிந்து திரும்பும் பொழுது தட்டைத் திருப்பித் தந்து விடுகிறேன்.." என்றான்  பாண்டியன்.

"அப்படித்தான் அல்லாரும் சொல்றாங்க.. ஆனா தட்டைத் திருப்பித் தராம எடுத்திட்டுப் போயிடாறாங்க..  அதனாலே தான் இப்படி.." என்றவர்,  "எண்பது ரூபா ஆச்சு.. ஜல்தியா கொடுப்பா.. கூட்டம் வருகிற நேரம்.." என்று கடைக்காரர் அவசரப்படுத்தினார்.

கடைக்காரரின் காரியார்த்தமான நடவடிக்கைகள் பாண்டியனுக்கு எரிச்சலை ஊட்டியது.  காளியண்ணன் இருந்திருந்தால் வேறு மாதிரி இருந்திருக்கும்.  பையை வாங்கிக் கொண்டான்.

ஒரு நூறு ரூபா நோட்டை எடுத்துக் கொடுத்தபடியே, "காளியண்ணன் இல்லியா?" என்று கேட்டான் பாண்டியன்.

அவன் கேட்டதற்கு பதில் சொல்லாமல், "எண்பது  ரூபா. சில்லரையா இல்லியா?" என்றார் கடைக்காரர்.

"இல்லை.."

"எல்லாரும்  இப்படி நூறு, ஐநூறுன்னு கொடுத்தா நா சில்லரைக்கு எங்கணே போவது?.." என்று சலித்தபடி கல்லாபெட்டியிலிருந்து  இருபது ரூபா எடுத்துக் கொடுத்தார்.

"காளியண்ணன் இல்லியா?"

"தம்பி சாமான் வாங்கப் போயிருக்கான்.. இன்னும் திரும்பலே.."

"ஓ.. அப்படியா?" என்றான்பாண்டியன்.

'நீங்க யாரு?'ன்னு கடைக்காரர் கேட்டிருந்தால் சொல்லியிருப்பான். அவர் கேட்காத பட்சத்தில் தான் யார் என்று சொல்வது அனாவசியம் என்று அர்ச்சனைத் தட்டை எடுத்துக் கொண்டு  கிளம்பினான்.

இரண்டு தப்படி நடந்தவுடன் தான் மங்கை ' ஜோட்டை அண்ணன் கடையிலேயே விட்டுடங்க' என்று சொன்னது நினைப்புக்கு வந்தது.  சட்டென்று திரும்பி கடைக்கு பக்கத்து சார்பில் ஓரடி அளவுக்கு இடம் ஒதுக்கி தட்டி வைத்துத் தடுத்திருந்த பகுதியில் செருப்புகளை விட்டான்.

கடைக்காரர் பக்கம் திரும்பி, "அண்ணே.. கால் ஜோடுகளை இங்கணே விட்டிருக்கேன்.." என்று  அறிவிப்பும் கொடுத்து வைத்தான்.

"விடுங்க.. விடுங்க..  அல்லாரும் அங்கணே தான் விடுறாங்க.. நான் இருக்கற பிஸிலே அந்தப் பக்கமே என் கண் போகாது..  திரும்பி வரும் போது ஜோடுகள் இருந்தா இறைவனுக்கு நன்றி சொல்லிட்டுப் போட்டுட்டுப்  போங்க.." என்றார் கடைக்காரர்.

இவ்வளவு விட்டேற்றியாக அவன்  பேசுவது கண்டு பாண்டியனுக்கு எரிச்சல் தான் வந்தது.  இருந்தாலும் வேறே வழியின்றி அடக்கிக் கொண்டு தன் செருப்புகளை தட்டி இடுக்கில் கொஞ்சம் உள்பக்கமாகத் தள்ளி விட்டு விட்டு ரோடுப் பக்கம் வந்தான்.

கோயிலுக்கு வரும் கூட்டம் என்றாலும்  இளசு பெரிசு என்றும் எல்லாம் கலந்து ஜிகுஜிகுவென்று இருந்தது.   இளம் நங்கைகள் சிரித்துக்  குலுங்கி அரட்டை அடித்துக் கொண்டு வந்தார்கள்.  அவர்களைத் தொடர்ந்து பின்னால் கண்காணிப்புடன் வருவது போலப் பெரியவர்கள்.  அந்தக் கூட்டத்தில் பாண்டியனும் சேர்ந்து கொண்டான்.

உள்ளுக்குப் போனதும் துவஜ ஸ்தம்பத்தைத் தாண்டி நீண்ட க்யூ.  அந்த நீண்ட வரிசையில் தன்னையும்  இணைத்துக் கொண்டான் பாண்டியன்.  அவனுக்கு முன்னால் ஒரு பெரியவர்.  அவனுக்குப் பின்னால் ஒரு இளம் பெண் வரிசையில் சேர்ந்து கொண்டாள்.

வரிசை நீண்டிருந்தாலும் வேகமாக நகர்வது போலிருந்தது.   துவஜ ஸ்தம்பத்திற்கு பக்கத்தில் போனதும் முன்னால் நடப்பதை நன்கு பார்க்க முடிந்தது.  கோயில் காவலாளி போன்ற டவாலி அணிந்த ஒரு சேவகன் பத்து பத்து பேராக உள்ளே விடுவது தெரிந்தது.

பாண்டியனுக்கு முன்னால் நின்றிருந்த பெரியவர் "சீட்டை எங்கானும் விட்டுடாதே.  பழத்தின்  கீழே வைச்சுக்க..." என்று தன் முன்னால் நின்றிருந்த ஆளிடம் சொன்ன பொழுது தான் 'உள்ளே போனதும் சீட்டை வாங்கிக்கங்க. சீட்டில்லாம அர்ச்சனை கிடையாது..' என்று மங்கை சொன்னது நினைவுக்கு வந்தது.


(வளரும்)


Saturday, July 20, 2024

இது ஒரு தொடர்கதை -- 2

 


சிரியர் அறையிலிருந்து புன்முறுவலுடன் வந்த ஜீ அன்போடு மோகனின் தோளைத் தொட்டார்.  "கதையின் ஆரம்பம் ஆசிரியருக்கு ரொம்பவும் பிடித்துப் போய்விட்டது.  தொடரச் சொன்னார்.  சில குறிப்புகளும் கொடுத்திருக்கிறார்" என்று  ஜீ   அலுவலக குறிப்பு  நோட்டுப் புத்தகத்தைப்  பிரித்து வைத்துக் கொண்டார்.


 "நீங்க மொதமொதலா எழுதற தொடர்.. அதனாலே ஒரு நாலு இல்லேனா ஆறு வாரத்துக்கு வர்றதா எழுதிடுங்க.  அடுத்த அத்தியாயமும் பிரசுரத்திற்கு முன்னாலேயே ஆசிரியர் பாக்கணும்ன்னார்.  பாத்திட்டு டிஸ்கஸ் பண்ணனும்னார்.  உங்களுக்கு ஒரு புனைப்பெயர் தேவைப்படுமோன்னு நான் தான் அபிப்ராயப்பட்டேன்.  ஆசிரியர் அதெல்லாம் வேணான்னார்.. மோகன்ங்கற பேர்லேயே பிரசுரிப்போம்ன்னுட்டார்" என்று ஜீ சொன்னார்.         

\அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் மோகனுக்குத் தித்திதது.  "ரொம்ப நன்றி, சார்.." என்று தழுதழுத்தான்.       

ஆறரை லட்சம் விற்கும் அந்தப் பத்திரிகையின் பொறுப்பாசிரியர் ஜீயை நிமிர்ந்து பார்த்தான் மோகன்.  அவரின் பெயர் என்ன என்று கூட அவனுக்குத் தெரியாது.  இவர் தான் இவன்  வீட்டிற்கு வந்து ஆசிரியர் உங்களைப் பார்க்கணும்ன்னார் என்று  அழைத்து வந்தார்.  இங்கு வந்து வேலையில்  சேர்ந்த ஒரு வார அனுபவத்தில் எல்லோருமே மரியாதைக்காகவோ என்னவோ பொறுப்பாசிரியரை ஜீ என்று கூப்பிடுவதால், மோகனுக்கும் அவர் ஜீ ஆனார்.

"புனைப்பெயர் வைச்சிக்கறது ஒரு காலத்லே மவுஸா இருந்தது.  அதனாலே வைச்சிண்டாங்க.  பெண்டாட்டி பேரைப் போட்டு இன்னாரோட மணாளன்னு தன்னை அடையாளப்படுத்திண்டாங்க.  அப்புறம் மனைவி பேர்லே ஒளிஞ்சிண்டு எழுதினாங்க.  பெண் எழுதற மாதிரி இருந்தா சில செளகரியங்கள் இருந்தது...  அதுக்காக அது.  ஆனா, உங்களுக்குப் புனைப்பெயர் வேண்டாம்ன்னு ஆசிரியர் சொன்னதற்கு காரணமே வேறே.." என்ற ஜீ பொடி டப்பாவை எடுத்துத்தட்டி சிமிட்டா எடுத்து உபயோகித்து நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்தார். கர்சீப் எடுத்து கண்களையும் சேர்த்துத் துடைத்துக்  கொண்டார்.

உற்சாகமாய் இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மோகன் பவ்யமாக ஜீயைப் பார்த்தான்.

"ஆசிரியர் என்னவோ இந்தப் பெயர் சமாச்சாரமெல்லாம் விஷயமே இல்லேங்கறார்.   மோகனுக்கு ஒரு புனைப்பெயர் முக்கியம்ங்கறதை விட அவர் எழுதறது எந்தவிதத்திலேயாவது வாசகர்கள் மனசிலே படியற மாதிரி இருக்கறது அதைவிட முக்கியம்ன்னார்.  கதையோ கட்டுரையோ தலைப்பைப் பாத்து மேட்டரை படிக்கறவங்களை, படிச்சு முடிச்சதும் யார் எழுதியிருக்காங்கன்னு எழுதினவங்க பேரைப் பாக்க வைக்கணும்.  அதான் முக்கியம்ங்கறார். ஏன் மோகன்ங்கறதே புனைப்பெயரா இருக்கக் கூடாதான்னு அவர் கேட்டப்போ எனக்கு எங்கே மூஞ்சியை வைச்சிக்கறது ன்னு தெரிலே." என்று ஜீ நாணமுற்றார்.  சிவந்த முகத்தில் பெண்பிள்ளை ஒருத்தி நிழலாக மோகனுக்குத் தெரிந்தாள்..

"நம்ம ஆசிரியர் இந்தத் துறைலே ரொம்பவும் அனுபவஸ்தர் மோகன்.. ஒண்ணு செஞ்சு முடிக்கணும்ன்னு நெனைச்சிட்டார்னா, பின்வாங்கவே மாட்டார். இப்ப அவர் செஞ்சு முடிக்கணும்ன்னு நெனைச்சிருக்கறது என்ன தெரியுமா?"

"சொல்லுங்க, சார்.."  என்றான் மோகன்.                                                                                   

"எழுத்துன்னா உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுக்கணுங்கறது அவரோட கட்சி.  எதையும் செயல்படுத்தறதுக்கு அப்படி செயல்படுத்தறத்துக்கான உணர்வு வேணும்ன்னு அடிக்கடி சொல்வார்.  எழுதணும்ன்னு உணர்வு வந்தாத்தான்-- அதை தினவெடுத்தாத்தான்ம்பார் அவர்--  எழுதவே வரும்பார்.  படிக்கறவனையும் எழுதறவனையும் ஆட்டிப்படைச்ச அந்த  எழுத்தை இப்போ பாக்கவே முடியலேங்கறது அவரோட வருத்தம்.  எல்லாத்திலேயும்  ஒரு  செயற்கைதன்மை வந்திடுச்சுன்னு நினைக்கிறார்.  அதை நம்ம 'மனவாசம்' பத்திரிகையிலாவது மாத்திக் காட்டணும்ன்னு வீம்பா இருக்கார்...   திடீரென்று நினைத்துக் கொண்டவர் போல, ' அது என்ன பத்திரிகை?.. 'அஆஉஊஎஏ' தானே?..'ன்னு
ஆசிரியர் ஒரு நாள் என்னைக் கேட்டார்.  எந்த
ஒரு சிறுபத்திரிகையையும் ஆசிரியர் படிக்காம விடறதில்லே.  அந்த பத்திரிகைலே உன் கதை ஒண்ணைப் படிச்சிட்டு, 'அருமைப்பா'ன்னு நாள் பூரா சொல்லிண்டு இருந்தார்.  'கதைன்னா இது கதை!படிச்சுப்பாருங்க'ன்னு ஒரு சர்க்குலர் இணைச்சு இந்த பத்திரிகை ஆபீஸ் சம்பந்தப்பட்ட அத்தனை பேரும் படிச்சுப்பாக்க உன் கதையை ஒரு அஸ்வமேதக் குதிரை மாதிரி இந்த ஆபீஸ் பூரா அனுப்பிச்சு வைச்சார். என்ன நெனைச்சிண்டிருந்தாரோ, சாயந்தரம்,
என்னைக்கூப்பிட்டார்.  'அந்த மோகன் அட்ரஸ் தெரிஞ்சி வைச்சிங்கங்க.. நம்ம பத்திரிகைலே அவர் எழுதினா தேவலை'ன்னார்.  அதுக்கப்புறம் தான் நா உங்க வீட்டுக்கு வந்தது, நீங்க இங்க உதவி ஆசிரியராய் இருக்க ஒப்புத்துண்டது, எல்லாம்" என்று ஜீ விவரித்தை மந்தஹாச உணர்வுடன் மோகன்  கவனித்துக் கொண்டான். அந்த ஷணமே, எழுதக்கூடிய எதுவும் உணர்வுபூர்வமாக இருக்க வேண்டும் என்கிற எழுத்துக்கலையின் பாலபாடத்தை மனசில் குறித்துக் கொண்டான்.

இரண்டு ரூம்களை இணைத்த மாதிரி இருபதுக்கு இருபது தேறுகிறமாதிரி அந்த அறை விசாலமாக இருந்தது.  நடுமத்தியில் பொறுப்பாசிரியர் ஜீயின் டேபிள். இந்த பக்கம் மூன்று பேர், அந்தப் பக்கம் மூன்று பேர் என்று துணை ஆசிரியர் உதவி ஆசிரியர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.  வலப்பக்க மூலையில் சின்ன டேபிளும் அமர்ந்து பேசுவதற்கு செளகரியமாக் நாற்காலியும்  போடப்பட்டு தொலைபேசி இணைப்பு.   அதைத் தவிர பொறுப்பாசிரியர் டேபிள் மீது  செக்க செவேலென்று ஒரு தொலைபேசி. நிருபர்களுக்கும் ஆர்ட்டிஸ்டுகளுக்கும் அறைகள் தனித்தனியாக இன்னொரு பக்கம் தடுப்புச்சுவர் தாண்டி இருந்தது.

இந்த அறைக்கு எதிர் அறை ஆசிரியரின் அறை.  கதவுக்கு  சல்லாத்துணி போடப்பட்டிருந்தாலும் ஆசிரியர் உள்ளே இருந்தாலும் சரி, இல்லேனாலும் சரி அவர் அறைக்கதவுகள் அலுவலக நேரத்தில் எந்நேரமும் திறந்தே இருக்கும். அறை மேல் ஜன்னல் வழியாக ஸீலிங் ஃபேன் சுற்றிக்கொண்டிருப்பது தெரிந்தால் ஆசிரியர் உள்ளே தான் இருக்கிறார் என்று அர்த்தம் என்று தெரிந்து கொண்டிருந்தான் மோகன்.  பொறுப்பாசிரியர் ஜீ  மட்டும் அழைப்பு வந்தால் ஆசிரியர் அறையின் உள்ளே சென்று வருவதைப் பார்த்தான்.  மற்றபடி அவரவர் வேலைகளை பொறுப்பு கலந்த அமைதியுடன் அவரவர் பார்த்து வருவது தெரிந்தது.

இந்த பத்திரிகை ஆபீஸில் வேலைக்குச் சேர்ந்த இரண்டே நாட்களில் மோகன் எல்லா பகுதிகளுக்கும் சென்று எல்லோரிடமும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.  இதுவே அந்த பத்திரிகை அலுவலகத்தை பொறுத்த மட்டில்  புதுமையாக இருந்தது.  புதுசாக பத்திரிகையில்  சேர்ந்திருக்கிற உதவி ஆசிரியர் என்கிற அளவில் எல்லோருக்கும் அவனை தெரிந்திருந்தது.

எதையோ சரி பார்த்துக் கொண்டிருந்த ஜீ சடக்கென்று அவன் பக்கம் திரும்பி, "அது சரி, மோகன்.. ஏன் அந்த பாண்டியனை கோயிலுக்கு அனுப்பிச்சே?  பீச்சு, மால்ன்னு எத்தனை இல்லை?.. அதுக்காகக் கேட்டேன்.." என்று கேட்ட பொழுது தன் புதுத்தொடரின் முதல் அத்தியாயத்தைப் பற்றியே அவர் நினைத்துக் கொண்டிருப்பது தெரிந்து பெருமையாக இருந்தது.

"கதையோட அடுத்த மூவ் கோயில் தானே சார்?.. அங்கே நடக்கறது தானே அடுத்தாப்லே சொல்ல  வேண்டிய விஷயம்?   அதுக்காக அவன் அங்கே போயாகணுமில்லியா? அதுக்காகத் தான் கோயில்" என்றான்.

"என்னவோப்பா.  இந்தக் காலத்லே இளவயசு அதுவும் கல்யாணமான ஆம்பளைகள்லாம் சாமிக்கு அர்ச்சனை செய்யணும்ன்னு மனைவியை விட்டுட்டு தனியா கோயிலுக்குப் போய் பாத்ததில்லைப்பா. அதான்..."

"ஏன் பாண்டியன் தனியாப் போனான்ங்கறதுக்குக்  காரணம் சொல்லியிருக்கேனே,  சார்."

"யாரு இல்லேனா?.. சொல்லியிருக்கே, சரி.  என்னவோ எனக்கு சமாதானம் ஆகலே.  என்னையே எடுத்துக்கோ.. என் வீட்லேலாம் இந்த பூஜை, புனஸ்காரம் எல்லாம் அவ தான்.  பூஜை அறைலேந்து மணி சப்தம் கேக்கறச்சேயே முடிஞ்சிருச்சுன்னு சிக்னல் கிடைச்சு வேகமாப் போய் ஒரு கும்பிடு போட்டுட்டு தீபாராதனை அணையறத்துக்குள்ளே கண்லே ஒத்திக்கறதோட சரி.  அப்புறம் எப்போடா தட்டை அலம்பிப் போடப்போறான்னு இருக்கும்.   அதான் எனக்குப் புதுசா இருக்கு போல இருக்கு.."

அவர் சொன்னதைக் கேட்டு சிரித்தே விட்டான் மோகன். "சார் ஒண்ணு தெரியுமா?  பாண்டியன் அதிர்ஷ்டக்கட்டை சார்.  மங்கை தான், பாண்டியன். பாண்டியன்  தான்  மங்கைன்ன்னு அம்சமா அமைஞ்ச ஜோடி சார்..  வெளிக்குத் தான் மங்கை பாண்டியனைக்  கோயிலுக்குத் தனியா அனுப்பிச்சாளே தவிர அவ மனசும் அவனோடு நிச்சயமா கைகோர்த்துப் போயிருக்கும். இவனுக்கும் மங்கை இல்லேனா அத்தனையும் அப்படியே ஸ்டாண்ட் ஸ்டிலாயிடும்.  தெரிஞ்சிக்கங்க.. வர்ற அத்தியாயங்கள்லே ரெண்டு பேரையும் படிக்கறவங்க மனசிலே படிய மாதிரி படம் பிடிச்சுக் காட்டிடலாம், சார்.." என்று சட்டைக் காலரைத் தூக்கி விட்டுக் கொண்டான்.


"குட்.  அதான் வேணும்.  நீ சொல்றத்தையே செஞ்சிட்ட மாதிரி இருக்கு.  அப்புறம் இன்னொண்ணு.  சொந்த அனுபத்தையெல்லாம் தூர எடுத்து  ஒதுக்கி வைச்சிடாதே.  அதெல்லாத்தையும் தூசி தட்டி எடுத்து உன் கதைங்கள்லே கரைச்சிடு.  எதுக்குச் சொல்ல வர்றேன்னா, இந்த எழுதற பொழைப்பு தான் நமக்கு எல்லாத்துக்கும்  கிடைச்ச வடிகால்.  மனசிலே தேக்கி வைச்சிண்டேயிருக்கிற அணை ஒடைஞ்சா  ஆபத்தாயிடும். தெரிஞ்சிக்கோ.." என்றார் ஜீ. அவர் சொன்ன தோரணையும் வார்த்தைகளில் கொடுத்த அழுத்தமும் உணர்ந்து  சொல்கிற மாதிரி இருந்தது.

'கோயிலுக்கு போற வழிலே கிளி ஜோசியனைப் பார்த்தது,  கூண்டுக்கிளியைப் பாத்து பரிதவித்தது, கதையில் நிகழ்ச்சியாக்குவதற்காகவே அவ்வளவு நேரம் உட்கார்ந்து உள் வாங்கிண்டது.. எல்லாம் நான் தான் சார்!' என்கிற நினைப்பு மோகன் மனசுக்குள்ளேயே புதைந்தது.

திடீரென்று ஒரு  உந்துதல்.   இந்த வேகத்திலேயே அடுத்த அத்தியாயம் எழுத வேண்டுமென்ற---- ஆசிரியர் சொல்வாராமே, அந்த தினவு----  மனசைப் பற்றியதும்,  மோகன் ரைட்டிங் பேடை எடுத்தான். அதில் பேப்பரைக் கோர்த்து,  'காளியண்ணன் கடையில் இல்லை..'  என்று அடுத்த அத்தியாயத்தின் முதல் வரியை எழுதும் போது,  "சாரி டு டிஸ்டர்ப் சார்.." என்ற குரல் அருகில் கேட்டது..

"காலம்பறயே ஜீ சொல்லிட்டார்... மத்த வேலையெல்லாம் முடிச்சிட்டு வர நாழி ஆயிடுத்து..." என்றவாறே அந்த பத்திரிகையின் ஆஸ்தான சித்திரக்காரர் ஹரி,   மோகனின் எதிரில் நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தார்.

"அடடா!.. சொல்லி அனுப்பியிருந்தா நானே வந்திருப்பேனே.." என்ற மோகன் அத்தனை புகழ்பெற்ற ஓவியர் தன் இருக்கை தேடி வந்திருக்காரே என்று துணுக்குற்று சொன்னான்.

"அதான் வந்திட்டேனே.." என்றார் ஹரி. "ஐ நோ.. எழுத்துங்கறது தவம்.  நிஷ்டைலே இருந்து கற்பனையை கொழுந்து விட்டு எரியச் செய்யற யாகம்ன்னு நம்ம ஆசிரியர் சொல்வார்.." என்று அவர் சொல்கையிலேயே 'என்ன, இது? சொல்லிக் கொடுத்தாற் போல அத்தனை பேரும் ஆசிரியர் புகழ் பாடுறாங்களே, இனிமே நாமும் இப்படித் தான் இங்கே பேசக் கற்றுக் கொள்ள வேண்டும் போலிருக்கு.." என்று நினைத்துக் கொண்டான் மோகன்.

"நான் வந்த வேலை என்னன்னா, சார்.." என்று ஆரம்பித்தார் ஹரி.  அவ்வளவு பெயரும் புகழும் பெற்ற அந்தப் பெரியவர் தன்னை சார் போட்டு அழைப்பது அநியாயமாக இருந்தது மோகனுக்கு.  "சார், நான் ரொம்ப சின்னவன். என்னை என்  பெயர் சொல்லிக் கூப்பிட்டால் தான் எனக்கு சங்கடமில்லாமல் இருக்கும்" என்றான்.

"அதெல்லாம் போகப்போக வந்திடும், மோகன்.  இப்போ எதுக்கு வந்தேன்னா.. உங்க 'இது ஒரு தொடர்கதை..' தொடரின் முதல் அத்தியாயம் ஃபுரூப் படிச்சிட்டேன்.  நன்னா வந்திருக்கு.  இந்த அத்தியாயத்திற்கு எந்தக் காட்சியை ஓவியமா வரைஞ்சா சிறப்பா இருக்கும்ங்கறதை  உங்க கிட்டே கேட்டுட்டுப் போகலாம்ங்கறத்து க்காக வந்தேன்.." என்று அவர் சொன்னதும் திகைப்பாய் இருந்தது மோகனுக்கு.

அவன் முக ஆச்சரியத்தைப் பார்த்து விட்டு ஹரி சொன்னார். "மோகன்! ஆசிரியர் இந்த விஷயத்திலே கண்டிப்பா சொல்லியிருக்கார்.  எழுதறவங்களு க்குத் தான் அவங்களோட கேரக்டர் அருமை தெரியும்.  அதனாலே அவங்க சாய்ஸ் என்னவோ அதை அவங்க விரும்பற மாதிரி போட்டுக் குடுங்கோ'ன்னு.  ரொம்ப காலமா இந்த பத்திரிகைலே அதான் வழக்கமா நடந்திண்டு வந்திருக்கு.  சில பிரபல எழுத்தாளர்கள் அவங்க அனுப்பற மேட்டரோடையே சித்திரத்திற்கான காட்சியையும் சொல்லிடுவாங்க.  சில பேர்கிட்டே கேட்டுப் போடறதும் உண்டு. இதான் விஷயம்.  நீங்க நம்ம பத்திரிகையோட உதவி ஆசிரியர்.  உங்ககிட்டே கேக்காம நானே என் இஷ்டத்துக்கு ஒரு படத்தைப் போடக் கூடாது. கேட்டுத்தான் செய்யணும்.  அப்படி செய்யலேன்னு தெரிஞ்சா ஆசிரியர் வருத்தப்படுவார்.  அதுக்காகத் தான் வந்தேன்.." என்றார்.

இந்த பத்திரிகை ஆசிரியர் எப்படியெல்லாம் யோசித்து செயல்படுகிறார் என்பதை நினைத்துப் பார்க்க மோகனுக்கு ஆச்சரியமாக இருந்தது.  இங்கு வேலை செய்வோர் அத்தனை பேரும் அவர் புகழ்பாடுவதின் அர்த்தமும் விளங்கியது.  இந்தப் பத்திரிகையின் ஆறரை இலட்ச விற்பனைக்கான மூலதனமும் இதன் ஆசிரியரின் அனுபவத் திறமை தான்னு தெரிந்தது.

"நீங்க பத்திரிகை அனுபவம் வாய்ந்தவங்க.. இந்தப் பத்திரிகையோட வாசகர்கள் எதை விரும்புவாங்கங்கறது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.  அதனாலே இந்த 'இது ஒரு தொடர்கதை' தொடரோட முதல் அத்தியாய எந்த காட்சிக்கு ஓவியம் வரைந்தால் நன்றாகவும் இருக்கும், வாசகர்களுக்கும் பிடிக்கும்ன்னு நீங்க நினைக்கிறீங்க?" என்று அவரிடமே புன்முறுவலுடன் கேட்டான் மோகன்.
                                                                                                               
"அப்படி நான் நினைக்கிற காட்சி எது தெரியுமா, மோகன்?" என்று லேசாக சிரித்தபடி அவனைப் பார்த்தார் ஹரி.  "அந்தப் பாண்டியன் குனிஞ்சு
கூண்டுக் கிளிக்கு 'பை..' சொல்றானே, அந்தக் காட்சி தான்.. அந்தக் காட்சியை குளோசப்பில் காட்டி பின்புலமாய் கோயில் கோபுரத்தையும் அந்த இடத்து ஜனநெரிசலையும் வரைஞ்சா அற்புதமாக இருக்கும்.." என்றார்.

"ஓ.." என்று குஷியில் திளைத்தான் மோகன்."நான் என்ன நெனைச்சேனோ அதை அப்படியே நீங்க சொல்லியிருக்கீங்க, ஹரி சார்... நம்ம ரசனை எவ்வளவு ஒற்றுமையாக இருக்கு!"

"இதான் பத்திரிகை வாசக ரசனை..  பத்திரிகைள்லே வேலை செய்யறவங்களுக்கு தனிப்பட்ட ரசனைன்னு நிறைய இருக்கலாம்.  ஆனா பிரசுர சம்பந்தமான எதுக்கும் தனிப்பட்ட ரசனைகளை கொஞ்சம் ஒதுக்கி வைச்சிட்டு வாசக  ரசனையைத் தான் சுவீகாரம் எடுத்துக்கணும்ன்னு ஆசிரியர் சொல்வார்.  அந்த வாசக ரசனை தான் நம்ம ரெண்டு பேர் ரசனையும் ஒத்துப்போறதுக்குக் காரணமா அமைஞ்சிருக்கு.." என்றார் ஓவியர் ஹரி.

மோகனுக்கு  இயல்பாகவே புன்னகை உதட்டில் படிந்தது.  'சொந்த ரசனையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு வாசக ரசனைக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கணும்ன்னு 'பத்திரிகை சம்பந்தப்பட்ட இரண்டாவது தாரக மந்திரத்தையும் மனசில் அடிக்கோடிட்டு எழுதிக் கொண்டான்.

" ஓ.கே. அந்தக் காட்சியையே ஃபைனலைஸ் பண்ணிடலாம். நான் வரைஞ்ச பிறகு உங்களுக்குக் காட்டறேன்.." என்றார் ஹரி.

"உங்களுக்கு இல்லை.. உனக்கு.." என்று திருத்தினான் மோகன்.

"ஓ.. சட்டுனு வரலே.. இன்னும் ரெண்டு மூணு நாள் ஆனா பழகத்துக்கு
வந்திடும்.." என்று புன்முறுவலுடன்  எழுந்தார் ஹரி.

மோகன்  மனசிற்கு நடப்பவை எல்லாம் இதமாக இருந்தது. பொதுவாக மனிதர்கள் எல்லோரும் எவ்வளவு நல்லவர்களாக இருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டான்.  திறமையான பத்திரிகை ஆசிரியர்,  தமிழக பத்திரிகை வாசகர்களின் ஏகோபித்த  கவனத்தைக் கவர்ந்திருக்கும் பத்திரிகை--  இந்த பத்திரிகை சூழ்நிலை அவனது தனிப்பட்ட வாழ்க்கை இடர்பாடுகளை  நிச்சயம் மறக்கச் செய்யும் என்று மனசில் தோன்றியது.

இந்த மனநிலையிலேயே அடுத்த அத்தியாயத்தை எழுதி விடலாமே என்கிற உத்வேகத்தில் ரைட்டிங் பேடை எடுத்தான் மோகன்.

எழுதி வைத்திருந்த முதல் வரிக்கு அடுத்து "காளியண்ணன், இல்லியா?" என்று எழுத ஆரம்பித்து நிஷ்டையில் ஆழ்ந்தான்.



(தொடரும்)


Friday, July 19, 2024

இது ஒரு தொடர்கதை -- 1

ழமழவென்று மரத்தினால் இழைத்து சின்ன பெட்டி ஸைஸில் இருந்தது கூடு.  எல்லாப் பக்கமும் சுற்றி வெள்ளை வெளேர் தகடு அடிக்கப்பட்டு தூக்கிக் கொண்டு  செல்வதற்கு வாகாக மேல்பக்கம் வளையம் மாட்டி சின்ன சங்கிலி  கோக்கப்பட்டிருந்தது.  சிறைக் கம்பிகள் மாதிரி தகடில் சின்ன தடுப்புக் கம்பிகள்.  கம்பிக் கதவு திறக்க அது வழியாகத்  தான் அந்த பச்சைக் கிளி வெளிவந்து ஜோசியக்காரனிடம் சீட்டு எடுத்துக் கொடுத்து அந்த காரியத்திற்குக் கூலியாக அவன் தந்த நெல்மணியை சீட்டு கொடுத்த மூக்காலேயே வாங்கிச் சென்றது.

அது சீட்டு எடுத்துக் கொடுக்க வேண்டும், இவன் அந்த நொடியே நெல்மணி கொடுக்க வேண்டும் என்பது எழுதப்படாத ஒப்பந்தம்  போல நடந்து கொண்டிருந்தது.  வாலாயமாய்  நடைமுறையில் இருக்கும் இந்த ஒப்பந்தத்தை இருபக்கமும் இது வரை மீறினதாகத் தெரியவில்லை.  அதனால் வெளிக்குத் தெரியாத ஒரு அன்யோன்யம் இரு பகுதியிலும் இருப்பது தெரிந்தது.  உன்னை நம்பி நானும், என்னை நம்பி நீயும் என்பது மாதிரியான  ஒரு யதார்த்த பிடிப்பு.

ஈஸ்வரன் கோயில் தெருவில் கீழிறங்கி மேலேறிய மேம்பாலம் தாண்டித் திரும்பிய திருப்பத்தில் அந்த ஜோசியக்காரன் ஒரு ஒதுக்குப் புறமாக உட்கார்ந்திருந்தான். செம பிஸியான  ரோடு.  இருந்தும் இவனையும் இவன் கிளிக்கூண்டையும்  பார்த்த சிலர் இவனைத் தாண்டிப் போக மனமில்லாமல் விரித்திருந்த கோணியின் உட்கார்ந்து ஜோசிய தாகம் தீர்த்துக் கொண்டவர்களாகவே இருந்தனர்.

சற்றுத் தள்ளி சாத்தியிருந்த ஒரு கடையின் படிக்கட்டுகளில் உட்கார்ந்தபடி மூன்றாம் மனிதனாக இங்கு நடப்பனவற்றை நோட்டமிடுவது பாண்டியனுக்கு சுவாரஸ்யமாக இருந்தது..  அந்தக் கிளியும் இவன்  பார்வையிலிருந்து தப்பவில்லை.  எவ்வளவு கார்யார்த்தமாக அது செயல்படுகிறது என்பதைப்  பார்க்க பாண்டியனுக்கு வியப்பாக இருந்தது.  ஜோசியம் பார்க்க ஆள் வந்து இவன் கூண்டுக் கதவு திறந்ததும் ஒயிலாக அந்தக் கிளி நடந்து  வந்து அடுக்கியிருக்கும் சீட்டுக்கற்றையிலிருந்து  ஒரு கவரை மட்டும் பாங்காக இவனிடம் எடுத்துத் தந்து விட்டு மெஜஸ்டிக்காக நெல்மணி வாங்கி என் அடுத்த வேலை கூண்டுக்குள் நுழைந்து சிறைபடுத்திக் கொள்வது தான்  என்கிற மாதிரி இந்தப் பக்கம்  அந்தப் பக்கம் பார்க்காமல் தன் வேலை முடிந்த ஜோரில் கூடு நோக்கி விரைவதும், இனி மேல் என் வேலை ஆரம்பிச்சாச்சு என்கிற மாதிரி கிளி எடுத்துக் கொடுத்த சீட்டு உறையை உதடால் ஊதிப் பிரித்து உள்ளிருக்கும் ஜோசியப்பலன் கவிதையை பாட்டாக ராகம் போட்டுப் படித்து இவன் நடக்கப் போவதை விவரிப்பதும்...

பாண்டியன் சுற்றுப்புற சூழ்நிலையே மறந்து  போனவனாய் கிளி ஜோசியக் காரனைச் சுற்றி நடப்பதில் மனம் மயங்கிப் பார்த்துக் கொண்டிருந்தான்.  ஒரு ஆள் வந்து பலன் பார்த்துப் போனதும், அடுத்தாற் போல் வரப்போகிற ஆளை எதிர்பார்த்து சுற்றி நடந்து போகும் ஜனங்களை ஜோசியக்காரன் ஏக்கத்துடன் பார்க்கும் பொழுது பாண்டியன் கிளியைப்  பார்த்தான்.  அதுவும் வெளியே வந்து அடுத்த சீட்டை எடுத்துக் கொடுக்க படபடப்புடன் காத்துக் கிடக்கிற மாதிரியான பாவனையில் அடுத்த ஆளுக்காக எதிர்பார்த்திருப்பது போல...

இதுவரை ஆறு பேர் வந்து  பலன் பார்த்துக் கொண்டு போய்விட்டனர். கிட்டத் தட்ட எல்லாருக்கும் நல்ல பலன்களாகவே அமைந்திருந்தலில் வந்தவர் களின் சந்தோஷம் அவர்கள் முகச்சிரிப்பில் தெரிந்தது. விநாயகர், சுப்ரமணியர், திருப்பதி பெருமாள், அம்மையப்பனின்  கைலாச காட்சி, கஜலஷ்மி, ஐயப்பன் என்று ஜோசிய சீட்டில் இது வரை வந்த தெய்வ வரிசையை வரிசை தப்பாமல் பாண்டியன் நினைவு கூர்ந்தான்.  ஒருதடவை எடுத்த சீட்டை மறுமுறை எடுக்காத கிளியின் கவனத்தையும் நினைத்துக் கொண்டான்.

படத்துக்குக் கீழே அந்தந்த தெய்வங்களை போற்றி பாடுகிற வாழ்த்துப்பா மாதிரி இருக்கும் போலிருக்கு.  அதை ராகம் போட்டு வாசித்து வணங்கிய பின்னே கி.ஜோ. லேசாக மாற்றிய வேறுபட்ட குரலில் வந்தவர்களுக்கு குறிபலன் சொல்வது போல அச்சடித்திருந்த விவரங்களை அனுபவித்துச் சொன்னான்.  சொன்னது அத்தனையுமே அந்தந்த தெய்வங்களின் குணாம்சங்களைக் குறிக்கிற மாதிரியும் ஜோசிய பலன் போலவும் இருந்தது தான் விசேஷம்.

லேசாக வெளிச்சம் கவிந்ததும் இது போதும்ங்கற மாதிரி கிளிஜோசியன் எழுந்திருந்தான். எழுந்திருந்த வாகிலேயே அப்பொழுது தான்  பாண்டியனைப் பார்த்தது போல முகம் மலர்ந்து, சிகரெட்டை வாயில் நுழைத்தபடி, தீப்பெட்டி இருக்கிறதா என்று கேட்கிற பாவனையில் கைமுட்டி மேல் விரல் உரசிக் காண்பித்தான்.

பாண்டியனும் எழுந்திருந்து அவன் அருகாமையில் நகர்ந்து "வத்திப் பெட்டி வைச்சிக்கற பழக்கம் இல்லீங்க.." என்று சொன்னதைக் கேட்டு ஜோசியக் காரன் அவனை விநோதமாகப் பார்த்தான்.  'இல்லேனா, இல்லைன்னு சொல்லிட்டுப் போறது தானே, தான் கேட்டதுக்கு பதில் சொல்ற மாதிரி அவனைப் பத்தியும் சொல்வானேன்' என்று ஜோசியக் காரனுக்கு தோன்றியிருக்க வேண்டும். ஏதோ காட்டமாகச் சொல்ல வந்தவன் சமாளித்த தோரணையில், "கோயிலுக்கு வந்தீகளாக்கும்?" என்று பக்க வாட்டில் சற்றுத் தள்ளி பிர்மாண்டமாக நிமிர்ந்திருந்த கோயில் கோபுத்தை காட்டிக் கேட்டான்.

"ஆமா.  கோயிலுக்குத் தான்.   கொஞ்சம் பொழுது சாயட்டுமேன்னு பாத்திருந்தேன்.  இன்னிக்கு தீப  அலங்காரமில்லியா?.. இருட்டினாத்தானே அழகாயிருக்கும்..?"

"ம்..ம்.." என்று அவனுக்குப் பதில் சொல்லாமல் நகர்ந்தான் கிளி ஜோசியன்.
சொல்லப்போனால் பாண்டியனுக்கு ஜோசியனை விட அந்தக் கிளியை ரொம்பப் பிடித்திருந்தது.  அதைப் பார்த்தபடி, அதற்கு ஒரு 'பை..' சொல்கிற தோரணையில் குனிந்து கையசைத்தான்.

அந்த பொல்லாத கிளியும் அந்த நேரத்தில் "கீக்கீ.." என்று ஓசை கிளப்ப, அதுவும்  அதன் பாஷையில் தனக்கு 'பை' சொல்கிறதாக்கும் என்று நினைத்துக் கொண்டான் பாண்டியன்.  அந்த மகிழ்வில் லேசாக நடையை எட்டிப் போட்டான்.

மங்கை சொல்லியிருப்பது நினைவில் நின்றது.  கோவில் வாசல் பக்கம் காளியண்ணன் கடை இருக்குலே?  அங்கணே அர்ச்சனை தட்டு வாங்கிக் கங்க.. சிவன் கோவில் இல்லியா?.. அப்படியே வில்வ இலை கொஞ்சம் கேட்டு வாங்கி தட்டோட வைச்சிக்கங்க.. ஜோட்டை அண்ணன் கடைலேயே சொல்லிட்டு ஒதுக்குப்புறமா விட்டிடுங்க.  உள்ளாற போனதும் அர்ச்சனைக்கு சீட்டு வாங்கிக்கங்க.. மறந்திடாதீங்க.. சீட்டு இல்லாம அர்ச்சனை கிடையாது.  தெரியுமிலே?"

அவனுக்கு அது தெரியும் என்று மங்கைக்கும் தெரியும்.  இருந்தாலும் அப்படி கேள்வி கேட்டு உரையாடுவது அவள் பாணி..

அவனுக்கும் அது தெரியும்.  இருந்தாலும்  முறைப்பான்.  "இது என்ன ஒவ்வொண்ணும் குழந்தைக்குச் சொல்ற மாதிரி?.. இப்பத்தான் புதுசா முதல் தடவையா நான் கோவிலுக்குப் போற மாதிரி.."

"எப்பவும் நாம ரெண்டு பேரும் சேந்து தானே போற பழக்கம்?.. இன்னிக்குத் தான் குளிச்சேங்கறதாலே நீங்க மட்டும் போறதா ஆயிடுச்சி.. சிவராத்ரி அர்ச்சனை புண்ணியமுங்க.. கிளம்புங்க.."

"அதில்லே.  இவ்வளவு டீடெயில்டா.. குழந்தைக்குச் சொல்ற மாதிரி.."

"யார் கேட்டா?.. குழந்தை தான்.. குழந்தை இல்லாம பெறவு என்ன?.. எப்பவும் எதுனாச்சும் நெனைப்பு.. சொல்றதை காதுலேயே ஏத்திக்காத போக்கு.. நமக்கு சம்பந்தம்  இருக்கோ, இல்லியோ எதையும் பராக்கு  பாக்கற புத்தி.. குழந்தைன்னா குழந்தையாய்த் தான் இருக்கணும்ன்னு இல்லே.  குழந்தைத் தனம் இருந்தாலே போதும். தெரியுமிலே?"

"தெரியும்.. தெரியும்.." என்று சிரித்து வெளிக்கதவு தாண்டி படியிறங்கிய அந்தக் குழந்தை, மங்கை சொன்ன காளியண்ணன் கடையைக் கடந்த நொடியில் அர்ச்சனைத் தட்டு  நினைப்பு வந்து திரும்பியது.


(இனி வரும்)





Related Posts with Thumbnails