மின் நூல்

Saturday, February 6, 2010

ஆத்மாவைத் தேடி …. 35 இரண்டாம் பாகம்

ஆன்மிகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....


35. ஆன்மிகத்தின் அடித்தளம்


டுத்த கேள்வியாக யார் எதைக் கேட்கப் போகிறார்கள் என்று தேவதேவன் எதிர்ப்பார்திருந்த பொழுது, அசோகன் எழுந்திருந்தார். இவர் தொல்லியல் மேம்பாடுகள் குறித்து நிறைய ஆராய்ச்சிகள் செய்தவர். ஆந்திரத்தில் இதற்காக இப்பொழுது ஒரு அறக் கட்டளையை சொந்த முயற்சியில் நிறுவி ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருப்பவர். அவர் எழுந்திருந்ததும் எல்லோருடைய கவனமும் அவர் பக்கம் திரும்பியது.

அசோகன் சொன்னார். "தேவதேவன், ஐயா! உடல் பற்றி உபநிஷத்துக்களின் பார்வையாக முழுமையாக எல்லாவற்றையும் பார்த்து விட்டு அடுத்து மனம் பற்றி இதே மாதிரியான ஒரு பார்வையை வைத்துக் கொள்ளலாம் என்று தாங்கள் நினைப்பது புரிகிறது. இன்றைய உடற்கூறு சாத்திரத்தில் இதுவரை நாம் கண்டறிந்துள்ள உண்மைகளை ஒருபக்கம் வைத்துக்கொண்டு உபநிஷத்துக்கால கருத்துக்களை இன்னொருபக்கம் வைத்துக் கொண்டு இரண்டையும் ஒப்புமை படுத்திப் பார்க்க வேண்டும் என்கிற அவா சதஸ் நடந்து முடிந்த பின்னால் பலருக்கு ஏற்படுவது சகஜமே" என்று அவர் சொல்லிக் கொண்டு வரும் பொழுது
மேலும் தொடர்வதற்கு அவர் தயக்கப்படுவது மாதிரி உணர்ந்ததினால் தேவதேவன், "சொல்லுங்கள், அசோகன்! எந்த தயக்கமும் வேண்டாம். நீங்கள் நினைப்பது எதுவும் சொல்லலாம்" என்று அவரை ஊக்கினார்.

அசோகன் தொடர்ந்தார்:"பொதுவாக உபநிஷத்துக்கள் சொல்லுபவை கற்கால அறிவுபூர்வமற்ற செய்திகள் மாதிரி இன்றைய காலகட்டத்தில் ஒரு பிரமை ஏற்பட்டிருப்பது தெரிகிறது. அதனால் அன்றே உபநிஷத்துக்கள் சொன்ன உண்மைகளை இன்றைய புதிய விஞ்ஞான கண்டுபிடிப்புளோடு ஒப்புமை படுத்துகிற மாதிரி சதஸ்ஸில் சமர்ப்பிக்கப்படும் கருத்துக்களுக்கான வரைவுகளை வைத்துக் கொண்டால் அது எடுப்பாகத் தெரியும் இல்லையா?உபநிஷத்துக்களின் பெருமையை சாதாரணமாக எல்லோரும் அறிந்து கொள்வதற்கும் அது வழிவகுக்கும் இல்லையா?" என்று கேட்டார்.

"ரொம்ப சரி. உங்கள் ஆதங்கம் புரிகிறது." என்று புன்முறுவலுடன் ஆரம்பித்தார் தேவதேவன். "ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன்.." என்று அவர் மேலும் தொடர்ந்த பொழுது அவை உறுப்பினர் அவர் சொல்வதை வெகு உன்னிப்பாகக் கவனித்தனர். "சாதாரணமாக நோக்கும் பொழுதே விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் என்றால் அது உண்மையான உண்மை என்று கேள்வி கேட்காத ஒரு உணர்வு நம்மிடம் படிந்திருப்பது தெரியும். இந்த உணர்வு பிரமையல்ல; பிரதட்சய உண்மை. ஏனென்றால் விஞ்ஞான சோதனைகளின் வெளிப்பாடாய் வரும் முழுமையான தெளிவு அது. இதில் இருக்கிற இன்னொரு உண்மை என்ன வென்றால், எந்த கண்டுபிடிப்பின் இறுதி வெற்றியும் தடாலென்று வானிலிருந்து குதித்ததில்லை. முன்னால் பெற்ற ஒரு வெற்றியின் தொடர்ச்சிதான் இது என்று ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்பின் வெற்றியும் அதற்கு முன்னாலான ஒரு வெளிப்பாட்டைச் சார்ந்து இருக்கும். உதாரணமாக ஸ்டீவன்ஸன் தொடர் புகைவண்டி இயக்கத்திற்கு காரணமாக இருந்தார் என்றால், அதற்கு முன்னால் நீராவி இஞ்சினைக் கண்டறிந்து தொழிற் புரட்சியைத் தொடங்கி வைத்த ஜேம்ஸ்வாட்டின் கண்டுபிடிப்பின் தொடர்ச்சி இது, இல்லையா?.. இந்த மாதிரி ஒவ்வொன்றைப் பற்றியும் நாம் அறியும் எந்த புது அறிவும், முன்னால் நமக்குத் தெரிந்த ஒன்றின் தொடர்ச்சியாக, அதை செழுமைப்படுத்திய ஒன்றாக இருப்பது தவிர்க்க முடியாத ஒன்று.


பக்கத்தில் குவளையில் வைத்திருந்த நீரை ஒரு மிடறு விழுங்கி விட்டுத் தொடர்ந்தார் தேவதேவன். "பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்த பாரத தேசத்தில் உணவைப் பற்றி, உடலைப்பற்றி, அந்த உடல் செயல்படும் செயலாற்றல் பற்றி, இயற்கையோடு இயைந்த வாழ்வாங்கு வாழும் வாழ்க்கையைப் பற்றி சிந்தித்திருக்கிறார் கள், கருத்து சொல்லியிருக்கிறார்கள் என்பதே ஒரு தொடக்கமாகத் தெரிகிறது. தைத்திரீய உபநிஷத்தில், 'சீஷா வல்லி' என்று வாழ்க்கைக் கல்வியே போதிக்கப் படுகிறது. சீரிய ஒழுக்கத்தின் அடிப்படையிலான ஒரு வாழ்க்கை முறை என்பது இறைத்தன்மையை அளிக்கும். உயிர் என்னும் ஒப்பற்ற சக்தி கிடைக்கப்பெற்ற சிந்திக்கும் வரம் கிடைத்த உயிர்களுக்கு அப்படித்தான ஒரு இறைத்தன்மை கைவரப்பெறுவதற்குக் கைப்பிடித்து அழைத்துச் செல்வதே ஆன்மிகம். இயற்கையில் பொதிந்திருக்கும் புதிர்களுக்கு யோகத்தால் விடை கண்டவர்களே யோகிகள். யோகமே ஒரு விஞ்ஞானமுறை தான். தன்னையே பரிசோதனைக் களமாக்கிக் கொண்டு செய்யும் தவம். அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்றவாறு இயற்கையை தரிசிக்க முயல்வதும், அதில் தங்களைப் பறிகொடுப்பதுமாக இந்த தவச்சீலர்களின் செயல்பாடு இருந்திருக்கிறது. அன்றைய வராகமிகிரர், ஆரியபட்டரிலிருந்து பல்வேறு துறைகளில் அத்தனைபேருடைய பங்களிப்பும் மறக்கக் கூடியதல்ல; மறைக்கக் கூடியதுமல்ல. ஆக, இன்றைய விஞ்ஞான வளர்ச்சியை பண்டைய ஆன்மிக எண்ணங்களுக்கு எதிராக வைக்காமல், அவற்றின் தொடர்ச்சியாகக் கொள்வதே சரியென்று நினைக்கிறேன். அந்த அடிப்படையில் நாள்தோறும் சிறக்கும் எந்த மேம்பட்ட சிந்தனையையும் வளர்ச்சியையும் நாம் உள்வாங்கிக் கொண்டு அவற்றை மென்மேலும் செழுமைபடுத்துவதே மனிதகுலத்தின் கடனாகிப் போகிறது" என்று சொல்லிவிட்டு "இது தொடர்பாக மேலும் சில தகவல்களைச் சொல்லவேண்டும்" என்று தொடர்ந்தார் தேவதேவன்.


"ஸ்தூலமாக கண்ணுக்குத் தெரிகிற மாதிரி மனம் என்கிற ஒரு உறுப்பு உடற்கூறு சாத்திரத்தில் இல்லையென்றாலும், உலக அரங்கில் மனம் பற்றியதான உண்மைகள் அறியப்பட வேண்டும் என்கிற தேவை ஏற்பட்டிருக்கிறது. மேல்நாட்டு ஜர்னல்களில் மனம் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் பெரிய அளவில் தற்காலத்திய அறிதலாக வெளியிடப்படுகின்றன. 'மனவளக்கலை'யும் 'யோகக்கலை'யும் இன்று உலக அரங்கில் பாடத்திட்டங்களாக ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கின்றன. அவை பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்கிற ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. மனிதகுல மேன்மைக்கும், ஓருலகச் சிந்தனைக்கும் பாரதம் பெற்ற கல்வியை கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டுமென்பதே நம் பணியாகிப் போகையில், வேறுபட்ட சிந்தனைகளுக்கு வழியில்லாமல் போகும் என்பது என் எண்ணம்" என்று தேவதேவன் சொன்ன போது, அவர் சொன்னவற்றின் குறிப்புகளை உற்சாகத்தோடு குறித்துக் கொண்டனர்.

"நீங்கள் சொல்வது சரிதான்.."என்று உணர்வுபூர்வமாக உணர்ந்த உணர்வில் சொன்னார் அசோகன். "

"வேறு கேள்விகள் இல்லையென்றால், இந்த அளவில் உடல் பற்றி இப்போதைக்கு முடித்துக் கொண்டு மனம் பற்றி தொடர்ந்து பார்க்கலாம்" என்று சொன்னார் தேவதேவன்.

அவையின் ஒட்டுமொத்த ஒப்புதலுக்குப் பிறகு அடுத்து மனம் பற்றி தொடர்ந்து உரையாற்ற யத்தனித்தார் தேவதேவன்.




(தேடல் தொடரும்)



2 comments:

கிருத்திகா ஸ்ரீதர் said...

தாமதாய் வாசித்தாலும் தவறவிடாமல் வாசித்ததின் அருமையை உணர்கிறேன்.. மிக முக்கியமான பத்தி இது..

ஜீவி said...

@ கிருத்திகா

தொடர்பு விட்டு விடாத தொடர் வருகைக்கு மிக்க நன்றி.

Related Posts with Thumbnails