மின் நூல்

Thursday, October 10, 2019

மனம் உயிர் உடல்

12.   தெரிந்த  தெய்வங்கள்

போன ஜென்மம், அடுத்த ஜென்மம் என்கிற கருதுகோள்களையெல்லாம் தற்காலிகமாக மறப்போம்..  உபநிஷத்துக்களில் சொல்லப்படுகிற ஜென்ம தொடர்ச்சிகள் வேறே.

பழைய பொக்கிஷங்கள் பலவற்றில் அவர்கள் அறிவுபூர்வமாகச் சொல்லியிருப்பதையெல்லாம் நம் வசதிக்கேற்ப அல்லது  காலப்போக்கின் புரிதல்களுக்கு ஏற்ப மாற்றி மாற்றி அர்த்தப்படுத்திக் கொள்கிறோம். அவ்வளவு தான்.

போன ஜென்மத்திற்கெல்லாம் போவானேன்?.. நிகழ் ஜென்மத்து உறவுகளை மனதில் கொள்வோம்.  தாத்தா, அப்பா, நான் -- என்கிறது நிறையவே ஏற்றுக் கொள்கிற மாதிரியான பிறவித் தொடர்ச்சி..  கொஞ்சம் கொஞ்சம் பாட்டி, அம்மா என்றும் சேர்ந்து வருவது உண்டு.  வம்சாவளித் தொடர்ச்சி தொடர்வதற்கு உடற்கூறு சாத்திரத்திலும் ஆதாரங்கள் உண்டு.

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வங்கள்.  இந்த  வரி உளி  கொண்டு  செதுக்கியது மாதிரி உங்கள்  மனசில் மிக மரியாதையுடன் படிய வேண்டும்.  நிதர்சனமாக நம்முள் உறையும்  தாயையும், தந்தையையும் இறைவனாகக் கொள்ள வேண்டும்.  இதில் யாருக்காவது சங்கடம் இருந்தால் அது பற்றி தனக்குள்ளேயே தர்க்கித்து ஒரு முடிவுக்கு வருவதில் ஆட்சேபணை இல்லை..

நாம் இப்பூவுலகில் உயிர்  சுமந்து  உலவுவதற்குக்  காரணமான அப்பா--அம்மாவை நினைவில் கொள்வோம். தந்தை-- தாய் என்று சொல்வதை விட   -  அப்பா - அம்மா நெருக்கமான  வார்த்தை.  அதனால் அப்பா-- அம்மா என்றே   எப்பொழுதெல்லாம் தியானத்தைத்  தொடங்குகிறோமோ அப்பொழுதெல்லாம்   அவர்களின் ஆசியே நம் தியானத்தைத்ய் தொடங்கி வைக்கட்டும். 

கூட இருக்கும் பொழுது சகஜமாக இருக்கும் நெருக்கம் அவர்கள் இல்லாத பொழுது தான் உணர்வின் தகிப்பில்  இன்னும் கூடுகிறது..   அப்பா - அம்மா  இரண்டு பேருமே  இப்போ இல்லை என்றால்  தியானத்திற்கு ரொம்பவும் செளகரியம்.  தத்ரூபமாக அவர்கள் உருவத்தை, முகத்தை உள்ளார்ந்து ஓர்ந்து நினைவில் நிலை நிறுத்துங்கள்.  நிலையாக ஒரு மெழுகுவர்த்தி உங்கள் முன் ஒளியை உதிர்ப்பதை போல அப்பா - அம்மா  தனித்தனியே  உங்கள் எண்ணத்தில் ஒளி ஊட்டட்டும்.

தெரியாத தெய்வங்களை விட தெரிந்த தெய்வங்கள் அவர்கள்.  அதனால்  தியானத்தைத் தொடங்குவதற்கு முன்  ஒரு தெய்வத்தை வேண்டிக் கொள்கிற  நிலையில்  அம்மா - அப்பா அருள் வேண்டி தெய்வத்தின் நிலையில் அவர்களை நினைவில் ஆழந்து வரவழைத்துக் கொள்ளுங்கள்.  அவர்கள் உங்களுடன் உரையாடுகிற பாவனையில் நினைவுகள் இருந்தால் இன்னும் செளகரியம்.

நம்மிடையே  தாய் - தந்தையரை விரோதித்துக் கொண்டவர்களும் இருப்பார்கள்.   ஏதாவது காரணங்களினால் அவர்களை வெறுத்துப் பிரிந்து வந்தவர்களும் இருப்பார்கள்.  அவர்களால் எடுத்தவுடன் பரிவான உணர்வுடன் நினைவில் கூட தாய்- தந்தையருடன் நெருங்கமுடியாத உணர்வு மிகுந்திருக்கும்.  அப்படிப் பட்டவர்கள்  மனசார தங்கள் செயல்களுக்கு வருந்தி பெற்றோர்களிடம் ஆத்ம சமர்ப்பணமாக மன்னிப்பை உருக்கமாகக் கோரி அவர்கள் தம்மை மன்னித்து விட்டார்கள் என்ற திருப்தியுடன்  தாய்-தந்தையரை நினைவில் நிறுத்தி வேண்டினால்  அற்புதம் நிகழும்.  இத்தனை நாள் பெற்றோரிடம் விடுப்பட்டுப் போயிருந்த அந்த நெருக்கம்  அவர்கள் அருட் பார்வையோடு கைகூடி வருவதை நிதர்சனமாகவே உணர்வார்கள்.

வேறென்னன்ன என்பதனைத் தொடர்ந்து  பார்ப்போம்.

தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?..

அமெரிக்காவில் பிலடெல்பியா நகரில் ஜேக்கப் க்ரெளன் என்னும் ரேடியாலாஜிஸ்ட் நமது உடம்பில் உள்ள மின்னியல் கதிர் அலைகள் தாம் இந்த ஆவி சமாச்சாரத்திற்கு அடிப்படையோ என்றும் ஆராய்ந்திருக்கிறார். 

ஒரு மனிதனை நாற்காலி ஒன்றில் கொஞ்ச நேரத்திற்கு உட்கார வைத்தார்கள்.  பிறகு அவனை அனுப்பி விட்டு 'இன்ஃப்ரா ரெட்' போட்டோ கிராஃபியில் அவன் உட்கார்ந்திருந்த இடத்தைப் படம் பிடித்துப் பார்த்த பொழுது  அவர்களுக்கு அந்த ஆச்சரியம் காத்திருந்தது!..

படத்தில் அந்த மனிதனின் முழு உருவமும்  புகை மூட்டம் போல வெள்ளையாய் விழுந்திருந்தது..  அந்த மனிதன் நாற்காலியில் உட்கார்ந்திருந்த  தருணத்தில் அவன் உடம்பிலிருந்து வெளியேறிய  மின் கதிர் அலைகள் நாற்காலியில் படிந்து தேங்கி விட்டது  தெரிந்தது.

கொஞ்ச நேர உட்காருதலுக்கே இப்படி என்றால் வாழ்க்கையின் பெரும் பகுதி  நாம் வசித்து உண்டு  உறங்கி உலாவும்  நமது வீட்டில்?..  

மனிதர்கள் மரித்த பின்பும் அவர்கள் வாழ்ந்த பொழுது அவர்கள் உடலிலிருந்து வெளிப்பட்ட மின் கதிர் அலைகள் தம் வீச்சின் வீரியம் குறையாமல் அவர்கள் வாழ்ந்த இடத்தில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை அழியாமல் இருக்கும் என்று சொல்கிறார்கள். 

திடகாத்திரமாக உடல் நலத்தோடு  உலவியவர்களின் மின் கதிர் அலைகள்  பல ஆண்டுகள் ஆகியும் அழிவதில்லை  என்றும்  விஷயம் தெரிந்த ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்தும் காட்டியிருக்கிறார்கள்.

இந்தக் கருத்துரு தான் பேய் உலாவல்களுக்கு அடிப்படை என்று வாதிடுபவர்கள், அதனால் தான் தங்களை அணைத்துக் கொள்ளும்  இருட்டின் மேல் பேய்களுக்கு தனிப்பட்ட  மோகம் என்று அடித்துச் சொல்கிறார்கள்..


(வளரும்)

24 comments:

டிபிஆர்.ஜோசப் said...

கூட இருக்கும் பொழுது சகஜமாக இருக்கும் நெருக்கம் அவர்கள் இல்லாத பொழுது தான் உணர்வின் தகிப்பில்  இன்னும் கூடுகிறது..//

சத்தியமான உண்மை. இந்த உறவு மட்டுமல்ல ஒரு குடும்பத்திலுள்ள அனைத்து உறவுகளுமே அவை இல்லாமல் போகும் போது தான் அவற்றின் அவசியம் தெரிகிறது.

வே.நடனசபாபதி said...

// மனிதர்கள் மரித்த பின்பும் அவர்கள் வாழ்ந்த பொழுது அவர்கள் உடலிலிருந்து வெளிப்பட்ட மின் கதிர் அலைகள் தம் வீச்சின் வீரியம் குறையாமல் அவர்கள் வாழ்ந்த இடத்தில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை அழியாமல் இருக்கும் என்று சொல்கிறார்கள்.//

இது ஒத்துக்கொள்ளக்கூடியதுதான். அதனால் தான் இன்றும் நாம் வீட்டில் நடக்கும் விசேஷத்தின் போது முதலில் மறைந்த நம் பெற்றோர்களுக்கு படைத்துவிட்டு, அவர்களிடம் மானசீகமாக ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டு செயலைத் தொடங்குகிறோம். நிச்சயம் அவர்களின் ஆவியோ/மின்அலையோ நம் வீட்டில் சுற்றிக்கொண்டு ருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஜீவி சார். பெற்றோரைத் தினம் மனதார நினைக்க வேண்டும்.

தியானத்துக்குன் அவர்களையே மனதில் நிலை நிறுத்துவது
மிகப் பெரிய ஆதரவை நமக்குத் தரும்.
அதே போல நாம் தெரிந்தோ தெரியாமலோ இழைத்திருந்த நிகழ்வுகளுக்கு மன்னிப்பும் கேட்க வேண்டியது மிக அவசியம்.

நான் எங்கள் வீட்டில் மாமனாரின் ஆதரவை உணர்ந்திருக்கிறேன்.
இப்பொழுதும் என் கணவரின் அன்பான ஆக்கிரமிப்பை அங்கே உணர முடியும்.

இவர் மறைந்த ஒரு மாதத்துக்கு அப்புறம் வந்த குரு என் துக்கத்தைப் பார்த்து நீங்க உட்கார்ந்திருக்கிற நாற்காலி பின்னால் அவர் நிற்கிறார்.
மனதில் அவரை நிலை நிறுத்துங்கள் என்று திட்டவட்டமாகச் சொன்னார்..


இப்போது எல்லாமே நினைவில் நிறுத்துவதால் ஆதரவு கிடைக்கிறது.
உங்கள் எழுத்துகள் நிதானமாக அழுத்தமாகப் பதிகின்றன.
மிக நன்றி சார்.

நெல்லைத்தமிழன் said...

உறவோ இல்லை பொருளோ... இருக்கும்போது அதன் அருமை தெரியாது. இல்லாதபோதுதான் அருமை தெரியும்.

தியானத்துக்கான முறையைத் தொடறீங்க... படிக்கிறேன்.

நெல்லைத்தமிழன் said...

நீங்க சொல்ற மின்காந்த கதிர் - இந்த கான்சப்ட்தான் இரவில் தெரியும் பைனாகுலர், மற்றும் மற்ற கருவிகள் மூலமா ஆள் நடமாட்டம் உண்டா என்று ராணுவம் செக் பண்ண உபயோகிப்பாங்க.

ஜீவி said...

@ டி.பி.ஆர். ஜோசப்

தியானத்தை ஆரம்பிப்பதற்கான ஆரம்ப நிலையில் நம் மனசை ஆக்கிரமிக்கிற ஒரு சக்தியிடம் மனதை ஆட்படச் செய்து அதன் தொடர்ச்சியாக மனதை நாம் நினைக்கிற சிந்தனையில் லயிக்க வைக்கலாமே என்ற எண்ணத்தில் தந்தை தாயை முன்னிலைப் படுத்தினேன்.

மனம் தன்மயப்படுவதற்கு தேர்நெடுக்கும் விஷயத்தில் தன்னை இழக்கும் ஒன்றிய சிந்தனை குவிய வேண்டும். அதற்காகத் தான்.

ஜீவி said...

@ வே. நடன சபாபதி

தங்களின் ஆணித்தரமான கருத்து கொண்ட எண்ணத்திற்கு வலு சேர்த்திருப்பதாகவே எண்ணுகிறேன். இது அந்த மின் அலைகளைப் பற்றி வரும் பகுதிகளில் குறிப்பிடும் பொழுது மேலும் பகுத்து ஆராய துணையாக இருக்கும். நன்றி, சார்.

ஜீவி said...

@ வல்லி சிம்ஹன்

'நாற்காலிக்கு பின்னால் அவர் நிற்கிறார். மனதில் அவரை நிலை நிறுத்துங்கள் என்று திட்டவட்டமாகச் சொன்னார்' என்ற வரியை மிகச் சரியாகப் புரிந்து கொண்டேன், வல்லிம்மா. அந்த நேரத்தில் குருவின் அந்த வார்த்தைகள் எவ்வளவு ஆதரவாக இருந்திருந்திருக்கும் என்பதனை நிதர்சனமாக உணர முடிகிறது.

என் மனதிற்கு பட்டதை ஆய்ந்து எழுதுகிறேன். உங்கள் குறிப்புகள் அதற்கான அங்கீகாரமாக மனதிற்குப் படுகிறது. மேலும் தொடர்வதற்கான சக்தியை அது கொடுக்கும். நன்றி, வல்லிம்மா.

ஸ்ரீராம். said...

இறந்து போனதற்குப் பிறகுதான் ஆவியாக வரவேண்டும் என்று இல்லையே...    நான் படித்த ஒரு புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்த ஒரு சுவாரஸ்யமான விஷயம்  :  ஒரு குறிப்பிட்ட கட்டிடத்தில் ஒரு பெண் உருவம் அடிக்கடி தென்பட்டதாம்.  அது யாரென்று விசாரித்ததில் அந்த ஊரிலிருந்து பல காத தூரம் தள்ளி வசித்த ஒருபெண்ணின் உருவம்தானாம் அது.   உயிரோடுதான் இருந்தாராம்.  அவர் அந்த இடத்தை மிகவும் நேசித்த காரணத்தினால் அவர் சூக்ஷும சரீரம் இரவுகளில் அந்தக் கட்டிடத்தில் இரவுகளில் உலவி வருமாம்.

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்

சொல்லப் போனால் தியானம் ரொம்ப சிம்பிள் நெல்லை. அதற்கான சாமக்கிரியைகள் தான் அதிகம். சுத்துப்பட்ட விஷயங்களில் செலுத்தும் கவனம் அதற்கான நல்ல புரிதலை ஏற்படுத்தி மெயின் விஷயத்தில் இயல்பாக இருந்து மேற்கொண்டு விஷயங்களை கிரகிக்கத் துணை புரியும்.

வெளிப்பிரகாரம் சுற்றி கர்ப்ப கிரகத்திற்குள் நுழைந்து வணங்கி உள் பிராகாரம் சுற்றி வெளியே வந்து விடலாம். சரியா?..

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன் (2)

நான் வாசித்துத் தெரிந்து கொண்ட விஷயம் அது. நம் உடலில் உள்ள 'மின்னியல் கதிர் அலைகள்' தான் இந்த ஆவி சமாச்சாரத்திற்குக் காரணம் என்கிறார்.

BIO MAGNETISM பற்றி அறிவேன். அடுத்த வெளிப்பிராகாரம் சுற்றல் அது தான்.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

ஆவி கான்சப்ட் சிலரை பயமுறுத்துகிறது; சிலரை சுவாரஸ்யப்படுத்துகிறது.

மர்மக் கதைகள் எழுதுவோருக்கு வெல்லக் கட்டியாக இருக்கிறது. நீங்கள் சொல்வது இதுவரை வந்த ஆவிக்கதைகளின் பாணியே.

இருபது அத்தியாயத்திற்கு வேர்க்க வைத்து கடைசியில் எவனோ எந்தப் புதையலையோ எடுக்க இருக்கிறகிறவர்கள் காதுகளில் பூ சுற்றினான் என்று முடியும்.

1, 'இறந்து போன பிறகு தான் ஆவியாக வரவேண்டும் என்ற அவசியம் இல்லையே..'

2. உயிரோடு இருப்பவரின் சூட்சும சரீரம் இரவு நேரங்களில் --

-- இந்த இரண்டு பாயிண்ட்டுகளையும் நெல்லை பார்த்தாரானால் லேசில் விடப்போவதில்லை.

கோமதி அரசு said...

நீங்கள் சொல்வது சரிதான். தெரியாத கடவுளை கற்பனை செய்யும் முன் தெரிந்த கடவுளான தாய் தந்தையரை கண் முன் கொண்டு வருவது எளிது.

வேதாத்திரி மகரிஷி சொல்லிக் கொடுத்த தியான வழி பாட்டில் அன்னைக்கு வணக்கம், தந்தைக்கு வணக்கம், ஆசானுக்கு வணக்கம் உண்டு, அப்போது அவர்களை மனகண்ணில் கொண்டு வந்து வணங்க சொல்வார். அதன் பின் தான் தியான நிலை பழக வேண்டும் .

தினம் தியானத்தில் மட்டும் அல்லாது பெற்றோர்களை மலரிட்டு வணங்கி வருகிறேன்.மன
கஷ்டங்களை , துன்பங்களை, என் மகிழ்ச்சியை அவர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
அப்போது எனக்கு மன ஆறுதல் கிடைக்கிறது.

பதிவு சொல்லும் நல்ல விஷயங்கள் அருமை.

நெல்லைத்தமிழன் said...

//அவர் அந்த இடத்தை மிகவும் நேசித்த காரணத்தினால் அவர் சூக்ஷும சரீரம் // - இது என்ன புதுக்கதை ஸ்ரீராம்... இது சாத்தியம்னா, நம்ம உலகத்துல எவ்வளவு அனர்த்தங்கள் நடக்கும் யோசிங்க... ஒவ்வொருத்தருக்கும் எவ்வளவு ஆத்மார்த்த ரசிகர்கள் இருக்காங்க, என்ன என்ன விளைவுகள் ஏற்படும்... நினைத்தாலே கொலை நடுங்குது.

இறந்த பிறகு ரொம்பவும் நேசித்த இடத்துக்கு ஆவியாக வரும், பார்க்க முடியும் ஆனா கம்யூனிகேட் பண்ண முடியாது, விரக்தியில் வெளியேறும். இறக்கும் தருவாயில், அவசர அவசரமாக யாரையாவது பார்க்க/சொல்லிக்கொள்ள வேண்டும் என்று தவித்தால் செல்ல சிலருக்கு சாத்தியப்படும் என்பதை நான் ஆதாரங்களோடு படித்திருக்கிறேன். வீட்டுக்கு அம்மா வந்தாங்க, ஏதோ சொல்ல நினைத்தாங்க.. பார்த்தா காணலை.. கொஞ்ச நேரத்தில் அவங்க இறந்ததைச் சொல்லும் தந்தி/செய்தி வந்தது என்பது போல

நெல்லைத்தமிழன் said...

ஜீவி சார்... உங்க கமெண்ட்டை (நெல்லை விடப்போவதில்லை) இப்போதுதான் பார்த்தேன். நிஜமா ஸ்ரீராம் பின்னூட்டம் இப்போ படித்ததும் உடனே மறுமொழி எழுதினேன். ஹா ஹா. நல்லாவே புரிஞ்சு வச்சிருக்கீங்க..

ஜீவி said...

@ கோமதி அரசு

//நீங்கள் சொல்வது சரிதான். தெரியாத கடவுளை கற்பனை செய்யும் முன் தெரிந்த கடவுளான தாய் தந்தையரை கண் முன் கொண்டு வருவது எளிது.//

நீங்களே சொல்லி விட்டீர்களென்றால் பெரிய அங்கீகாரம் இது.

வேதாத்திரி மகரிஷி அவர்கள் அப்படியா சொல்வார்? அப்படியானால் அடுத்த அங்கீகாரம் இது.

தொடர்ந்து வாசித்து வாருங்கள். நன்றி.

ஸ்ரீராம். said...

நான் படித்து வியந்ததைதான் சொன்னேன் நெல்லை. சாரதா சமையல் ஆச்சி ஒரு சொந்த அனுபவம் பதிவு போட்டிருக்காங்களே, படிச்சீங்களா?

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்

//உங்க கமெண்ட்டை (நெல்லை விடப்போவதில்லை) இப்போதுதான் பார்த்தேன். //

அப்பப்போ ஒரு எட்டு இந்தப் பக்கம் வந்து பார்த்து விட்டுப் போங்கோ..
உங்களால் மறுவினை ஆற்றாமல் இருக்க முடியாத விஷயத்தைச் சுற்றி இந்தத் தொடர் சுழல்கிறது என்பதால் தான்.. :))

ஜீவி said...

@ ஸ்ரீராம்

அது ஆரானும் சாரதா சமையல் ஆச்சி?..

ஸ்ரீராம். said...

//அது ஆரானும் சாரதா சமையல் ஆச்சி?..//


https://umayalgayathri.blogspot.com/2019/10/soul-tour-travel-my-experience-log-post.html

ஜீவி said...

@ ஸ்ரீராம்

கனவு கண்டிருப்பார்கள் போலிருக்கு..

இதெல்லாம் அறிவியல் ரீதியாக அலசாமல் இருக்கிற வரைக்கும் தான் சுவாரஸ்யம்; அமானுஷ்யம்.. ஒருவகையான த்ரில் எல்லாம்.

அறிவியல் உண்மைகளோடு இணைத்து பேசினோம் என்றால் சப்பென்று போய் விடும். அந்த சுவாரஸ்யத்தை இழக்க மனம் விரும்பவில்லை என்பதினால் அதற்கான ஈடுபாடும் இல்லாது போய் விடுகிறது.

நெல்லை என்ன சொல்கிறார், பார்ப்போம்.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

//அது ஆரானும் சாரதா சமையல் ஆச்சி?..//

நெல்லை.. கவனம்.. கவனம்...

நெல்லைத்தமிழன் said...

ஸ்ரீராம் - படித்தேன்... ஒவ்வொருத்தரின் அனுப்வத்தை சட்டுனு கனவுன்னு சொல்லிட முடியாது. என் கனவில் (அப்படி அல்ல..நிஜத்தில் நடந்தது என்று நான் நம்பிக்கை கொள்ளும் அளவு) சத்ய சாய்பாபா வந்து சிலமுறை பேசியிருக்கிறார் 94, 95 அக்டோபரில். ஒரு தடவை போர்டில் ஒவ்வொரு தேதியாக எழுதி (நாங்கள் சந்திக்கும் தினம் என்று) அதை அடித்து புது தேதி எழுதி அதை அடித்து..இப்படி நான்கு தேதிகள் எழுதி அடித்தார். இன்னொரு முறை, அவர் டாக்சியில் போகின்றவர், என்னைப் பார்த்து கையை பல முறை ஆட்டி போய் வருகிறேன் என்றார்-கனவில்தான். அதன் பிறகு அவருடனான கனவு வந்ததில்லை. என் பசங்கள்ட என் அனுபவத்தைச் சொன்னால், 'போப்பா.. கனவு கண்டிருப்பீங்க' என்கின்றனர்..ஆனால் எனக்குத் தெரியும் அது ஒரு அனுபவம் என்று.

ஆவிகள் உலகம் புத்தகம் நான் ரொம்ப விரும்பிப் படிக்கும் புத்தகம் (எங்க அப்பா படித்துத்தான் எனக்கும் அதில் ஆர்வம் தொத்திக்கொண்டது. அதில் ஏராளமான அனுபவக் கதைகள் உண்டு. நமக்குத் தெரியாதவைகள், இல்லை என்று சொல்ல முடியாது.

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்

//நமக்குத் தெரியாதவைகள், இல்லை என்று சொல்ல முடியாது.//

இதான் முக்கியமான வரி. நமக்குத் தெரியாதவைகள் அவை பற்றித் தெரியாதவரைக்கும் அவை தெரியாதவைகளாகத் தான் இருக்கும். தெரிந்த பிறகே தெரிந்தவைகளாகும்.

அனுபவப்பட்டுத் தெரிந்து கொள்பவைகளுக்குத் தான் வலு ஜாஸ்தி.

எப்படி அந்த வலு ஏற்படுகிறது என்பதைப் பற்றி இந்தப் பகுதியில் எழுதுகிறேன், நெல்லை. நன்றி.

Related Posts with Thumbnails