மின் நூல்

Wednesday, February 10, 2021

மொழி

                                                             

"மொழிக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்?   ஒருவொருக்கொருவர் கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்வதற்கான ஒரு சாதனம் அது.  அவ்வளவு தானே?" என்று கேட்டார் என் நண்பர்  ஒருவர்.


என்னால் அவ்வளவு எளிதாக அதை ஒத்துக் கொள்ள முடியவில்லை. கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்வதற்கான ஒரு சாதனம் (tool) மட்டும் தானா மொழி என்பது?..

நிச்சயமாக இல்லை.    

மொழி பற்றி,  ஒருவனில் அந்த மொழியின்  ஆளுகை பற்றி எத்தனையோ அறிஞர்கள் எவ்வளவோ சொல்லியிருக்கிறார்கள்.    கருத்துப் பரிமாற்றம் கொள்வதற்கு மொழியை விட்டால் வேறு வழி இல்லை.  உண்மை தான். ஆனால் அதையும் தாண்டி ஒரு மொழியில் புலமை பெறும் பொழுது அது நம்மை ஆட்கொள்ளும் நேர்த்தியில் எத்தனையோ விஷயங்கள் இருப்பதாக புரிதல் ஏற்படுகிறது.

முக்கியமாக அந்த மொழியின் இலக்கிய செல்வங்கள்.

எந்த மொழியும் தன்னில் ஞானம் கொண்டவனுக்கு இதில் வஞ்சனை செய்ததில்லை.  உலக மொழிகளில் எல்லா மொழிகளும் இந்த செல்வத்தை தன்னை அறிந்தோனுக்கு வாரி வழங்குவதில்  பாகுபாடு கொண்டதில்லை.

 ஒரு  மொழியில் புலமை பெற்றவன்   அந்த மொழியின் கருவூலமான இலக்கிய இன்பங்களை உள்வாங்கிக் கொண்டு அதில் ஆழ அமிழும் பொழுது இகவுலக சுகங்களை தாண்டியதான விவரிக்க இயலாத இன்பத்தை ஓர்ந்து உண்ர்ந்து கொள்பவனாகிறான்.

 திவ்ய பிரபந்த நாலாயிரத்தில் ஒரு பாடல் அது.

அச்சுதனின் அரங்கனின் பெருமைகளை  நா புரட்டி உச்சரிக்கும் புல்லரிக்கும் உணர்வை விட்டு விட்டு இந்திரலோகம் ஆளும் பெருமையையும் வேண்டேன் என்று இச்சுவை-- அச்சுவை  வேறுபாடு காட்டி நெகிழ்ந்திருப்பார் தொண்டரடிப்பொடி ஆழ்வார்.

மொழி என்பது ஒரு லாகிரி வஸ்து போல போதை தருவது.

எந்த மொழியாக இருக்கட்டுமே, அந்த மொழியின் படைப்புகளில் ஆழ்ந்த தோய்தல் ஏற்படும் பொழுது அந்த ரசனை ஒருவித கிறக்க உணர்வை ஏற்படுத்தாமல் விடாது.

தாய் மொழி-- பிற மொழி என்றெல்லாம் இதில் பாகுபாடு ஏதுமில்லை. தாய்மொழி என்றால் இரட்டை மடங்கு கிறக்கம்.  அவ்வளவு  தான்.

அது ஆங்கிலேயர் நம் நாட்டை ஆண்ட காலம்.   பல நல்லது -- கெட்டதுகள் நமக்கு அறிமுகமான காலம்.

ஆங்கில மொழியறிவுக் கள்ளைப் பருகியதின் பாதிப்பில் அது போலவே தமிழில் எழுத வேண்டுமென்ற அளப்பரிய ஆசையின் போதை வயப்பட்டவர் பல பேர்.

'அது  போலவே'என்ற வார்த்தையை அட்சரம் பிசகாமல் தமிழ் படைப்பிலக்கியத்தில் கொண்டு வந்த சிலரை மறக்கவே முடியாது.  இவர்கள் துணிந்து,பேண்ட், சட்டை, டை கட்டிய கதா பாத்திரங்களுக்கு வேஷ்டி, சட்டை தங்க பித்தான் கோர்த்த கோட், அங்கவஸ்திரம் உடுத்தி அழகு பார்த்தனர்.   சட்டை என்றால் அந்தக் காலத்தில் பெரும்பாலும் முழுக்கை சட்டை தான். முழுக்கை சட்டையில் மணிக்கட்டு இடத்தில் கஃப் பட்டன் போட்டு, புஜப்பிரதேத்தில் கால் செ.மீ. அளவுக்கு வட்டமாய் துணியை மடித்துத் தைத்த கோலத்தில் அட்டகாசமாய் இருக்கும்.

ஆரணி குப்புசாமி முதலியார், வடுவூர் துரைசாமி ஐயங்கார், ரங்கராஜூ (நம்ம ரா.கி.ரங்கராஜன் இல்லை; இன்னொரு ஸ்ரீரங்கம் ரங்கராஜனும் அறவே இல்லை!)  போன்றவர்களை மறக்கவே முடியாது.  ஆங்கில நாவல்களை தமிழ் படுத்தியதில் பயங்கர இலக்கிய மாற்று பங்களித்தவர்கள் இவர்கள்!   கதைகள் வாசிக்கம்  பழக்கம் இவர்களால் தான் அக்காலத்தில் படித்த வர்க்கத்தினரிடையே வழக்கமாகவும் மாறியது

இரத்தினபுரி இரகசியம்,  சொர்ணாம்பாள் அல்லது பெருவிரல் மர்மம், அபூர்வ சிந்தாமணி, மதன பூஷணம் அல்லது இறந்தவன்  பிழைத்தது போன்ற ஆரணி குப்புசாமி முதலியார் அவர்களின் மனதைக் கொள்ளை கொண்ட நாவல்களை மறக்கவே முடியாது.

ஆரணியாரின் நாவல்களில் ஆங்கில கதாபாத்திரங்களும்  இங்கிலாந்து இடங்களும் தமிழ்ப் பெயர் பூணுவதை ரசித்து படிப்பதே ஒரு  தனி இன்பம் பயக்கும்.   எழுதிய மாத்திரத்தில் இவர் எழுத்தில் லண்டன்  இரத்தின புரியாகும்; வாட்ஸன் விஸ்வநாதன்  ஆவார்; ஆர்ஸின் லூயின் அரசூர் லஷ்மணனாவார்.


ஆரணி குப்புசாமி முதலியார் சிலகாலம் 'ஆனந்த போதினி' என்னும் பத்திரிகைக்கு ஆசிரியாராக வேறு இருந்தார்.  ஆ.கு.மு. காலத்திற்கு பிறகு நாரண துரைக்கண்ணன் (இவர் ஜீவா என்று புனைப்பெயர் கொண்டிருந்தார். பொதுவுடமைக் கட்சி ஜீவா இல்லை)  'ஆனந்த போதினி'யின் ஆசிரியராக சில காலம் இருந்தார்.  இந்த நாரண  துரைக்கண்ணன் அவர்கள் 'கலைமகள்'
பத்திரிகையில் தனக்கு முன்னோடியான  ஆரணி குப்புசாமி முதலியாரின் எழுத்தின் ரக்சியம் பற்றி  ரசித்து ஒரு கட்டுரை எழுதியிருந்தது நினைவுக்கு வருகிறது.  அந்தக் கட்டுரையின்  சில வரிகளை என் குறிப்புப் புத்தகத்திலிருந்து  எடுத்து இங்கு எழுதுகிறேன்:

"ரெயினால்ஸ், வால்டர் ஸ்காட்,  அலெக்ஸாண்டர் டூமாஸ், எட்கார் வாலஸ், கானன் டாயில் போன்ற ஆங்கில நாவலாசிரியர்களின்  நாவல்களை மொழிபெயர்த்து தமிழர்களுக்குத் தர விரும்பிய குப்புசாமி முதலியார் தமிழ்நாட்டுப் பண்பாடுக்கு ஏற்றவாறு கதை நிகழும் இடங்களையும்  கதை மாந்தர்களின் பெயர்களையும்  நடை உடை பழக்க வழக்கங்களையும் மாற்றியிருக்கிறார்.   அத்துடன் கதைகளுக்கு இடையிடையே நீதி போதனைகளையும் வேதாந்த தத்துவங்களையும் கூறியிருக்கிறார். இதை இவர் கதைச் சுவை சிறிதும் குன்றாதவாறு திறமையாகச் சொல்லியிருக்கிறார்.

-- என்று நாரண துரைக்கண்ணன் ஆரணியாரைப்  பற்றி ரசனையுடன் எழுதியிருக்கிறார்.

ஆரணியார் இப்படி  என்றால் வடுவூரார் கதையே தனி.  துப்பறியும்  பாணி கதைகளை தனிக்குத்தகைக்கே எடுத்தவர் இவர்.   தமிழ்வாணனில் ஆரம்பித்து பட்டுக்கோட்டை பிரபாகர் வரை அத்தனை மர்மக்கதை மன்னர்களுக்கும் இவர் தான் முன்னோடி!  இவர் எழுதுவதற்காகவே தான் பணியாற்றிய  தாசில்தார் வேலையைத் துறந்தார்.  அந்தக்காலத்தில் 'அல்லது'  இடையிட்டு நாவல் தலைப்பை எழுதுவது பிராபல்யம் அடைந்தவர்களின் ஒரு பழக்கமாகவும் இருந்தது!

கல்யாணசுந்தரம் அல்லது வேலியே பயிரை மேய்ந்த  விந்தை

மரண புரத்தின்  மர்மம் அல்லது லீலாவதியின் மூடு மந்திரம்

இரு மன  மோகினிகள் அல்லது ஏமாளியை ஏமாற்றிய கோமாளி!

--என்று வடுவூராரின் 'அல்லது' போட்ட சில நாவல் தலைப்புகள் இன்னும் நினைவுகளில் நிழலாடுகிறது!

இவரது ''கும்பகோணம் வக்கீல் அல்லது திகம்பர சாமியார்' பயங்கர பிரபல நாவல்!  திகம்பரம்  (ஐயே!)  என்றால் அர்த்தம் தெரியும் தானே!  'திகம்பர சாமியார்' திரைப்படமாகவும் வந்திருக்கிறது.  எம்.என்.நம்பியார் தி.சாமியாராய் நடித்து அசத்தியிருப்பார்!  மயிலாப்பூர்  அல்லையன்ஸ் பதிப்பகத்தார்  இவரது நாவல்களின் வரிசை ஒன்றை சில ஆண்டுகள் முன்பு பதிப்பித்திருக்கிறார்கள்!  வேண்டுகிறவர்கள் வாங்கிப் படித்து மகிழலாம்!

(தொடரும்)

                                               
                

9 comments:

நெல்லைத் தமிழன் said...

மொழி என்பது கருத்துப் பரிமாற்றத்திற்கான சாதனம் மட்டும்தானா?

எதிலும் அழகுணர்ச்சி, கலாச்சாரம், பண்பாடு என்று பல இருக்கிறது.

உடை என்பது நிர்வாணத்தை மறைக்கத்தான் என்பது உண்மை என்றாலும், ஒரு போர்வையைத் தாண்டி என்ன என்ன வகையான உடைகள் நமக்குத் தேவையாக இருக்கிறது. இரண்டு கோடுகள் ஒரு புள்ளி என்பதைத் தாண்டி கோலத்திலேயே வித வித ரசனை இருக்கும்போது, மொழி என்பதை இலக்கியம் பல்வேறு வகைகளில் உபயோகித்து அதனை மிளிரச் செய்கிறது அல்லவா?

சோத்தைத் தின்னான், உணவு உண்டான், வயித்துக்குக் கொட்டிக்கொண்டான் என்ற இரு ஒரு பொருட் தொடரிலேயே அர்த்தம் வேறுபடுகிறது அல்லவா?

ஸ்ரீராம். said...

கருத்துக் பரிமாற்றத்துக்காக ஏற்பட்ட மொழியை பின்னர் படிப்பபடியாக எப்படி ரசனையுடன் இருபொருளில், மறைபொருளில் எல்லாம் பேசத்தொடங்கினார்கள் என்பது சுவாரஸ்யமான ஆராய்ச்சி.

இந்தப் பழங்கால நாவல்கள் எதுவுமே நான் வாசித்ததில்லை.

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்

சோத்தைத் தின்றான் -- உணவு உண்டான் - வயித்துக்குக் கொட்டிக் கொண்டான்..

ஆஹா.. அருமையான உதாரணம் கொண்டு நீங்கள் சொல்ல வந்ததை நிறுவியிருக்கிறீர்கள்!!

மொழியில்லாத காலம் என்று ஒன்று இருந்திருக்குமுமல்லவா?.. பேச்சு என்பதே புழக்கத்தில் இல்லாத காலம் -- அந்த ஊமைக் காலத்திலிருந்து நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. பேச முடிந்த, நினைத்ததை சொல்ல முடிந்த, அதை இன்னொருவர் புரிந்து கொள்ள முடிந்த அந்தக் காலத்திலிருந்து..... ஹப்பாடி..

ஜீவி said...

@ ஸ்ரீராம்

//இந்தப் பழங்கால நாவல்கள் எதுவுமே நான் வாசித்ததில்லை.//

எஸ்.எஸ்.எல்.ஸி. படிப்பை முடித்தவுடன் (1959-ம் ஆண்டில்) சேலத்தில் ஒரு குட்டி நூலகத்தின் பொறுப்பாளனாக பணியாற்ற எனக்கு வாய்ப்பு கிடைத்த காலத்தில் ஆரணியார், வடுவூரார், வை.மு.கோ -- நூல்களை வாசித்திருக்கிறேன். இப்பொழுது வாசிக்க முடிந்தால் அதுவே ஒரு தனி அனுபவமாக இருக்கும் தான்.

அல்லயன்ஸ் பதிப்பக முகவரி:

244, இராமகிருஷ்ணா மடம் ரோடு, வெங்கடேச அக்ரஹாரம், மைலாப்பூர், சென்னை.

(மயிலை குளம் பஸ் ஸ்டாண்டு எதிரில் பதிப்பகம் இருந்தது. சோ ஸாரின் நூல்களை விசேஷமாக பதிப்பித்தவர்கள்)

1901-ம் ஆண்டில் திரு. குப்புசாமி ஐயரால் தோற்றுவிக்கப்பட்ட நூறாண்டுகள் கண்ட பதிப்பகம். இப்பொழுது அதே இடத்தில் இருக்கிறதா, தெரியவில்லை.

மற்ற நூல் விற்பனையாளர்களிடம் இந்தப் பதிப்பகத்தின் நூல்கள் கிடைக்கின்றன.

https://www.noolulagam.com/product/?pid=12833

மாதிரிக்கு ஒன்று. வடுவூராரின் என்னன்ன நூல்கள் என்று நீங்களும் தான் ஒரு பார்வை பார்த்து விடுங்களேன்.

ஸ்ரீராம். said...

//எஸ்.எஸ்.எல்.ஸி. படிப்பை முடித்தவுடன் (1959-ம் ஆண்டில்) சேலத்தில் ஒரு குட்டி நூலகத்தின் பொறுப்பாளனாக பணியாற்ற//

ஆஹா...   என்ன ஒரு வாய்ப்பு..   அதுவும் அந்த வயதில்...

அல்லயன்ஸ் பதிப்பகம் பற்றி தெரியுமே...

ஸ்ரீராம். said...

வடுவூரார் கதைகளை இங்கிருந்து டவுன்லோட் செய்து படிக்கலாம்.  ஆயினும் அந்த லிஸ்ட்டில் இந்தப் புத்தகம் இல்லை!

https://poovascollections.blogspot.com/p/vaduvur-kduraisamy-iyyangar-novels.html

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

கும்பகோணம் வக்கீல்...கும்பகோணத்தில் பெரியவர்கள் கூறக்கேள்விப்பட்டதை இப்பதிவு மூலம் கண்டேன்.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

பதிவிறக்கம் செய்து வாசிக்க உதவுவது எல்லோருக்குமான பயன்பாட்டு வெகுமதி. நன்றி. ஸ்ரீராம்.

ஜீவி said...

@ Dr. B. Jambulingam

திகம்பர சாமியாரின் பெருமை அந்நாட்களில் திரைப்படமாக வந்த நேரத்து எல்லோராலும் பேசப்பட்ட ஒன்று.

அதுவும் தவிர, கும்பகோணச் சிறப்புகளைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமோ?..

'அணைக்கரை பஸ் ஆனையடியைக் கடந்து வந்து டவுன் ஹைஸ்கூல் வாசலையும் கடந்து நாற்சந்தியையும் கடந்து போயிற்று' என்று தி.ஜானகிராமன் அவர்கள் தனது 'மோகமுள்' நாவலின் ஆரம்பத்தில் சொல்லும் பொழுது, ----

அன்யே தேச கிருதம் பாபம் வாராணஸ்யாம்
விநச்யதி வாராணஸ்யாம் க்ருதம் பாபம் கும்பகோண விநச்யதி
கும்பகோண க்ருதம் பாபம் கும்பகோண விநஸ்யதி

-- என்ற கும்பகோண ஸ்தல மகாத்மியம் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்வார்.

குடந்தையின் பெருமைகள் ஈடு இணையற்றவை தான்; சந்தேகமேயில்லை!







Related Posts with Thumbnails