மின் நூல்

Saturday, May 4, 2019

வசந்த கால நினைவலைகள்...

                                                                      20


காமராஜர் ஆட்சி காலம் அது.    கிராமப்புறங்களிலிருந்து ஆட்சி அதிகாரம் பிறந்து பரவலாக்கப்பட வேண்டும் என்ற காந்திஜியின் கனவு தேசிய அளவில்  புத்துயிர் பெற்று அதற்கான சட்ட வரைவுகள் தீர்மானிக்கப்பட்டன.  மெட்ராஸ் பஞ்சாயத்து  ஆக்ட் 1958 என்ற சட்ட வரைவை தமிழகத்தில் முதல்வராய் இருந்த காமராஜர் 1960-ம் ஜனவரி முதல் நாளன்று அமுலுக்குக் கொண்டு வந்தார்..  பஞ்சாயத்து யூனியன்கள் பிறந்தன.
பள்ளி இறுதித்  தேர்வில் 
தேறியிருந்தால்    போதும் பஞ்சாயத்து   யூனியனில் வேலை என்ற மிக வெளிப்படையான தேர்வு முறையை அவரது பொற்கால ஆட்சி காலத்தில் கண்ணாரக் கண்டவன் நான்.

சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நீண்ட க்யூ.    நானும் ஒருவனாய்  பள்ளி இறுதித் தேர்வை வெற்றிகரமாக முடித்த சான்று புத்தகத்தோடு வரிசையில் நின்றிருந்தேன்.  அந்நாட்களில் அந்தப் புத்தகத்தில்  ஒன்பதாவது வகுப்பிலிருந்து மாணவரின் தேர்ச்சி விவரங்கள் குறிக்கப்பட்டிருக்கும்.   இப்பொழுது மாதிரி சான்றிதழாக இல்லாமல் கிட்டத்தட்ட இருபது  பக்கங்களைக் கொண்ட புத்தகமாக இருந்தது.

நாலைந்து அலுவலர்கள் உட்கார்ந்து சான்றுகளைச்  சரி பார்த்தார்கள்.    என் முறையும் வந்தது. எஸ்.எஸ்.எல்.சி. புத்தகத்தைத்  தந்தேன்.  அதை வாங்கிப் பார்த்தவரின் முகத்தில் லேசான சலனம்.  புத்தகத்தை மீண்டும் புரட்டிப் பார்த்தார்.  முதல் பக்கத்தில் ஒட்டியிருந்த பெற்றோர் அளித்திருந்த வயதுச் சான்றிதழதோடு  சரி பார்த்துக் கொண்டார்.  "தம்பீ.. உனக்கு 17 வயது தான் ஆகிறது.  அரசு வேலைக்கு 18 வயதாகியிருக்க வேண்டும்.  அதனால் இன்னும் ஒரு வருடம் கழித்துத்  தான் நீ அரசு வேலைகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.  நல்ல மதிப்பெண்கள் நீ  எடுத்திருந்தும் உன்னைத் தேர்வு செய்ய முடியாமைக்கு வருந்துகிறேன்.." என்று சான்றிதழ்களை என்னிடம் திருப்பித் தந்தார்.  நானும் "சரி, சார்" என்று அவரிடம் சொல்லி விட்டு க்யூவிலிருந்து  துண்டித்துக்  கொண்டு  வெளி வந்தேன்.

நான் வெளிவந்ததும் க்யூவின் பின் பகுதியில் நின்று கொண்டிருந்தவர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டார்கள்.  விதவிதமான கேள்விகள்.

"எப்போ வேலைக்கு வரச் சொல்லியிருக்கிறார்கள்?..

"சேலத்திலேயாவா? இல்லை வெளியூரா?"

"இந்த இண்டர்வ்யூ வோட சரியா?"

"வேலை கிடைச்சிடுத்தா?" என்று கேட்டவருக்கு மட்டும் பதில் சொன்னேன்.

"இல்லை. எனக்கு  வயசு பத்தாது.. அதனாலே வேலை கிடைக்கலே.."

"ஓ.. அப்படியா?.. என்ன வயசு இருக்கணுமாம்?"

"குறைந்த பட்சம் 18.."

நான் அதைச் சொன்னவுடன் அங்கிருந்த  சில பேர் தங்களுக்கு பதினெட்டு வயசாயிடுச்சா என்று சரி  பார்த்துக் கொண்டனர்.

"எனக்கு 18 ஆகலே..  இருந்தாலும்   வந்தது வந்தாச்சு.. பார்த்துவிட்டுப் போகிறேன்.." என்றார் ஒருவர்.

-- இப்படியாக அரசு வேலை என்று முதலில் வந்தது கைக்கு  சிக்காமல் நழுவிப் போயிற்று.

ட்டச்சு லோயர் கிரேடில் தேர்ச்சிப் பெற்றதும்,  சுருக்கெழுத்துக்காக இன்ஸ்ட்டியூட் வகுப்புகளுக்குப்  போகாமல் இரண்டாவது  அக்கிரஹாரத்தில் இருந்த எங்கள் வீட்டுக்கு எதிர்வீட்டில் இருந்தவரிடம் பயிற்சி வகுப்புகளுக்குப் போக ஆரம்பித்தேன்.   அந்த பயிற்சி வகுப்பில் பயின்ற சோமு என்பவர் பழக்கமானார்.  சோமு திருமணமானவர்.  மாடர்ன் தியேட்டர்ஸில் பணிபுரிந்தார்.   அவருடன் மார்டன் தியேட்டர்ஸைச் சுற்றிப் பார்க்க வாய்ப்பு கிடைத்தது.   மார்டன் தியேட்டர்ஸ் வண்டியில் ஏற்காடு போனோம்   இந்தத் தடவை லேடிஸ் ஸீட் என்ற இடத்திற்கு அழைத்துப் போய் அங்கு மந்திரி குமாரி திரைப்படத்திற்காக படப்பிடிப்பு  நடந்த இடங்களைக் காண்பித்தார்.

ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான குண்டலகேசியைத் தழுவி எழுதப்பட்ட கதை மந்திரி குமாரி.  கலைஞர் திரைக்கதை வசனம்.  பகலில் ராஜகுருவின் மகனாகவும் இரவில் ஊரறியாத  கொள்ளைக்காரனாகவும் இருந்தவனை   மந்திரி குமாரி மணக்க நேரிடுகிறது.   நாளாவட்டத்தில் கணவனின் சுயரூபத்தை மந்திரி குமாரி அறிகிறாள்.  மந்திரிகுமாரியை கொலை செய்வதற்காக வஞ்சக எண்ணத்துடன் அவள் கணவன்  அவளை மலையுச்சிக்குக் கூட்டிச் செல்கிறான்.   உச்சிக்கு சென்றதும் அவளைக் கீழே தள்ளி விடும் நோக்கத்துடன் 'உன்  இஷ்டமான தெய்வத்தை வேண்டிக்கொள்' என்கிறான்.  அவன் கொலைத் திட்டத்தை அறிந்த மந்திரி  குமாரி என் கணவனே என் இஷ்டமான தெய்வம் என்று சொல்லி அவனை மூன்று சுற்று சுற்றி  வருகிறாள்.  மூன்றாவது சுற்று முடியும் தருவாயில் அவனுக்கு பின்புறம் வருகையில் அவனை அதல பாதாளத்திற்கு கீழே தள்ளி  பழிதீர்த்துக் கொள்கிறாள்.  இந்தக் காட்சியை எப்படி அந்த லேடிசீட் பகுதியில் படமாக்கினார்கள் என்பதை சோமு எனக்கு நடித்துக் காட்டினார்.

எல்லீஸ் ஆர் டங்கனும்,  டி.ஆர். சுந்தரமும் சேர்ந்து இயக்கிய படம்.  கொள்ளைக்காரன் பாத்திரந்தில் எஸ்.ஏ.நடராஜனும், ராஜகுமாரியைக்
காதலிக்கும் தளபதி பாத்திரத்தில் எம்.ஜி.ஆரும் நடித்திருந்தனர்.  ராஜகுருவாக எம்.என். நம்பியார் தன் தேர்ந்த நடிப்பை பிரமாதமாக வெளிப்படுத்தியிருந்த படம் இது.  'கொலை எனக்குக் கலை' என்று அட்டகாசமான சிரிப்புடன் எஸ்.ஏ. நடராஜன் கொடூர வில்லனாக வளைய வந்த படம்.  மந்திரி குமாரியை மலை உச்சிக்குக் கூட்டிப் போகும் காட்சியில், 'வாராய், நீ, வாராய்..' என்று  ஒலித்த இரட்டை அர்த்தம் தொனிக்கும் பாடல்  அந்தக் காலத்தில் எல்லோரையும் கவர்ந்த  ஒன்று.

எதிர்த்த வீட்டில் சுருக்கெழுத்து பயிற்சி பெற போன காலத்தில்  வாடகை நூல் நிலையம் தவிர்க்க முடியாத  காரணாங்களால் மூடப்பட்டது.  அதனால் அந்த சமயத்தில் எந்த வேலைக்கும் போகாமல் சுருக்கெழுத்து வகுப்புக்கு  மட்டும் போய் வந்தேன்.

சுருக்கெழுத்துக்கு வகுப்பெடுத்தவர் ஏதோ ஒரு வங்கியில் வேலையிலிருந்தார்.  அந்த வங்கியின் வாடிக்கையாளர் ஒருவர்  தட்டச்சு வேலைக்காக தங்கள் கம்பெனிக்கு ஒருவர் தேவைப்படுவதாகத்  தன்னிடம் முதல் நாள் சொன்னார் என்றும் 'நீ அந்த வேலைக்குப் போகிறாயா?" என்று என்னிடம் கேட்டார்.

நான் சரியென்று  தலையாட்டியதும் முகவரியொன்றை துண்டுக் காகிதத்தில் எழுதி கொடுத்தார்.  'பாரத் சாண்டல் ஆயில் டிஸ்டலரீஸ், சீல நாயக்கன்பட்டி, சேலம்'  என்று முகவரியில் எழுதியிருந்தார்.  'அங்கு போய் கிருஷ்ணமூர்த்தி என்பவரைப் பார்த்து  என் பெயரைச் சொல்லி உன்னை அறிமுகப்படுத்திக் கொள்' என்று சொல்லியிருந்தார்.

எங்கள் வீட்டிலிருந்து கிட்டத்தட்ட  நான்கு  மைல்கள் தேறும்.  சேலம்   டவுனிலிருந்து குகை வழியாகப்   போக வேண்டும்.  நாலும் நாலும் எட்டு.   வேலை கிடைத்தால் தினம் 8 மைல்கள் சைக்கிள் சவாரி  என்று தீர்மானித்துக் கொண்டேன்.

நான் போன பொழுது நல்லவேளை, கிருஷ்ண மூர்த்தி இருந்தார்.  ரொம்ப ஸ்மார்ட்டான இளைஞர்.  விஷயத்தைச் சொன்னேன்.  தட்டச்சு மிஷினைக் காட்டி, "நான் டிக்டேட் செய்வதை அடித்துத்  தருவீர்களா?" என்று  மிகுந்த மரியாதை கொடுத்துக் கேட்டார்.

தட்டச்சு மிஷினின் உறையைக் கழட்டி விட்டு,  பக்கத்திலிருந்த காகிதச் சுருளிலிருந்து காகிதம் எடுத்து சிலிண்டரில் சொருகி விட்டு அவரைப் பார்த்தேன்.
                                                                                                             
"நான் படிக்கட்டுமா?" என்றார்.                                                       

"உம்.."

அவரின் ஆங்கில உச்சரிப்பு அழகாக இருந்தது.  அவர் படிக்கப் படிக்க நான் தட்டச்சு செய்ய ஓரிடத்தில் தான் படிப்பதை நிறுத்தி விட்டு, "அதைக் கொடுங்கள்.." என்று என்னிடம் கேட்டு வாங்கி, வரிவரியாகப் படித்து....
 நான் தட்டச்சு செய்திருந்தது அவருக்கு மிகவும் பிடித்துப்  போனது.

"நாளையிலிருந்து வேலைக்கு வர முடியுமா?" என்று கேட்டார்.

"முடியும் சார்."

"சம்பளம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?" என்று கேட்டார்.

எனது தயக்கத்தை உபயோகப்படுத்திக்  கொண்டு, "நாற்பது  ரூபாய் இப்போதைக்குத்  தருகிறோம்.  கம்பெனி இப்பொழுது தான்  ஆரம்பித்திருக்கிறது.   அதிக வேலை கிடையாது. போகப் போகப் பார்க்கலாம்" என்றார்.

நான்  சரியென்றேன்.

அடுத்த நாள் காலை பத்து மணிக்கு வரச் சொல்லியிருந்தார்.


(வளரும்)


26 comments:

”தளிர் சுரேஷ்” said...

சுவையான நினைவலைகள் வாசித்து மகிழ்ந்தேன்! அருமை!

கிருஷ்ண மூர்த்தி S said...

நினைவலைகளில் வசந்தகாலத்தைத் திரும்பிப்பார்க்கிற வாய்ப்பும் பாக்கியமும் எல்லோருக்கும் கிடைத்துவிடுவதில்லை உங்களுக்கு வாய்த்திருக்கிறதென்பது இறையருளே!

மந்திரிகுமாரி மட்டும்தானா தழுவல்?

இங்கே கருணாநிதியுடைய படைப்புத்திறனைப் பற்றி தகுதிக்குமீறியே புகழாரம் சூட்டி அதை உண்மை என நம்பவும் வைத்துவிட்டார்கள். கவனித்துப் பார்த்தால் கருணாநிதியின் படைப்புக்களில் ஒன்று கூட அவரது சொந்தக் கற்பனைத்திறனில் உருவானதல்ல. பின்னால் வேறுபலருடைய உழைப்பும் படைப்பும் இருந்திருக்கின்றன என்பதை பார்க்க முடியும்

ஜீவி said...

@ தளிர் சுரேஷ்

சுரேஷ்! உங்களை இங்கு பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி. நீங்கள் இந்தப் பகுதியை வாசித்து வருகிறீர்கள் என்று தெரிந்ததில் அதை விட சந்தோஷம். நலம் தானே? நன்றி.

ஜீவி said...

@ கிருஷ்ணமூர்த்தி

மாடர்ன் தியேட்டர்ஸ், ஜெமினி போன்ற பட தயாரிப்பு நிருவனங்களில் கதை இலாகா, உதவியாளர்கள் என்று ஆள்--அம்பு-- படை எல்லாம் வேறு உதவிக்கு இருந்திருக்கின்றன.
ஜெமினியின் பல படங்களில் திரைக்கதை-- ஜெமினி கதை இலாகா என்றே டைட்டிலில் போடுவார்கள்.

சினிமாவே வேடிக்கையான உலகம். அங்கு எதற்கும் தனிப்பட்ட உரிமை கொண்டாவது அவ்வளவு பொருத்தமானது இல்லை என்று சொல்கிற அளவுக்கு இயக்குனர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், திரைக் கதாசிரியர் என்று எல்லாத் துறை சம்பந்தப்பட்டவர்களுக்கும் உதவியாளர்கள் இருந்திருக்கின்றனர். அது போதாது என்று தனிப்பட்ட உதவியாளர்களும் இருந்திருக்கின்றனர். எதில் யாருடைய பங்களிப்பு என்று பிரித்துப் பார்ப்பது கொஞ்சம் சிரமமான காரியம். திரைக்குப் பின்னால் நிறையப் பேர்.
படத் தயாரிப்பு என்பதே பலர் பங்கு கொள்ளும் ஒரு அவியலான சமாச்சாரம்.

பிரபலமானவர்களின் பெயரைப் போட்டால் தான் படம் ஓடும், ராசியானவர் என்ற சித்தாந்தங்கள் வேறே. இதனால் சொந்த சரக்கை பணம் வந்தால் போதும் என்று தனக்கான உரிமையை விட்டுக் கொடுத்தவர்களும் பலர்.

கற்பனை என்பதே ஒன்றைப் படித்தால் அதைப் படித்தின் வீச்சில் இன்னொன்று திறமையானவர்களுக்குத் தோன்றுவது இயல்பு. சிற்சில மாற்றங்கள் செய்தால் வேறு வடிவமும் கொடுக்கும். பத்திரிகைகளில் ஆசிரியர் இலாகாவில் பணியாற்றுவோருக்கு
கூடுதல் போனசாக இந்த மாதிரியான வாய்ப்புகளும் வாய்க்கும்.எல்லாம் கலந்து கட்டித் தான். கூட்டு முயற்சிகளில் இதெல்லாம் சகஜம்ப்பா என்று போக வேண்டியது தான்.

தாங்கள் வாசித்து வருவதில் மகிழ்ச்சி, சார்!

சிகரம் பாரதி said...

நன்றாக இருக்கிறது. அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது அலாதியான இன்பம். தொடருங்கள். தொடர்வோம்.

https://newsigaram.blogspot.com

ஸ்ரீராம். said...

பதினாறு வயதில் கூட அரசு வேலையில் சேர்ந்திருக்கிறார்களே... பாய் சர்விஸ் என்று குறிப்பிடுவார்கள்.

ஸ்ரீராம். said...

தட்டச்சு செய்ய இரண்டு பேப்பர் வைக்க வேண்டாமோ! ஒற்றை பேப்பர் வைத்து அடிக்கக் கூடாது என்று எனக்கு சொல்லித் தந்தார்கள்!

சுவையான அனுபவங்கள். அந்தக் காலத்தில் 40 ரூபாய் என்பது இந்தக் காலத்தில் என்ன மதிப்பு என்றும் சொன்னால் சுவையாக இருக்கும்!

ஜீவி said...

@ ஸ்ரீராம் (2)

சரியே. தட்டச்சு உருளை அடிபடுவதைத் தவிர்ப்பதற்காக அந்த ஏற்பாடு. வழு அமைதி என்று கொள்க.

(உ-ம்) பறவை சிறகை விரித்துப் பறந்தது.

1057-ம் வருடம் ஏப்ரல் முதல் தேதியிலிருந்து நயா பைசா காலம். அதனால் அணா கால கணக்கு வேண்டாம். வேறொரு சமன்பாடு பார்க்கலாம்.

எனக்கு 16 வயதில் பச்சரிசி கிச்சடி சம்பா பக்கா (பெரிய படி) ஐந்து ரூபா.
இப்பொழுது கிச்சடி சம்பா கிடைப்பதில்லை.
நேற்று வாங்கிய ப்ரிமியம் சோனா பச்சரிசி கிலோவே ரூ. 66.-
உத்தேசமாக நீங்களே கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள்.

ஜீவி said...

@ ஸ்ரீராம் (1)

கறாராகப் பார்க்கப் போனால் பஞ்சாயத்து யூனியன்கள் உள்ளாட்சி அமைப்பின் கீழ் ஆரம்பத்திலிருந்தே கொண்டு வரப்பட்டாலும் ரொம்பவும் பிற்பட்ட காலத்தில் தான் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு ப.யூ. ஆசிரியர்களே அரசு ஊழியர்களானார்கள்.

பொதுவாக அரசுப் பணிக்கு குறைந்த பட்சம் 18 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும் என்று விதி இருந்திருக்கிறது.

இருந்தாலும் பல பிரிவுகளில் மக்கள் பிரிக்கப்பட்டப் பிறகு உச்ச வரம்பில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

நீங்கள் குறிப்பிடுகிற பாய் சர்வீஸ் பற்றிக் கேள்விப்பட்டதில்லை. இந்த பாய் சர்வீஸ் மருத்துவ இலாகா சம்பந்தப்பட்ட அரசுப் பணியா?

ஜீவி said...

@ சிகரம் பாரதி

தங்கள் முதல் வருகைக்கு நன்றி. அனுபவங்கள் அதுவும் சொந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது அலாதியான ஒன்று தான். தொடர்ந்து சுவையான பகுதிகள் உண்டு. மிஸ் பண்ன வேண்டாம். வாசித்து வர வேண்டுகிறேன்.

வே.நடனசபாபதி said...

//இப்படியாக அரசு வேலை என்று முதலில் வந்தது கைக்கு சிக்காமல் நழுவிப் போயிற்று.//
நீங்கள் மத்திய அரசுப்பணியில் சேரவேண்டும் என்பதற்காகத்தான் மாநில அரசு வேலை கிடைக்கவில்லையே போலும். நல்ல வேளை நீங்கள் ஊராட்சி ஒன்றிய பணியில் சேரவில்லை.

மாடர்ன் தியேட்டர்ஸ் பற்றி படித்ததும், இன்றைக்கு அது இருந்த இடம் வீட்டு மனைகளாக /வீடுகளாக மாற்றப்பட்டுவிட்டதும், அந்த மிகப்பெரும் நிறுவனத்தின் நினைவாக முன்பு இருந்த முன் வாயில் மட்டும் இருப்பது நினைவுக்கு வருகிறது.

புகுமுக வகுப்புக்குப் பின் ,நானும் தட்டெழுத்து பயிற்சி எடுத்துக்கொண்டென்.அது இப்போது உதவுகிறது. திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களின் நிறுவனத்தில் பணி புரிந்தீர்களா? எப்போது தொலைத்தொடர்பு பணியில் சேர்ந்தீர்கள்? என அறிய காத்திருக்கிறேன்.

கோமதி அரசு said...

தட்டச்சு தமிழ், ஆங்கிலம் கற்றுக் கொண்ட காலங்கள் நினைவுக்கு வருது.
வயது குறைவால் வேலை கிடைக்காமல் போனது வருத்தமாய் இருந்ததா?
மந்திரிகுமாரி விமர்சனம், மற்றும் சுருக்கெழுத்து, தட்டச்சு கற்றுக் கொண்டது என்று உங்கள் அனுபவங்களை அறிந்து கொண்டேன்.

40 ரூபாய் வேலை! அந்த வேலை பிடித்து இருந்ததா? அனுபவங்கள் பெற ஏற்ற வேலையாக இருந்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

ஸ்ரீராம். said...

//இந்த பாய் சர்வீஸ் மருத்துவ இலாகா சம்பந்தப்பட்ட அரசுப் பணியா?//

மருத்துவத்துறையிலும் இருந்தது. என் மாமா தனது 16 வயதில் அரசாங்க வேலையில் சேர்ந்தார். அவர் வேளாண் துறை.

G.M Balasubramaniam said...

தட்டச்சு குறுக்கெழுத்து போன்றவற்றைப் படித்திருந்தால் என் உலகமே வேறாயிருந்திருக்கும்

ஜீவி said...

@ வே. நடனசபாபதி

//நல்ல வேளை நீங்கள் ஊராட்சி ஒன்றிய பணியில் சேரவில்லை. //

கிளாஸ், சார்! 'நானும் நல்ல வேளை' என்று நினைப்பதை நீங்களும் அப்படியே வார்த்தைக்கு வார்த்தை அடிபிறழாமல் வழி மொழிந்து விட்டீர்கள்!.. ஊராட்சி ஒன்றிய பணியில் நான் சிக்கியிருந்தால் நானும் ஒரு வேடிக்கை மனிதனைப் போல வீழ்ந்து போயிருப்பேன்!..

அன்றைய நாட்களில் மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர். சுந்தரம் எப்படி எல்லாவற்றையும் தீர்மானிக்கிற சர்வ சுதந்திரம் படைத்த மனிதராக வலம் வந்தார் என்ற சரித்திரம் நினைவுக்கு வந்தது.

பாரத் சாண்டல் ஆயில் டிஸ்டலிரிஸ் நான் பணியாற்றிய நிருவனங்களில் ஒன்றாயிற்று. அவ்வளவு தான். 1963-ல் மத்ய அரசுப் பணி. இடைக்காலத்தில் நிகழந்தவை ஏராளம்!


ஜீவி said...

@ கோமதி அரசு

நீங்களும் தமிழ்--ஆங்கில தட்டச்சு பயின்றது மகிழ்ச்சி.
குமுதம் பத்திரிகையில் தமிழ் சுருக்கெழுத்து என்று முதன் முதலாக தமிழில் சுருக்கெழுத்து கற்றுக் கொள்ளும் பயிற்சிப் பாடங்கள் பிரசுரமானது நினைவிருக்கிறதா?...

வயது குறைவால் வேலை கிடைக்கவில்லை என்பது நிச்சயமாக அந்த நேரத்தில் வருத்தமாக இல்லை. எது கிடைக்கிறதோ அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் அந்த வயதிலேயே எனக்கு வாய்த்திருந்தது. என் வாழ்க்கை பூராவும் இந்த நிலை தொடர்ந்திருக்கிறது என் நல்லதுக்காகத் தான் என்பதை உணர முடிகிறது.

பல வேலைகளில் அதுவும் ஒன்று என்றளவிலேயே இருந்தது.

தொடர்ந்து வாசித்து வருவதற்கு நன்றி, கோமதிம்மா.


ஜீவி said...

@ ஜிஎம்பீ

தட்டச்சு, சுருக்கெழுத்து பயின்றதால் என் உலகம் வேறாகவில்லை என்பதும்
எனக்கான உலகை நானே சமைத்துக் கொண்டேன் என்பதுமே உண்மை.

பெருந்தலைவர் காமராஜ் பற்றி முக்கியமான ஒரு குறிப்பைக் கொடுத்திருந்தேனே! அதைப் பற்றி ஏன் நீங்கள் ஒன்றுமே சொல்லவில்லை?..

அரசியல் விஷயங்கள் எழுதுவதில் நீங்கள் ஆர்வம் காட்டுவதால் உங்களிடம் இந்தக் கேள்வி.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

பாய் சர்வீஸ் என்பதைப் பற்றி கொஞ்சம் விவரமாகச் சொல்ல மாட்டீர்களா?..

தலையைச் பிச்சுக்கற மாதிரி கேள்விப்படாத பெயராக இருக்கிறதே?..

ஏதோ ஆபீஸ் பாய் மாதிரி ஏன் அந்தப் பெயர் வந்தது?.. அது மூன்றாம் நிலை (Class-III) உத்தியோகமா?

நிரந்தரப் பணி கொடுக்காமல் Reserve Category-யில் வைத்துக் கொண்டு 18 வயதுக்குப் பின் உபயோகித்துக் கொள்வார்களா?..

விளக்கம், ப்ளீஸ்...

வல்லிசிம்ஹன் said...

அருமையான நினைவலைகள். சீரகச் சம்பா அரிசி மணமாக இருக்கும். ஆற்காட்டு அரிசி என்று விற்பார்கள்.

அந்தச் சின்ன வயதில் வேலைக்குப் போனதைப் படித்ததும் என் கணவரும் டிவிஎஸ்ஸில்
மாதம் 60 ரூபாய்க்கு வேலைக்குச் சேர்ந்தது நினைவுக்கு வந்தது. அது மெகானிக் வேலை.1957 ஆம் வருடம்
அவருக்கு அப்போது 17 வயது
நீங்கள் சொல்லும் அனுபவங்கள் சுவையாக இருக்கின்றன.

மந்திரி குமாரி பாடல் மிகப் பிரபலம்.
டி ஆர் சுந்தரம் திறமையான கண்டிப்பான டைரக்டர் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.

Bhanumathy Venkateswaran said...

உங்கள் நினைவுகளை சுவாரஸ்யமா பகிர்ந்து கொள்கிறீர்கள். அப்போதெல்லாம் எஸ்.எஸ்.எல்.சிக்குப்பிறகு கல்லூரியில் சேர முடியாதவர்கள் டைப் ரைட்டிங், ஷார்ட் ஹேண்ட் கற்பது இயல்பு. செகரெட்டரியாக வாழ்க்கையை துவங்கி மேல் நிலைக்கு உயர்ந்த பல பேரை அறிவேன்.

ஜீவி said...

@ வல்லிசிம்ஹன்

சிம்ஹன் சார் என்னை விட உத்தேசமாக மூன்று வயது பெரியவர் போலிருக்கு. மதுரையில் டிவிஎஸ் என் தமக்கைக்கு ஸ்கூல் ஃபீஸை ஏற்றுக் கொண்டது!

டி.ஆர் சுந்தரம் பற்றி அந்நாட்களில் ஹீரோசிய கதைகள் நிறைய உண்டு. பின்னாளைய பிரபலங்களில் பலர் அவரிடம் திட்டும் குட்டும் வாங்கியிருப்பதாக காது வழிச் செய்தி.
ஒரு சில நினைவுக்கும் வருகின்றன. பாரதியாரின் பாடல்களுக்கு தடையிருந்த காலத்தில் துணிச்சலுடன் தன் படத்தில் உபயோகித்துக் கொண்டவர் எனபார்கள். பி.யூ. சின்னப்பா பாடிய 'செந்தமிழ் நாடெனும் போதினிலே' பாடல் அது.

டி.ஆர்.எஸ். தயாரித்து இயக்கிய 'பர்மா ராணி' படம் பார்த்திருக்கிறீர்களா?.. அட்டகாசம்!
இதில் வில்லனாகவும் அவர் நடித்திருக்கிறார்!

ஜீவி said...

@ Bhanumathy Venkateswaran

16-ல் அனேகமாக எஸ்.எஸ்.எல்.சி. என்றால் வருங்கால உத்தியோகத்திற்கு உபயோகப்படுகிற மாதிரி டைப் ரைட்டிங், ஹார்ட் ஹேண்ட் கல்வி. பெரும்பாலும்
கிளார்க், ஸ்டெனோ என்கிற வேலைகள் தானே அந்தக் காலத்தில்! கல்லூரி போனாலும்
வக்கீல் என்றால் பி.எல், கல்வித்துறை என்றால் பி.டி. அவ்வளவு தானே!

தொழிற்கல்வி பிரபலப்படாத காலம்! தொழிற்கல்விக்காக ஆரம்பக்கல்வி காலத்திலேயே
பிள்ளையார் சுழி போட்டவரும் குல்லுக பட்டரானார்!..

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

தட்டச்சில் பல அனுபவங்கள் எனக்கு உண்டு. உங்களுடைய அந்த அனுபவத்தைக் காண ஆவலோடு உள்ளேன்.

ஜீவி said...

@ Dr. B. Jambulingam, Asst. Regtr. (Retd) Tamil University

தட்டச்சு வாழ்க்கை பூராவும் கூடவே வந்த அனுபவமாகியிருக்கிறது. இப்பொழுது கூட உபயோகமாக இருப்பது இன்னொரு ஆச்சரியம்.

தாங்கள் வாசித்து வருவது குறித்து மகிழ்ச்சி. தொடர்ந்து வாருங்கள், ஐயா.

Thulasidharan V Thillaiakathu said...

நிறைய தகவல்கள்! புதியதாகவும் தெரிந்து கொள்ள முடிகிறது குறிப்பாக அந்தக்காலத்தின் சூழலை

நானும் தட்டச்சு லோயர் ஹையர் எல்லாம் பாஸ் செய்து..இப்போது கணினியில் தட்டிக் கொண்டிருக்கிறேன் ஹா ஹா

17 வயதில் பல அனுபவங்கள். அழகாக நினைவு வைத்துச் சொல்லுகின்றீர்கள்.

கீதா

ஜீவி said...

@ தி. கீதா

அக்காலத்திலிருந்து இக்காலத்திற்கு சில ஸ்டேஷன்களில் நிற்பதைத் தவிர்த்து நாஸூக்கான நீண்ட பயணம்..

முக்கியமாக தனிப்பட்ட வாழ்க்கையைத் தவிர்த்து என்னுடைய எழுத்து, அரசியல் ஈடுபாடுகளின் வளர்ச்சியைச் சொல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டதில் இந்தத் தொடர் உருவாகிக் கொண்டிருக்கிறது.

Related Posts with Thumbnails